* ஜஸ்டிஸ் கட்சிக்கு ஈ.வெ.ராமசாமி   

 

6 மாதத்திற்கு  முன் செய்த  எச்சரிக்கை

தலைவரவர்களே!  தோழர்களே! !

தலைவரவர்கள்  தெரிவித்த  விஷயங்கள்  இயக்கநலனைக்  கருதி  அவசியம்  கவனிக்கத்  தக்கதாகும்.  எல்லா  விஷயத்தையும்  விட  நமது  கொள்கை  என்ன?  திட்டம்  என்ன?  என்பதைப்  பொது  ஜனங்கள்  அறியும்படி  செய்ய வேண்டும்.  ஜஸ்டிஸ் கட்சி  என்றால்  மாதம்  4000 ரூ.  சம்பளத்துக்கும்  மந்திரி  பதவிக்கும்  ஊர்  சிரிக்கச்  சண்டை  போட்டுக் கொண்டிருக்கும்  கூட்டம்  என்று  இனியும்  பாமர  ஜனங்கள்  சொல்லும்படி  நாம்  விட்டுக் கொண்டிருக்கக் கூடாது.  காங்கிரசுக்காரர்கள்  என்பவர்களின்  உள்  எண்ணமும்,  நாணையமும்  எப்படியிருந்தாலும்  அவர்கள்  ஏதோ  இரண்டொரு கொள்கைகளைச் சொல்லி, அதைப்  பெரிதாக்கிக்  காட்டி  அதற்காக  அடியும்,  உதையும்,  நஷ்டமும்,  கஷ்டமும்,  சிறைவாசமும்  பெற்றவர்கள்  என்கின்ற  பெயரைப்  பெற்றிருக்கிறார்கள். அவர்களோடு  இப்பொழுது  திடீரென்று  போட்டி போடுவதென்றால் அதுவும் ஒரு விளக்கமான  யாவருக்கும் தெரியும்படியான ஒரு கொள்கையும், திட்டமும் இல்லாமல் போட்டி  போடுவதென்றால்    சுலபமான  காரியமல்ல  என்பதே  எனது  அபிப்பிராயம்.  கட்சிக்கு  கொள்கை  இருந்தாலும்  இல்லா விட்டாலும்  பணமும்,  “”அதிகாரமும்  செல்வாக்கும்  இருந்தால்  எப்படியும்   தேர்தலில்  வெற்றி  பெற்று  விடலாம்”  என்கின்ற  தைரியம்  சிலருக்கு  உண்டு  என்பதையும்  நான் ஒப்புக் கொள்கிறேன்.  ஆனால்  அந்த தைரியம்  தனிப்பட்டவர்களின்  நன்மைக்குப் பயன்படுமே  தவிர  ஒரு  இயக்கத்துக்கு   பொது  ஜன நன்மைக்குப்  பயன்படாது.  சமீப  காலமாக  ஜஸ்டிஸ்  கட்சியின்  பேரால்  அதிகாரத்திலும்,  பதவியிலும்  இருக்கிறவர்கள்  கட்சி  கொள்கை  விஷயத்தில்  போதிய  லக்ஷியம்  எடுத்துக் கொள்ளவில்லை யென்றும்  தங்கள்  சுயநலத்தை  விட  மற்றொன்றையும்  சிறிதும்  கவனிக்க வில்லையென்றும்  கட்சிக் கொள்கைக்கு  விரோதமாகக் கூட  பல  காரியங்கள் செய்யப்பட்டுவிட்டன  என்றும்  கட்சி ஜனங்களுக்குள்ளாகவே  சொல்லிக் கொள்ளப்படுகிறதுடன்  மற்றும்  பலவிதமான  புகார்களும்  சொல்லிக் கொள்ளப்படுகின்றன.  ஆனால் இப்படிச்  சொல்லிக் கொள்ளப்படுவதற்கும் புகார்களுக்கும்  ஆதாரமில்லை  என்று  கூறலாம்.  ஆதாரமில்லை  என்பதைப் பொது  ஜனங்களுக்கு  மெய்ப்பிக்க  வேண்டாமா?  மற்றும் நமது  எதிரிகள்  இப்படிப்பட்ட  விஷயங்களைத் தங்களுக்கு  அனுகூலமாய்  உபயோகித்துக் கொள்ளாமல்  இருப்பதற்கு  முயற்சி  செய்ய வேண்டாமா?  நமது  சொந்த  செல்வத்தையும் செல்வாக்கையுமே  எல்லாவற்றிற்குமே  சமாதானமாக  ஆக்கிக் கொள்ளலாம்  என்று  சிலர்  நினைத்தால்  கட்சியில்  உள்ள  செல்வமும்,  செல்வாக்கும்  இல்லாத  மக்களின்  கதி  என்ன  ஆகும்  என்பதை  யோசித்துப்  பாருங்கள்.  இவர்களுக்கு  ஒரு  கொள்கையோ,  இவர்கள்  மீது  கூறப்படும்  புகார்களுக்கும்  குற்றங்களுக்கும்  பதில்  கூறுவதற்குத்  தகுந்த  உண்மையான  ஆதாரங்களோ இல்லாவிட்டால்  இவர்களுக்கெல்லாம்  கட்சியில்  இடமோ  கட்சியின்  பேரால்  வெற்றியோ  எப்படி  கிடைக்கும்?

ஜஸ்டிஸ்  கட்சி  என்றால்  ஜமீன்தார்கள்,  முதலாளிமார்கள்  கட்சியே  தவிர  பொது  மக்கள்  கட்சியல்ல  என்று  சொல்லப்படுவது  இப்போது  மிகமிக  சகஜமாகிவிட்டது.  இதை  நாம் பொய்யாக்கி  காட்டாவிட்டால்  கட்சியில்  உள்ள  உண்மை  உழைப்பாளிகளுக்கு  இதைவிட வேறு  அவமானம்  வேண்டியதில்லை.

ஆதலால்  தகுந்த  வேலைத்  திட்டமுறைகள் ஏற்படுத்தி  பாமர  ஜனங்களுக்கு  நன்றாய்  பிரசாரம்  செய்து  நமது  எதிரிகளின்  விஷமப்பிரசாரத்தை  தகர்ப்பதுடன்  ஏழைப்  பொதுமக்களுக்கு  பயன்படத்தக்க  முறையில் உழைத்தாக  வேண்டும்.  வெறும்  ஸ்தாபனங்கள் பெரிதும்  சுயநலக்காரர்களின்  விளம்பரத்துக்கு  ஒரு  சாதனமாகும்.  உழைப்பும்  வேலை  செய்து  காட்டு வதுமேதான்  நமது  எதிரிகளைத்  தோற்கடித்து  நமக்கு  வெற்றியைக்  கொடுக்கும்.

இந்திய  சட்டசபைத்  தேர்தல்

அடுத்தபடியாக  இந்திய  சட்டசபைத்  தேர்தலைப்பற்றி பேசப்  பட்டது.  இந்த  சமயத்தில்  இது  ஒரு முக்கியமான  விஷயம்  என்பதை  நானும்  ஒப்புக் கொள்ளுகிறேன்.  நமது  கட்சிக்கு  ஒரு  கெட்ட பெயருண்டு.  அதைப்  பொய்  என்று  மறுக்கவும்  என்னிடம் போதிய  ஆதாரமில்லை.  என்ன  வென்றால்  “”ஜஸ்டிஸ்  கட்சிக்காரருடைய  நாட்டமெல்லாம்  மாகாண  சட்ட  சபையிலேயே  ஒழிய,  இந்திய  சட்டசபையைப்  பற்றி அவர்களுக்குக்  கவலை  இல்லை”  என்று  சொல்லப்படுவதாகும்.  இதற்கு  என்ன விதமான  உள்  எண்ணம்  கற்பிக்கப்படுகிறது  என்றால்  “”மாகாண  கவுன்சிலில் இருந்தால்  மந்திரி வேலை  பெறலாம்  அல்லது  மந்திரிகளுக்குத்  துணைபுரிந்து  நமது  வாழ்க்கை  நலத்துக்கு  ஏதாவது  பயன்  அடையலா”ம் என்று  கருதி  இப்படி  அலக்ஷியமாய்  இருப்பதாக  உள்  எண்ணம்  கற்பிக்கப்படுகிறது.  இந்தப்படி  சொல்லுபவர்களுக்கு  அனு கூலமாகவே  சம்பவங்களும்  இருந்து  வருகின்றன.

இதன்  பயனாகவே  தென்னிந்தியாவைப்  பற்றியும்,  தென்னிந்திய மக்களைப்  பற்றியும்  வடஇந்தியர்கள்  கேவலமாய்  மதிக்கும்படியும்,  தென்னிந்திய பார்ப்பனர்கள்தான்  தென்னிந்திய  பொது  நல  ஊழியர்கள்  என்றும், அவர்களே  தேச  பக்தர்கள்  என்றும்  கருதும்படி  செய்யப்பட்டதுடன்  பார்ப்பனரல்லாதார்  என்றால்  தேசத்  துரோகிகள்  என்றும்  அன்னிய  ஆட்சிக்கும்  அதன்  கொடுங்கோல்  தன்மை  என்பதற்கும்  துணைபுரிந்து  சுயநலம்  தேடுகிறவர்கள்  என்றும்  கருதும்படியாக  நமது  நாட்டுப்  பார்ப்பனர்கள்  பலரால்  விஷமப்  பிரசாரம் செய்யப்பட்டு  வந்தது.  பல  காரணங்களால்  சிலர்  உழைத்து  வந்ததின் பயனாக  நம்மவர்களில்  சிலர்  சிறப்பாகவும்  குறிப்பாகவும்  தோழர்கள்  ஆர்.கே.ஷண்முகம்,  ஏ.இராமசாமி  ஆகியவர்கள்  இந்திய  சட்டசபைக்கு போக  நேர்ந்ததில்  அவர்களுக்கும்,  மற்றும்  தென்னிந்திய  பார்ப்பனரல்லாத  சமூகத்துக்கும்  எவ்வளவு  அந்தஸ்தும்  பெருமையும்  ஏற்பட்டது  என்று  யோசித்துப்  பாருங்கள்.  தோற்றுப் போனவர்கள் கூப்பாடு  போடுவதைப் பற்றியும்  அப்படிப்  பட்டவர்கள்  அழுவதைப்  பற்றியும்,  நாம்  லட்சியம்  செய்ய வேண்டியதில்லை.  அது  போலவே   இன்னமும்  சிலர்  இந்திய  சட்ட  சபைக்கு  நம்மவர்கள் போக  நேர்ந்தால்  தேசத்துரோகிகள்  யார்?  தேசீய  வியாபாரத்தில்  வயிறு  வளர்ப்பவர்கள்  யார்?  என்பதை  உலகம்  அறியச்  செய்துவிடலாம்.  தோழர் ஷண்முகத்தைப் போலவே  எல்லாத்  தொகுதிக்கும்  ஆள்  கிடைக்குமா  என்று  கேட்பீர்கள்.  அதைப்  பற்றி  எனக்கு  லக்ஷியமில்லை.  நமது  நன்மைக்கும்  முன்னேற்றத்துக்கும்  பிறவி  எதிரிகளாய்  இருப்பவர்களை  நமது  பிரதிநிதிகளாய் தெரிந்தெடுத்து வருகிறோம் என்கின்ற இழிவும், முட்டாள்தனமுமாவது நமக்கு இல்லாமல் போகுமல்லவா?  அதோடு மாத்திரமல்லாமல்   நமது  எதிரிகள்  இந்திய  சட்டசபைக்குப் போய்  நமக்குக்  கெடுதி  செய்யும்  காரியமாவது  நிறுத்தப்பட்டதாக  ஆகுமா?   இல்லையா?  தீண்டாமை  விலக்குக்கு விரோதமாக  இன்று  இந்திய  சட்டசபையில்  இருப்பவர்கள்  யார்  என்று  யோசித்துப்  பாருங்கள்.  பார்ப்பனரல்லாத  கட்சிக்கு  நாங்கள்தான்  தூண்கள்  என்று  பெருமை  பேசி  பயன் பெற்றுவரும்  தஞ்சை  திருச்சி  ஜில்லா  தொகுதியில்  வெற்றி  பெற்றுச்  சென்ற  பச்சை  வர்ணாச்சிரம  வாதியா?  அல்லவா?  என்று  கேட்கின்றேன். இப்படிப்பட்ட  நிலையில்  இனியும்  நமக்கு  அப்படிப்பட்ட  இழிவும்,  சங்கடமும்  வந்து  சேராமல்  இருப்பதற்கு  நாம்  அந்த  தேர்தலில்  தகுந்த  கவனம்  செலுத்த வேண்டும்.  அத்தொகுதிக்கு  கட்சியின்  பேரால்  பணம்  வசூலித்துக் கொடுத்தாவது  தக்க அபேக்ஷகர்களை  நாம்  தெரிந்தெடுக்கச் செய்ய வேண்டும்.  இவ்விஷயத்தில்  முன்போல் இனி  அலக்ஷியமாய்  இருக்கக்கூடாது  என்பதை  வலியுறுத்திக்கூற  ஆசைப்படுகின்றேன்.

 

சத்தியமூர்த்தியின்

தற்கால  ஞானோதயம்

தோழர்  சத்தியமூர்த்தி   அவர்கள்  தேர்தலில்  வெற்றியடைந்த  ஆனந்த  லாகிரியில்  மெய்  மறந்து  பேசிய  பேச்சு.

“”எனக்குள்  சில  சமயங்களில்  பிராமணர்    பிராமணரல்லாதார்  என்கின்ற  உணர்ச்சி  வந்தது.  ஆனால் இப்போது  அது  மறந்து போயிற்று.”

“”பிராமணரல்லாதார்  எனக்குச் செய்த இந்த  நன்றியை  நான்  எப்போதும்  மறக்கமாட்டேன்.”

“”என்  சரீரத்  தோலை  உரித்து  பிராமணரல்லாதாருக்கு  செருப்பாய்  தைத்துப் போட்டாலும்  கூட  அது  சரியான  நன்றியாகாது”  என்று  பேசி யிருக்கிறார்.  லாகிரி  தீர்ந்தால்  என்ன  பேசுவார்  என்று  எழுத வேண்டுமா?

பகுத்தறிவு  செய்திக் குறிப்பு  18.11.1934

You may also like...