ஹிந்தி வந்துவிட்டது இனி என்ன? ஒருகை பார்க்க வேண்டியதுதான்

 

தமிழ் நாட்டில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி பாஷையை கட்டாய பாடமாக கற்பிக்க வேண்டுமென்று பார்ப்பன மந்திரி தோழர் ராஜகோபாலாச்சாரியார் பிடிவாதமாக முடிவு செய்துவிட்டார். தமிழ் மக்கள் எவ்வளவோ தூரம் முயன்றும், எத்தனையோ கூட்டங்கள் மூலம் தங்களது அதிருப்தியையும், ஆத்திரத்தையும் காட்டியும் கனம் ஆச்சாரியார் சிறிதும் லட்சியம் செய்யவில்லை. உண்மையில் தமிழ் மக்களுக்கு ஹிந்தி நஞ்சு என்பதை எடுத்துக்காட்ட தமிழ் மக்கள் எடுத்துக்கொண்ட முயற்சி கொஞ்ச நஞ்சமல்ல. இன்று கனம் ஆச்சாரியார் மாத்திரமல்லாமல் கல்வி மந்திரியார் உள்பட மற்ற மந்திரிகளும் அவர்களது காரியதரிசிகளும் தமிழ் நாட்டில் பொதுக் கூட்டங்களில் தலை காட்ட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதற்குக் காரணம் இந்த ஹிந்தியை கட்டாயமாக நுழைக்க முயற்சித்ததுதான் என்பதை மனப்பூர்த்தியாக ஆச்சாரியார் உணர்ந்தும் அறைக்குள்ளாகவே இருந்து கொண்டாவது ஹிந்தியை புகுத்திவிட்டுத் தான் மறு காரியம் பார்ப்பது என்கின்ற விரதம் பூண்டு விட்டார். எனவே இனி கேட்டுக் கொள்ளுவதாலோ கெஞ்சிக் கொள்ளுவதாலோ சமாதானமான முறையில் வேறு ஏதாவது முயற்சி செய்வதாலோ எவ்வித பயனும் ஏற்படப் போவதில்லை என்கின்ற நிலைமை காணப்படுகிறது.

~subhead

முயற்சி எல்லாம் பாழாய் விட்டது

~shend

இம்மாதிரி காரியங்களுக்குப் பரிகாரம் தேட இந்த முறை ஒருபுறமிருக்க வேறு ஒரு வழியிலும் முயன்று பார்க்கலாம் என்கின்ற எண்ணத்தினால் சர்க்கார் தலைமை அதிகாரி என்பவரான கவர்னர் பிரபுவையும் அணுகத் துணிந்து அவருக்கும் இது சம்மந்தமான குறைகளை எடுத்துக்காட்டியாய் விட்டது. கவர்னர் பிரபுவும் தன்னால் ஆவதொன்றுமில்லையென்று கையை விரித்துவிட்டார். நேரில் சென்று குறைகளை சொல்லிக் கொள்ள பல பெரியார்கள் முன்வந்து விண்ணப்பித்துக் கொண்டும் கூட அதற்கும் முடியாது என்று முடிவு கூறிவிட்டார்.

~subhead

இனிச் செய்ய வேண்டியது என்ன?

~shend

இனி தமிழ் மக்கள் செய்ய வேண்டியது என்ன என்பதுதான் இப்போது முக்கிய பிரச்சினையாயிருக்கிறது. இதைப் பற்றி யோசிப்பதற்குமுன், இந்நாட்டு மாபெரும் சமூகமும் பழம்பெரும் குடிகளுமாகிய, இந்தியாவிலேயே இணையிலா வீரமும் மானமும் பெற்றுள்ள தமிழ் மக்களுக்கு பார்ப்பனர்களால் இக்கதி நேரக் காரணம் என்ன? இத் தமிழ் மக்களின் கூப்பாடும் அழுகையும் கேள்வி கேப்பாரற்றுப் போனதற்குக் காரணம் என்ன? கவர்னர் பிரபுவும், இத்தமிழ் மக்களின் குறைகளை இவ்வளவு துச்சமாய் கருதி நேரில் வந்து கண்டு கொள்ளக் கூட தரிசனம் அளிக்காமல் அலட்சியப்படுத்தக் காரணம் என்ன? என்பன போன்ற விஷயங்களை மனதில் இருத்தி அவற்றிற்கு சமாதானம் தெரிந்த பிறகே மேலால் என்ன செய்வது என்பதைப்பற்றி யோசித்தால் ஏதாவது ஒரு சரியான வழி கிடைக்கலாம் என்று கருதுகிறோம். அதல்லாமல் வெறும் கோபத்திலோ ஆளுக்கு ஒரு யோசனை சொல்லுவதினாலோ ஆத்திரப்படுபவர்கள் அத்தனை பேரும் தனித்தனி வழியில் தங்கள் கடமை ஆற்ற எண்ணுவதினாலோ ஒரு வித பரிகாரமும் ஏற்பட்டு விடாதென்றே கருதுகிறோம்.

~subhead

அலôயத்துக்குக் காரணம்

~shend

தமிழ் மக்களை இன்று பார்ப்பனர்களும், கவர்னர் பிரபுவும் மதிக்காமல் அலட்சியமாய்க் கருதி இழிவுபடுத்தி வருவதற்குக் காரணம் மக்களில் எவரும் இதுவரை தனக்கு மானமோ வீரமோ இருப்பதாக காட்டிக் கொள்ளவே இல்லை. தமிழனுக்குள் ஒற்றுமை இல்லை; தமிழனுக்கு பொதுநல உணர்ச்சி இல்லை; தமிழன் ஒரு வேளை கூழுக்கு மானத்தை விற்பான்; தமிழன் கூலிக்கு மாரடிக்க அருகனே ஒழிய தலைப் பதவிக்கு அருகனல்ல. எதையும் விற்று தனது தனிவாழ்வுக்கு வழி தேடுவான் என்று பார்ப்பனரும், பிறநாட்டு மக்களும் கருதும்படியாகவே பெரும்பாலோர் நடந்து வருகிறார்கள்; நடந்தும் வந்திருக்கிறார்கள். தமிழன் பெருமைக்கு இன்று ஏதாவது சான்று வேண்டுமானால், புராணங்களில் இருந்தும் பழம் பெரும் காவியங்களிலிருந்தும் தாள் ஆதாரங்கள் காட்டலாமே ஒழிய பிரத்தியக்ஷ அல்லது சமீப சரித்திர சான்றுகள் ஒன்றையும் காணோம். தமிழ் மக்கள் புராண காலம் தொட்டு சூத்திரனாக மதிக்கப்பட்டு அந்தச் சூத்திரப் பட்டம் தமிழ் மக்களாலேயே ஏற்கப்பட்டு சில தமிழ் மக்களால் தாங்கள் மாத்திரம் சற்சூத்திரரானால் போதும் என்று தனி முயற்சிகள் செய்யப்பட்டு வந்திருக்கின்றன என்றுதான் சொல்ல இடமிருக்கிறது.

~subhead

50 வருஷகால வாழ்வு

~shend

இவை தவிர நாமறிய இந்த 50 வருஷகால வாழ்வில் தமிழ் நாட்டில் ஒரு தமிழ் மகனாவது பிரபலஸ்தனாக இருந்து தமிழ் நாட்டை நடத்தினான், தமிழ் மக்களை நடத்தினான் என்று சொல்லத்தக்க ஆதாரமும் இல்லை.

தமிழ் நாட்டு ராஜாக்கள், ஜமீன்தார்கள், பெருத்த செல்வந்தர்கள் ஆகியவர்களின் சமீபகால சரித்திரமும் வாழ்க்கைக் குறிப்புகளும் தற்கால நிலையும் அவர்களது தன்மையும் ஆகியவற்றை கவனிப்போமேயானால் அது மிக மிகக் கேவலம் என்று தான் சொல்லத்தக்க வண்ணம் ஆதாரங்கள் கிடைக்குமே தவிர வீரனென்றோ மானியென்றோ தமிழ் நாட்டிற்கோ, தமிழ் மக்களுக்கோ, உழைத்தவர் உதவினவர் என்றோ, தமிழ் மக்களை நடத்தினவர் நடத்தத் தகுதி உடையவர் என்றோ சொல்ல எதையும் காண முடியாது என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

இன்று தானாகட்டும் தமிழ் நாட்டில் மானமுள்ள பொது நல உணர்ச்சியுள்ள தனி சுயநலமற்ற ஒரு தமிழ் மன்னனோ, தமிழ் ஜமீன்தாரனோ, தமிழ் செல்வவானோ யார் இருக்கிறார்கள் என்பது நமக்கு விளங்கவில்லை. இதுதான் போகட்டுமென்றாலோ இன்று தமிழ் மக்களுக்கு பூர்வகாலந் தொட்டு, வேத புராண சரித்திர காலந்தொட்டு எதிரியாய் – பிறவி வைரியாய் இருந்து தமிழ் மக்களை தாழ்த்தி, அழுத்தி, இழிவுபடுத்தி வரும் பார்ப்பனருக்கு அடிமையாய் ஒற்றனாய் காட்டிக் கொடுத்து ஈன வயிறு வளர்க்கும் இழி குணம் இல்லாத தமிழ் மக்கள் எத்தனை பேர்கள் இருக்கிறார்கள் என்று கணக்கிட முடியுமா?

~subhead

மாபெரும் விரோதி

~shend

ஆகவே இவையும் இவை போன்ற இன்னும் பல காரணங்களும் ஏராளமாய் இருக்கும்போது தமிழ் மக்கள் மானம், கல்வி, கலை, வீரம், அறிவு ஆகியவைகளுக்கு மாபெரும் விரோதியாய் “எம”னாய் “உளைமாந்தையாய்” இருக்கும் ஹிந்திபாஷையை பார்ப்பனர்கள் கட்டாயமாக தமிழ் மக்களுக்குள் செலுத்தும் அடாத கொடுங்கோன்மை காரியத்தை எப்படி தடுக்கமுடியும் என்று கேட்கின்றோம்.

கனம் ஆச்சாரியார் பார்ப்பனராய் இருந்தாலும், ஹிந்தியை ஒரு தமிழ் மகனை அதுவும் இந்நாட்டுப் பழங்குடி – பெருங்குடி மக்கள் சமூகத்தைச் சேர்ந்த, குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமானால் வேளாள வகுப்பைச் சேர்ந்த ஒரு தனித்தமிழ் மகனாகும் தோழர் டாக்டர் சுப்பராயனைக் கொண்டு அவர் கையில் கூரிய வேலை கொடுத்தல்லவா தமிழ் மக்கள் கண்களைக் குத்தும்படி கட்டளையிடுகிறார்.

~subhead

ஆச்சாரியார் மூர்க்க பலம்

~shend

மற்றும் கனம் ஆச்சாரியார், என்றும் பார்ப்பனர் தனித்த முறையில் தமிழ்மக்கள் சமூகத்தையே என்றும் தங்களுக்கு அடிமையாக இருக்கும்படி சூத்திரர்களாக ஆக்க ஹிந்தியைப் பலவந்தமாக நுழைக்கிறார் என்றாலும் அவரது அரசியல் சபையில் “ஆம், ஆம்” “நன்று, நன்று” “நடத்து நடத்து” என்று சொல்லி கைதூக்கித் தலையாட்ட எத்தனை தமிழ் மக்கள் கைகூப்பி சிரம் வணங்கக் காத்திருக்கிறார்கள்? இவர்கள் சமூகத்தைச் சேர்ந்த நாம் எந்த முறையில் தமிழ்மக்களுக்கு பிடித்தமில்லாத – தமிழ்மக்களுக்குக் கேடு சூழும்படியான ஹிந்தியை கனம் ஆச்சாரியார் (பார்ப்பனர்கள்) மூர்க்க பலத்தில் புகுத்துகிறார் என்று சொல்லுவது என்று கேட்கிறோம்.

ஆகவே, தமிழ் மக்களின் பழம் பெருமைகளும், பாட்டிக் கதைகளும் எவ்வளவு மேன்மையாக இருந்தபோதிலும், தமிழ் மக்களின் இன்றைய நிலைமை பூர்வ பெருமைக்கேற்றதாக இல்லை என்பதோடு தமிழ் மக்கள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து அதி இலேசாக தப்புவதற்குத் தகுதியான நிலையிலும் இல்லை என்பதை எடுத்துக்காட்டுவதற்கு ஆகவே இவற்றைக் குறிப்பிட்டோம்.

இதனால் எந்த தமிழ் மகனும் பயந்துவிட வேண்டியதில்லை. அவநம்பிக்கை கொண்டுவிட வேண்டியதில்லை. அதற்குப் பதிலாக ஹிந்தியை தடுப்பதற்காக நாம் செய்யப் போகும் காரியங்களை திட்டப்படுத்துவதற்கு முன் நம் நிலையை நன்றாக உணர்ந்து அதற்கு ஏற்றபடி அதாவது மாற்றான் வலியையும் நம் வலியையும் அளவு கண்டு மேலால் சிந்திக்க வேண்டும் என்பதை வலியுறுத்த இவற்றைக் குறிப்பிட்டோமே ஒழிய நம்மை நாமே இழிவுபடுத்திக் கொள்ளவல்ல. இனி நாம் செய்ய வேண்டியது என்ன?

~subhead

நாம் வேண்டுபவர்

~shend

உண்மை தமிழ் ரத்தம் அதாவது சிறிதும் கலப்பற்ற சுத்த தமிழ் ரத்தம் ஓடும் வாலிபர்களே ஹிந்தி எதிர்ப்பு இயக்கத்துக்கு வேண்டும்.

எப்படிப்பட்ட பார்ப்பன தந்திரத்துக்கும் இணங்க முடியாத பெரியவர்களே நமக்கு வேண்டும்.

பார்ப்பன தயவு இல்லாது வாழ முடியாது என்கின்ற தமிழ்மகன் முடிபுனைந்த மன்னனாயிருந்தாலும் அவனிடம் காசு பெறலாமே ஒழிய அவனது நிழலும் இம்முயற்சியில் பட இடம் கொடுக்கக் கூடாது.

இரண்டிலொன்று அதாவது இந்தி பலாத்காரத்தை ஒழித்தாலொழிய தனது சொந்த வாழ்வை கவனிப்பதில்லை என்கின்ற முடிவுக்காரர்கள் மாத்திரமே எதிர்ப்பு முயற்சி நிர்வாகத்தில் அங்கத்தினராய் இருக்க வேண்டும்.

அடுத்தபடியாக பொருளாதார விஷயத்தில் போதுமான பொருள் உதவி கிடைக்கலாம் என்றாலும் ஒரு சமயம் கிடைக்காமல் போய்விட்டாலும் கிடைத்ததைக் கொண்டு கிடைக்காவிட்டால் பிச்சை எடுத்தாவது பசியை ஆற்றிக்கொண்டு உழைப்பதற்கு உறுதி செய்து கொண்டவர்களே செயலில் கலந்து கொள்ள வேண்டும்.

ஏற்படுத்திக் கொள்ளும் திட்டங்களுக்கு கட்டுப்பட்டு ஒரு கை முறையாய் பின்பற்றி ஒழுங்காகவும், ஒழுக்கமாகவும் நடந்து வருவதாக ஒவ்வொரு இளைஞனும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அதன் பிறகேதான் இம்மாபெரும் முயற்சிக்கு ஏதாவது திட்டம் வகுப்பது பயன்படத் தக்கதாகும்.

அப்படிக்கு இன்றி ஆளுக்கொரு உபாயம் (ஆளுக்கு ஒரு அபிப்பிராயம்) ஆளுக்கு ஒரு அறிக்கை என்பது போன்ற காரியங்கள் நடைபெறுமானால் ஆய்ந்தோய்ந்து செய்யப்படாத காரியம் போல் முடியவேண்டியதாகிவிடும்.

~subhead

காலம் அடுத்து விட்டது

~shend

கோடை விடுமுறை முடிந்த உடன் ஹிந்தி கட்டாய பாட முறை அமுலுக்கு வரப்போகிறது. ஆகையால் அதிக சாவகாசம் இல்லை என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும். சகல பொறுப்புகளும் மானமுள்ள பரிசுத்த இளைஞர் கையில் இருக்கிறது என்பதையும் அவர்கள் சரியாய் நடத்தப்பட வேண்டும் என்பதையும் யாவரும் உணர வேண்டும்.

தோழர்கள் எஸ். எஸ். பாரதியார், உமாமகேசுவரம் பிள்ளை, கி.ஆ.பெ. விசுவநாதம், வள்ளல் சிவஞான தேசிகர் போன்றவர்கள் கீழிறங்கி வந்து வினைஞர்களாகி மற்ற வாலிபர்களுக்கு வழிகாட்டிகளாகச் செல்ல வேண்டும்.

~subhead

சிறை புகுவது அற்ப விஷயம்

~shend

தாங்கள் முடிக்க எண்ணும் கருமத்திற்கு சிறை செல்லுவது என்பது மிக சாதாரண காரியம் ஆகும். அதுவே கடைசிக்காரியமாகவும் கருதிவிடக் கூடாது. ஆச்சாரியார் அதை சுலபத்தில் கையாள சம்மதிக்க மாட்டார். ஆதலால் சிறை செல்லத் தயாராய் இருந்தால் போராதா என்று எண்ணிவிடக் கூடாது. சிறை செல்லுவது ஒரு அற்பக் காரியமேயாகும். அதில் யாதொரு கஷ்டமோ நஷ்டமோ கிடையாது. அதை 3 – ந் தரக் காரர்களுக்கு விட்டுவிட வேண்டும். பிரமுகர்களும், பொறுப்பாளிகளும் அடிபடவும், உயிர் விடவும் தயாராய் இருக்க வேண்டும். ஏனெனில் நாம் போராடக் கருதுவது நெஞ்சிரக்கமற்ற மறத்தன்மை கொண்ட மக்களோடு என்பதை ஒவ்வொருவினைஞரும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். அதிலும் நாம் போராடக் கருதுவது எவ்வித இழிவான காரியத்தையும் செய்யத் துணிபவர்களும், சூழ்ச்சியில் திறமை உடையவர்களுமான மகா கொடியவர்களுடன் என்பதையும் ஒவ்வொரு எதிர்ப்பாளனும் மனதில் இருத்த வேண்டும்.

இந்த நிலைமைகளை நன்றாக உணர்ந்து இதற்கேற்றபடி நமது திட்டங்களை வகுத்துக் கொண்டு கருமத்தில் இறங்கி விடுவோமேயானால் நமக்கு வெற்றி நிச்சயம் என்பதில் சிறிதும் ஐயமில்லை என்பது நமது அபிப்பிராயம். தமிழ் இளைஞர்களுக்கு ஒரு விண்ணப்பம்.

~subhead

இளைஞர்களுக்கு வேண்டுகோள்

~shend

இளைஞர்களே! இதுவரை உங்களில் சுமார் 200, 300 பேர்கள் வரை ஹிந்தி எதிர்ப்புப் போருக்கு “நான் தயார்” “நான் தயார்” “நானும் என் மனைவியும் தயார்” “உண்ணாவிரதத்துக்கு தயார்” “உயிர் விடத் தயார்” என்பதாக தெரிவித்துக் கொண்டிருக்கிறீர்கள். அவரவர்கள் கஷ்ட ஜீவனம் நடத்தவும், அடிபடவும் ராப்பட்டினி பகல் பட்டினி கிடக்கவும், துலைவழி நடக்கவும் தயார் செய்து கொள்ளுங்கள். போர் முனை சிப்பாய் போல் ஆக்கினைக்கு அடிபணியவும் தயார் செய்து கொள்ளுங்கள்.

~subhead

பெரியோர்களுக்கு விண்ணப்பம்

~shend

பெரியோர்களே! முன்மாதிரி காட்ட வாருங்கள். உங்களுடைய உள்ளங்களுக்கு புதிய அங்கியை மாட்டிக் கொள்ளுங்கள். தனியுரிமை வாழ்க்கைக்கு கருதப்படும் மானம் அபிமானம் வேறு பொதுநல தொண்டுக்கு கருதப்படும் மானம், அபிமானம் வேறு என்பதை மனதிலிருத்தி அதற்குத் தகுந்தபடி உங்களது மானம், அபிமானம் ஆகியவற்றை மாற்றி அவைகளை உயிராய் கருதுங்கள். உங்கள் மார்பைப் பார்க்காதீர்கள், அடிச்சுவட்டைப் பாருங்கள், வீர இளைஞருக்கு நீங்கள் வழி காட்டுகிறவர்கள் என்பதை ஒவ்வொரு அடிவைக்கும்போதும் ஞாபகத்தில் வையுங்கள்.

~subhead

செல்வர்களுக்கு ஒரு வார்த்தை

~shend

தமிழ்ச் செல்வர்களே உங்களுக்கு ஒரு விண்ணப்பம். உங்கள் பழைய நடத்தைகளை மறந்து விடுகிறோம். இப்போது தமிழர் இருப்பதா இறப்பதா என்கின்ற நிலை ஏற்பட்டிருக்கின்றது. இந்நிலைக்கு நீங்களும் பங்காளிகள் என்று நாம் சொல்வதால் நீங்கள் முனிவு கொள்ளாதீர்கள் நடந்தது நடந்து விட்டது. அதை பரிகரிக்க உங்களால் செய்யக் கூடியது நீங்கள் மானத்திலும் உயிரிலும் பெரிதாக மதிக்கும் உங்கள் செல்வத்தை தாராளமாக இக்கருமத்திற்கு உதவி, பெரிய வீரராகுங்கள். இவ்விஷயத்தில் உங்கள் கை நீளுவதற்கேற்ற பயனை அடைவீர்கள்.

பொது மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம்

பொதுத் தமிழ் மக்களுக்கு மாபெரும் விண்ணப்பம் தமிழ்த் தோழர்களே இந்த 50 வருட காலத்தில் தமிழ் மக்களுக்கு இப்படிப்பட்ட ஒரு நெருக்கடி ஏற்பட்டதில்லை. இன்று நடப்பது பிரிட்டிஷ் ஆட்சியல்ல. வருணாச்சிரம புரோகித ஆட்சியாகும். அதன் ஒவ்வொரு மூச்சும் தமிழ் மக்களை விலங்குகளாக்குவதற்காக விடப்படும் மூச்சாகும். விலங்குகளாக வாழ்வதை விட மடிவது மேலான காரியம். ஏதோ விளக்கமுடியாத பல காரணங்களால் தமிழ் மக்களில் பலர் புரோகித ஆட்சிக்கு அடிமைப்பட்டு கிடந்தாலும் அதைப்பற்றி கவலைப்படாமல் அவர்களும் நாமும் நம் பின் சந்ததியும் மனிதர்களாக வாழ முயற்சிக்க வேண்டியது நமது கடமை என்பதை உணருங்கள். இதை ஒரு கட்சி போராக, முயற்சியாக கருதுங்கள். உங்கள் செளகரியங்களுக்கு அடங்கின சகல பரிசுத்தமான ஆதரவுகளையும் அளியுங்கள். உங்களது வாலிப இளைஞர்களை போருக்குக் கச்சை கட்டி விரட்டி அடியுங்கள்.

~subhead

மடாதிபதிகளுக்கு மன்னிப்பு

~shend

தமிழ் மடாதிபதிகள் என்பவர்களே, நீங்கள் இது வரை நடந்து கொண்டதையும் மறந்து விடுகிறோம். இந்த சமயத்தில் தைரியமாய் முன்வந்து உங்களாலான காசு உதவுவதோடு உங்களிடம் பக்தி, விசுவாசம் காட்டுபவர்களை எங்களிடம் விரட்டி விடுங்கள். தமிழ் நாட்டில் மானமுள்ள சுத்தத் தமிழ் மக்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதை உலகம் உணர இதைவிட வேறு தக்க சமயம் இனி சுலபத்தில் கிடைக்காது, கிடைக்காது.

ஆகவே பொதுமக்களே, இளைஞர்களே தயாராகுங்கள். முன் வாருங்கள், ஒரு கை பாருங்கள்.

குடி அரசு – தலையங்கம் – 08.05.1938

You may also like...