ஆத்திரப்பட்டு பயன் என்ன? ஆதிதிராவிடர்களுக்கு இஸ்லாம் மார்க்கமல்லாமல் விமோசனமெங்கே?

 

சுயமரியாதை இயக்கமானது நாஸ்திகத்தையும் மதங்கள் ஒழிப்பையும் கொள்கையாகக் கொண்டிருக்கவில்லை என்பது பல தடவை விளக்கப்பட்ட விஷயமாகும். ஆனால் சுயமரியாதை மகாநாடுகளில் “மக்கள் சுதந்தரமும் ஒற்றுமையும் சுயமரியாதையும் பெற்று சமூகம் பொருளாதாரம் அரசியல் ஆகிய துறைகளில் சமத்துவமும், சம உரிமையும், விடுதலையும் பெற வேண்டுமானால் மதங்கள் ஒழிக்கப்பட வேண்டும்” என்பதாகவும் இந்தக் கருத்தைக் கொண்டதாகவுமான பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பதுடன் பல சுயமரியாதைத் தோழர்கள் தங்கள் தங்களை பொறுத்த வரையில் ஜாதிமதம் முதலியவைகளை விட்டு விலகி அனுபவத்திலும் அதற்கு ஏற்றதுபோல் நடந்து வருகிறார்கள்.

இந்தக் கருத்தை அனுசரித்தே இந்த தத்துவத்தை அமுலில் கொண்டுவரவே இந்தியாவில் வெகு காலத்திற்கு முன்னிருந்தே பல பெரியார்கள் முயற்சித்து அதற்கு ஏற்ற பல காரியங்கள் செய்தும் வந்திருக்கிறார்கள். சுமார் 100 வருஷங்களுக்கு முன் வங்காளத்தில் “பிரம்ம சமாஜம்” என்னும் ஒரு ஸ்தாபனத்தை தோற்றுவித்த பெரியார்களும் ஜாதி மதம் ஆகியவை ஏதும் இல்லை என்றும் மக்கள் யாவரும் பிறவியில் சமம் என்றும் சொல்லி அக்கொள்கைக்கு பிரசாரம் செய்து கடசியாக ஜாதிமதமற்ற ஒரு ஸ்தாபனமாக அதை கையாண்டு இந்தியாவில் பல இடங்களிலும் அதற்கு கிளை ஸ்தாபனங்கள் ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கான மக்களை அக்கொள்கையைத் தழுவச் செய்துமிருக்கிறார்கள்.

இந்து மதமென்பதிலும் ஞானமார்க்கமென்றோ வேதாந்த மார்க்கமென்றோ சொல்லப்படுபவைகளில் தத்துவங்களில் மதம் ஜாதி எதுவும் இல்லை என்பதும் மற்றும் மக்களும் மற்ற ஜீவராசிகளும் ஒன்றுபோல் பாவிக்கப்பட வேண்டியவை என்பதும் இடம் பெற்றிருப்பது யாரும் அறியாததல்ல.

மேலும் இந்துமதம் என்பதில் உள்பட்ட சைவம் வைணவம் என்பதிலும் மக்களுக்கு தனி ஜாதியோ மதமோ இல்லை என்றும் “சர்வம் விஷ்ணு மயம் ஜெகத்” என்றும் “சர்வம் சிவமயம் ஜெகத்” என்றும் சொல்லப்படுவதோடு இருசாராரும் சமரசமும் சன்மார்க்கமுமே மதமல்லாமல் மற்றெவ்வித மதமோ சமயமோ மார்க்கமோ இல்லை என்பதும் யாவரும் உணர்ந்ததேயாகும்.

~subhead

மத ஒழிப்புப் பிரசாரத்தால் யாருக்குக் கேடு

~shend

ஆகவே சுயமரியாதைக்காரர்கள் மதங்கள் ஒழிய வேண்டும் என்று சொல்வதில் இந்து மதக்காரர்கள் என்று சொல்லிக்கொள்ளுபவர்களில் தங்களை மாத்திரம் மனித சமூகத்தில் உயர்ந்த பிறவி என்று ஏற்படுத்திக்கொண்டு மற்ற மக்களை பல படிகளாக தாழ்த்தித் தாழ்த்தி பிரித்து வைத்து மக்கள் ஒன்று சேருவதற்கில்லாமல் செய்து அதன் பலனாய் தாங்கள் பாடுபடாமல் வயிறு வளர்த்து உயிர் வாழ்க்கை நடத்தும் கூட்டத்தார் மாத்திரம் “மதம் போகின்றதே, மதம் போய்விடுமே, மதம் போச்சே” என்று கூப்பாடு போடலாமே ஒழிய மதங்கள் போகாமலிருக்க என்று பாடுபடலாமே ஒழிய மற்ற எந்த பிரிவு இந்துவுக்கும் எந்த உட்பிரிவு மார்க்கத்தாருக்கும் கவலைப்பட அவசியமில்லை என்பதே நமதபிப்பிராயம். ஆகையால் சுயமரியாதைக்காரர்களின் மதமொழிப்புப் பிரசாரத்தால் உலகுக்கு எவ்வித கெடுதியும் ஏற்பட்டுவிடும் என்றும் எந்த இந்துவும் பயப்படவேண்டியதில்லை என்றே கருதுகிறோம்.

~subhead

மதமாற்றம் புதியதல்ல

~shend

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு இந்துக்களில் மலையாளத்தில் ஒரு பெரும் வகுப்பாராகிய ஈழுவ சமூகத்தார் தங்கள் சமூக மகாநாடுகளிலும் அச் சமூக வாலிபர்கள் மகாநாடுகளிலும் மதமொழிக்கும் பிரச்சினையை கொண்டு வந்து நன்றாக ஆலோசித்து இந்து மதத்தையே தங்கள் சமூகம் விட்டு விட்டதாக தீர்மானங்கள் செய்தார்கள். அதுபோலவே பம்பாய் ஆதிதிராவிட சமூகத்தலைவராகிய டாக்டர் அம்பேத்கார் அவர்கள் ஆதிதிராவிடர்கள் இந்து மதத்தை விட்டுவிட வேண்டியது என்றும் தீர்மானம் செய்து இருக்கிறார். என்றாலும் சுயமரியாதை இயக்கம் ஏற்படுவதற்கு ஏறக்குறைய 500, 1000 வருஷ கால முன்பிருந்தே இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் இந்து மதத்தை விட்டு அந்நிய மதத்தை ஏற்றுக்கொண்டும் வந்திருக்கிறார்கள்.

அந்நிய மதக்காரர்கள் யாராவது இந்து மதத்துக்கு வந்திருக்கிறார்களா என்று பார்த்தால் அது எண்ணிக்கைக்கு மிக மிகச் சுருக்கமாய் இருக்கும் என்பதோடு அப்படிச் சேர்க்கப்பட்டவர்களுக்கு இந்து மதத்தில் என்ன அந்தஸ்து என்பது இன்னமும் முடிவு செய்யாததும் அரசியல் காரணங்களுக்காக அப்படிப்பட்டவர்களை இந்துக்கள் கூட்டத்தில் சேர்த்துக் கொள்ளக் கூடியதாக மாத்திரமுமே இருக்கிறதே அல்லாமல் சமூகத்தில் அப்படிப்பட்டவர்களுக்கு (அதாவது அந்நிய மதத்தில் இருந்துவந்து சேர்ந்தவர்களுக்கு) எவ்வித உரிமையோ நிலைமையோ இருக்கிறது என்று சொல்லமுடியாமலே இருந்துவருகிறது.

இந்த 15 வருஷ காலமாக சுயமரியாதை இயக்கம் தோன்றி இக் குறைகளையும் கொடுமைகளையும் புரட்டுகளையும் முட்டாள்தனங்களையும் வெளியாக்கி கண்டித்து பிரசாரம் செய்து வந்ததின் பலனாகவே இந்தியர்களில் மகமதியரல்லாத மக்களை ஒன்று சேர்க்கவும் மகமதிய சமூகத்திற்கு எதிர் நிற்கவும், இந்துக்கள் என்பவர்கள் இந்து மதத்தை விட்டு ஓடிப்போகாமல் இருக்கவுமே ஏதேதோ சில சில்லறை சீர்திருத்தங்கள் செய்து வருகிறார்கள். அவற்றில் சிலவே தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆலயப் பிரவேச உரிமை கொடுப்பது என்ற உணர்ச்சியும் சில சுதேச சமஸ்தானங்களில் ஆலயப் பிரவேச உரிமை அளித்து இருப்பதுமான காரியங்களும் சமுதாயத் துறையில் குழந்தை மணம் தடுப்பு சட்டமும், விதவை மணம் செல்லும் சட்டமும், பெண்கள் சொத்துரிமை சட்டமும், தாழ்த்தப்பட்ட மக்கள் என்பவர்களுக்கு கல்வி வசதி, ரோட்டில் நடக்கும் வசதி முதலிய செளகரியங்கள் அரசியலின் மூலமாக செய்ததுமான காரியங்கள் ஆகும்.

இப்படிப் பல காரியங்கள் நடந்தாலும் இவை சமூகசீர்திருத்த மாகவோ மத சீர்திருத்தமாகவோ இல்லாமல் வெறும் அரசியல் காரியங்களுக்கும் இந்துக்கள் என்பவர்கள் வேறுமதத்துக்கு போகாமல் இருக்க வேண்டும் என்றும், எண்ணிக்கை பாதுகாப்புக்குமாக செய்யப்பட்டனவே ஒழிய வேறில்லை.

குழந்தை மணத்தடுப்பு சட்டம், இந்து மதக்காரர்களால் மத தத்துவ நிபுணர்களால் மதப்பிரமுகர்களால் இன்னமும் ஒப்புக்கொள்ளப்படவில்லை. ஆலயப்பிரவேசமென்பதும், இன்னமும் இந்துமதத் தலைவர்களால், மதப்பிரமுகர்களால் ஒப்புக்கொள்ளப்படவே இல்லை.

~subhead

திருவாங்கூர் ஆலயப்பிரவேச யோக்கியதை

~shend

திருவனந்தபுரம் ஆலயப்பிரவேசமானது திருவாங்கூர் கோயில்கள் இதுவரை மேல்ஜாதிக்காரர்கள் என்பவர்களுக்கு மாத்திரம் செல்ல உரிமை இருந்ததானது இப்போதே கீழ்ஜாதியாருக்கு மாத்திரம் செல்ல உரிமையுள்ள கோயில்களாக ஆக்கப்பட்டுவிட்டது. அதாவது மேல்ஜாதியார்கள் கோவில்களை பஹிஷ்கரித்துவிட்டார்கள். அப்படி மீறி கோவில்களுக்கு சென்று வந்த மேல் ஜாதியார்களை மேல்ஜாதி சமூகத்தில் பஹிஷ்காரம் செய்கிறார்கள் என்பதோடு அவர்களை தாழ்ந்த ஜாதியார் என்பவர்களுக்கு பிரவேசமில்லாத கோவில்களில் விடப்படுவதுமில்லை. இதை பல பார்ப்பனப் பத்திரிகைகளில் அடிக்கடி பார்த்து வருகிறோம். ஆரம்ப முதல் நமக்கு இந்த சேதி தெரிவிக்கப்பட்டும் வந்திருக்கிறது.

இந்த விஷயங்கள் மத சம்பந்தமான வைதீகர்கள் உலகில் நடக்கின்றன என்பதாக மாத்திரம் சொல்லுவதற்கில்லாமல் அரசியல் உலகிலும் நடந்து வருவதை எவரும் மறுக்க முடியாது. நம் நாட்டு அரசியல் ஸ்தாபனங்களில் தங்களுக்கே தான் அரசியலைப் பற்றிப் பேச உரிமை உண்டு என்று வாதிக்கும் காங்கரஸ் ஸ்தாபனத்தில் ஜாதி உணர்ச்சி ஜாதி பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் மத உணர்ச்சியும் மதப்பாகுபாடு காப்பாற்றும் உணர்ச்சியும் வெகு கண்டிப்பாக கட்டாயமாக இருந்து வருகின்றன.

அந்தப்படி காங்கரஸ்காரர்களுக்கு ஜாதிமத பாகுபாட்டை காப்பாற்றும் உணர்ச்சி இல்லாதிருக்குமானால் சகல மக்களுக்கும் அரசியலில் சமஉரிமை கிடைக்கும்படி செய்யவும் மக்கள் ஜாதிமதம் பேர் சொல்லி உரிமைகள் கேட்கவேண்டிய அவசியமில்லாமல் இருக்கும்படி செய்யவும் சிறிதாவது முயற்சி எடுத்துக்கொண்டிருப்பார்கள். அப்படிக்கில்லாமல் அந்நியர்கள் ஜாதி மத உரிமை கேட்கும்போது மாத்திரம் “அவை கூடாது என்பதற்காகத்தான் காங்கரஸ் பாடுபடுகின்றது” என்பதும் காங்கரசினால் அடையப் பெற்ற சாதனங்களை வழங்கும்போது தங்கள் ஜாதி, தங்கள் மதம், தங்கள் வகுப்பு மாத்திரமே நூற்றுக்கு முன்னூறு நானூறு பங்கு வீதம் ஏகபோகமாய் அனுபவிக்கும்படியான சூழ்ச்சிகளையும் பலாத்காரங்களையும் சிறிதும் தயவு தாட்சண்யம் மனித தன்மை இல்லாதபடி கையாளுகிறார்கள்.

~subhead

ஜாதிமத உணர்ச்சிக்கு பார்ப்பனரே காரணம்

~shend

இந்த மாதிரியாக ஒரு தனிப்பட்ட ஜாதியார் குறிப்பாக பார்ப்பனர்கள் நடந்து கொள்ளுவதாலேயே இன்று இந்தியாவெங்கும் மூலைமுடுக்குச் சகலத்திலும், அரசியல் உலகத்திலும், மத உலகத்திலும் ஜாதிமத உணர்ச்சியும் கிளர்ச்சியும் தலைவிரித்தாடுகின்றன. இன்றுள்ள இந்து முஸ்லீம் பேத உணர்ச்சி பார்ப்பனர்களாலேயே அதாவது இந்துமத தர்மகர்த்தாக்கள் என்று சொல்லிக்கொள்ளும் பார்ப்பனர்களாகிய தோழர்கள் மாளவியா, மூஞ்சே, பாய்பரமானந்தா, மோதிலால் நேரு, ஜவஹர்லால் நேரு ஆகியவர்களாலுமே நம் மாகாணத்திலும் தோழர்கள் ராஜகோபாலாச்சாரியார், சத்தியமூர்த்தி, ஏ. ரங்கசாமி அய்யங்கார், கஸ்தூரி ரங்கய்யங்கார் போன்றவர்களாலுமே ஏற்பட்டது என்பதும் இவர்களாலேயே பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் அதாவது ஆரியர் திராவிடர் என்ற உணர்ச்சியும் ஏற்பட்டது என்பதும் யாராலும் மறுக்க முடியாது.

பார்ப்பனர்கள் மிக்க தந்திரசாலிகள் சூழ்ச்சிக்காரர்கள் ஆனதால் முஸ்லிம்களில் மெளலானா அபூல்கலாம் ஆசாத், தாவுத்ஷா, உபயத்துல்லா போன்ற ஆட்களை விளம்பரம் கொடுத்து பிரமாதப்படுத்தி அவர்களைக் கொண்டு முஸ்லிம்களின் முன்னேற்ற உணர்ச்சியை தடுக்க முயற்சிப்பதும் பார்ப்பனரல்லாதார்களில் தோழர்கள் காந்தியார், முத்துரங்கம், குப்புசாமி, சுப்பையா போன்றவர்களுக்கு விளம்பரம் கொடுத்து அவர்களைக் கொண்டு பார்ப்பனரல்லாதார் – திராவிடர் முன்னேற்றத்தைத் தடுப்பதுமான சூழ்ச்சி செய்கிறார்கள். அது போலவே தாழ்த்தப்பட்ட மக்களிலும், யாரோ சிறிதும் ஊர், பெயர் தெரியாத ஆட்களை விலை கொடுத்து வாங்கி பிரமாதப்படுத்தி விளம்பரம் செய்து அவர்களைக்கொண்டே அச் சமூக முன்னேற்றத்தையும் தடுக்கிறார்கள்.

இந்த வேலைதான் இந்நாட்டு பார்ப்பனர்கள் அரசியல் விடுதலை காரியமாகவும், காங்கரஸ் காரியமாகவும் செய்து வருகிறார்கள்.

இதை ஒழிப்பது என்பது இக்கொடுமைகளையும், சூழ்ச்சிகளையும் தடுத்து மக்கள் சமூகத்துக்கு உண்மையான முன்னேற்றம் ஏற்படும்படி செய்வது என்பது மிக மிக பிரயாசையான காரியமாய் இருப்பதோடு இக்காரியத்தை செய்வதற்கு எந்த மதத்திலும் எந்த ஜாதியிலும் முயற்சி இல்லை என்றும் எவ்வித ஸ்தாபனமும் இல்லை என்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

~subhead

ஜமால் முகமது கருத்து

~shend

முஸ்லிம் தோழர்கள் “இக்காரியங்களுக்காக முஸ்லிம் லீக்கு இருக்கிறது” என்று சொல்லவரக் கூடும். முஸ்லிம்லீக்கின் யோக்கியதை என்ன என்பது இம்மாகாண முஸ்லிம் லீக் தலைவரான தோழர் ஜமால் மகமது சாயபு அவர்கள் முஸ்லிம் லீக்கு எதற்காக இருக்கிறது என்று விளக்கியிருக்கும் வாக்குமூலத்தில் விளங்கிவிட்டது. அதாவது “முஸ்லீம் லீக் என்பது நம்முடைய தேவைகளை அரசாங்கத்தாருக்கு விண்ணப்பித்துக் கொள்ள ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனமே ஒழிய வேறல்ல” என்று சொன்னதாக சேதி வந்திருக்கிறது. அப்படியானால் முஸ்லிம் சமூகத்துக்கு முஸ்லிம்களால் ஜீவாதாரமானதென்று கருதும் கொள்கைகளுக்கு ஆபத்தும் இடையூறும் ஏற்படும்படியாக மற்ற சமூகத்தாரோ, மதக்காரர்களோ செய்யும் தொல்லையில் இருந்து விடுபட முஸ்லிம்களுக்கு ஸ்தாபனம் எங்கே? மார்க்கம் எங்கே என்று கேட்காமல் இருக்க முடியவில்லை.

கனம் ஜமால் மகமது சாயபு கோடீஸ்வரர் – அவரிடம் பார்ப்பனர் சதா பணம் பறிப்பவர்களாய் இருப்பதால் அவரைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள் அல்லது வேறு சில இந்துக்கள் என்பவர்கள் அவர் மகிழும்படியும், திருப்தி அடையும்படியும் நடந்து கொள்ளலாம். ஆனால் மற்ற முஸ்லீம்களின் கதி என்ன என்று யோசிக்க வேண்டாமா? என்று கேட்கின்றோம். 8 கோடி முஸ்லீம்களில் 100-க்கு 99 – தே முக்கால் பேர்களால் போற்றப்படும் ஜனாப் ஜின்னாவை இந்தப் பார்ப்பனர்கள் தோழர்கள் மோதிலால், ஜவர்லால், மூஞ்சே போன்றவர்களும் மற்றும் காங்கரஸ் பார்ப்பனர்களும் பார்ப்பனப் பத்திரிகைகளும் என்னமாய் கருதின? எவ்வளவு கேவலமாய் இழித்துக் கூறின? முஸ்லிம் சமூகத்தையே அவை எவ்வளவு அலட்சியமாய் பேசின? இவைகளை உணர்ந்தால் எப்படி ஒரு முஸ்லிம் காங்கரசினிடம் தயவு தாட்சண்யம் காட்டவோ பார்ப்பனருக்கு பரிந்துபேசவோ முடியும்? என்று கேட்கின்றோம். சர். மகமது உஸ்மான் அவர்கள் பார்ப்பனர் ஜோதியில் இரண்டறக் கலந்து விட்டது பற்றி நமக்கு ஆச்சரியமில்லை. ஆனால் கனம் ஜமால் மகமது சாயபு அவர்கள் பார்ப்பனக் கெஞ்சுதலுக்கு இணங்கினது பற்றி ஆச்சரியப்படுகிறோம்.

கனம் ஜமால் மகமது சாயபு தனித்தொகுதி வேண்டாமென்றவர். ஆனால் பொதுத்தொகுதி பேரால் 2 தடவை சட்டசபை எலக்ஷனுக்கு அதுவும் வியாபாரத் தொகுதியில் நின்று இரண்டு தடவையும் பார்ப்பனர்களாலேயே தோற்கடிக்கப்படவும் வர முடியாமல் போகவும் செய்யப்பட்டவர். அப்படி இருந்தும் அவருக்குப் பார்ப்பனர்கள் இடம் சலுகையாக இருக்குமானால் மற்ற முஸ்லிம்களுக்கோ நமக்கோ அந்த மகான் தன்மை சுலபத்தில் வரும் என்று அவரே எதிர்பார்ப்பது சிறிதும் நியாயமும் தருமமுமாகாது.

~subhead

தாழ்த்தப்பட்டவர்கள் நிலை

~shend

நிற்க தற்கால தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயமும் அது போலவேதான் இருந்து வருகின்றது.

காங்கரசில் இந்து முஸ்லிம் ஒற்றுமைத் திட்டம் எவ்வளவு முக்கியமாய் இருந்ததோ அது போலவே தீண்டாமை விலக்குத் திட்டமும் தீண்டாதார் முன்னேற்றத் திட்டமும் இருந்து வருகின்றன.

இது தவிர பூனா ஒப்பந்தம் வேறு இருந்து வருகிறது. இப்படி இருந்தும் தாழ்த்தப்பட்ட மக்கள் விஷயத்தில் காங்கரசு நடந்து வந்திருக்கும் யோக்கியதை திருச்சி ஜில்லா அரசியல் மகாநாட்டில் தோழர் சன்னாசிக்கு நடந்த மரியாதையும் தஞ்சை ஜில்லா அரசியல் மகாநாட்டில் நீடாமங்கலத்தில் தோழர்கள் தேவசகாயம், ரத்தினம், ஆறுமுகம் ஆகியவர்களுக்கு நடந்த மரியாதையும் கவனித்துப்பார்த்தால் எவருக்கும் நன்றாய் விளங்கிவிடும்.

தோழர் சன்னாசிக்கு சாப்பாடு தெருவில் துணியை விரிக்கச்சொல்லி இலையில் காய்கறி சாதம் வைத்து கொண்டு வந்து போட்டார்கள். இதை தோழர் சன்னாசியே தெரிவித்தார். எந்தக் காங்கரஸ் வாதியாலும் இது மறுக்கப்படவில்லை.

~subhead

நீடாமங்கலக் கதை

~shend

தஞ்சை மகாநாட்டில் பந்தியில் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ஆக தோழர்கள் தேவசகாயம், ஆறுமுகம், ரெத்தினம் ஆகியவர்களை உதைத்து தலை மொட்டை அடித்து சிரைத்து சாணிப்பால் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டிருக்கிறது, இது அவர்கள் ஸ்டேட்மெண்டுடன் உருவப்படத்தோடு வெளிப்படுத்தப்பட்டு இருக்கிறது. அக்காரியத்தில் சம்மந்தப்பட்ட யாரும் இதுவரை மறுக்கவே இல்லை. யாரோ ஒரு தோழர் சூசை என்பவர் மறுத்து இருக்கிறார். அவர் இதில் சம்மந்தப்படவில்லை என்று அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட தோழர்கள் சொல்லுகிறார்கள். மற்றும் கட்டாயப்படுத்தி மிரட்டி கையெழுத்து வாங்கினதாக சொல்லப்படுவதும் மறுக்கப்படவில்லை.

மற்றும் சுமார் 20 பேர்கள் மொட்டை அடிக்கப்பட்ட சேதியையும் அவர்களது பெயர்களுடன் பத்திரிக்கைகளில் வெளிவந்ததையும் யாரும் மறுக்கவில்லை. இன்றும் இந்த 20 பேர்கள் தலை மொட்டையாய் இருப்பதை யாரும் பார்த்துக்கொள்ளலாம்.

இது எப்படியோ போகட்டும். இந்த விஷயமாக எந்த ஆதிதிராவிட மெம்பராவது கவலை எடுத்து இவர்களைக் கண்டு அல்லது வரவழைத்து விசாரித்தார்களா? இல்லவே இல்லை. அல்லது இந்த அடிபட்டு மொட்டை அடிக்கப்பட்ட ஆதிதிராவிட தோழர்கள் 20 பேர்களில் பகுதிக்கு கிறிஸ்தவர்களாயிற்றே. இந்த ஆதிதிராவிடர்களுக்கும் இவர்கள் முன் சந்ததியர்களுக்கும் ஞானம் ஸ்நானம் கொடுத்து கிறிஸ்தவர்களாக ஆக்கிய பாதிரிமார்கள் இப்போது என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம். மற்றும் இந்தியாவில் இப்படிப்பட்ட கிறிஸ்தவர்களின் மொத்த எண்ணிக்கையை காட்டி உத்தியோகப் பங்கு பெற்ற கிறிஸ்தவ சமூக பிரமுகர்கள் என்ன செய்கிறார்கள் என்று கேட்கிறோம்.

இந்த மொட்டை அடித்து துன்புறுத்தி சாணி அபிஷேகம் செய்யப்பட்ட ஆட்களில் ஒருவராவது முஸ்லீமாய் இருந்திருந்தால் இன்று நீடாமங்கலமோ தஞ்சை ஜில்லாவோ சட்டசபையோ சர்க்கார் நிலையோ என்ன கதி ஆக்கியிருக்கும் என்று ஒரு நிமிஷம் யோசித்து பார்க்கும்படி வேண்டுகிறோம்.

~subhead

ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக வேண்டும்

~shend

ஆதிதிராவிடர்களை நாம் முஸ்லிம்களாக மாறிவிடும்படி இந்த இருபது வருஷகாலமாய் வெளிப்படையாய் சொல்லி வரும் காரணம் இதுவேயாகும். அவர்களது மோட்சத்தைப் பற்றியோ கடவுளது சன்மானத்தைப் பற்றியோ உண்மையில் நமக்கு சிறிதும் கவலையில்லை. அப்படி ஒன்று இருந்தால் அவரவர்கள் எண்ணங்கள் செய்கைகள் ஆகியவைகளுக்குகந்தபடி அவரவர்கள் அடைந்துதான் தீர்வார்கள். இல்லாவிட்டால் யாரும் அடையமாட்டார்கள். ஆனால் ஆதிதிராவிடர்கள் மனிதத்தன்மை பெற சுயமரியாதை அடைய இந்துக்களுடைய இம்மாதிரி கொடுமையிலிருந்தும், கிறிஸ்தவர்களுடைய இம்மாதிரி கோழைத்தனமும் கவலையற்ற தன்மையும் கொண்ட சுயநலத்தில் இருந்தும் தப்ப ஆதி திராவிடர்களுக்கு இன்று ஒருவழிதான் இருக்கிறது.

அதாவது ஆதிதிராவிடர்கள் இந்துக்கள் என்பதிலிருந்தும், கிறிஸ்தவர்கள் என்பதிலிருந்தும் வெளிப்பட்டு முஸ்லிம்களாக மாறிவிடுவது தான். உண்மையில் இந்த நீடாமங்கல அநீதிக்கு – அட்டூழியத்துக்கு சமாதானம் ஏற்படாத பட்சத்தில் மலையாளத்தைப் போலவே நமது நாட்டிலும், ஆதி திராவிடர்களுக்கென்றே ஒரு பெரிய மதமாற்ற மகாநாடு ஒன்று கூட்டி ஆயிரக்கணக்கான ஆதிதிராவிடர்கள் முஸ்லிம்களாக ஆக்கப்படுவதற்கு சீர்திருத்த – சமுதாய சமத்துவ புரட்சிகர வாலிபர்கள் முயற்சி எடுத்துக் கொள்ள வேண்டியது மிக மிக அவசியமும் அவசரமுமான கடமையாகும். இந்த நிலை ஏற்பட்ட பிறகுதான் மலையாள கோவில் கதவு திறக்கப்பட்டது.

நீடாமங்கல நிகழ்ச்சியை காங்கரஸ்காரர்கள் பொய்யாக்கி விடலாம், இதை வெளிப்படுத்தியதற்காக நமக்கு பல தொல்லைகளை விளைவிக்கலாம் அல்லது இதை வெளியாக்க உதவி செய்த ஆதிதிராவிடர்களுக்கு குடி இருக்க வசதி இல்லாமல் அடித்து விரட்டப்படலாம். அதைப் பற்றி நமக்கு கவலை இல்லை. நம்மைப் பொறுத்தவரை இந்நிகழ்ச்சி உண்மை என்றும் கல்லுப் போன்ற – சூரிய வெளிச்சம் போன்ற உண்மை என்றும் கருதி இருக்கிறோம். இதற்கு ஆதாரமாக இன்று 20 மொட்டைத் தலைகளும் இருந்து வருகின்றன.

ஆகவே நீடாமங்கல நிகழ்ச்சி சம்பந்தப்பட்ட ஆதிதிராவிட மக்கள் மாத்திரமல்லாமல் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள “இந்து” “கிறிஸ்தவ” ஆதிதிராவிட மக்களும் ஆங்காங்கு தனித்தனியே கூட்டம் கூட்டி சும்மா கண்டனத் தீர்மானம் செய்வதில் காலம் கடத்தாமல் இனி இம்மாதிரி அவமானம் கொடுமை ஏற்படாமல் இருப்பதற்கு நிரந்தரமான காரியமான விஷயத்தை பற்றி யோசித்து முடிவு செய்து கொள்ள வேண்டுமென்று அழுத்தமாய் வேண்டிக் கொள்கிறோம். மத வேஷத்தால் பிழைக்கும் சில ஆதிதிராவிட தோழர்கள் இதற்கு இடையூறு செய்வார்கள். அதைப்பற்றி சிறிதும் காது கொடுக்காமல் கவனம் செலுத்தாமல் ஒரு தகுதியான முடிவுக்கு வரும்படி வேண்டிக்கொள்கிறோம்.

குடி அரசு – தலையங்கம் – 06.02.1938

~cstart

“தினமணி” யின் ஊளை

~cmatter

நீடாமங்கலம், காங்கரஸ் அரசியல் மகாநாட்டில், ஆதி திராவிடத் தோழர்களுக்கு நேரிட்ட கொடுமையை, ஆதார பூர்வமாக, ருசுக்களுடன், கொடுமைக்கு ஆளானவர்களின் ஸ்டேட்மெண்டுகளுடன், நாம் எடுத்துக்காட்டியது, உள்ளபடியே தமிழ் நாட்டில், ஒரு பெருங்கிளர்ச்சியை உண்டாக்கிவிட்டதுடன் காங்கரசின் உடுக்கைகளுக்கு, கிலி பிடித்துவிட்டது. இந்தக்கொடுமையை விபரமாக விளக்கிக் காட்ட காங்கரஸ் சிகாமணிகளின் யோக்கியதையும், இவர்களுக்குத் தாளம் போடும், தன்னலக்காரரின் வண்டவாளமும் வெளிப்பட்டு, சந்தி சிரிக்கும் நிலை ஏற்பட்டது. ஆகவே, போகும் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள, கையில் எது அகப்படுகிறதோ அதை எடுத்துப்போர்த்துக்கொள்ளலாயினர். வறுமை காரணமாக, மானத்தைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய நிலையில் இல்லாத ஏழை மக்கள், தங்கள் மானத்தைக் காப்பாற்றிக்கொள்ள கந்தலையும், தழையையும், கைகளையும் உபயோகித்துக்கொள்வதுபோல, “தினமணி”க்கு ஒரு பரிதாபகரமான நிலை ஏற்பட்டது காண, நமக்கு ஒரு பக்கம் இரக்கமும், மற்றொரு பக்கம் அது பேசும் “லண்ட” பாஷையைக்கண்டு சிரிப்புமே வருகிறது.

அபத்தம் தவிர வேறொன்றும் “தினமணிக்கு” அகப்பட ஏதுவில்லை! ஏன்? நீடாமங்கலத்துக் கொடுமை மறைக்க, மறுக்க மறக்க முடியாத உண்மை. விஷயம் எவ்வளவு தூரம் வளர்ந்தாலும், அதிகார பலம் முழுதும்கொண்டு எதிர்ப்பதானாலும், நம்மால் உண்மையை விளக்கப் போதுமான ருசுக்கள் தயாராக இருக்கின்றன. ஆகவே இடையிடையே, தமது மானம் போவதால் ஏற்படும் துக்கங் காரணமாக, இவர்கள் ஊளையிடுவதை நாம் பொருட்படுத்தப்போவதில்லை என்றாலும், விஷயங்களை மறுபடி ஒருமுறை விளக்கமாகக் கூறி, எவ்வளவு அநாச்சாரமான, அயோக்கியத்தனமான, பேடித்தனங் கலந்த போக்கிரித்தனமான சூழ்ச்சிகளை நமது எதிரிகள் கையாளுகிறார்கள் என்பதைப் பொது மக்கள் உணர வேண்டுமென இதை எழுதுகிறோம்.

நேற்றைய “தினமணி”யில் ஒரு ஒட்டை வேட்டு, கிளப்பப்பட்டிருக்கிறது. அது எழும்பியவிதம், அதை வெளிப்படுத்திய ஆசாமி, அவருக்கும் நீடாமங்கல அக்ரமத்திற்கும் உள்ள தொடர்பு, அதைப் பரிசாக ஏற்றுக்கொண்ட பிரமுகர், அதற்கு “ததாஸ்து” கூறும் புளுகுமணி இவைகளின் யோக்யதையை இனி அலசுவோம். நாற்றம் அதிகமாகத்தான் இருக்கும். இருப்பினும் இது நமது குற்றமல்லவே! ஆப்பை அவர்களாக அசைத்துவிட்டுத் தானே அவஸ்தைப்படுகிறார்கள்!

நீடாமங்கலத்தில் நடந்த காங்கரஸ் அரசியல் மகாநாட்டு, சமபந்தி விருந்தில் கலந்து கொண்டதற்காக, ஆதி திராவிடத் தோழர்களை மிருகத்தனமாகக் கொடுமைப்படுத்தி, தலையை மொட்டை அடித்து, சாணிப்பால் ஊற்றிய கொடுமையை நாம், ஜனவரி 3ந் தேதி வெளியிட்டோம். அதை மறுக்கும் நாணயஸ்தர்கள் யார் வருகிறார்கள் பார்ப்போம் என பொறுத்துப்பார்த்தோம். எங்கும் நிசப்தம், உப்புக்கண்டம் பறி கொடுத்த பாப்பாத்தி போல, இவர்கள் முக்காடிட்டுத் திரிந்தார்கள்! ஜனவரி 12ந் தேதி, கோவை ஜில்லா, “ஹரிஜன்” ஊழியராகிய , தோழர் எம்.கோளப்பன் என்பவர், “விடுதலை” மூலமாக பிரதம மந்திரிக்கே ஒரு “சவால்” விடுத்தார். மந்திரியார் ஏதாவது வாயைத் திறந்தாரா? அவரது கோஷ்டி ஏதாவது முணுமுணுத்ததா? இல்லை! மறுபடியும், பழைய மெளனந்தான். பகிரங்கமாக ஒன்றும் சொல்வதற்கில்லாமற்போகவே திரைமறைவிலே சூழ்ச்சிகள் நடைபெற ஆரம்பித்தன. அடிபட்ட – மானத்தைப் பறிகொடுத்த ஆதி திராவிடரை, ஆசை காட்டியும் பயமுறுத்தியும் நாணயமற்ற முறையிலே ஒரு மறுப்பு வாங்கப் பிரயத்தனம் செய்யப்பட்டது. நமது நிருபர் இதை ஜனவரி 16ந் தேதி தெரிவித்தார். இந்தச்சூது நடக்குமென நாமும் ஜனவரி 17ந் தேதியே “விடுதலை”யில் வெளியிட்டோம். அதன்படியே 18ந் தேதி “தினமணி” யில் சு.ம.புளுகு என்ற விஷயமும், தோழர்கள் தேவசகாயம், சூசை, ஆறுமுகம் ஆகியவருடைய போட்டோ, ஒரு ஸ்டேட்மெண்டுடன் வெளி வந்தது மறுதினமே, அதாவது ஜனவரி 19ந் தேதியே நாம் “புளுகுவது எது, தினமணியா விடுதலையா” என மகுடமிட்டு, உபதலையங்கமெழுதி எம்மிடம் சகல ருசுக்களும் தயாராக இருப்பதையும் எவ்வித நடவடிக்கைக்கும் நாம் தயார் எனவும் எழுதினோம். மறுபடியும் நமது எதிரிகள் குதிருக்குள் குதித்துப் பதுங்கிக் கொண்டனர். நமது நிருபரை நீடாமங்கலம் சென்று சகல விஷயங்களையும் பரிசீலனை செய்யும்படி அனுப்பினோம். அப்போது காங்கரஸ்காரர் தப்பு ஸ்டேட்மெண்டு வாங்க கையாண்ட கேவலமான முறைகள் நமக்குத் தெரிய வந்தன. அடிபட்ட- ஹிம்சிக்கப்பட்ட தோழர்களை நிர்ப்பந்தப்படுத்தி கையெழுத்து வாங்கப்பட்டது. அதற்கு உடந்தையாக இருந்தவரே தோழர் சூசை என்பவர். அவர் மகாநாட்டு விருந்திலோ, அதற்குப் பிறகு நடந்த “மிருகத்தனத்திற்கோ” ஆளாகாதவர்; சம்பந்தப்படாதவர். மற்ற இரு தோழர்களும், ஜாதி ஆணவக்காரரிடம் அகப்பட்டு அவஸ்தைப்பட்டவர்கள் தான்.

தங்கள் ஜாதிக்கே நேரிட்ட அவமானத்தை, காங்கரஸ்காரரின் கொடுமையை உலகறியட்டும் என்பதற்காகவே, எக் கஷ்டம் வரினும் ஏற்போம் என முடிவு செய்துகொண்டு, தோழர் தேவசகாயம், தனக்கும் தன் தோழர்களுக்கும் செய்யப்பட்ட கொடுமைகளையும், அதை மறைக்க தம்மை மிரட்டி தப்பு அறிக்கை வாங்கப்பட்ட சூதையும் விளக்கி, “ஹரிஜன” விவசாய மந்திரியான கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் “ஹரிஜன” மேயர் தோழர் சிவஷண்முகத்திற்கும் நமக்கும் மகஜர்கள் அனுப்பினார். நாம் அந்த மகஜரை தோழர் தேவசகாயத்தின் போட்டோவுடன் 26-ந் தேதி “விடுதலை”யில் பிரசுரித்தோம். ஆதி திராவிட வகுப்பில் பிறந்து, அந்தப் பெயரை உபயோகித்து பட்டம் பதவி பெற்று பரிமளிக்கும் அப்பிரமுகர்கள், “தேவசகாயம் மகஜருக்கு” ஏதாவது பரிகாரந் தேடினார்களா? அல்லது மறுக்கவாவது முன் வந்தார்களா? இல்லை! மறுபடியும் பழைய மெளனம். திருடனை தேள் கொட்டினால் அலறியா அழுவான்! விம்முவான். அதை போன்றே ஹரிஜன மந்திரியும், மேயரும் வாயைப் பொத்திக் கொண்டிருந்து விட்டனர். இந்த பேசாமடந்தைகளைப் பேச வைக்கவேண்டுமென ஜனவரி 27-ந் தேதி கனம் முனிசாமிப் பிள்ளை நேரில் வந்தால், கொடுமைக்காளான தோழர்களைக் காட்டுவதாக ஒரு ” சவால்” விடப்பட்டது. 28-ந் தேதி ஈரோடு பொதுக்கூட்டத்திலே, தோழர் தேவசகாயம், நீடாமங்கல அக்ரமத்தை விளக்கிக்கூறினார். 29ந் தேதி சேலம் பொதுக்கூட்டத்தில் தோழர் தேவசகாயம், மட்டுமல்ல மற்றும் கொடுமைக்காளான தோழர் ரத்தினம், மொட்டையடித்த “பள்ளப்பரியாரி” ஆறுமுகம், ஆகிய மூவரும் பிரசன்னமாக இருந்தனர். தம் குறைகளையும் தெரிவித்தனர். நாணயமுள்ள யாவரும் மனங் கசிந்தனர். பிப்ரவரி முதல் தேதி மூன்று தோழர்களுமாகச் சேர்ந்து விரிவான அறிக்கையை “விடுதலை”யில் வெளியிட்டனர். அத்துடன் தோழர் ரத்தினத்தின் போட்டோவும் வெளிவந்தது. பிப்ரவரி 2ந் தேதி, பரியாரி மொட்டை அடித்த கதையை விளக்கினார். அதுவும், அவர் போட்டோவுடன் வந்தது. இவ்வளவும் நடந்து கொண்டிருக்கையில் சூரர்கள் என்ன செய்தார்கள்? மெளனமாகவே இருந்தனர்.

திடீரென, ஒரு ஒட்டை வேட்டு, “தினமணி” யில் பிப்ரவரி 2ல் வெளியாயிற்று. அதுதான் அபத்தத்தின் சிகரம்! அநாகரீகத்தின் உச்சி. போக்கிரித்தனமும் பேடித்தனமும் கலந்த விஷமம்!

நீடாமங்கல கோர நாடகத்தில் சம்பந்தப்படாத, தோழர் சூசை என்பவர், விளம்பர மந்திரி கனம் ராமநாதனிடம் நேரில் செய்து கொண்ட விண்ணப்பமாம்! அடிபட்ட தோழர்கள் மகஜர் அனுப்பியது, அவர்கள் ஜாதிக்காரப் பிரமுகர்களான, கனம் முனிசாமிப் பிள்ளைக்கும் மேயருக்கும்; அதற்குப் பதில் இல்லை! பதில் கூற வக்கில்லை. ஆனால் விளம்பர மந்திரியிடம் விஷயத்தில் சம்பந்தப்படாத தோழர் சூசை, ” உண்மையை ” விளக்குகிறாராம்! என்ன போக்கிரித்தனமான ஆபாசம்!!

தோழர் சூசை கூறுவது முழுதும் அபாண்டம். முழுப் பூசணியைச் சோற்றில் மறைக்கிறார்-அல்ல-கதர்த்துப்பட்டியில் மறைக்கிறார் என்று கூறுவோம். ஏன்? இவர் சம்பவத்தில் சம்பந்தப்படாதவர். தன் சமூகத்திற்கு ஏற்பட்ட அவமானத்தைப் போக்க முன்வராது, எதிரிகளிடம் கையாளாக இருக்கிறார். அபத்தமான இந்த அறிக்கையையும் சற்று அலசிப் பார்ப்போம். அதற்குள் சில கேள்விகளைப் பொது மக்கள் கவனத்திலிருத்த வேண்டுகிறோம். ஜனவரி 3ல் வெளி வந்த குற்றச்சாட்டிற்கு “தினமணி” பதில் கூற 15 நாள் ஆனதேன்? கயிறு திரிக்க 15 நாள் தேவையாக இருந்தது போலும். “ஹரிஜன” மந்திரியும் மேயரும் வாயை மூடிக்கொண்டிருப்பதேன்? வெளியில் சொல்லப்போனால் வெட்கக்கேடு என்பதினால்? பிரதம மந்திரிக்கு விடப்பட்ட சவாலுக்கு அவரும் மெளனமாக இருந்ததேன்? நடந்த உண்மையை எப்படி மறுப்பது என்பதினாலா அன்றி “அறிக்கைகள்” தயாராகாத குறையினாலா? அந்த சமயங்களிலெல்லாம் “தினமணி” யின் வாய் அடைந்து கிடந்த காரணமென்ன? ஒரே அடியாக “பொய்” பேச தினமணியின் வாயுங் கூசிற்றா? அன்றி, இவ்வளவு பிரமாண்டமான பொய் சொன்னால் பொது மக்கள் சும்மாவிட மாட்டார்களே என்ற திகிலா?

நிற்க தோழர் சூசை, “எங்களுக்கு 12.1.38 தபாலில் தனித்தனியாக அச்சடித்த காகிதங்கள் கிடைத்தன. அதை எடுத்துக்கொண்டு மறுநாள் மகாநாடு நடத்திய நீடாமங்கலம் உடையார் அவர்களிடம் போய்க்காட்டினேன்” என்று கூறுகிறார். இங்கு தான் இரகசியம் இருக்கிறது! நீடாமங்கல விஷயமாகத் தனக்கு வந்த கடிதத்தை உடையாரிடம் காட்டுவானேன்? தோழர் சூசை தற்குறியல்ல. மூன்றாவது பாரம்வரை படித்தவர். ஒரு பள்ளியில் உபாத்தியாயராகக்கூட இருக்கிறாராம். அப்படி இருக்க உடையாரை நாடிய காரணம் என்ன? “காரியம் மிஞ்சிவிட்டதே என்ன செய்வது என்று கைகளைப் பிசைந்துகொண்டு, மந்திராலோசனை செய்யச் சென்றாரா என்று கேட்கிறோம். “மறுபடியும் 15-ந் தேதி, நீடாமங்கலம் பங்களாவிற்குப் போனோம். நாங்கள் போனபோது மகாநாட்டை நடத்திய சில காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ்காரர்களும் அங்கு இருந்தார்கள். மன்னார்குடி காங்கரஸ் காரியதரிசியான பிள்ளை அவர்களும் இருந்தார்” என்கிறார் தோழர் சூசை. 12ந் தேதி சென்ற பயணம் பலிக்காது, 15-ந் தேதி வேறே செல்லவேண்டி வந்ததோ எனக் கேட்கிறோம்? “அப்பொழுதுதான் 3.1.38 “விடுதலை” யிலிருந்து இது காப்பி என்று தெரிந்தது” என்ற தோழர் சூசை கூறுகிறார். பாபம்! அவ்வளவு உலக மறிந்தவராக இருக்கிறார். இவர் தான் இப்போது “ஹரிஜன”ங்களுக்கு இந்த “கைங்கரியம்” செய்ய முன் வருகிறார். அடிபட்ட தோழர்களிடம், “மகாநாட்டிலும் போஜனத்திலும் கலக்காத என்னை வலிய இப்படி சந்தியில் ஏன் இழுத்து விட வேண்டும்” என தோழர் சூசை அன்று சொன்னதை மறந்துவிடக்கூடிய அளவு மயக்கம் ஏற்பட்டிருக்கிறது. நிற்க, அன்றே போட்டோ எடுக்கப்பட்டதாகவும், அப்போது தோழர் தேவசகாயத்திற்கு லு அங்குலம் மயிர் தலையிலிருந்ததாகவும், முன்புறம் மட்டும் க்ஷவரம் செய்திருந்தது எனவும் கூறி 26-ந் தேதி “விடுதலை”யில் வந்த போட்டோவைப் பார்த்தால், தோழர் தேவசகாயம் “அவன் உருவே மாறி” இருப்பதாக தோழர் சூசை உருகுகிறார். அவரை உருக வைக்கும் அற்புதத்தை நாம் அறிவோம். பொது மக்கள் “தினமணியில்” வந்த போட்டோவையும், ஒப்பிட்டுப்பார்த்து உண்மையை உணரட்டும் எனக் கூறுகிறோம். போட்டோ எடுத்த அன்று ஒரு தடவை தோழர் சூசை, “சு.ம. புளுகை” எழுதிக் கொடுத்தாராம். அத்துடன் நின்றாரா? இல்லையே! 16-ந் தேதி காங்கரஸ் காரியதரிசி நேரிலேயே அனுமந்தபுரம் வந்தாராம். அப்போது தோழர் சூசை தன் கையாலேயே மறுபடியும் விஷயத்தை எழுதிக்கொடுத்தாராம். மற்றத் தோழர்களுக்கு வாசித்துக் காட்டினாராம். சரிதான் என்று சம்மதித்தே தோழர் ஆறுமுகம் முதலில் கையெழுத்துப் போட்டாராம். அவருக்குத் தமிழ் எழுதப்படிக்கத்தெரியுமாம்! எழுதப்படிக்கத் தெரிந்த தோழர் ஆறுமுகம் இருக்கையில், ஏனோ பாவம், இந்த தோழர் சூசை இவ்வளவு கஷ்டப்பட்டு 2 நகல் எழுதி படித்துக் காட்டினார்? தோழர் தேவசகாயம் சிலரின் துர்ப்போதனையால் ஊரை விட்டுப்போனது அவனது பெற்றோருக்கும் மற்றுமுள்ள ஏழை ஹரிஜனங்களுக்கும் கவலையாக இருக்கிறதாம்! தோழர் தேவசகாயத்தின் உற்றார் பெற்றோரின் மனோ நிலையை விளக்கி நமக்கு கடிதம் வந்திருக்கிறது. தோழர் சூசை போன்ற ஏழை “ஹரிஜன”ங்களின் கவலையும் நமக்குத் தெரியும். “தினமணி” யே நீடாமங்கல அக்ரமத்தைக் கண்டித்து சென்னை தாழ்த்தப்பட்டார் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை ஜனவரி 17-ந் தேதி பிரசுரித்திருக்கிறது. அப்போதெல்லாம் தோழர் சூசையும், அந்தப் பொம்மையை ஆட்டி வைக்கும் சூத்திரதாரிகளும் மெளனமாக இருந்துவிட்டு, இப்போது சு.ம.காரர்கள், தேவசகாயத்தை அபகரித்து கொண்டுபோய், மொட்டை அடித்து பொய்ப்பிரசாரம் செய்து வருவதாகக் கூறுவது பேடித்தனங்கலந்த போக்கிரித்தனமன்றி வேறென்ன என்று கேட்கிறோம். விஷயம் விபரீதமாய் போகாதபடி, சப்பைக்கட்டுகட்டுவது இனி சாயாது. விளம்பர மந்திரியாய் இதில் சற்று முடுக்காகவே முனைந்து நிற்கிறார் என்ற தகவல் நமக்குக் கிடைத்துமிருக்கிறது. ஆனால் நாம் இதற்காக அஞ்சப் போவதில்லை. நம்மிடம் மறுக்கமுடியாத ருசுக்கள் இருக்கின்றன. எந்தவிதமான “அக்கினி” பரீட்சைக்கும் நாம் தயார். நாணயமும், ரோஷமும், மானமும் உள்ளவர்களானால் நேரிடையாக, பகிரங்கமாக விசாரணை நடத்தட்டும். திரைமறைவிலே, சில பொம்மைகளை வைத்துக் கொண்டு கோமாளிக்கூத்துக் காட்டுவது அசட்டுத்தனம். அதைப்பொதுமக்கள் லட்சியப்படுத்த மாட்டார்கள். தோழர்கள் தேவசகாயம் முதலியோருக்கு அன்று லு அங்குல மயிர் தலையில் இருந்தது, இன்று உருமாறி விட்டது என உருகும் சூசையோ, அன்றி மற்றவரோ, இந்த “மயிர் ஆராய்ச்சி”யை வேண்டுமானாலும் கூடச் செய்யட்டும். எதையும் நாணயமாக, பகிரங்கமாக செய்யட்டும். அதற்குத் தயார் தானா? என்றே நாம் கேட்கிறோம். மொட்டை அடிக்கும் தொழில் நமக்குக் கிடையாது. மொட்டை அடித்துவிட்டு மொட்டைத்தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சுப்போடும் தொழிலில் “தினமணி” இறங்கியிருக்கிறது. இது வெற்றி பெறாது என்பதுடன் இந்தத் துடுக்குத்தனம், இனி சாயாது என்பதையும் தெரிவித்துக்கொள்கிறோம்.

– விடுதலை

குடி அரசு – கட்டுரை – 06.02.1938

You may also like...