காங்கரஸ் பித்தலாட்டம்

 

தோழர்களே!

இன்னும் இரண்டொரு முக்கிய விஷயங்களைக் கூறிவிட்டு முடித்துக் கொள்ளுகிறேன்.

காங்கரஸ்காரர்கள் இன்று சர்க்காரில், சம்பளச் செலவு அதிகம், அதிகம் என்று கூறுகிறார்கள். இது யாரால் அதிகமாகியது என்று கவனியுங்கள்.

இந்த காங்கரஸ் ஏற்படாததற்கு முன்பு முன்சீப்பிற்கு 200 ரூபாய்தான் சம்பளம். இப்பொழுது 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை கொடுக்கப்படுகிறது.

முன்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்களுக்கு 70 ரூபாய் சம்பளம் கொடுத்து வந்தார்கள். இப்போது 150 ரூபாயில் ஆரம்பிக்கிறார்கள். இதுபோல்தான் எல்லா உத்தியோகஸ்தர்களுக்கும் சம்பளம் உயர்ந்திருக்கிறது. இதற்குக் காரணம் வரி கொடுப்போர் பார்ப்பனரல்லாதார், உத்தியோகங்கள் பார்ப்போர் பார்ப்பனர்கள். ஆதலால் பணத்தின் அருமை அவர்களுக்குத் தெரியவில்லை கொள்ளையடித்தவரை லாபமென்று கருதினார்கள். காங்கரஸ் எல்லா உத்தியோகங்களும் இந்தியர்களுக்கு வேண்டும் என்றும் வெள்ளைக்காரர்களுக்குக் கொடுக்கும் சம்பளமே இந்தியர்களுக்கும் வேண்டுமென்றும் தீர்மானம் நிறைவேற்றியதுதான் காரணம்.

~subhead

காங்கரஸ் சாதித்ததென்ன?

~shend

இதுதான் போகட்டும். காங்கரஸ் தேர்தலில் நின்று பாமர மக்களை ஏமாற்றி மங்களகரமான மஞ்சள் பெட்டியென்றும், மஞ்சள் பெண்கள் தாலியின் நிறமென்றும் அனைவரும் குளித்து முழுகிவிட்டுத் தேங்காய் உடைத்து ஓட்டுப்போட வேண்டுமென்றும் புராணபிரசங்கம் செய்து ஓட்டுக் கேட்டார்கள். அதை நம்பி பலர் ஓட்டுப் போட்டார்கள். அந்த வெற்றியினால் காங்கரஸ் என்ன செய்ய முடிந்தது? ஒன்றுமில்லை முன் காங்கரஸ் தலைவரான பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் ஏகாதிபத்தியத்தை ஒழிக்கப் போகிறோம், வெள்ளை அறிக்கையை கிழிக்கப் போகிறோம், எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சவடாலடித்தார். பட்டினி ஒழியுது பஞ்சம் பறக்குது என்று கத்தினார். ஏகாதிபத்தியம் ஒழிந்ததா? வெள்ளை அறிக்கை கிழிக்கப்பட்டதா? பஞ்சம் மறைந்ததா? பட்டினி தீர்ந்ததா? 144-வது சட்டம் ஒழிப்பதாகக் கூறினார் அது ஒழிந்ததா? ஒன்றும் இல்லை. எல்லாம் பித்தலாட்டமாய்த் தானே முடிந்தது?

~subhead

வைஸ்ராய் வெடிகுண்டு

~shend

அது போகட்டும். பொது ஜனங்கள் தேர்தலில் பெருவாரியான ஓட்டுகளைக் கொடுத்து இவர்களை அளவு கடந்த மெஜாரட்டியுடன் சட்ட சபைக்கனுப்பினார்கள். உடனே அவர்கள் சர்க்காருக்கு நிபந்தனை கொடுத்தார்களே ஒழிய பொது ஜனங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியைப் பற்றிக் கவலைப்படவே கிடையாது. அதுவும் “நாங்கள் உங்கள் சட்டத்திற்கு அடங்கி நடக்கிறோம். எங்களுக்கு மந்திரி சபையில் இடம் கொடுங்கள்” என்று சர்க்காரை வலிய கெஞ்சினார்கள். இதற்கு கவர்னர்கள் “அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது. நீங்கள் என்னமோ செய்து கொள்ளுங்கள்” என்று சொல்லிவிட்டார்கள். அதன் மீது வெட்கத்தால் சிறிது பிகுவு செய்தார்கள். உடனே கவர்னர்கள் வேறு மந்திரிகளை நியமித்து ஒழுங்காக வேலை நடக்கச் செய்துவிட்டார்கள். அதன் மீது காங்கரஸ்காரர்கள் தங்களது அதிகப் பிரசங்கத்துக்கு வருந்தி மந்திரி வேலைபெற ஏதாவது சாக்குத்தேட கஜகரணம் போட்டுப் பார்த்தார்கள். ஒன்றும் பலிக்கவில்லை. இதற்குள் வைஸ்ராய் பிரபு மரியாதையாய் உங்கள் வால்களை அடக்கிக்கொண்டு ஒழுங்காக நடக்கிறீர்களா? அல்லது நீங்கள் என்றென்றும் தலையெடுக்க முடியாமல் அழுத்தப்பட வேண்டுமா? என்று ஒரு வெடிகுண்டு போட்டார்.

~subhead

காங்கரஸ் தலைவர்கள் சரணாகதி

~shend

காங்கரஸ்காரர்கள் நடுங்கிப்போய் சரணாகதி அடைந்தார்கள். இந்த மத்தியில் வைஸ்ராய் வெடிகுண்டைப் பற்றி காங்கரஸ் பத்திரிகைகள் வைஸ்ராயைக் கண்டிக்க ஆரம்பித்தன. ஆனால் காங்கரஸ் தலைவர்கள் வைசிராயைக் கண்டிக்க வேண்டாம் என்றும் வைசிராய் நல்ல வாக்குறுதி கொடுத்துவிட்டார் என்றும் எழுதும்படி செய்து கொண்டார்கள். மற்றும் காங்கரஸ்காரர்கள் வெற்றி பெற்ற உடனே அப்போது காங்கரஸ் தலைவராகவிருந்த பண்டித ஜவஹர்லால்நேரு அவர்களை சட்டசபைக்குள் போய் சத்தியமும் ராஜ விஸ்வாசமும் செய்ய வேண்டுமே அதற்கு என்ன செய்வது என்று கேட்டார்கள். அதற்கு பண்டித ஜவஹர்லால் நேரு அவர்கள் “நீங்கள் மனதில் ஒன்று வைத்துக் கொண்டு வெளியில் பொய் சத்தியம் செய்து விடுங்கள். அதனால் ஒன்றும் குற்றமில்லை” என்று கூறினார். இது யாரை ஏமாற்ற? சர்க்காருக்கு பொய் சத்தியம் செய்தார்களா? ஜனங்களுக்கு பொய் சத்தியம் செய்தார்களா? என்று இன்று அவர்களுடைய நடத்தையில் இருந்து தெரிந்து கொள்ளுங்கள்.

~subhead

உதாரணம் வேண்டுமா?

~shend

காங்கரஸ்காரர்கள் இன்று வெள்ளைக்காரர்கள் சொல்வதற்கெல்லாம் தாளம் போடும் நிலைமையில் வந்து அவர்களை சதா புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

நமது மாகாண மந்திரி கனம் ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் தேர்தலுக்கு முன், வெள்ளைக்காரர்களுக்கு மட்டும் சம்பளம் அதிகமாகக் கொடுக்கப்படுகிறது. நமது இந்தியர்களுக்குச் சம்பளம் குறைச்சலாக கொடுக்கப்படுகிறது. நாங்கள் சட்டசபைக்குப் போய் இந்தக் கொடுமையை ஒழிக்கப் போகிறோம். எங்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்று சொன்னார். அதன்படி நாம் ஓட்டுக் கொடுத்தோம். இன்று என்ன சொல்லுகிறார்? வெள்ளைக்காரர்களுக்கு சம்பளம் குறைக்க முடியாதாம். அவர்கள் பங்களாக்களில் வைக்கக் கூடிய ரோஜாச் செடிகளை போன்றவர்களாம். இந்தியர்கள் காட்டில் இருக்கக்கூடிய பனைமரம் போன்றவர்களாம். இவர்களுக்குச் சம்பளம் குறைக்கலாம் என்று சிறிதும் வெட்கமில்லாமல் தைரியமாய் கூறுகிறார். முன் நீதி நிர்வாக இலாக்கா பிரிக்கப்பட வேண்டுமென்றால் இன்று அதைப் பிரித்தால் சர்க்கார் சரியாய் நடக்காது என்கிறார். முன் சி.ஐ.டி. கூடாது என்கிறார். இப்போது சி.ஐ.டி. அவசியம் வேண்டுமென்று சொல்லிவிட்டார் வகுப்புவாரி உத்தியோக உத்தரவை மாற்றுவதில்லை என்றார். இப்போது திரைமறைவில் அவ்வுத்தரவை கொலை செய்கிறார். கேட்டால் “நான் என் இஷ்டப்படிதான் நடப்பேன். உங்களுக்குப் பிடிக்கவில்லையானால் இனிமேல் 5 வருஷம் பொறுத்து உங்களிடம் வருகையில் ஓட்டுக் கொடுக்காதீர்கள்” என்று ஆணவமாகவும், அகங்காரமாகவும் பதில் கூறுகிறார்.

~subhead

யார் வகுப்புவாதிகள்?

~shend

கனம் ராஜகோபாலாச்சாரியார் ஜஸ்டிஸ் கட்சியையும், முஸ்லிம் லீக்கையும் வகுப்புவாதக் கட்சி என்று சொல்லி அவைகளை ஒழிக்க வேண்டும் என்கிறாரே, இன்று அவரது மந்திரி சபையில் வகுப்புவாதமில்லையா என்று பாருங்கள். இன்று பத்து மந்திரிகளில் அவர்கள் விகிதாச்சாரத்துக்கு மேல் ஒன்றுக்கு ஐந்து வீதம் மந்திரிகளாக வந்திருக்கிறார்களே. இது வகுப்பு வாதமில்லையா?

அதுமட்டுமல்ல. கீழ் சபைக்கு இரண்டு தலைவர்களும் பார்ப்பனர்களாகவே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்பு வாதமில்லையா? மேல்சபைத் தலைவருக்கும் பார்ப்பனரையே நியமித்துக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? பிரதம மந்திரியும், பிரதம காரியதரிசியும் பார்ப்பனர்களாகவே ஆக்கிக் கொண்டார்களே அது வகுப்புவாதமல்லவா? நம் நாடு மாத்திரமல்லாமல் ஆறு மாகாண முதல் மந்திரிகளும் பார்ப்பனர்களாகவே அமர்ந்து கொண்டார்களே! அது வகுப்புவாதமல்லவா? திவான்பகதூர் பட்டம் விட்ட பெரிய படிப்பாளியும் அனுபவமும் உள்ள ராமலிங்க செட்டியாரை மூலையில் உட்கார வைத்துவிட்டு ஒரு சாதாரண படிப்பாளியும் அனுபவமுமில்லாத ஒரு பார்ப்பனர் மேல்சபைக்கு தலைவராக்கப்பட்டு விட்டாரே! அது வகுப்புவாதமல்லவா? திருச்சி தேவரை தெருவில் திண்டாட விட்டுவிட்டு காங்கரசுக்குத் துரோகம் செய்து காங்கரசால் தண்டிக்கப்பட்ட ஒரு பார்ப்பனர் மந்திரியாக்கப் பட்டாரே அது வகுப்புவாதமல்லவா? 26 மிருக வைத்திய உத்தியோகத்துக்கு 19 உத்தியோகம் பார்ப்பனருக்குக் கொடுத்தால் அது வகுப்புவாதமல்லவா? கார்ப்பரேஷனில் 10 எட்மாஸ்டர் வேலை காலியாக்கப்பட்டதற்கு 10க்கும் பார்ப்பனர்களையே நியமித்தது வகுப்புவாதமில்லையா? கார்ப்பரேஷன் கல்வி அதிகாரி வேலைக்கு தகுதியான ஒரு பார்ப்பனரல்லாத தோழர் சிவசைலம் பிள்ளை எம்.ஏ.எல்.டி.யை கார்ப்பரேஷன் கவுன்சிலும் காங்கரஸ் கட்சியும் தெரிந்தெடுத்தும் அதைத் தள்ளிவிட்டு குறைந்த யோக்கியதையுடைய ஒரு கிழப் பார்ப்பனரை அதிகச் சம்பளத்தில் நியமித்தது வகுப்புவாதமல்லவா? இன்னும் பார்ப்பனரல்லாதார் உத்தியோகங்கள் காலியாவதற்கெல்லாம் பார்ப்பனர்களைப் புகுத்துவதும் தப்பான வழியில் பார்ப்பனரல்லாத பெரிய உத்தியோகஸ்தர்களை ஒழிக்க முயற்சிப்பதும் வகுப்புவாதமல்லவா? மற்றும் காங்கரசிலும் சென்னை போன்ற இடங்களிலேயே சாமி வெங்கிடாசலம் செட்டியார், விநாயக முதலியார், லட்சுமணசாமி முதலியார், சக்கரை செட்டியார், ஆதி கேசவலு நாயக்கர் முதலிய பார்ப்பனரல்லாதார் மீது மாத்திரம் ஒழுங்கு நடவடிக்கை எடுத்து தண்டிப்பதும், காங்கரசை விட்டு விரட்டுவதும் பார்ப்பனர்களாயிருக்கிறவர்கள் எவ்வளவு அயோக்கியத்தனமும், அக்கிரமும் செய்தாலும் அதைப்பற்றி சற்றும் கவனியாமல் இருப்பது வகுப்புவாதமல்லவா? இவைகள் எல்லாமுமா அகஸ்மாத்தாய் ஏற்பட்டவை என்று கேட்கிறேன்?

~subhead

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால்

~shend

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் வெளியில் கிடக்கும் சாமான்கள்தான் வீட்டிற்குள் போகுமே தவிர, வீட்டிற்குள் இருக்கும் சாமான்கள் ஒன்றுகூட வெளியில் எறியப்படமாட்டா என்பது போல் எல்லா அகஸ்மாத்தும் பார்ப்பனர்களுக்கேதான் அனுகூலமாயிருப்பானேன்?

20 வருஷத்திற்கு முன்பாக நமது மாகாணம் இரண்டே மந்திரிகளால் நிர்வாகம் செய்யப்பட்டது. காங்கரசின் உத்தியோக வேட்டையில் இன்று பத்து மந்திரிகள் ஆள வேண்டியதாகிவிட்டது. இவர்களுக்கு 10 காரியதரிசிகள் வேண்டியதாகிவிட்டது. இவர்களிடம் சர்க்கார் வேலைகளை ஒப்புவிக்க வேண்டுமாம். சர்க்கார் நடவடிக்கை கழுதை புரண்ட களமாகி குட்டிச்சுவர் ஆவதற்கு இதைவிட வேறு காரியம் என்ன செய்ய வேண்டுமா? என்று பாருங்கள்.

காங்கரஸ் மந்திரிகள் காரியதரிசிகள் மெம்பர்கள் யோக்கியதை உங்களுக்குத் தெரியாத இப்போதே சேலத்தில் ராத்திரி சாப்பாட்டுக்கு வழியில்லாத ஒரு அன்னக்காவடி எம்.எல்.ஏ. “கலெக்டரை மாற்றி விடுகிறேன் பார், போலீஸ் சூப்ரண்டெண்டைத் தொலைத்து விடுகிறேன் பார், எனது பியூனை நிறுத்தினாலும் நீங்கள் ஓட்டுப் போட்டுத்தான் ஆக வேண்டும்” என்று மேடைகளில் வீரம் பேசுகிறார். போலீசைக் கண்டித்துத் தீர்மானம் போடுகிறார். இனி இவர்கள் தோழர்களான காரியதரிசிகளிடம் சர்க்கார் பைல் (ஊடிடூஞுண்) ரிக்கார்டுகளைக் கொடுத்து விட்டால் என்ன நடக்கும் என்று நான் சொல்ல வேண்டும்.

~subhead

சர்க்கார் செலவில் தேர்தல் பிரசாரம்

~shend

இன்று முனிசிபல் தேர்தல் பிரசாரத்துக்கு மந்திரிகளும் மெம்பர்களும் சர்க்கார் செலவில் சென்று தைரியமாய் பொய்ப் பிரசாரம் செய்கிறார்கள்.

வெய்யில் காலத்துக்கு மலைக்குப் போய் மலைவாசம் செய்யக்கூடாது என்று மற்ற மந்திரிகளைக் குறை கூறினார்கள். இவர்கள் பதவிக்கு வந்ததும் இவர்கள் கீழ் உள்ள வெள்ளைக்காரர்களுக்கு மலைக்குப் போகலாம் என்றார்கள். இப்போது மந்திரிகளே திருட்டுத்தனமாய் குடைக்கானலிலும், நீலகிரியிலும் உல்லாசமாய்த் திரிகிறார்கள். இவர்கள் காரியதரிசிகளுக்குக் கூட மலைவாசம் வேண்டியதாக இருக்கிறது. இவர்களது நாணயமும், யோக்கியமும் என்ன என்று பாருங்கள்.

தோழர் ரத்தினசபாபதி முதலியார் அவர்கள் வீட்டு கல்யாணத்திற்கு ஒரு மந்திரி நீலகிரியில் இருந்து வந்து போனதற்கு “இதெல்லாம் யாருடைய செலவு” என்று சத்தியமூர்த்தியார் கேட்டார். இப்போது இந்த மந்திரிகளில் சிலர் எழவுக்குப் போகவும், தாசி வீட்டுக்குப் போகவும் வரிப்பணத்தில் போகிறார்களே, கேள்வி இல்லையா? என்று கேட்கின்றேன்.

கும்பகோணத்தில் ஒரு ஆளுக்குக் கையில் அடிபட்டது என்பதற்காக பிரதம மந்திரி ஜில்லா டாக்டர் (ஈ.M.O)வுக்கு தந்தி கொடுத்து வைத்தியம் பார்க்கச் சொன்னாரே. இது என்ன யோக்கியதை? அப்படியானால் ஈ.M.O.க்கள் சரியாய் வைத்தியம் பார்ப்பதில்லை என்று அருத்தமா?. அல்லது அந்த நபர் ஆச்சாரியாருக்கு வேண்டியவர் என்பதற்காக ஈ.M.O.வைத்தியம் பார்க்க வேண்டுமா? பார்ப்பன ஆட்சி எவ்வளவு அந்தர தர்பார் என்று காட்டுவதற்காக இதை சொல்லுகிறேனே தவிர எனக்கு இது விஷயத்தில் பொறாமை ஒன்றும் இல்லை.

தோழர்களே!

~subhead

தேசீயக் கடனை ஒழிக்காமல் மேலும் கடன் வாங்கலாமா?

~shend

இனி ஒரு பித்தலாட்டத்தைப் பாருங்கள். காங்கரஸ்காரர்கள் சட்டசபைத் தேர்தலுக்கு நிற்கும்போது இதற்கு முன் இருந்த சர்க்கார் (ஜஸ்டிஸ் கட்சி உள்பட) நமது தேசத்தின் பேரால் கடன் வாங்கி தேசத்தில் உள்ளவர்களைக் கஷ்டமடையச் செய்து வருவதால் தாங்கள் பதவி ஏற்றவுடன் தேசீயக் கடன்களை அடியோடு செல்லுபடி அற்றதாக்கி, ஒழித்துவிடப் போவதாகக் கூறினார்கள். ஆனால் இப்போது என்ன செய்தார்கள் என்று பாருங்கள். பதவிக்கு வந்ததும் நமது தேசத்தின் மீது முன் இருந்த கடனுக்கும் சேர்த்து கையெழுத்துப் போட்டு நமது மாகாணத்திற்கு மாத்திரம் 3லி கோடி ரூபாய் புதிய கடன் வாங்கி விட்டார்கள். அது வாங்கி என்ன செய்தார்கள்? வாய்க்கால் வெட்டினார்களா? ரோட்டுப் போட்டார்களா? அணை கட்டினார்களா? ஏதாவது புதுக்காரியம் செய்தார்களா? 10 மந்திரி, 10 காரியதரிசி நியமிக்கவும், கார்கள் வாங்கவும், சதா ஊர் சுற்றவும், டாம்பீகமாக மைனர் விளையாட்டுகள் விளையாடவுமான காரியங்களுக்குத்தான் செலவு செய்தார்கள் என்பதோடு ஏற்கனவே இருக்கும் பள்ளிக் கூடங்களை மூடுகிறார்கள், ஆஸ்பத்திரி டாக்டர்களுக்குச் சம்பளமில்லை என்கிறார்கள், கிராமங்களில் கிணறு வெட்ட பணமில்லை என்கிறார்கள். அப்படியானால் மூன்றரை கோடி கடன் வாங்கியது எதற்காக என்று பாருங்கள். முன்பிருந்த மந்திரிகள் வரவு செலவுகளைச் சரிப்படுத்தி வரிகளையும் குறைத்து கடனில்லாமல் சர்க்கார் ஒழுங்காக நடக்கும்படி செய்து ஆட்சி செலுத்தி வந்தார்கள். இப்போது இவர்களோ கடன் மேல் கடன் வாங்கி தாம் தூம் செய்து விட்டு அதன் பொறுப்பை நமது மக்கள் தலையில் சுமத்துகிறார்கள்.

~subhead

ராஜிநாமாப் புரளி எதற்கு?

~shend

யாராவது கேட்டால் ராஜீநாமா ஜேப்பில் இருக்கிறது என்கிறார்கள். இதன் கருத்து என்ன? கடன் வாங்கிக் கண்டபடி செலவழித்துவிட்டு ஓடிப்போனால் எவனோ வந்து மக்கள் மீது அதிக வரி போட்டு கடனைக் கட்டட்டும் என்று கருதி ஊரான் தலையில் கடன்பளுவை சுமத்தத்தானே அல்லாமல் வேறு என்ன? ஒரு ஜில்லாவில் செய்த மதுவிலக்குக்காக எத்தனை பள்ளிக்கூட கிராண்டு, எத்தனை ரோடு, பாலம் கிராண்டு, எத்தனை கிராம குடிதண்ணீர் கிராண்டு ஆகியவைகளையெல்லாம் நிறுத்தி விட்டார்கள் என்று பாருங்கள். இன்னும் செலவைக் குறைக்க ஆஸ்பத்திரிகளில் இருக்கும் டாக்டர்களை எடுத்துவிடுகிறார்களாம். இது என்ன அக்கிரமம். மாட்டுக்கும், எருமைக்கும், கழுதைக்கும், நாய்க்கும் வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளமாம். ஆனால் மனிதர்களுக்கு வைத்தியம் பார்க்கும் டாக்டர்களுக்கு சம்பளம் இல்லையாம். தோழர்களே இந்த மந்திரிகள் நாய், கழுதை, குதிரை, மாடு, எருமை உயிர்களைவிட மனிதர் உயிர் கேவலமானதென்று இவர்கள் கருதுகிறார்களா அல்லவாவென்று கேட்கிறேன். மந்திரிகளுக்கு நோவு வந்தால் டாக்டர் குருசாமி காத்திருக்கிறார். நமக்கு நோவு வந்தால் ஒரு டாக்டரிடம் போக வேண்டுமானால் நாம் கொடுக்கும் வரி வேறு எதற்குப் பயன்படுகிறது என்று கேட்கிறேன். சம்பளமில்லாத டாக்டர்கள் யோக்கியமாய் வைத்தியம் பார்ப்பார்களா?

நோயாளிகளைத் தமது வீட்டிற்கு வரும்படி சொல்லிப் பணம் சம்பாதிக்க வழியாகுமே தவிர வேறு நன்மை ஏற்படாது.

யாரோ பைத்தியக்காரர்கள், மஞ்சள் பெட்டியை நிரப்பிய பாவத்திற்காக நமது கல்வி, வைத்தியம், சுகாதாரம், போக்குவரவு வசதி இவ்வளவும் நாசமாகப் போய் நாம் மிருகங்களிலும் கேடாக வாழ்வதா என்று உங்களைக் கேட்கிறேன்.

மற்றும் இந்தப் பார்ப்பனர்கள் பதவி பெற்ற ஆணவத்தால் நம்மவர்களை எப்படி மதித்திருக்கிறார்கள் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.

~subhead

பார்ப்பன ஆட்சியில் நாம் கண்ட பலன்

~shend

இரட்டை ஆட்சியில் இலாகாக்களை ஒதுக்கிக் கொடுத்ததில் “சர்க்கார் இலாகாக்களை பொறுப்புள்ள அதிகாரங்களை தாங்கள் வைத்துக் கொண்டு ஜனப்பிரதிநிதிகளுக்கு சொத்தை இலாக்காக்கள் கொடுத்தார்கள்” என்று சொன்னார்கள். மற்றும் “தகுதி உள்ளவர்களைத் தள்ளிவிட்டுச் சர்க்கார் அடிமைகளுக்கும் சொத்தைகளுக்கும் பதவிகள் கொடுத்தார்கள்” என்று சொன்னார்கள்.

இவர்கள் கைக்கு அதிகாரம் வந்தவுடன் இவர்கள் எப்படி நடந்து கொண்டார்கள். பொறுப்புள்ள இலாகாக்களை அதாவது வெள்ளையர்கள் பார்த்துவந்த இலாகாக்களைப் பார்ப்பனர்கள் எடுத்துக் கொண்டார்கள். சொத்தைகளை தமிழர்களுக்குக் கொடுத்தார்கள். தோழர் ராமநாதன் அவர்களுக்கு விளம்பர வேலை கொடுத்து மாட்டி வண்டி ஓட்டச் சொன்னார்கள். தோழர் சுப்பராயன் அவர்களுக்கு கல்வி இலாகா கொடுத்து ஹிந்தியைப் புகுத்த நிர்ப்பந்தப்படுத்தியதுடன் யாராவது தட்டிப் பேசினால் ராணுவத்தையும், போலீசையும் கொண்டு அடக்கச் சொன்னார்கள்.

தோழர் முனிசாமி பிள்ளைக்கு விவசாயமும், கலால் இலாகாவும் கொடுத்து அதிலும் காட்டிய இடத்தில் படித்துக்கூடப் பார்க்காமல் கையெழுத்து போடுகிற உரிமை மாத்திரம் கொடுத்தார்கள். மற்றபடி தமிழர்களுக்கு பார்ப்பனர் கொடுத்த இலாகா என்ன? என்று பாருங்கள்.

இவர்கள் பொறுக்கியெடுத்த ஆள்களின் யோக்கியதைதான் என்ன? கடைந்தெடுத்த அடிமைகளாகவும், பதவிக்கும், சம்பளத்துக்கும் சற்றும் தயங்காமல் என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராய் இருப்பவர்களாகவும் பார்த்து பதவி கொடுத்தார்களே ஒழிய மனிதத் தன்மை உடையவர்களைச் சற்றாவது கவனித்தார்களா? கவனிக்காவிட்டாலும் சும்மாவாவது விட்டார்களா?

~subhead

சமர்த்தர்கள் கதி

~shend

உதாரணமாகச் சில விஷயங்களை எடுத்துக் கொள்ளுங்கள். இதே கோவை ஜில்லாவில் தோழர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார், டி.எ. ராமலிங்கம் செட்டியார், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர், ஆர்.கே. ஷண்முகம் இவர்கள் லேசானவர்களா? 10, 20 வருஷங்களுக்கு முன்பிருந்து பொதுநல சேவகம் செய்பவர்கள். அரசியலின் பேரால் வயிறு வளர்க்க வேண்டிய அவசியமில்லாத செல்வவான்கள். ஆங்கில ஞானமுடையவர்கள். நிர்வாக அனுபவமுடையவர்கள். சொந்த வாழ்க்கையில் கண்ணியமான நடத்தைக்காரர்கள். இப்படிப்பட்ட இவர்கள் கதி என்ன ஆயிற்று? காங்கரஸ்காரர்கள் தோழர் சி.எஸ்.ஆர். அவர்களை ஏமாற்றி வஞ்சித்து குற்றம் கூறிவிட்டார்கள். 20 வருஷ காலமாக தனது சொந்த முதல் லக்ஷக்கணக்கில் செலவழித்து பூரா நேரமும் பொதுநலத்துக்கு பாடுபட்ட அவர்கள் கதி இப்படியாயிற்று. தோழர் டி.எ. ராமலிங்கம் செட்டியார் அவர்களும் 30 வருஷம் பொதுநல சேவை செய்து கடைசியில் திவான் பகதூர் பட்டத்தைவிட்டு மூலையில் உட்கார வேண்டியதாயிற்று. தோழர் ஆர்.கே. ஷண்முகம் அவர்களது சாமர்த்தியம் புத்தி எல்லாம் வேறு நாட்டுக்கு பயன்படும்படியாக ஆகிவிட்டதே தவிர, நமது நாட்டார் அனுபவிக்க முடியவில்லை. இந்த ஜில்லா பெருங்குடி மக்கள் கூட்டத்தில் முக்கியவரான தோழர் வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களும் ஏனென்று கேட்பதற்கு ஆளில்லாமல் மற்றபடி கோவை ஜில்லாவுக்கு தலைவர்கள் தோழர்கள் சுப்ரி, சுப்பையா, மகாலிங்கய்யர் மற்றும் யாரோ ஒரு அய்யர் இவர்களுக்குப் பின்னால் நின்று கொண்டு ஜே போட்டு பின்பற்ற வேண்டிய தலையெழுத்து தோழர்கள் டி.எ. ராமலிங்கச் செட்டியாருக்கும், வி.சி. வெள்ளியங்கிரிக் கவுண்டர் அவர்களுக்கும் இருக்கிறதென்றால், காங்கரசின் யோக்கியதைக்கு வேறு என்ன அத்தாட்சி வேண்டும்.

~subhead

ஜில்லாத் தலைவர்கள் யார்?

~shend

மற்றும் ஒவ்வொரு ஜில்லாவையும் பாருங்கள். சென்னைக்கு தலைவர் தோழர் சத்தியமூர்த்தியார், வேலூர் ஜில்லாவுக்கு தலைவர் தோழர் குப்புசாமி, உபயதுல்லா, திருவண்ணாமலை ஜில்லாவுக்கு தலைவர் தோழர் அண்ணாமலை, ராமனாதபுரம் ஜில்லாவுக்கு தலைவர் தோழர்கள் காமராஜ நாடார், முத்துசாமி; மதுரைக்கு தலைவர் தோழர் மட்டபாறை அய்யர், திருநெல்வேலிக்குத் தலைவர் யாரோ ஒரு அய்யர். திருச்சிக்கு தலைவர் ஆலாசியம் அய்யர், தஞ்சைக்கு தலைவர் தோழர் பூவராகம்; சேலத்துக்கு தலைவர் சுப்பிரமணியம்; தென் ஆற்காட்டுக்கு தலைவர் நைனியப்பன். இப்படியாகத்தானே இருந்து வருகிறது. இது தமிழ் மக்களுடைய மானத்துக்கு மரியாதை அளிக்கக் கூடியதா என்று கேட்கிறேன்.

~subhead

பார்ப்பன ஆட்சியில் நாணயமாவதுண்டா?

~shend

இன்று காங்கரஸ் இப்படித் தமிழ் மக்களை அடக்கி ஒடுக்கி மூலையில் வைத்துவிட்டு செயலாற்றுவதிலாவது நாணயமாயிருக்கிறதா வென்று பாருங்கள். சட்டசபையிலுள்ள மெம்பர்களுக்கு மாதம் 75 ரூபாய் சம்பளத்தை கொடுத்து பலரைக் கை கட்டி, வாய் பொத்திக் கொண்டிருக்கும்படி உட்காரவைத்துக் கொண்டு அவர்கள் எதிரிலேயே (தமிழர்களை) என்றும் தலையெடுக்க வொட்டாமல் இருக்கும்படியான காரியங்கள் செய்கிறார்கள். இதைத் தமிழன் 75 ரூபா காசுக்கு வேடிக்கை பார்க்கிறான். சிலர் வேறு கதியில்லாமல் சரணாகதி அடைந்து கிடக்கிறார்கள். இனியும் காங்கரசின் பேரால் பார்ப்பனர்கள் செய்யும் கொடுமைகள் சொல்லத்தரமல்ல. இனி நம்மவர்கள் பப்ளிக் பிராசி கூட்டராய் வர முடியாது. காலேஜ் கமிட்டி எடுத்துவிட்டதால் நம் பிள்ளைகள் முன்போல் மேல்படிப்புக்கு வர முடியாது. ஹிந்தி கட்டாயத்தால் கீழ்படிப்பும் பாழாய் விடும். வார்தா கல்வித் திட்டத்தால் பிள்ளைகளுக்கு கையெழுத்துப் போடத் தெரிவதே கஷ்டமாய் முடியும். கடன் நிவாரணச் சட்டம் என்கின்ற புரட்டால் சிறு குடியானவர்களும், கிராமவாசிகளும் பட்டணங்களுக்கு ஓடி அடிமையாய்த்தான் வாழ வேண்டும். இல்லாவிட்டால் விவசாயி கூலியாக ஆக வேண்டும். நாணையமே ஒழிந்தது.

~subhead

மொத்தப் பலன்

~shend

மொத்தத்தில் ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் வருணாச்சிரம முறை தலையெடுக்க ஆரம்பித்துவிட்டது. அது இந்த மந்திரி சபையில் பலப்பட்டு நிலை நிற்கப் போகிறது. இவைகளையெல்லாம் நன்றாய் மனதிலிருத்தி காங்கரஸ்காரர்களும், பார்ப்பனர்களும் சொல்லுவதையும் நன்றாய் கேட்டு உங்களுக்கு எது சரி என்று படுகிறதோ அப்படி நடங்கள். மணி இரவு 11 ஆகி விட்டதால் இனி உங்களை காக்க வைக்க இஷ்டமில்லை.

குறிப்பு: வேலூர், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் ஆற்றிய உரை. 22.05.1938 குடி அரசு தொடர்ச்சி.

குடி அரசு – சொற்பொழிவு – 29.05.1938

~cstart

போர் மூண்டு விட்டது

தமிழர் ஒன்று சேர்க

~cmatter

ஆரிய சூழ்ச்சிக்கும், தமிழர் (திராவிடர்) வீரத்திற்கும் போர் மூண்டு விட்டது. மூளாமல் தடுக்க தமிழ் மக்கள் எடுத்துக் கொண்ட முயற்சிகள் எல்லாம் பயனற்றதாகி விட்டன.

தமிழர்கட்குள் ஒற்றுமை இல்லை என்றும், தமிழர்களை காட்டிக் கொடுத்து தமிழர்களை அழிக்க தமிழ் மக்களில் தங்களுக்கு வேண்டிய “அநுமார், சுக்கிரீவன், விபீஷணன்” போன்ற இழி மக்கள் கிடைத்திருக்கிறார்கள். இன்னும் கிடைப்பார்கள் என்றும் கருதியிருக்கும் இறுமாப்பால் “நான் செய்வதைச் செய்கிறேன். உன்னால் ஆனதைப் பார்” என்று சூழ்ச்சியில் வல்ல நமது ஆச்சாரியார் போர்க்கோலம் கொண்டு விட்டார். பிரிட்டிஷ் ஆட்சியும் தனது சுயநலத்தையும், தமிழ் மக்களின் கதியற்ற நிலைமையும் கருதி தமிழர் மானத்தைச் சூரையாட ஆச்சாரியாருக்கு அனுமதிச்சீட்டு அளித்துவிட்டது. ஆதலால் எண்ணிக்கையில் பெருத்து ஒற்றுமையின்றிச் சிதறி வலிமையில் சிறுத்துக் கிடக்கும் தமிழ் மக்களுக்கு போக்கிடம் இல்லாமல் இன்று நலிய வேண்டிய நிலைமை ஏற்பட்டு விட்டது.

~subhead

தமிழ்நாட்டில் பள்ளிகள் குறைக்கப்படுகின்றன.

~shend

வைத்தியர்களின் பொறுப்புகள் அகற்றப்படுகின்றன. போக்கு வரவு சாதன வசதிகள் குறைக்கப்படுகின்றன.

கிராம நீர்நிலை சுகாதாரம் முதலிய சவுகரியங்கள் அலட்சியப் படுத்தப்படுகின்றன. இவற்றிற்குக் காரணம் ஆச்சாரியார் ஆட்சிக்கு பொருளாதார சவுகரியம் இல்லையாம். ஒரு ஜில்லாவில் மதுவிலக்குச் செய்யப்பட்டது என்கின்ற சாக்கை வைத்து தமிழ்நாடு முழுவதிலும் இக்கொடுமைகள் செய்யப்படுகின்றன. தமிழ் நாட்டின் பேரால் இரண்டு வருஷ வரவு செலவு திட்டத்தில் 3லி கோடி ரூபாய் அரசாங்க நிருவாகத்திற்கு என்று ஆச்சாரியார் ஆட்சி கடன் வாங்கியும்கூட பள்ளியைக் குறைத்து, பாதையைக் குறைத்து, பண்டிதத்தை குறைத்து, பாங்கைக் குறைத்து, குடி தண்ணீர் வசதியைக் குறைத்துதான் நிர்வாகம் செய்ய வேண்டிய நிலையில் இருந்து வருகிறது. இக் கொடுமையைத் தமிழ் மக்கள் இன்னும் சரியானபடி உணரவில்லை.

~subhead

ஹிந்தி பலாத்காரம்

~shend

இவை எப்படியோ போகட்டும் என்றாலும் ஹிந்தி பாஷை என்ற ஒரு பாஷையை ஆச்சாரியார் ஆட்சியானது தமிழ் மக்களுக்குள் கட்டாயமாகப் புகுத்த சபதம் செய்து கொண்டதானது பொறுக்க முடியாத கொடுமையாக இருந்து வருகிறது. தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு இன்று 100க்கு 90 பேர்களுக்கு மேல் தங்கள் தாய் மொழியில் (தமிழில்) கூட கையெழுத்துப் போடத் தெரியாத அவ்வளவு தற்குறி – பாமரத் தன்மை இருந்து வருகிறது. இதில் ஒரு விகிதத்தையாவது குறைக்க ஆச்சாரியார் ஆட்சி இதுவரை ஒரு சிறு முயற்சியும் எடுத்துக் கொண்டதாகச் சொல்ல எவ்வித ஆதாரத்தையும் காண முடியவில்லை. இந்நிலையில் உள்ள தமிழ் மக்களுக்கு மற்ற ஒரு அந்நிய பாஷையைக் கொண்டு வந்து “வலுவில் புகுத்தித்தான் தீருவேன்” என்று ஆச்சாரியார் ஆட்சி சொல்லுமேயானால் இதில் ஏதாவது சூழ்ச்சியோ வஞ்சகமோ இல்லாமல் சிறிதாவது யோக்கியப் பொறுப்பு இருக்க முடியுமா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

உலகிலேயே இந்தியா தேசம் கல்வி, அறிவற்ற நாடு என்கின்ற தன்மையில் இருக்கும்போதும் குறிப்பாக தமிழ்நாடு மிக்க பாமர மக்களைக் கொண்டதாக இருக்கும்போதும் அதிலும் பழங்குடி மக்களாகிய தமிழர்களில் சராசரி 100க்கு 95 பேர்கள் தற்குறிகளாகவும், பெண்கள் 100க்கு 99 பேர் தற்குறிகளாகவும் இருக்கும் போதும் படிப்பில்லாதவர்களுக்கு படிப்பைக் கொடுக்க வழிகோலாமல் படித்து இருக்கும் மக்களுக்கே மற்றும் ஒரு பாஷை படிப்பிக்க முயற்சிப்பதும், பணம், ஊக்கம், நேரம் ஆகியவைகளை பாழாக்க முயற்சிப்பதும் எப்படி யோக்கியமானதும் நல்லெண்ணமுடையதுமான காரியமாகுமென்று மறுபடியும் கேட்கின்றோம்.

~subhead

மனு முறைக்குச் சூழ்ச்சி

~shend

கல்விக்காக மக்களிடம் இருந்து வசூலிக்கும் வரி கல்வி இல்லாதவர்களுக்கு கல்வி கற்பிக்கவா அல்லது கற்றவர்களுக்கு மற்றுமொரு பாஷை கற்பிக்கவா என்று கேட்கின்றோம். இவைகளைப் பார்க்கும்போதும் தோழர் காந்தியார் முதலிய பல அரசியல் தலைவர்கள்.

“இந்தியா சுயராஜ்யம் பெறுவது என்றால் வருணாச்சிரம தர்மமாகிய மனுதர்ம ஆட்சி முறையை நிறுவுவதுதான்.”

என்று சொல்லி வந்ததை இப்போது எப்படியோ சமயம் கிடைத்த உடன் மனுதர்ம ஆட்சி ஏற்படுத்த காந்தியாரின் பிரதம சிஷியர் என்ற உரிமை பாராட்டிக் கொள்ளும் ஆச்சாரியாரின் ஆட்சி மூர்க்க முயற்சியில் இறங்கிவிட்டது. இந்த வருணாச்சிரம மனுதர்ம ஆட்சி நிறுவப்பட்டால் இந்நாட்டுத் தமிழ் மக்களுடைய சுதந்திரம், வீரம், தன்மானம் ஆகியவை அடியோடு புதைக்கப்பட்டது என்பதுதான் கருத்தாகும்.

ஹிந்தி வடமொழி பாஷையை தழுவியது என்பதோடு ஹிந்தி பாஷையின் எழுத்துக்கள் அநேகமாக வட மொழிக்கு ஏற்பட்ட எழுத்துக்களேயாகும். சப்தமும் பெரிதும் அதுவேயாகும். அப்பாஷையில் படிக்க வேண்டிய விஷயங்களும், படிக்க நேரும் விஷயங்களும் மனுதர்மத்தை ஆதரிக்க தூண்டும் விஷயங்களும் மனுதர்மப்படி நடக்கச் செய்யும் விஷயங்களுமேயாகும். தமிழ் நாடும் சிறப்பாக தமிழ் மக்களும் இன்றுள்ள இந்த இழி நிலைக்கு அதாவது தன்மானமற்று, எதிரியைப் பணிந்தும், சார்ந்தும், வாழ்வு நடத்தும் மனப்பான்மை கொண்டு வாழ வேண்டிய நிலையில் இருப்பதற்குக் காரணம் ஆரிய சூழ்ச்சியால் மனுதர்ம முறையை ஒப்புக்கொண்டு இதுவரை வாழ்ந்து வந்ததேயாகும்.

ஏதோ இடைக்காலங்களில் அவ்வப்போது ஒன்றிரண்டு தமிழர்கள் தங்கள் நாட்டின் பழைய நிலைமையும், சமூகத்தின் பழந்தன்மையும், தங்கள் கலைகளின் உயர்வையும் ஓர் சிறிதாவது உணர்ந்து செய்து வந்த உண்மைத் தொண்டுகளினால் “தமிழர் ஆரியருக்கு அடிமைகளல்ல ஆரியருக்குத் தொண்டு செய்ய பிறந்தவரல்ல, ஆரியரின் போகப் பெண்டிர்களின் மக்களல்ல – சூத்திரர்களல்ல” என்று தலைநிமிர்ந்து பேசவும், பறை சாற்றவும் தமிழ் மக்களுக்கு உணர்த்தவுமான நிலை சற்று ஏற்பட்டும், மறைந்தும் மறுபடியும் தலைதூக்கியும் இப்படியே நடந்து வந்திருக்கிறது.

~subhead

சைவரால் ஏற்பட்ட இழிவு

~shend

பொதுவாக தமிழ் மக்களை இம்மாதிரியான ஆரியப் படுகுழியில் தள்ளி என்றும் தலை தூக்காமல் இருக்கத்தக்க வண்ணம் ஆரியருக்குத் துணைபுரிந்து வந்தவர்கள் – வருகிறவர்கள் சைவர்களேயாகும். அவர்களும், அவர்களது சைவ சமூகமே தமிழ்நாட்டில் ஆரியத்தை வளர்த்து ஆரியர்களுக்குத் தமிழர்களை அடிமையாக்கிற்று. இன்றும் பெரும்பாலும் சைவனேதான் ஆரியற்கு அனுமார், சுக்ரீவர்களாகவும், விபீஷணர்களாகவும் இருந்து வருகிறார்கள். இம்மாதிரி ஆரிய அடிமைச் சமய உணர்ச்சி ஏற்படாதிருந்திருக்குமானால் இன்று ஆரியருக்கு எந்நாட்டையும் விட இத்தமிழ் நாட்டில் மாத்திரம் இத்தனை சிறப்பும் மூர்க்க உணர்ச்சியும் ஏற்பட்டிருக்க முடியாதென்றே சொல்லலாம்.

எனவே ஆரியர்கள் நம் நாட்டில் சமயத்தின் பேரால் பெற்ற செல்வாக்கால் தான் சமூகத்தில் மேம்பாடடைந்தார்கள். சமூகத்தில் அடைந்த மேம்பாட்டால்தான் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றார்கள். அந்த அரசியல் ஆதிக்கத்தால்தான் நம்மை மநுமுறைக்கு தள்ளுகிறார்கள். அப்படிப்பட்ட அவ்வாதிக்கத்திற்கு இன்றும் சைவர்களே பெரிதும் அனுமார்களாய் இருக்கிறார்கள் என்றால் சைவர்கள் தங்கள் அறிவற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்து கொள்ள வேண்டாமா என்று கேட்கிறோம். உண்மைச் சைவர்களுக்கு கடுகளவாவது தன்மான உணர்ச்சி ஏற்பட்டு தங்களுடைய சற்சூத்திர தத்துவத்தை சிறிதாவது பின் வாங்கிக் கொள்ள அறிவு கொள்ளுவார்களேயானால் ஆச்சாரியாரின் மூர்க்க ஆட்சி அன்றோடு அழியத் தொடங்கி விடும் என்பதில் யாதொரு சந்தேகமும் கொள்ள இடமில்லை என்று உறுதி கூறலாம். அந்த உணர்ச்சி சைவர்களுக்கு சுலபத்தில் ஏற்படாது என்கின்ற தைரியத்தாலேயே இன்று ஆச்சாரியார் இவ்வளவு துணிச்சலுடனும், மூர்க்க உணர்ச்சியுடனும் காரியாதிகள் செய்ய முடிகின்றன.

~subhead

ஹரிஜனப் பட்டம் ஏன்?

~shend

உதாரணமாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு “ஹரிஜனங்கள்” என்று பெயரிடவும், அது இன்று அரசியல் ஆதாரத்திலும் இடம் பெறவுமான அகந்தை ஏற்பட இடம் கொடுத்தவர்கள் சைவர்களேயாவார்கள்.

மற்றும் சமீபத்தில் தமிழ் மக்களின் மரியாதைக் குறிப்புக்காக பொதுவாக மகாராஜ ராஜஸ்ரீ என்று இருந்ததை மாற்றி ஸ்ரீ என்று வைணவ குறிப்பை தமிழ்நாட்டில் அரசியல் ஆதாரத்தில் வைத்துக் கொண்டதுமான காரியங்கள் இன்று ஏன் என்று கூட கேட்பாரற்றுக் கிடப்பதற்கு யார் பொறுப்பாளி என்று பார்த்தால் விளங்காமல் போகாது.

மற்றும் வெகுகாலமாகவே தமிழ்நாட்டில் ஆரிய ஆதிக்கத்தை ஒழிக்கச் செய்த முயற்சிகளுக்கெல்லாம் சைவர்களே குறுக்கே விழுந்து ஆரியத்துக்கு ஆக்கம் தேடிக் கொடுத்து வந்திருப்பதற்கு பல உதாரணங்கள் கூறலாம்.

இன்று சைவர்களின் தெய்வங்கள், வழிபாடு, பூசை முறைகள் மற்றும் புராணம் சரித்திரம் கதைகள் பெரும்பாலும் ஆரியத்தை ஒட்டியதாகவே இருந்து வருவதற்குச் சைவர்கள் இசைந்து கொண்டு ஏதோ சில தனிப்பட்ட தங்கள் தனிக்காரியங்களுக்குத் தடை ஏற்படும் போது மாத்திரம் ஆரியன் கண்டாய் – தமிழன் கண்டாய் என்று கூறிக் கொண்டு வருகிறார்கள்.

இக்காரியங்கள் மற்ற வேறு வகைகளில் தொல்லை கொடுத்து மக்களை இழிவுபடுத்துவது ஒருபுறமிருந்தாலும் இன்று அரசியலில் ஆதிக்கம் பெற்றுத் தமிழர்களின் தன்மானம் சரித்திரத்திலும் சித்திரத்திலும் இடம்பெற இடமில்லாத மாதிரியில் அழிவுறச் செய்து வருவதை ஒழிக்கவாவது சைவர்கள் துணை புரியக் கூடாதா என்றுதான் கதருகிறோம்.

~subhead

ஹிந்தி இஷ்டப் பாடமாகவாவது ஏன்?

~shend

ஹிந்தி பாஷை கட்டாய பாடமாகக் கூடாது என்பதுதான் இன்று தமிழ் மக்களின் பிரார்த்தனையாக இருக்கிறதே தவிர மற்றபடி ஹிந்தி பாஷை தமிழர்கள் பள்ளியில் இஷ்டப் பாடமாகவாவது ஏன் நுழைய வேண்டும்? என்று கேட்பதற்கு இதுவரை எந்தத் தமிழனும் முன்வரவில்லை. இங்கிலீஷ் ஏன் வந்தது தமிழன் பள்ளியில் எப்படி நுழைந்தது என்று சிலர் கேட்கலாம். இங்கிலீஷை கொண்டு வந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷை பரப்பினவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷால் பயனடைந்தவர்கள் ஆரியர்கள். இங்கிலீஷைப் புகுத்த உத்திரவு போட்டது பிரிட்டிஷார். ஆதலால் இங்கிலீஷ் தமிழர்கள் பள்ளியில் புகுந்ததற்கு தமிழர்கள் சிறிதும் பொறுப்பாளிகள் அல்ல. இங்கிலீஷின் உதவியில் ஆட்சி ஆதிக்கத்தைக் கைப்பற்றிய ஆரியர்கள் தங்களைத் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டு எதற்காக மற்றொரு அன்னிய பாஷையாகிய ஹிந்தியை தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு பள்ளிகளில் புகுத்த வேண்டும். அதுவும் ஏன் கட்டாயப்படுத்த வேண்டும்? என்பதுதான் நமது கேள்வியாகும்.

எவ்வளவோ அதிருப்தியையும், எதிர்ப்பையும், கெஞ்சுதல்களையும், பிரார்த்தனைகளையும் சிறிதும் லட்சியம் செய்யாது ஹிந்தியைத் தமிழன் பள்ளியில் தமிழன் வரிப்பணத்தில் தமிழன் சம்மதமின்றி புகுத்த உத்தரவு போட்டாய்விட்டது.

~subhead

இனி என்ன செய்வது? முஸ்லிம்களைப் பாருங்கள்

~shend

இனி என்ன செய்வது என்பதுதான் நாம் பெரிதும் கவனிக்க வேண்டியதாகும். தமிழர்களில் ஒற்றுமையும் ஒன்றுபட்ட முயற்சியும் இன்மையே இன்றைய ஹிந்தி பலாத்காரத்திற்கு ஆதாரமாகும். ஏன் என்றால் முஸ்லிம்கள் ஒற்றுமையும் ஒன்றுபட்ட முயற்சியும் ஆச்சாரியாரின் அகம்பாவத்தையும் ஆணவத்தையும் சிதறடித்து விடவில்லையா என்று பாருங்கள்.

~subhead

“வந்தே மாதரம்” எங்கே?

~shend

வந்தே மாதரப் பாட்டு ஹிந்திபோல் புதிதாகக் கொண்டு வந்து நுழைக்கப்பட்டதல்ல. இந்திய தேசீயம் என்பதில் இரண்டறக் கலந்ததாகும் என்று சொல்லப்பட்டது. வந்தே மாதரப் பாட்டை நிறுத்துவது என்பது பாரத மாதாவைக் கொலை செய்வதாகும் என்றும் சொல்லப்பட்டது. வந்தே மாதரப் பாட்டுக்கு எதிர்ப்பாய் மார்ச்சு 5 -ந் தேதி சத்தியாக்கிரகம் செய்யப்படும் என்று பிப்ரவரி மாதம் 7 -ந் தேதி சென்னை மெயிலில் ஒரு ஒத்தை முஸ்லிம் வாலிபர் தோழர் எஸ்.எஸ். பாமனி சாயபு தெரியப்படுத்தியவுடன் ஆச்சாரியார் மார்ச் 1 -ந் தேதியிலேயே வந்தே மாதரப் பாட்டை நிறுத்திவிட்டதாக விளம்பரப்படுத்தி விட்டார்.

மற்றும் “ஹிந்து – முஸ்லிம் ஒற்றுமையை பூரண சுயராஜ்யம் பெறுவதற்கு முன் முடியாது” என்று காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் சொன்னார்.

மற்றும் “முஸ்லிம் லீக்கை ஒரு ஸ்தாபனமாக ஒப்புக் கொள்ள முடியாது” என்று தோழர் ஜவாஹர்லால் சொன்னார்.

வெற்றி பெற்ற மமதையில் அவரே “வேறு கட்சிகளுடன் சமாதானம் செய்து கொண்டு சுயராஜ்யம் பெறுவதைவிட சுயராஜ்யம் தூரமாகிவிட்டாலும் குற்றமில்லை” என்று சொன்னார். அதே நேருவே “ஜனாப் ஜின்னா முஸ்லிம்களுக்குத் தலைவரல்ல” என்று சொன்னார். முஸ்லிம்களின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும் இன்று அவ்வளவு வீரர்களும் அவர்களது வீரமும் ஜனாப் ஜின்னா வீட்டு வாயிலில் அடிபணிந்து விடவில்லையா என்று கேட்கின்றோம். ஆனால் அதே வீரர்களால் இன்று தமிழன் வீரத்தை மடத்தனம் என்று சொல்லப்படுகிறது.

தமிழன் கிளர்ச்சியை அடக்க அடக்கு முறை கோரப்படுகிறது. தமிழன் எதிர்ப்பை சாராயப்புட்டி போட்டு குடிவெறி என்று காட்டப்படுகிறது. தமிழன் பட்டினி கிடந்து உயிர்விடுவது மூர்க்கத்தனமென்றும் போக்கிரித்தனமென்றும் கூறப்படுகிறது. அதுவும் தோழர் காந்தியாலும், கனம் ஆச்சாரியாராலும் சொல்லப்படுகின்றது என்றால் தமிழர்கள் இனியும் உயிர்வாழ வேண்டுமா என்று கேட்பதோடு தமிழனுக்கு மானமுண்டு என்று சொல்லிக் கொண்டு வெளியில் தலைகாட்ட இடமுண்டா என்று கேட்க வேண்டியிருக்கிறது.

~subhead

காந்தி பட்டினி மர்மம்

~shend

தோழர் காந்தியார் ஜெயிலில் அடைபட்டபோது மனப்பூர்த்தியாக வேண்டுமென்றே ஜெயிலில் இருந்து வெளிவர ஒருதடவை பட்டினி இருந்தார். அதாவது தனக்கு “ஹரிஜன சேவை செய்ய வசதி அளிக்க வேண்டும்” என்று பட்டினி இருந்தார். சர்க்கார் எவ்வளவோ வசதி அளிப்பதாக வாக்குறுதி கொடுத்தும் “காலை முதல் இரவுவரை தன்னிடம் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் வந்து போக வசதி இருக்கும்படி ஜெயில் கதவுகள் திறந்திருக்க வேண்டும்” என்று பட்டினி இருந்தார். அந்தப் பட்டினியால் சர்க்கார் காந்தியாரை வெளியில் விட்டு விட்டார்கள். இந்த பட்டினி காந்தியார் தன்னை பரிசுத்தம் செய்து கொள்வதற்காக இருந்தாரா? ஒரு குறிப்பிட்ட காரியத்தை அடைய எதிரிகள் இடமிருந்து இஷ்டமில்லாததை பலாத்காரமாய் தட்டிப் பறிக்க பட்டினி இருந்தாரா? என்று யோசித்துப் பார்க்க விரும்புகிறோம்.

மற்றும் வட்டமேஜை மகாநாடு நடத்தையில் தாழ்த்தப்பட்ட மக்கள் சர்க்காரிடம் இருந்து பெற்று வந்த ஒரு சுதந்திரத்தைப் பறிக்க சாகும் வரை பட்டினி என்று பட்டினி கிடந்தார். அதனால் தாழ்த்தப்பட்ட மக்கள் வெகுநாளாக தவமிருந்து பெற்ற தனித்தொகுதி உரிமை ஒரு வாரத்தில் பிடுங்கப்பட்டுப் போயிற்று. இதனால் காந்தியார் தன்னைச் சுத்தம் செய்து கொள்ள பட்டினி இருந்தாரா அல்லது ஒரு சமூகத்தாரின் உயிர் போன்ற உரிமையை பலாத்காரமாகப் பிடுங்கிக் கொள்ளப் பட்டினி கிடந்தாரா என்று யோசிக்கும்படி வேண்டுகிறோம்.

மற்றும் இந்த 5, 6 வருஷ காலமாக இந்திய நாட்டில் எத்தனை பேர்கள் பட்டினி கிடந்திருக்கிறார்கள். அவர்களில் அனேகரை காந்தியாரே கேட்டுக் கொண்டு பட்டினியை நிறுத்தும்படி செய்திருக்கிறார். இவர்களை எல்லாம் பார்த்து அவர்களது பட்டினி பலாத்காரமானது என்ற காரணத்தைச் சொல்லிதான் நிறுத்தச் சொன்னாரா? என்று கேட்கிறோம்.

இவற்றை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் இன்று 30 நாட்களாக ஹிந்தி கூடாது என்று சென்னையில் பட்டினி கிடக்கும் தோழர் ஸ்டாலின் ஜெகதீசன் அவர்களது பட்டினியைப்பற்றி தோழர் காந்தியார் “இந்த பட்டினியானது வடிகட்டின பலாத்காரம்” என்றும் “அதற்குச் சிறிதும் இணங்கக் கூடாது” என்றும் தந்தி கொடுத்திருக்கிறார் என்றால் சுதேசமித்திரனும் இதை ஆதரித்து இந்த மாதிரி பட்டினிக்கு இணங்கக் கூடாது என்று எழுதுவது என்றால் மற்றும் சில பார்ப்பனப் பத்திரிக்கைகளும் பார்ப்பனரல்லாத மானங்கெட்ட கூலிப் பத்திரிக்கைகளும் “இந்தப் பூச்சாண்டிக்கு எல்லாம் பயப்பட முடியாது” என்று எழுதுவது என்றால் தோழர் ஆச்சாரியாரும் காந்தியார் பட்டினி தன்னைப் பரிசுத்தம் செய்து கொள்ளத்தக்கது என்றும் மற்றவர்கள் பட்டினி கலவரத்தை உண்டாக்கத்தக்கது என்றும் சொல்லுவதால் இதைக் குறிப்பிட்டோம் என்பதோடு இவர்களுடைய அகம்பாவமும் அயோக்கியத்தனமும் எப்படிப்பட்டது என்பதையும் தமிழர்கள் எப்படி நடந்தால் இவர்களுக்கு புத்தி கற்பிக்க முடியும் என்பதையும் ஒவ்வொரு தமிழ் மகனையும் சிந்தித்துப் பார்த்துச் செயலில் இறக்கும்படி வேண்டிக் கொள்வதற்காகவும் எழுதுகிறோம்.

~subhead

ராஜி முயற்சி

~shend

மற்றும் சில தமிழ் மக்கள் ஆச்சாரியாருக்கும், தோழர் ஸ்டாலின் ஜெகதீசனுக்கும் ராஜி செய்ய முயற்சிப்பதாக வெளிவந்து ராஜி நிபந்தனையாக “ஹிந்தியை கட்டாய பாடமாக வைக்கப்படுமே ஒழிய அதில் பரீட்சை வைக்காமலே மற்ற படிப்புகளில் மாத்திரம் தேறி இருந்தால் மேல் வகுப்புக்கு அனுப்பப்படும்” என்று ஆச்சாரியார் ஒப்புக்கொள்வதாகச் சொல்லி ராஜி பேசுகிறார்கள். ஹிந்தியை பரீட்சை வைப்பதில்லை என்று கல்வி மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்கள் 3 மாதத்திற்கு முன்பே ஈரோட்டில் சொல்லிவிட்டார். இதில் ஆச்சாரியார் தயவு என்ன வேண்டியிருக்கிறது என்பது விளங்கவில்லை. என்னவானாலும் ஆச்சாரியார் பிடிவாதம் சிறிதும் குறையவில்லை என்றுதான் முடிவு செய்ய வேண்டியிருக்கிறது. இப்பிடிவாதத்தை தமிழர்கள் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட முயற்சியாலும் தான் ஒழிக்க வேண்டியிருக்கிறது.

இதற்காகவே 28.5.38ல் திருச்சியில் ஒரு கமிட்டிக் கூட்டம் கூட்டப்பட்டது. அதில் ஹிந்தியை ஒழிக்கப் போர் தொடுக்க பல முறைகள் வகுக்கப்பட்டிருக்கின்றன.

~subhead

பலாத்காரப் புரளி

~shend

அம்முறைகளுக்குத் தமிழ் மக்கள் ஆதரவளித்து போரில் இறங்கி வெற்றி பெறச் செய்ய வேண்டியது தமிழர்களின் நீங்காக் கடமையாகும் என்பதை ஒவ்வொரு தமிழரும் உணர வேண்டும் என்பதாக வேண்டிக் கொள்ளுகிறோம். போரில் காந்தியார் மிரட்டும் பலாத்காரத்தைப் பற்றி எவரும் கவலைப்படக் கூடாது. பலாத்காரத்துக்கு இந்த உலகில் காந்தியார் மாத்திரமே பாஷியக்காரரென்று கருதும் முட்டாள் கோஷ்டியில் நாம் சேர்ந்தவரல்ல. உண்மையில் பலாத்காரம் என்றால் சரீரத்திற்கு நோவுண்டாகும்படி செய்வதும் மனிதனுடைய சரீர பலத்தை மற்றொரு மனித சரீரத்தின் மீது பிரயோகிப்பதையுமே நாம் பலாத்காரம் என்று கருதுகிறோம். அப்பேர்ப்பட்ட பலாத்காரம் நமக்கு சுமார் 20 – வருஷமாகவே கூடாத – கண்டிப்பாய் கூடாத காரியமாய் இருந்து வருகிறது. நாம் வகுக்கும் எந்த போர் முறையிலும் இம்மாதிரி பலாத்காரத்தை அறவே வெறுத்தும் நீக்கியும் வந்திருக்கிறோம். ஆதலால் திருச்சி போர் முறையானது இப்படிப்பட்ட பலாத்காரமில்லாமல் மற்றபடி எப்படிப்பட்ட முறையானாலும் அதற்கு தமிழ் மக்கள் இசைந்து ஆதரவளிக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டு இதை முடிக்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 29.05.1938

You may also like...