கோவையில்  சுயமரியாதைத்  திருமணம்  சு.ம.  திருமணமும்  பு.ம.  திருமணமும்

 

தோழர்களே!

இன்று  இங்கு  நடக்கும்  இத்திருமணத்திற்கு  சுயமரியாதைத்  திருமணமென்றும்  சீர்திருத்தத்  திருமணம்  என்றும்  சொல்லப்படுகிறது.  சுயமரியாதைத்  திருமணம்  என்றால்  சிலருக்குப்  பிடித்தமில்லாமல்  இருக்கலாம்  என்று  சீர்திருத்தத்  திருமணம்  எனச்  சொல்லப்படுகிறது.

சீர்திருத்தம்?

எப்படி  இருந்தாலும்  ஒன்றுதான்.  சீர்திருத்தம்  என்றால்  என்ன?  இருக்கின்ற  நிலைமையில்  இருந்து  மாற்றம்  செய்வதையே  சீர்திருத்தம்  என்றும்,  நாகரீகமென்றும்  சொல்லுகிறோம்  என்றாலும்,  இந்த  சீர்திருத்தமும்,  நாகரீகமும்  வெறும்  மாறுதலுக்காகவே  ஏற்படுவதும்  உண்டு.  மற்றும்  பல  விஷயங்களில்  சௌகரியத்தையும்,  நன்மையையும்,  அவசியத்தையும்,  பகுத்தறிவையும்  உத்தேசித்து  மாற்றப்படுவதும்  உண்டு.  மாறுதலும்  சீர்திருத்தமும்  மக்களுக்கும்  உலகத்துக்கும்  புதிதல்ல.  உலகம்  தோன்றிய  நாள்  முதல்  ஒவ்வொரு  துறையிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கிறது  என்பதை  சரித்திரங்களையும்,  பழைய  சின்னங்களையும்  பார்த்து  வந்தால்  நன்றாய்  விளங்கும்.  அது  போலவே  மனித  சமூகமும்  சகலத்  துறைகளிலும்  எவ்வளவு  மாறுதல்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  வாழ்க்கையில்  எவ்வளவு  மாறுதல்கள்  அடைந்து  வந்திருக்கின்றது  என்பதும்  நம்  குறைந்த  கால  ஆயுளின்  அனுபவத்தைப்  பார்த்தாலே  தெரியவரும்.

மாறுதல்

மாறுதல்  என்பது  இயற்கையேயாகும்.  மாறுதல்  இல்லாமல்  எந்த  நாடும்,  எந்த  சமூகமும்,  எந்த  வஸ்துவும்  இருக்க  முடியாது.

இந்தக்  கல்யாணம்  சுயமரியாதைக்  கலியாணம்  என்றும்,  இதில்  பழக்க  வழக்கங்கள்,  சாஸ்திரங்கள்,  சம்பிரதாயங்கள்  ஒன்றும்  கவனிக்கப்படுவதில்லை  என்றும்,  இதை  புராண  மரியாதைக்காரர்களும், வைதீகர்கள்  என்பவர்களும்  குற்றம்  சொல்லலாம்.

வைதீகம்

சாதாரணமாக  இந்நாட்டில்  நடைபெறும்  வைதீகக்  கல்யாணம்  புராண  முறைப்படி  நடக்கும்  கல்யாணம்  ஆகியவைகளைப்  பற்றியே  சிந்தித்துப்  பாருங்கள்.  வைதீகப்  பிரசாரத்துக்கும்,  வைதீகத்துக்குமாகவே  உயிர்  வாழ்வதாய்  சொல்லிக்கொள்ளும்  பார்ப்பன  சமூகத்தையே  எடுத்துக்  கொள்ளுங்கள்.  அவர்களுடைய  கல்யாணங்களில்  இப்போது  எவ்வளவு  சீர்திருத்தம்,  எவ்வளவு  மாறுதல்கள்  ஏற்பட்டிருக்கின்றன  என்பதை  நீங்கள்  கவனித்துப்பாருங்கள்.  காலை  7மணிக்கு  வீட்டை  விட்டுப்  புறப்பட்டு  தூரத்தில்  உள்ள  கோவில்களுக்குப்  போய்  அங்கு  கலியாணம்  செய்து  கொண்டு  பகல்  சாப்பாடு  சாப்பிட்டு  விட்டு  மாலை  6  மணிக்கு  புறப்பட்டு  வீடுவந்து  சேர்ந்து  விடுகிறார்கள்.  3நாள்,  5நாள்,  7நாள்  அவ்பாசனங்கள், சடங்குகள்  என்பவைகள்  எல்லாம்  எங்கே  போய்விட்டன?  பெரும்  செலவுகள்  ஆடம்பரங்கள்,  பலவகைப்பட்ட  விருந்துகள்  எல்லாம்  எங்கே  போய்விட்டன?

சென்னை

மற்றும்  குருட்டு  நம்பிக்கையும்,  மூட  பக்தியும்  பிறந்த  ஊராகிய  சென்னை  முதலிய  இடங்களில்  நாயுடு,  முதலியார்,  செட்டியார்  என்று  சொல்லப்படும்  ஜாதிகளும்,  வைதீக  சிகாமணிகளும்  சடங்குகளினாலும்,  வேஷங்களினாலும்  தங்களைப்  பெரிய  ஜாதியார்  என்று  சொல்லிக் கொள்ளுகிறவர்களுமான  மக்கள்  இன்று  தங்கள்  தங்கள்  வீட்டிலேயே,  ஒரே  நாளில்,  ஒரு  பகலில்,  ஒரு  விருந்தில்  கல்யாணங்களை  முடித்து  விடுகின்றார்கள்.  இவைகள்  எல்லாம்  மாறுதல்  அல்லவா?  சீர்திருத்தம்  அல்லவா  என்று  யோசித்துப்  பாருங்கள்.  மனிதனில்  எவனும்  மாறுதலுக்கு  ஆளாகாமல்  இருக்க  முடியாது.

காசிக்கும்  ராமேஸ்வரத்துக்கும்  நடந்து  போனால்தான்  புண்ணியம்  என்று  நம்பின  மனிதன்  இன்று  காளை  வண்டியில்  போய்,  குதிரை  வண்டியில்  போய்,  ரயிலில்  போய்,  மோட்டாரில்  போய்,  ஆகாயக்கப்பலில்  மணிக்கு  300  மைல்  வேகம்  போகக்கூடிய  நிலைமையை  அடைந்து  விட்டான்.  இவனிடம்  புராணத்தையும்,  வைதீகத்தையும்  பேசினால்  செல்லுமா  என்றும்  யோசித்துப்  பாருங்கள்.  அது  போலவே  சக்கி  முக்கிக்  கல்லின்  மூலம்  விளக்கு  வெளிச்சத்தை  உண்டாக்கிக்  கொண்டிருந்த  மனிதன்  விளக்காகி,  பந்தமாகி,  பவர்  லைட்டாகி,  கியாஸ்  லைட்டாகி,  இன்று  எலக்டிரிக்  லைட்  அதாவது  ஒரு  பொத்தானை  அமுக்கினால்  லக்ஷம்  விளக்கின்  வெளிச்சம்  போன்ற  பிரகாசத்தைக்  கண்டுபிடித்து  அனுபவித்து  வருகிறான்.  இந்தக்  காரியங்களையெல்லாம்  புராணமும்,  வைதீகமும்  தடுத்துவிடக்  கூடுமா  என்று  பாருங்கள்.

திருமணம்

அதுபோலவே  இந்தத்  திருமணம்  என்னும்  விஷயத்திலும்  முற்போக்கு  ஏற்பட்டுத்தான்  தீரும்.  அதை  நீங்கள்  தடுத்துவிட  முடியாது.  திருமணத்துக்கு  1000  சாஸ்திரமும்,  புராணமும்  இருந்தாலும்  அதை  இனி  மக்கள்  நம்பிக்  கொண்டும்,  ஏற்றுக்  கொண்டும்  இருப்பார்கள்  என்று  எதிர்  பார்க்க  முடியாது.  காலதேச  வர்த்தமானத்துக்குத்  தகுந்தபடி  மாறிக்கொண்டுதான்  வரும்.  அநேக  தேசங்களில்  கல்யாணம்  என்கின்ற  பேச்சே  இப்போது  அமுலில்  இல்லை.  ஆணும்  பெண்ணும்  ஒன்றாகக்  கூடித்தான்  வாழ  வேண்டும்  அல்லது  வாழ்க்கை  நடத்தவேண்டும்  என்கின்ற  முறையும்  இல்லை.  இஷ்டப்பட்டால்  இரண்டு  பேர்  கூட்டு  வியாபாரம்  செய்வது  போல்  சேர்ந்து  ஒரு  குடும்பத்தை  நடத்துகிறார்கள்.  இஷ்டம்  இல்லாவிட்டால்  தனித்தனியாக  குடும்பத்தை  நடத்துகிறார்கள்.

மேலும்  குடும்பம்  என்கின்ற  தொல்லையே  இல்லாமல்  சுதந்திர  மக்களாகவே  இருக்கிறார்கள்.

ஒரு  ஆணும்  பெண்ணும்  சேர்ந்து  அனுபவிக்கும்  இன்பத்தையும்,  உணர்ச்சி  பரிகாரத்தையும்,  இரு  சினேகிதர்கள்  அனுபவிக்கும்  சிநேக  இன்பத்தைப்  போலவும்  இயற்கைக்  கூட்டுப்  போலவும்  கருதி  வாழுகின்றார்கள்.  இவைகள்  எல்லாம்  மனிதன்  அனுபவத்தினாலும்,  நாளுக்கு  நாள்  மனிதனுடைய  கஷ்டமும், கவலையும்,  தொல்லையும்  குறைக்கப்பட்டு  வர  வேண்டும்  என்கின்ற  முயற்சியினாலும்  தத்துவ  விசாரத்தினாலும்  ஏற்படும்  காரியங்களேயாகும்.

சுயமரியாதை

ஆதலால்  சுயமரியாதை  என்கின்ற  வார்த்தையைக்  கண்டு  யாரும்  பயப்பட  வேண்டியதில்லை.

மனிதனுடைய  பகுத்தறிவுக்கு  மரியாதை  கொடுப்பது  தான்  சுயமரியாதையின்  முக்கிய  தத்துவம்  என்பதை  ஞாபகத்தில்  வையுங்கள்.  உங்கள்  பகுத்தறிவினாலும்  உங்கள்  அனுபவ  உண்மையாலும்  உங்களுக்கு  ஒன்று  தோன்ற  உலக  பழக்க  வழக்கத்துக்கு   சாஸ்திரத்துக்கு    மதக்கட்டுப்பாட்டுக்கு  என்கின்ற  நிர்ப்பந்தத்தின்  மீது  அதற்கு  மாறாய்  நீங்கள்  நடக்க  வேண்டிய  அடிமைத்  தன்மை  ஏற்பட்டால்  அதைத்தான்  சுயமரியாதைக்கு  விரோதம்  என்று  சொல்லுகிறோம்.  அதைத்தான்  அடிமைத்தனம்,  சுதந்திரமற்றதனம்  என்று  சொல்லுகின்றோம்.

ஆதலால்  எந்தக்  காரியத்தையும்  உங்கள்  பகுத்தறிவையும்  அனுபவ  பலனையும்  அனுசரித்துப்  பார்த்து  நடக்க  வேண்டும்  என்கின்ற  முறையிலேதான்  இந்த  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதும்  ஆங்காங்கு  செய்யப்பட்டும்,  பிரசாரம்  செய்யப்பட்டும்  வருகின்றதே  ஒழிய  வெறும்  மாறுதலுக்காக  என்று  செய்யப்படவில்லை.

புராண  மரியாதை

உங்களுடைய  புராண  மரியாதைக்  கல்யாணத்தை  சற்று  சிந்தித்துப்  பாருங்கள்.  பு.ம.  கல்யாணத்தின் முதல்  தத்துவமே  பெண்கள்  ஆண்களுக்கு  அடிமைகள்    சுதந்திரமற்றவர்கள்    மனிதத்  தன்மைக்கு  அருகதையற்றவர்கள்  என்பவைகளை  நிலைநிறுத்துவதற்காகச்  செய்யப்படும்  சடங்கு,  அல்லது  காரியம்  என்பது  எனது  அபிப்பிராயம்.  உதாரணமாக  கன்னிகாதானம்,  பெண்  கொடுத்தல்,  பெண்  வாங்குதல்,  தாலி  கட்டுதல்  முதலிய  வார்த்தைகளாலும்  புருஷனுக்கு  கொண்டவன்,  கொண்டான்  என்று  சொல்லப்படுகின்ற  வார்த்தைகளாலும்  பெண்  அடிமையாகப்  பாவிக்கப்படுகிறது  என்பதை  உணரலாம்.

இந்தச்  சுயமரியாதைக்  கல்யாணம்  என்பதின்  முக்கிய  தத்துவம்  கூட்டு  வாழ்க்கையில்  ஆணுக்கும்,  பெண்ணுக்கும்  எவ்வித  வித்தியாசமோ,  உயர்வோ,  தாழ்வோ  இல்லையென்பதம்  சகல  துறைகளிலும்  சம  சுதந்திரம்  அளிக்கப்பட  வேண்டும்  என்பதுமேயாகும்.

மற்றும்  வைதீகப்  புராண  முறைக்  கல்யாணத்தில்  மதம்,  ஜாதி,  வகுப்பு,  குலம்,  கோத்திரம்  முதலியவைகளைக்  கவனிப்பதே  முக்கியமாய்  இருப்பதால்  ஆண்,  பெண்  பொருத்தம்  சரியாய்  ஏற்படுவதில்லை.  “”குலத்தில்  ஒரு  குரங்கைக்  கொள்ளு”,  “பாத்திரமறிந்து  பிச்சை  கொடு”,  “”கோத்திரமறிந்து  பெண்ணைக்  கொடு”  என்னும்  பழமொழிகளைப்  பார்த்தாலே  குலம்,  கோத்திரம்,  ஜாதி,  வகுப்பு  முதலியவைகளுக்குள்ள  நிர்ப்பந்தங்கள்  நன்றாய்த்  தெரியும். இதன்  பயனாய்  அனேக  கல்யாணங்களில்  பெண்ணுக்கு  ஏற்ற  மாப்பிள்ளை  இல்லாமலும்,  மாப்பிள்ளைக்கு  ஏற்ற  பெண்  இல்லாமலும்,  நாயும்,  பூனையும்  போல்  ஜோடிகள்  சேர்ந்து  விடுகின்றன.

சுயமரியாதைக்  கல்யாணத்தில்  ஜாதி,  வகுப்பு,  குலம்,  கோத்திரம்  என்பனவைகள்  கவனிக்கப்படாமல்  மணமக்களுடைய  யோக்கிய தாம்சங்களையே  கவனித்துப்  பார்க்கப்படுகின்றது.

வைதீகக்  கல்யாணத்தில்  வயதுக்கிரமங்களை  தக்க  பருவங்களை  முக்கியமாய்  கவனிப்பதில்லை.  தக்க  பருவம்  வருவதற்கு  முன்பு  பெண்களுக்குக்  கல்யாணம்  செய்ய  வேண்டிய  நிர்ப்பந்தம்  இருந்து  வருகின்றது.  உதாரணமாக  “”10  வயது  வந்தால்  ஒரு  பறையனுக்குப்  பிடித்துக்  கொடு”  என்று  சொல்லும்  பழமொழியைப்  பார்த்தால்  விளங்கும்.  50,  60  வயதான  ஆண்  கிழத்துக்கு  10,  12  வயது  பெண்  குழந்தையைப்  பிடித்து  தாலிகட்டி  விடுகிறார்கள்.  கல்யாண  விஷயத்தில்  ஆண்களுக்கு  கிழம்  என்பதே  இல்லையாம்.

இந்த  விஷயத்திலும்  சுயமரியாதைக்  கல்யாணம்  தக்க  சரிசமமான  வயதுப்  பொருத்தம்  பார்த்தே  செய்யப்படும்.

மற்றபடி  புராணக்  கல்யாணங்களில்  நாள்  பார்ப்பது,  கோள்  பார்ப்பது,  சடங்குகள்  செய்வது,  அதிகச்  செலவுகள்  செய்வது  முதலிய  காரியங்களால்  கல்யாணக்காரர்களுக்கு  தாங்க  முடியாததும்,  விலக்க  முடியாததுமான  பல  அசௌகரியங்கள்,  செலவுகள்  ஏற்படுகின்றன.

உதாரணமாகப்  புரோகிதன்  அதிகாலையில்  4லீ  மணி,  5  மணி,  6  மணிக்கு  “”முகூர்த்தம்”  வைத்துக்  கொடுத்து  விடுகிறான்.  இதனால்  இரவெல்லாம்  தூக்கமில்லாமல்  கல்யாணத்துக்கு  வந்த  ஜனங்கள்  அவஸ்தைப்படுகிறார்கள்.  பல்லு  விளக்காமல், கால்,  கை  கழுவாமல்,  வெளிக்கும்  போகாமல்,  நித்தியக்  கடன்களை  காலா  காலத்தில்  கழிக்க  முடியாமல்  மக்கள்  அவஸ்தைப்படுவதும்  மற்றும்    பழக்கவழக்கமென்னும்,  சடங்கு,  ஆடம்பரம்  முதலியவைகளால்  கல்யாணக்காரர்களுக்கு  சகிக்க  முடியாத  தொல்லைகளும்,  தாங்க  முடியாத  கடன்களும்  ஏற்பட்டு  அக்குடும்பங்கள்  ஒன்று,  இரண்டு  வருஷங்களுக்கும்  சில  சமயங்களில்  வாழ்நாள்  முழுவதும்  கடனில்  மூழ்கி  வேதனைப்படுவதுமாக  இருந்து  வருகின்றது.

சுயமரியாதைக்  கல்யாணத்தில்  எல்லோருக்கும்  சௌகரியமான  நேரமும்,  மிகவும்  சுருக்கமான  செலவும்  கொண்டு  நடத்தப்படுவதோடு  அனாவசியமான  அர்த்தமற்ற  சடங்குகளையும்  ஒழித்து  நடத்தப்பட வேண்டுமென்று  கற்பிக்கப்பட்டு  வருகிறது.  இதனால்  எல்லாம்  கல்யாணத்திற்கு  ஏதாவது  பலக்குறைவோ,  கெடுதலோ  ஏற்பட்டுவிடும்  என்று  யாரும்  பயப்பட  வேண்டியதில்லை.  கல்யாணத்துக்கும்,  ஜாதி,  மதம்,  சடங்கு,  நேரம்,  காலம்,  குலம்,  கோத்திரம்  ஆகியவைகளுக்கும்  யாதொரு  சம்மந்தமும்  இல்லை.

பு.ம. வால்  என்ன  பலன்

நம்  நாட்டில்  ஜாதி,  மதம்,  குலம்,  கோத்திரம்,  காலம்,  நேரம்  சடங்குக்கிரமம்  முதலியவைகள்  கவனித்தே  100க்கு  99  கல்யாணங்கள்  செய்யப்படுகின்றன.  இப்படியெல்லாம்  செய்தும்  இன்று  அவற்றின்  பலன்களைக்  கவனித்துப்  பார்ப்பீர்களானால்  ஒட்டு  மொத்தம்  பெண்  சமூகத்தில்  100க்கு  20  பெண்கள்  விதவைகளாய்  இருக்கிறார்கள்.  இந்த  விதவைகளுள்  100க்கு  25  பேர்கள்  20  வயதுக்குக்  கீழ்ப்பட்ட  விதவைகள்  என்றால்  அவர்களின்  கஷ்டத்தையும்,  அனுபவிக்கும்  வேதனைகளையும்  பற்றி  நான் உங்களுக்கு  எடுத்துச்  சொல்ல  வேண்டியதில்லை.  நாள்,  கோள்  பார்த்து  சாஸ்திரப்படி  சடங்குகள்  செய்யப்பெற்ற  தெய்வீகக்  கல்யாணங்களில்  பெண்கள்  100க்கு  20  பேர்  ஏன்  விதவைகளாய்  இருக்க  வேண்டும்.  அவர்களில்  100க்கு  25  பெண்கள்  20  வயதுக்குட்பட்டவர்கள்  விரக  வேதனையில்  ஏன்  அழுந்திக்  கொண்டிருக்க  வேண்டும்.  இது  “”தெய்வீக மணத்தின்”  பலனா?  அல்லது  “”அசுர”  மணத்தின்  “”பிசாச”  மணத்தின்  பலனா  என்று  யோசித்துப்  பாருங்கள்.  தெய்வீகம்,  பழக்கம்,  வழக்கம்,  சாஸ்திரம்  என்கின்ற  வார்த்தைகள்  முன்னேற்றத்துக்கும்,  பகுத்தறிவுக்கும்,  சுதந்திரத்துக்கும், ஜன்ம  விரோதியான  வார்த்தைகளாகும்.    ஆதலால்  சுயமரியாதைக்  கலியாணம்  என்பதில்  மேற்படி  முன்னேற்ற  விரோதிகளுக்கும்,  சுதந்திர  விரோதிகளுக்கும்  இட மில்லை.  இந்தக்  காரணங்களால்தான், பழமை  விரும்பிகள்,  வைதீகர்கள்,  பகுத்தறிவற்ற  கோழைகள்,  சுயமரியாதை  இயக்கம் என்றாலும்,   சுயமரியாதைக் கல்யாணம் என்றாலும்  முகத்தைச்  சுளித்து  கண்களை  மூடி  விழிப்பார்கள்.  இவர்களைப்  பற்றி  யாரும்  கவலைப்பட  வேண்டியதில்லை.  இந்தக்  கூட்டங்களுக்கு  மரியாதைக்  கொடுத்த  எந்த  தேசமோ,  சமூகமோ  விடுதலை  பெற்றதாக  யாரும்  சொல்ல  முடியாது.

ஆகையால்  தான்  இந்தப்  பிரசாரம்  செய்து  வருகின்றோம்.  மற்றபடி  இந்தக்  கலியாணத்தில்  என்  போன்றாருக்கு  யாதொரு  வேலையும்  இல்லை.  புரோகிதத்துக்காக  எவரும்  இங்கு  வரவும்  இல்லை என்று  தெரிவித்துக்  கொள்ளுகிறேன்.

நீங்கள்  எல்லோரும்  இதனை,  கவனித்து  நன்றாய்  சிந்தித்துப்  பாருங்கள்.  நன்மையை  கைக்கொண்டு  பகுத்தறிவு  வளர்ச்சிக்கும்  விடுதலைக்கும்  உதவி  புரியுங்கள்  என்று  கேட்டுக்  கொண்டு,  உங்கள்  சார்பாக  மணமக்களை  தங்கள்  ஒப்பந்தங்களைக்  கூறி  ஒருவரை  ஒருவர்  வாழ்க்கைத்  துணையாக  ஏற்றுக் கொள்ள  வேண்டிக்  கொள்ளுகிறேன்.

குறிப்பு:            22.09.1934  கோவை  சுயமரியாதை  சங்கத்தின்  ஆதரவில்  தோழர்  என். கிருஷ்ணசாமிக்கும்  வி. லட்சுமிக்கும்  கோவை  முனிசிபல்  உயர்நிலைப்பள்ளி  கட்டடத்தில்  நடைபெற்ற  சுயமரியாதைத்  திருமணத்தை  தலைமையேற்று  நடத்தி  வைத்து  ஆற்றிய  உரை.

பகுத்தறிவு  சொற்பொழிவு  07.10.1934

You may also like...