சர்.கே.வி. ரெட்டி

சமீபத்தில் ஸர்.எம். கிருஷ்ணன் நாயர் அவர்கள் தமது சட்ட மந்திரி பதவியிலிருந்து விலகிக் கொள்ளப்போவதாகவும் அந்த ஸ்தானத்திற்கு ஸர். கூர்மா வெங்கிடரெட்டி நாயுடு அவர்கள் நியமிக்கப்படப் போவதாகவும் ஒரு செய்தி கிடைத்துள்ளது. இது உண்மையானால் நாம் கொள்ளும் மகிழ்ச்சிக்கு அளவில்லை யென்றுதான் சொல்ல வேண்டும். ஸர். ரெட்டி அவர்கள் சென்ற முப்பது வருடங்களாக சமூக சீர்த்திருத்தம் அவசியம் என்பதையும் அதற்கு பார்ப்பனீயம் முட்டுக்கட்டையாக இருந்து வருகிறதென்பதையும் உணர்ந்து பார்ப்பனரல்லாதார் முன்னேற்றம், பார்ப்பன மத ஆதிக்கத்தினின்று விடுபடுவதுதான் என்பதை எழுத்திலும், பேச்சிலும், செய்கையிலும் காட்டி வரும் ஒரு சீர்திருத்தப் பிரியர். நிற்க நமது மாகாண பார்ப்பனரல்லாதார் கக்ஷியென வழங்கும் ஜஸ்டிஸ் கக்ஷி, ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களுக்கு பல துரோகங்களைச் செய்திருப்பினும், அவர் அதைப் பொருட் படுத்தாது பார்ப்பனரல்லாதார் முன்னேற்றத்திற்கும் இயக்க வளர்ச்சிக்கும் பெரும் தொண்டாற்றிய புனிதர். ஸர்.கே.வி. ரெட்டி நாயுடு அவர்களது திறமையை அறிந்த அவர்களது சகாக்கள் பொறாமையினால் அவரை ஒதுக்கி வைத்திருந்த போதிலும், அரசாங்கத்தார் அவரது திறமையை உணர்ந்து அவ்வப்போது அவருக்குரிய ஸ்தானத்தை அவருக்கு கொடுத்து வருவதை பாராட்டுகிறோம்.
புரட்சி துணைத் தலையங்கம் 25.03.1934

You may also like...