ஆச்சாரியார் அறிக்கை

 

ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியைப் பற்றி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் அசோசியேட்டட் பிரஸ் நிருபருக்கு பேட்டி அளித்து பேசியதில்

இப்போது உள்ள ஹிந்தி எதிர்ப்புக் கிளர்ச்சியில் இருந்து தாம் செய்து கொள்ள வேண்டிய முடிவானது “தமிழ் இருப்பதா ஒழிவதா என்பது அல்ல” வென்றும்,

ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களான தமக்கு இந்நாட்டு மக்களுக்கு தாராளமான முறையில் (தன் இஷ்டப்படி) கல்வி போதிக்க அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்பதை இரண்டில் ஒன்று பார்த்து விட வேண்டும் என்றும்,

இந்நாட்டை ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட தான் (சி.ஆர். ஆச்சாரியார், ப-ர்) ஆளுவதா அல்லது சிலருடைய மிரட்டுதலுக்குப் பயந்து விட்டு விட்டுப் போய்விடுவதா என்பதையும் ஒரு கை பார்த்து விடப் போவதாகவும் சொல்லி வீர கர்ஜனை புரிந்து இதை பத்திரிக்கைகளில் விளம்பரம் செய்யச் செய்திருக்கிறார்.

~subhead

நமது கவலை என்ன?

~shend

ஆகவே இதிலிருந்து இன்றைய தினம் கனம் ஆச்சாரியார் அவர்களுக்கு ஹிந்தியைக் கட்டாய பாடமாக ஆக்கும் காரியம் அவ்வளவு முக்கியமானதல்லவென்பதும், தனக்குள்ள அதிகாரம், பலம், சுதந்திரம் எவ்வளவு என்பதை முடிவு செய்வதற்காகவே இந்த ஹிந்தி பிரச்சினையை கைக் கொண்டிருப்பதாகவும் நன்றாய் விளங்குகிறது.

ஆனால் நமது கவலையும் கருத்தும் அதுவல்ல. ஆச்சாரியாருக்கு சர்வ வல்லமை இருப்பதும் அவர் நினைத்த காரியத்தைச் சாதிக்கக் கூடிய ஆற்றலும் இருப்பதும் நமக்கு நன்றாய்த் தெரியும். எப்படியெனில் அவர் கையில் போதுமான அளவுக்கு மேற்பட்ட தமிழ் அடிமை மக்கள் தாராளமாய் இருக்கிறார்கள். அதாவது கனம் தோழர்கள் டாக்டர் சுப்பராயன், ராமநாதன், சுப்பய்யா, சுப்பிரமணியம், அண்ணாமலை போன்ற ஆள்கள் ஆச்சாரியார் என்ன சொன்னாலும் ஆதரிக்கவும், கை தூக்கவும் (ஏடிண் Mச்ண்tஞுணூ”ண் ஙணிடிஞிஞு) ஹிஸ் மாஸ்டர்ஸ் வாய்ஸ் என்பதுபோல் ஆச்சாரியார் சொன்னதையும் உள்ளத்தில் நினைப்பதையும் அப்படியே உருக்குலையாமல் தங்கள் வாயினால் தங்கள் பொறுப்பில் என்று சொல்லவும் 100-க் கணக்கான மக்கள் இருக்கும்போது அவர் இரண்டிலொன்று பார்த்துவிடுகிறேன் என்று சொல்லுவதில் ஆச்சரியமில்லை. ஆனால் கனம் ஆச்சாரியார் தனது வலிமை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ள ஹிந்தி பிரச்சினையை விட்டு விட்டு வேறு பிரச்சினையை கைக் கொள்வாரானால் நமக்குச் சிறிதும் கவலை இல்லை என்பதோடு ஆச்சாரியாருக்கு சர்வசக்தியும் வல்லமையும் இருப்பதாக ஒப்புக் கொள்ள நமக்கு ஆக்ஷேபணையுமில்லை. அப்படிக்கு இல்லாமல் ஒரு சமூகத்தையே அடியோடு நாசம் செய்து அழிக்கும் காரியத்தில் இறங்கிவிட்டு அதை செய்து முடிக்க எனக்குச் சக்தி இருக்கிறதா இல்லையா என்று பார்த்துவிடுகிறேன் என்று சபதம் கூறுவாரேயானால், அது மிகவும் கவலையையும், துன்பத்தையும், தொல்லையையும் கொடுக்கக் கூடிய காரியமாகத்தான் முடியுமே ஒழிய வீரப்பிரதாபத்தின் பரீøைக்கு அளவு கருவியாக இருக்க முடியாதென்றே கருதுகிறோம்.

~subhead

ஆச்சாரியார் நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரா?

~shend

ஆச்சாரியார் பிரதம மந்திரியானாலும் ஒப்பற்ற ஒரே தனி மந்திரியானாலும் அல்லது சர்வாதிகாரமுள்ள தன்னாட்சி உள்ள ஏகபோக சக்கரவர்த்தியேயானாலும் அவர் இந்நாட்டுப் பெரும்பான்மை மக்களான (100க்கு 97 பேர்களான) பழங்குடி மக்களுக்கு அன்னியப்பட்ட ஒரு பார்ப்பனர் – அதுவும் ஆரியப் பார்ப்பனர் என்பதையும் அதிலும் ஆரிய மதம், ஆரியக்கலை, ஆரியப்பழக்கவழக்கம் ஆகியவைகளில் குரங்குப் பிடிவாதமுள்ள ஒரு வகுப்பைச் சேர்ந்த – ஒரு கருத்தை – கொள்கையைக் கொண்ட ஒரு அன்னிய மனிதன் என்பதை அவர் மறந்துவிடக் கூடாது என்பதை அவருக்கு ஞாபகப்படுத்துகிறோம். மற்றும் இந்நாட்டு ஜனங்களால் ஆச்சாரியார் மாத்திரம் தெரிந்தெடுக்கப்பட்டு விடவில்லை என்றும் ஆச்சாரியாரே சென்ற வருடத்தில் தனக்கு மந்திரி வேலை கிடைக்காமல் போய்விட்ட காரணத்தால் ஏற்பட்ட கோபத்தில் இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்களையே கழுதைகள், கழுதைகளுக்கு சமானமானவர்கள் என்று சிலரைக் குறிப்பிட்டுச் சொன்னதை ஆச்சாரியாரே மறந்திருக்க மாட்டார் என்றும் கருதுகிறோம். ஆகையால் இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டு விட்டதாலேயே அவர்கள் எல்லாம் அதிகாரம் செய்யச் சொல்லுகிறதா இல்லையா என்று இரண்டிலொன்றைப் பார்த்துவிட தகுதி உடையவர்கள் என்று சொல்லிவிட முடியாது. அதிலும் ஆச்சாரியார் போன்றவர்கள் தங்களை இந்நாட்டு மக்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர்கள் என்ற பாத்தியம் கொண்டாடுவது சிறிதும் பொருத்தமற்றதேயாகும். ஏனெனில் ஆச்சாரியாரை தமிழ் மக்களோ, பொதுமக்களோ தெரிந்து எடுத்துவிடவில்லை. அவர் , பார்ப்பனர்களே 100 – க்கு 75 பேர்கள் கொண்ட பட்டதாரிகள் தொகுதியில் தெரிந்தெடுக்கப்பட்டவர். ஆச்சாரியாருக்கு அடிபணிந்து கைதூக்கி, வாய் உதடாய் இருந்து வாழும் பெரும்பான்மைத் தமிழ் மக்களும் மனிதர்கள் என்கின்ற முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களும் அல்ல. மற்றென்னவென்றால் “கூனாய் இருந்தாலும், குருடாயிருந்தாலும், மரக்கட்டையானாலும், கழுதையானாலும், மஞ்சள் பெட்டிக்கு ஓட்டுப் போடுங்கள்” என்ற பிரசாரத்திற்கு ஆளாகி மத உணர்ச்சியில் மஞ்சள் பெட்டியை தெரிந்தெடுத்த முறையில் தெரிந்தெடுக்கப்பட்டவர்களாவார்கள். இந்த நிலையில் எப்படி தனது பதவியை ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மனிதனின் பதவி என்று சொல்லிக் கொள்ளக்கூடும் என்று கேட்கின்றோம். அப்படியேதான் ஆகட்டும் ஜனங்களால் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே அவர்களது ஆக்கினைகளுக்கெல்லாம் மக்கள் கீழ்ப்படிய வேண்டியது கண்டிப்பு என்றும் அவசியம் என்றும் ஆச்சாரியார் சொல்லுகிறாரா என்பதை அறிய ஆசைப்படுகிறோம்.

அப்படியானால் ஆச்சாரியார் ஆட்சிக்கு முன் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்ட மந்திரிகள் நடத்திவந்த காரியங்களையெல்லாம் ஆச்சாரியார் தலை வணங்கி ஏற்று அதன்படி நடந்து வந்தாரா என்று கேட்கின்றோம்.

~subhead

தேர்ந்தெடுக்கப்பட்ட பழைய மந்திரிகளுக்கு ஆச்சாரியார் கீழ்ப்படிந்தாரா?

~shend

ஆச்சாரியார் பதவி ஏற்ற பின்பாவது தாம் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவரானதால் தமது ஆக்கினை செல்லுகிறதா இல்லையா என்பதை “வந்தே மாதரப் பாட்டில்” ஏன் ஒரு கை பார்க்கவில்லை என்று கேட்கின்றோம்.

மற்றும் கனம் ஆச்சாரியார் ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டவர் என்கின்ற விஷயத்தில் சந்தேகமற உறுதி கொண்டு தமது அதிகாரம் செல்லுகிறதா இல்லையா? என்பதை உண்மையில் அறிய ஆசைப்பட ஒரு ஆண்மை உள்ள வீரரானால் சென்னை மாகாணம் பூராவும் ஹிந்தியை புகுத்த முடிவு கொண்ட அவர் 125 பள்ளிக்கூடத்துக்கு மாத்திரம் குறைத்து கொள்வானேன்? கட்டாய பாடம் என்று சொன்னவர் பரீøை இல்லை என்று சொல்வானேன்? முஸ்லிம்கள் உருதுவில் படிக்கலாம் என்று சொல்லுவானேன்? ஹிந்தி என்கின்ற உச்சரிப்பை மாற்றி ஹிந்துஸ்தானி என்று உச்சரிப்பானேன்? கூடுமானவரை தங்களுக்கு ஆதிக்கமுள்ள பள்ளிகளை மாத்திரம் பொறுக்கி எடுத்து அதில் வைக்கச் சொல்லுவானேன்? எல்லோருக்குமாக என்று ஆரம்பித்த ஹிந்தி 1, 2, 3 பாரங்களுக்கு மாத்திரம் என்று மாற்றப்படுவானேன்?

தேசீயத்துக்காக ஹிந்தி படிக்கவேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் கல்விமுறை பூர்த்தி அடைய ஹிந்தி அவசியம் என்று சொல்லுவானேன்?

முன்பு ஹிந்தியை நாகரி லிபியில் படித்தாக வேண்டும் என்று சொன்ன ஆச்சாரியார் பின்பு முஸ்லிம்கள் உருதுவிலும், ஹிந்துக்கள் நாகரியிலும் படிக்க வேண்டும் என்று சொல்லுவானேன்?

பிறகு இன்று 9 -ம் தேதி அசோசியேட் பிரஸ் நிருபருக்கு அளித்த அதே பேட்டியில் எந்த மாணவரும் “எந்த எழுத்தில் வேண்டுமானாலும் அதாவது நாகரியிலோ, உருதுவிலோ கற்கலாம்” என்று சொல்லுவானேன் என்பவைகளையெல்லாம் பார்த்தால் ஆச்சாரியார் தமக்கு அதிகாரம் இருக்கிறதா இல்லையா என்கிறதை பார்த்து விடுவதற்காக ஹிந்தி பிரச்சினை வைத்திருக்கிறாரா அல்லது நடந்த வரையில் மக்கள் ஏமாந்த வரையில் பார்ப்போம் என்று கருதி எப்படியாவது ஹிந்தியை இன்று புகுத்திவிட்டால் மற்ற காரியத்தை நாளை சிறிதுச் சிறிதாக சரிப்படுத்திக் கொள்ளலாம் என்று பார்க்கிறாரா என்று கேட்கின்றோம். கடைசியாக, தாம் ஆட்சி நடத்துவதா விட்டுவிட்டுப் போய்விடுவதா என்பதைப் பார்த்து விடுவதாக வீரம் கூறுகிறார்.

ஆட்சிமுறையை சீர்திருத்த சட்டத்தை அழித்துவிட்டுப் போவதாக வாக்களித்து ஓட்டுப்பெற்று பதவி பெற்ற ஆச்சாரியார், ஆட்சி நடத்த முடிகிறதா இல்லையா சீர்திருத்த சட்டப்படி அதிகாரம் செய்ய முடிகிறதா இல்லையா என்பதை ஓட்டர்களிடம் ஒரு கை பார்ப்பதாகக் கூறும் இவர் உண்மையில் ஒரு வீரராக இருக்க முடியுமா? அல்லது கோழை வஞ்சகராக இருக்க முடியுமா என்பதை வாசகர்களையே யோசித்துப் பார்த்து முடிவு செய்துகொள்ளும்படி விட்டுவிடுகிறோம்.

~subhead

ஆச்சாரியார் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும்

~shend

ஆச்சாரியாரின் வீரப்பிரதாபம் ஒருபுறமிருக்கட்டும். அவரது நல்லெண்ணத்தையும் நாணையத்தையும் பற்றி யோசிப்போம். மெயில் பத்திரிகை குறிப்பிட்டதுபோல் தாய்ப்பாஷை தெரியாத மக்கள் 100 -க்கு 93 பேர் இருக்கிற தமிழ்நாட்டில் அந்த பாஷையை, தமிழை, எல்லோருக்கும் கட்டாய இலவச பாஷையாக ஆச்சாரியார் ஆக்காமல் ஒருசில குழந்தைகளுக்கு அன்னிய – ஆரிய பாஷையைப் பணம் கொடுத்து கட்டாயமாக படிக்கும்படி செய்வதின் கருத்து என்ன என்று கேட்கின்றோம்.

நாடு பூராவும் ஒரு பாஷையைப் பொது பாஷையாக சிலர் கற்றாக வேண்டுமென்றால் அந்நாட்டுமக்களின் தாய்பாஷை என்ன கதி அடைந்து அதை எல்லோரும் படிக்க என்ன ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது என்று யோசித்துப்பார்த்தால் ஆச்சாரியார் தமிழ் மக்களுக்கு அவர்களது தாய்பாஷையைக் கற்றுக்கொடுக்கவோ காப்பாற்றவோ தனக்கு அதிகமான கவலை இருக்கிறது என்று சொல்லுவதில் யோக்கியமோ ஒழுக்கமோ இருக்கிறதா என்று யோசித்துப்பார்க்க வேண்டுகிறோம்.

தமிழ் பாஷையை ஆரியப்பார்ப்பனர்கள் கற்றுக் கொடுத்ததாலேயே இன்று 100-க்கு 33 வார்த்தைகள் ஆரிய பாஷையை கலக்காமல் பேச முடியவில்லை என்றால் இனி ஆரிய பாஷையை கட்டாயமாக ஆரிய உபாத்தியாயர்களே கற்றுக்கொடுப்பதானால் அதன் மூலம் தமிழ் பாஷையில் இனியும் ஒரு 33 விகிதம் ஆரிய பாஷை தமிழ் பேச்சில் கலந்து விடாதா என்று கேட்கின்றோம்.

இன்று 100க்கு ஒருவர் இருவர் ஆங்கிலம் படித்திருப்பதாலேயே தமிழ் பாஷை கிராமங்களில் கூட 100-க்கு 10, 15 ஆங்கில வார்த்தை கலக்காமல் பேசமுடியவில்லை என்றால் இந்த எல்லா பாஷைகளும் இனியும் குழப்பப்படுமானால் தமிழில் என்ன மீதியாகும் என்று கேட்கின்றோம்.

இந்த நிலையில் கனம் ஆச்சாரியார் ஹிந்தியை கட்டாயமாய் 10, 11, 12 வயது குழந்தைகளுக்குப் புகுத்தினால் தமிழ் சிறிதும் கெடாது என்கிறாரே, இது தெரியாமல் பேசுகிறாரா அல்லது தெரிந்தே மக்களை வஞ்சிக்க பேசுகிறாரா என்று கேட்கின்றோம்.

~subhead

பாஷைத் தொல்லை ஒருபுறமிருக்கட்டும்

~shend

பாஷைத் தொல்லை ஒருபுறம் இருக்கட்டும். தமிழ் மக்கள் ஹிந்தி கட்டாய பாட விஷயத்தில் தங்களுடைய அதிருப்தியை காட்டிக் கொண்டால் அவர்களை அடக்குமுறை கொண்டு அடக்குவானேன் என்று கேட்கின்றோம். கனம் ஆச்சாரியார் ஹிந்தியை தோழர் ராமசாமி ஒருவர்தான் எதிர்க்கிறார் என்று சட்டசபையில் சொன்னார். ஆகவே ஆச்சாரியார் ஹிந்தியை பொதுமக்கள் எதிர்க்கிறார்கள் என்பது தெரியவில்லை என்றே வைத்துக் கொள்ளுவோம். அதை அவர் அறியும்படி செய்ய அதாவது தோழர் ராமசாமியைத் தவிர வேறு “சிலராவது” எதிர்க்கிறார்கள் என்பதை ஆச்சாரியார் அறிய வேண்டும் என்பதற்காக மக்கள் முயற்சி செய்தால் அது சட்ட விரோதமா? என்று கேட்கிறோம். அதுவும் யாருக்கும் எவ்வித அசெளகரியம் விளைவிக்காமல் முனிசிபாலிட்டி ரோட்டில் டிச்சி ஓரத்தில் பேசாமல் உட்கார்ந்திருந்தோ நின்று கொண்டிருந்தோ விளக்குவது சட்டவிரோதமா என்று கேட்கின்றோம்.

இதுவரை இக்காரியத்துக்காக சுமார் 30 பேர்களுக்கு மேல் கைதி செய்யப்பட்டிருக்கிறார்கள் என்றால் ஆச்சாரியார் ஆட்சி பிரஜா உரிமை, சாவதானமான கிளர்ச்சி உரிமை உடைய ஜனநாயக ஆட்சியா என்று கேட்கக் கடமைப்பட்டிருக்கிறோம். தெருவில் ஓரத்தில் பேசாமல் நின்று இருப்பது சட்டவிரோதமானால், போனவாரத்தில் காங்கரஸ்காரர்கள் கிறாம்பு பகிஷ்காரம் என்னும் பேரால் வண்டியின் சக்கரத்தடியில் படுத்து மறித்தும் கடைகளின் முன் நின்று கிராம்பு வாங்குபவர்களை வாங்க வொட்டாமல் தடுத்து மறியல் செய்ததும் சட்டத்துக்கு கட்டுப்பட்ட காரியமா என்று கேட்கின்றோம்.

எனவே இப்படிப்பட்ட ஆச்சாரியார் ஆட்சியானது ஜனங்களால் தெரிந்தெடுக்கப்பட்டது என்கின்ற காரணத்தாலேயே எதுவும் செய்து விடலாம் என்றும் செய்ய முடிகிறதா இல்லையா என்றும் ஒரு கை பார்த்து விடப் போவதாகவும் பூச்சாண்டி காட்டினால் இதை எந்தத் தமிழ் மகன் லட்சியம் செய்வான் என்று கேட்கின்றோம்.

ஆச்சாரியாருக்கு உள்ள வீரமும் உறுதியும் இரண்டிலொன்று பார்த்துவிடும் சூரத்தன்மையும் அதைத் தடுக்க முடியுமா முடியாதா? என்று பார்த்துவிட தமிழ் மக்களுக்கும் உண்டு என்பதை ஆச்சாரியார் உணர வேண்டுமாய் வணக்கமாய் வேண்டிக்கொள்ளுகிறோம்.

அதுமாத்திரமல்ல. இந்தப் பிரச்சினையின் மூலம் இந்த நாட்டு வாழ்க்கை முறை தமிழ் முறையா ஆரிய முறையா என்பதை ஒரு கை பார்த்து விடுவதென்றே முடிவு செய்து கொண்டிருக்கிறோம் என்பதையும் கனம் ஆச்சாரியார் அவர்கள் அறிய வேண்டும் என்று பிறார்த்தித்துக் கொள்ளுகிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 12.06.1938

You may also like...