செட்டிநாடு மகாநாடு

செட்டிமார் நாட்டு மகாநாடு காரைக்குடியில் இம்மாதம் 7,8 தேதிகளில் இந்திய சட்டசபை அங்கத்தினரும் உபதலைவருமான கோவை உயர்திரு. ஆர்.கே.­ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடந்தது. மகாநாட்டின் நடவடிக் கைகள் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றன. மகாநாட்டின் தீர்மானங்கள் பெரிதும் மிகவும் சாதாரணமான தீர்மானங்களேயாகும். ஏனெனில் செட்டிநாடு என்பது மிகுதியும் செல்வவான்கள் ஆதிக்கத்திலிருப் பதாகும். மேலும் அவர்கள் புராண மரியாதையில்மிகுதியும் ஈடுபட்ட வைதீகச் செல்வவான்கள் கூட்டத்தில் சேர்ந்தவர்களாவார்கள். அதுமாத்திர மேயல்லாமல் சமூக வாழ்வில் தங்களை வைசிய குலத்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதின் மூலம் வர்ணாசிரம தர்மத்தை ஆதரித்து ஜாதிப் பெருமை அடைகின்றவர்களுமாவார்கள்.
இந்த நிலையில் அதாவது பணத்திமிர், மதத்திமிர், ஜாதித்திமிர் ஆகிய மூன்றிலும் சூழ்ந்து மகிழ்ந்து கொண்டிருக்கும் மக்களின் ஆதிக்கத்தில் உள்ள அந்த நாட்டில் இந்த அளவுக்காவது தீர்மானங்கள் ஏகமனதாய் நிறைவேற்ற முடிந்ததே என்கின்ற மகிழ்ச்சியின் மீதே பலர் திருப்தி அடைகின்றார்கள். ஆனாலும் பொதுமக்கள் முன்னிலையில் இந்த மகாநாட்டை ஒரு சுய மரியாதை மகாநாடு என்று சொல்லுவதென்றால் பரிகாசத் திற்கிடமாகத் தான் இருக்கும் என்பதை நாம் ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும்.

ஏனெனில் புராண மரியாதைக்காரர்கள் கூட்டமாகிய பல்லாவரத்து மகாநாட்டுத் தீர்மானங்களைத்தான் வேறு பாஷையில் எழுதப்பட்டது என்று சொல்லலாமே தவிர மற்றபடி உண்மையான சுயமரியாதை மகாநாட்டுத் தீவிர தீர்மானங்களை அனுசரித்தது என்று சொல்ல முடியாது.

ஆனபோதிலும் செட்டிமார் நாட்டில் ஒரு மகாநாடு அதாவது சுய மரியாதை என்னும் பேரால் கூட்டப்படுவது என்பது லேசான காரியமல்ல என்பதை நேரில் இருந்து பார்த்தவர்கள் தான் அறியமுடியும். மகாநாடு ஆரம்பிப்பதற்கு முன்னிருந்தே இரண்டு வருஷகாலமாய் இம்மாதிரி பிரசாரத் திற்கே அங்கு போதிய சௌகரியமில்லாமல் எவ்வளவோ கஷ்டத்திற் கிடையில் அங்குள்ள நண்பர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் வேலை செய்து வந்து காரியத்திலும் துணிவாய் இரண்டு மூன்று கலப்பு மணம், விதவை மணம் முதலியவைகள் செய்து பல பத்திரிகைகளும் துண்டுப் பிரசுரங்களும் பதினாயிரக்கணக்காய் வழங்கி கிராமம் கிராமமாய் சென்று கலகம் கலவரம் முதலியவைகளுக்கெல்லாம் தலைகொடுத்துப் போதாக் குறைக்கு போலீசார் தொல்லைக்குமாளாகி 144 உத்திரவு முதலியவைகள் எல்லாம் தாராளமாய் பெறப்பட்டு மற்றும் பல கோர்ட்டு விவகாரங்களிலும் அதாவது சிவிலிலும் கிரிமினலிலும் இழுத்து விடப்பட்ட இவ்வளவையும் சமாளித்து இவ்விதத் தொல்லைகளுக் கிடையிலேயே இந்த மகாநாடு கூட்டப்பட்டிருக்கின்றதென் றால் இதன் கஷ்டம் எவ்வளவு என்பதை வாசகர்கள் தானாகவே உணரலாம். இந்தமகாநாடு விஷயத்தில் “குமரன்” பத்திராதிபர் திரு. சோ. முருகப்பா அவர்கள் சகலத்திற்கும் துணிந்து தனது சொத்தையும் மானத்தையும் சரீரத் தையும் ஒரு துரும்பாய் நினைத்து எது எப்படியானாலும் இயக்கமே பிரதான மானது என்று எண்ணிய துணிவான எண்ணமே இவ்வளவுக்கு அந்த இடத் தில் மகாநாடு நடத்த முடிந்தது.

ஆகவே இவைகளைக் கவனித்தவர்களுக்குத் தீர்மானத்தின் வேகத்தைவிட மகாநாடு இவ்வளவு செல்வாக்காகவாவது நடந்ததென்பதே மிகவும் வெற்றிகரமாகவும் பயனளிக்கக் கூடியதாகவும் தோன்றும் என்பதில் யாருக்கும் ஆட்சேபணையிருக்காது. இவை ஒருபுறம் இப்படி இருந்த போதிலும் இம்மகாநாட்டிற்குத் தலைமை வகித்த திரு. ஆர்.கே.ஷண்முகம் அவர்களின் தலைமைப் பேருரையானது போற்றத்தக்கதேயாகும். அதின் ஒவ்வொரு வாக்கியமும் கூர்ந்து கவனித்துப் பார்த்தால் சுயமரியாதை இயக் கத்தின் அவசியமும் அது செய்திருக்கும் வேலையும் அது இந்த நாட்டுக்கு இந்தக் காலத்திற்கு எவ்வளவு ஏற்றதும் முக்கியமான தென்பதும் நன்றாய் விளங்கும். அதோடு இவ்வியக்கம் அரசியல் இயக்கங்களோடு முறண்படுவ தாகக் காணப்படுவதற்கும் தகுந்த சமாதானங்கள் கிடைக்கும்.

அன்றியும், பாமர ஜனங்கள் அரசியல்காரர்களுடையவும், அரசியல் பத்திரிகைக்காரர்களுடையவும் வார்த்தைகளையும் எழுத்துக்களையும் ஆழ்ந்து யோசித்துப்பார்த்து உண்மை கண்டு பிடிப்பதற்குப் போதிய ஞான மில்லாததால் “சுயமரியாதை இயக்கம் அரசியலில் மிகவும் பிறப்போக்காய் இருக்கின்றது” என்கின்ற பேச்சுக்களைக் கிளிப்பிள்ளைகள் போல சுய ஞானமின்றிச் சொல்லிக்கொண்டிருக்கின்றவர்களுக்கெல்லாம் திரு. ஷண் முகம் அவர்களின் தலைமை உரையானது ஒரு பெரிய மயக்கத்தைத் தீர்க்கும் மருந்தாக விளங்கும். அதாவது திரு.ஷண்முகம் அவர்கள் தலைமை உரை யில் காணப்படும் வாக்கியங்களாவது:-

“சுயமரியாதை இயக்கம் துவக்கப்பட்டதற்கு காரணம் இந் நாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” என்பதோடு, “பொது வாகவே தென் னாட்டு மக்களுக்கு சுயமரியாதை இல்லை” நமது நாட்டு மக்களின் தருமத்தின் மூலமாகவே நமது சுயமரியாதை கெடுகின்றது.

“கடவுளைப்பற்றிக் கவலை கொள்ளாதே என்பது நாஸ்திக மாகாது” “புத்த பகவானும் கடவுளைப்பற்றிக் கவலைப்படாதே” என்றுதான் சொல்லி யிருக்கிறார்.

“மக்கள் தங்களது முட்டாள் தனத்தை மாற்றி அறிவு பெறவே நேர மில்லாமல் இருக்கும்போது கடவுளைப்பற்றிய யோசனையில் ஏன் நேரத்தைப் பாழாக்கவேண்டும்?”

“செட்டிமார்களின் தரும முயற்சிகளே நமது சுய மரியாதையை பங்கப்படுத்துகின்றது”

“இந்தியாவில் வேறு எங்கும் தென்னாட்டைப் போல் இவ்வ ளவு சுய மரியாதையற்ற தர்மம் நடத்தப்படுவதில்லை.”
“தென்னாட்டுக்கே சுய மரியாதை இயக்கம் மிகவும் அவசியம்.”

“மக்களைக் கோவில்களும், புராணங்களுமே அறியாமை யிலும், அடிமைத்தனத்திலும் ஆழ்த்துகின்றன என்று முதல் முதல் சொன்னவர் புத்தரேயாவார்.”

“புரோகிதர் தந்திரத்தினாலும், சூட்சியினாலும் புத்தரின் உபதேசங்கள் தலையெடுக்க முடியாமல் போய்விட்டது.”
“ஆனாலும் இப்போது 10 வருஷமாக மறுபடியும் அவ் வுணர்ச்சிகள் பரவிவரத் துடங்கிவிட்டன.”

“இவ்வுணர்ச்சியை”ப் பரப்பினவர் பெரியார் ராமசாமியாரே யாவார். நான் இவ்வியக்கத்தைப்பற்றி மகாத்மா காந்தி இடத்தில் கூறினேன்.

அவர் இவ்வியக்கத்தலைவர் யாரென்று என்னைக்கேட்டார். நான் இராமசாமிப்பெரியார் என்று சொன்னேன். உடனே அவர் அப்படியாகத் தான் இருக்கமுடியும் என்று தானும் நினைத் தாகக் கூறினார்.

இராமசாமியார் சுயமரியாதை இயக்கத்தை ஏன் ஆரம்பித்தார் என்ற பிரசினை வந்தபோது, பக்கத்தில் இருந்த ஒரு நண்பர் திரு. ராமசாமி காங்கிரசில் இருக்கும் போதே அவருக்கு இந்த உணர்ச்சி உண்டு என்று சொன்னார்.

இது முற்றிலும் உண்மை, ஏனெனில் அவர் நீண்ட நாளாகவே பார்ப்பனரல்லாதார் உணர்ச்சி உடையவர் என்று நான் அறிவேன்.”

“விடுதலைபெற்ற நாடுகள் எல்லாம் சுயமரியாதை இயக்கத் தால் தான் விடுதலை பெற்றிருக்கின்றது.”

“மேல்நாட்டில் முதலாவது சுயமரியாதை இயக்கம் இது போலவே சமுதாய சீர்திருத்தமாகத் தோன்றிற்று. அதாவது கத் தோலிக்க கிறிஸ்துவர்கள் தொல்லை பொறுக்கமாட்டாமல் மார்ட்டின் லூதர் என்னும் பெரியார் ஓர் இயக்கத்தை தோற்று வித்தார்.”

“பிறகு இரண்டாவதாக பிரான்சில் அரசியல் கிளர்ச்சியாகத் தோன்றியது. அதிலும் நமது கொள்கைகளே சிறந்து விளங்கின.”

“மூன்றாவதாக ருஷியாவில் சுயமரியாதை இயக்கம் ஆரம் பித்து அது சமதர்ம இயக்கமாக மாறியது.”

“இவ்வாறு இங்கிலாந்து, பிரான்சு, ஜர்மனி, ருஷியா முதலிய நாடுகளில் ஏற்பாடா கிய கிளர்ச்சிகளை ஆராய்ந்து பார்த்தால் அவற் றின் மூலாதாரம் நமது சுயமரியாதை இயக்க கொள்கைகளே தான் என்பது புலப்படும்”
“மதநூல்கள் யாவும் மனிதனுடைய சுயமரியாதைக்கு முர ணானவைகள்.”

“ஜாதிபேதம் அழிவதால் போய்விடும் மதமும், எல்லா மக்க ளும் சரிசமானம் என்பதால் போய்விடும் கடவுளும் ஒழிவதா யிருந் தால் அதற்கு நாங்கள் (சுயமரியாதைக் காரர்கள்) ஜவாப்பு தாரிகள் அல்ல.”

“சீர்திருத்தத்திற்கு மதமும் கடவுளும் முட்டுக்கட்டையா யிருந்தால் அவைகளை அழிக்கவே நாங்கள் முயலுவோம்.”

“ஜாதி வித்தியாசம், ஜனநாயகத்திற்கு முற்றிலும் விரோத மானது.”

“சமத்துவம் விரும்பும் நாம் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கேட்பது பலர் குற்றமென்கிறார்கள். அதற்கு சமாதானம் சொல்ல ஆரம்பித்தால் மேல் நாட்டு பழக்கவழக்கங்களை காட்டி அங்கு வகுப்பு வாரி பிரதிநிதித்துவம் இல்லை என்கிறார்கள். மேல்நாடுகளில் கீழ்மேல் ஜாதி வித்தியாசமிருக் கின்றதா என்றால் தலைகுனிந்து முணுமுணுகின்றார்கள்.”

“இந்து மதத்தில் பெண்களுக்கு தகப்பன் சொத்தில் பாத்திய மில்லை. இப்படிச் சொல்லுகின்றவர்கள் மதவாதிகளே யாகும்.”

“தான் பெற்ற பெண்ணிற்கு சொத்தில்லாமல் எவனோ ஒருவ னுக்கு பிண்டம் போடுவதற்காக என்று சொத்துக்களை கொடுத்துவிட வேண்டுமாம். நமது சொத்துக்கு இருக்கும் பாத்திய தையைப் பாருங்கள்.”

“இந்தமாதிரியாக மதம் பிண்டத்தோடு முடிவதாக யிருந்தால் மதம் அவசியமா என்று கேட்கின்றேன்.”

“மகாத்மாவின் ( காங்கிரசின் ) 20 திட்டங்களில் ஒன்று இந்த வைதீக மதத்தைக் காப்பதற்கே அமைத்த தாகும்”

“இதற்கு பெயர்தான் மதநடுநிலைமை யாகும்.”

“இந்த மத நடுநிலைமையைத்தான் நாம் இன்று அழிக்க வேண்டும் என்கின்றோம்.”

“மத நடுநிலைமையுள்ள சுயராஜியம் கிடைத்தாலும் கிடைக்கா விட்டாலும் பலன் ஒன்றே யாகும்.”

“லண்டன் மகாநாட்டில் மத நடு நிலைமைதான் தலை விரித்தாடும்.”

“நான் “ஜாதிபேத மிருக்ககூடாது” “பொட்டுக்கட்டக் கூடாது” என்பதான இரண்டு தீர்மானங்கள் கொண்டுவந்திருக் கின்றேன்.”

“மகாத்மா கூறும் சுயராஜியம் வந்தால் எனது மசோதாக்கள் ஒரு சிலராலேயே தூக்கி எறிந்துவிடப்படலாம்.”
“சாதாரணமாய் 10 வருஷங்களில் ஏற்படவேண்டிய சீர்திருத் தங்கள் ஆங்கில அரசாங்கத்தில் மத நடுநிலைமையாலேயே 150 வருஷங்களாகியும் இன்னும் ஏற்படவில்லை.”

“மதநடு நிலைமை வகிக்கும் அரசாங்கமும், சுயராஜியமும் ஒழிந்தால் அல்லது நமக்கு உண்மை விடுதலை வரப் போவ தில்லை.”

“மதநடு நிலைமை ஒழிக்கப்படாத சுயராஜியம் நமக்கு வேண்டவே வேண்டாம். அது நமக்கு மிகவும் ஆபத்தானதாகும்.”

“சுயராஜியத்திற்குமுன் நமது சுயமரியாதையையும், சக்தியையும் பெருக்கிக்கொள்ள வேண்டும்.”
முடிவுரையில் கூறியதாவது :-

“நமது தீர்மானங்களைப் பார்த்தவர்கள் இவற்றுள் எதை யாவது குற்றம் சொல்ல இடமுண்டானால் தைரியமாகச் சொல்ல முன்வரட்டும்.”

“குழந்தைகள் பட்டினியால்வாட, கல் விக்கிரகத்தின் தலையில் பால் ஊற்றுவது அறிவுடைமையாகுமா?”
“வேறு எந்தத் தீர்மானத்தையாவது செய்து, ஆஸ்திகர் என்று பெயர் வாங்குவதைவிட, இத்தீர்மானங்கள் செய்து நாஸ்திகர் என்று பெயர் வாங்குவதே மேலானது.”

“எந்தக் கட்சியின் உதவியும் நமக்குக் கிடைக்குமென்று எதிர் பார்க்கக்கூடாது.”

“காங்கிரசோ,ஜஸ்டிஸ் கட்சியோ மற்ற எதுவும் நமதியக்கத் திற்கு ஆதரவளிக்குமென எதிர்பார்க்க வேண்டியதில்லை.”

“எகிப்து, அயர்லாந்து, ருஷியா, துருக்கி, சீனா முதலிய நாடுகள் 25 வருஷத்திற்கு முன்பே சுயமரியாதை இயக்கம் துடங்கி விட்டது.”

“நாம் இப்போதுதான் ஆரம்பித்திருக்கின்றோம்.”

“வாலிப உலகம்தான் அந்நாடுகளில் வெற்றியை அளித்தது” என்று பேசினார்.

இதைப்பற்றி வாசகர்களை ஒன்று கேட்கிறோம். அதாவது,

சென்ற வாரம் குறிப்பிட்ட தூத்துக்குடி சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு. எஸ். இராமநாதன் அவர்கள் பிரசங்கத்தையும் இவ்வாரம் குறிப்பிட்டிருக்கும் செட்டியார் நாட்டு சுயமரியாதை மகாநாட்டுத் தலைவர் திரு. ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் பிரசங்கத்தையும் படித்துப்பார்த்தபின் இதைப்பற்றி யார் என்ன ஆட்சேபனை சொல்லக்கூடும் என்பதே நமது கேள்வி.

அரசியலைப் பற்றியும், மத இயலைப்பற்றியும் இருவரும் சொல்லி யுள்ளவைகள் தான் சுயமரியாதை இயக்கத்தின் மத இயல் அரசியல் சம்பந் தமான ஜீவநாடிகளாகும். எவ்வித தேசீய வாதியும், மதவாதியும் இந்தத் தத்துவத்திற்கு வந்தால்தான் இந்தியாவில் தேசீயமோ, மதமோ இருக்க முடியுமே அல்லாமல் மற்றபடி அதுவரையில் ஒரு காரியமும் நடைபெற சுயமரியாதை இயக்கம் அனுமதிக்கப் போவதில்லை என்பது மாத்திரம் உறுதி. மறுப்பு வேலையிலும், நாச வேலையிலுமே அது இறங்கி, முடியா விட்டால் தானே முடிவு பெற்றுவிடுமேயொழிய ராஜி என்பதோ, பின்னால் போவ தென்பதோ அதனிடம் யாரும் எதிர்பார்க்க முடியாது.

போதாக்குறைக்கு சென்னையில் இந்த வாரம் அதாவது 11-ந் தேதி பச்சையப்பன் மண்டபத்தில் கூடிய மாதசம்பளக்கார சிப்பந்திகள் மகா நாட்டில் ( தொழிலாளர் மகாநாட்டில் ) தலைமை வகித்த பம்பாய் மாகாணப் பிரமுகர் திரு.ஜம்நாதாஸ்மேதா அவர்களின் தலைமை உபன்யாசத்தில் குறிப்பிட்டிருக்கும் இரண்டொரு வசனங்களையும் இங்கு குறிப்பிடு கின்றோம். அதாவது, ( சுதேசமித்திரனில் காண்கிறபடி )
“பணக்காரர்கள் தாங்களாக தங்களிடம் சேர்ந்திருக்கும் பணக்குவி யலை கொடுக்கச் சம்மதிக்க மாட்டார்கள். அவர்களுக்கு சொத்து சேர்ந்த விதம் பலாத்காரமாய் படையெடுத்து நிலங்களை வலுவில் பிடுங்கிக் கொண்டு அவர்களிடம் வாடகை ( குத்தகை ) என்று வசூலிக்கப்பட்டதால் சொத்துக்கள் குவியலாய்க் குவிந்து விட்டது.”………

“இவ்விதம் நிலச்சொந்தம் கொண்டாடுவதால் அவர்கள் ( நிலச் சுவான்தார்கள் ) ஒரு வேலையும் செய்யாமல் ஏராளமாய் பணம் சேர்த்துக் குவித்துக் கொண்டிருக்கிறார்கள்” என்று சொல்லிவிட்டு மேலும் கூறுவ தாவது,
“மக்களுக்கு சாசுவதமான நன்மை ஏற்படவேண்டுமானால் பின் வரும் மூன்று முறைகளில் ஒன்றைக் கையாளவேண்டும்.”

1.”சோவியத் ருஷியாவில் செய்ததைப்போல நிலச்சுவான்தாரர் களிடமிருந்து பலாத்காரமாகச் சொத்தை கொடுக்குமாறு செய்வது.

2. படிப்படியாக அபேதவாத (சமதர்ம) கொள்கைகளைக் கையாளுவது.

3. தற்கால அமைப்பை மாற்றாமல் பெரிய பணக்காரர்களுக்கு அதிக வரியைப்போட்டு, அந்த வருமானத்தைக்கொண்டு கல்வி வசதி, முனிசிபல் சௌகரியம், பிரசவ உதவி, வயோதிகர்களுக்கு உபகாரச் சம்பளம் முதலியன கொடுப்பது.”

என்று சொல்லிவிட்டு, ஆனால் பலாத்காரத்தினால் செய்யும் காரியம் எதுவும் பலன் தராது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். தவிரக் கடைசியாக அவர்
“தொழிலாளிகளுக்கு எல்லாத் தொழில்களிலும் லாபத்தில் பங்கு கொடுக்குமாறு சட்டமியற்றவேண்டும்.” என்றும் சொல்லியிருக்கிறார்.

எனவே இதிலிருந்து தொழிலாளிகள் விஷயத்திலும் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவத்தையேதான் திரு. ஜம்னாதாஸ்மேதா அவர்களும் எடுத்துக்கூறி இருக்கின்றார் என்பது புலனாகும்.

ஆகவே இவைகளை யெல்லாம் உற்று நோக்கினால் இந்தியாவின் 35கோடி மக்களை மூன்றரைக் கோடி வெள்ளைக்காரர்கள் துப்பாக்கி, பீரங்கி, வெடிகுண்டு, ஆகாயக்கப்பல் முதலியவைகளை வைத்துக்கொண்டு ஆட்சி புரியும் கொடுமையைவிட துப்பாக்கி பீரங்கி முதலியவைகளில்லாமல் 35 கோடி மக்களை ஒரு கோடி பார்ப்பனர் மத விஷயத்திலும், சமூக விஷயத் திலும் அடிமையாக்கி நாகரீக மற்ற முறையில் கொடுமையாய் எவ்வித நன்மையும் புரியாமல் ஆட்சி புரிவதையும்,

பொருளாதார இயலில், 35 கோடி மக்களை ஒரு கோடி பேர்கள் எஜமான், லாபம், வட்டி, குத்தகை, வாடகை என்கின்ற வகையில் மிக்க கொடுமையாய் அடக்கி மிருகங்களைவிட கேவலமாய் நடத்தி வருவதை யும் கவனித்தால் வெள்ளைக்கார ஆட்சியைவிட பின்கண்ட பார்ப்பனீய, பணக் கார ஆதிக்க ஆட்சி மிகவும் சகிக்கமுடியாத கஷ்டமாயிருப்பதை, அறிவும் சுயமரியாதையுமுள்ள ஒருவன் சுலபத்தில் அறிந்துகொள்ளலாம். இந்த நிலைமையில் தான் காங்கிரஸ் சம்பந்தமான பலரும், பார்ப்பனர்களும், அவர்களது சிஷ்யர்களான தேசீய வீரர்களும் நமது சுயமரியாதை இயக் கத்தை சர்க்காருக்கு அனுகூலமான இயக்கமென்று பழிசுமத்தி விஷமப் பிரசாரம் செய்து வருகின்றார்கள். இதை நம்புவதற்கு போதிய மூடமக்கள் தேசத்தில் இல்லையானாலும் பூனை தான் கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடித்தால் எப்படி உலகமே கண் மூடியிருக்குமென்று கருதுமோ அந்தப் பான்மையைப் போல் நடந்து கொண்டு வருகின்றார்கள். என்றாலும், இதன் யோக்கியதையும், சீக்கிரத்தில் வெளியாகக் கூடிய சந்தர்ப்பங்கள் தானாகவே ஏற்படும்படியாக சுயமரியாதை உணர்ச்சி மக்களுக்கு வலுத்து வருவதால் இப்படிப்பட்டவர்கள் இனி வேறு தொழில் பார்த்துக்கொள்ளவோ அல்லது இதன் நிழலில் மறைந்து கொள்ளவோ இல்லாவிட்டால் வேறு சக்தியற்ற வர்களாகிவிடுவார்கள் என்பது நமது உறுதி.

இருந்தபோதிலும் சுயமரியாதை இயக்கத்திற்கும் சர்க்காருக்கும் இருந்துவரும் – இருக்கப்போகும், சம்மந்தத்தை தைரியமாக இந்த சமயத்தி லேயே வெளியிட்டு விடுகின்றோம்.

அதாவது,
பார்ப்பனீயத்தையும், பிரபுத்தன்மையையும் கொண்ட சுயராஜ் யத்திற்கு பாடுபடும்காந்தீயத்தை எதிர்க்கும் முறையில் சர்க்கார் தயவை சுயமரியாதை இயக்கம் ஒரு அளவுக்காவது எதிர்பார்க்க வேண்டி வந்தால் தாராளமாய் எதிர்ப்பார்த்துத்தான் தீரும்.

பணக்காரத் தன்மையையும், பார்ப்பனீயத்தையும் ஒழித்து சமதர்ம மும், பொது உடமைத் தத்துவமும் கொண்ட சுயராஜ்யமாகிய மனித தர்ம சுயராஜ்யம் பெறுவதற்கு இந்த சர்க்கார் முட்டுக் கட்டையாயிருந்தால் அதை அழிக்கும் வேலையில் சுயமரியாதை இயக்கம் ஒரு சிறு வேர் அற்றுப் போகும் வரையில் அதில் ஈடுபட்டிருக்கும். பிரிட்டிஷ் ஆக்ஷியானது எப்படி இருந்த போதிலும் அது பார்ப்பனீய ஆட்சியைவிட மோசமான தல்ல என்பது நமது அபிப்பிராயமாகிவிட்டது. அதுமாத்திரமல்லாமல் திரு.காந்தி கேட்கும் ராமராஜிய ஆட்சியைவிடமோசமானதல்ல என்ப தோடு பிரிட்டிஷ் ஆட்சி முதலாளிகள் ஆட்சி என்கின்ற விஷயத்தில் சுயமரியாதை இயக்கத்திற்கு சிறிதும் சந்தேகமில்லை. பார்ப்பனீய ஆட்சியும், இராமராஜ்யமாகிய காந்தீய ஆட்சியும் ஒழிந்த பிறகுதான் முதலாளிகள் ஆட்சியை ஒழிக்கமுடியும். இவை இரண்டும் அதற்குத் தூண் களாய் இருக்கின்றன. ஆகவே அதன் முறை மூன்றாவதாகும். இவைகளை யெல்லாம் அடியோடு விட்டு விட்டு நேரே பிரிட்டிஷ் ஆட்சியில் கையை வைப்பது பார்ப்பனீய ஆட்சிக்கும் காந்தீய ஆட்சிக்கும் உறம் தேடுவதே யாகும். பார்ப்பனீயமும், காந்தியமும் தான் இந்தியாவில் பிரிட்டிஷாரை வரவழைத்ததும், இன்னமும் அவர் களையே ஆட்சி செய்து கொண்டிருக் கும்படி உதவிபுரிந்து கொண்டிருக் கின்றதுமாகும் என்பது சுயமரியாதை இயக்கத்தின் முடிவான அபிப்பி ராயமாகும்.
உதாரணம் வேண்டுமானால் பிரிட்டிஷாரின் எந்த அக்கிரமத்திற்கும், எந்த கொடுங்கோல் ஆட்சிக்கும் பார்ப்பனீயம் உதவி புரியவில்லை என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவில் பார்ப்பனீயம் வெகு நாளைக்கு முன்பே ஒழிந்திருக்குமானால் பிரிட்டிஷ் இருந்த இடம் தெரியாமல் உலகத்தில் மறைந்திருக்கும். ஆகையால்தான் சுயமரியாதை இயக்கம். இப்போது பார்ப் பனீயத்திடமும், பிரபுத்தன்மையிடமும் வேலைசெய்ய வேண்டுமென்கிறது. பிரபுத்தன்மை ( முதலாளித் தன்மை ) ஒழியும்போது யாருடைய முயற்சியு மில்லாமல் பிரிட்டிஷ் ஆதிக்கம் விகிதாச்சாரம் ஒழிந்து தான் தீரும். அல்லது பார்ப்பனீயத்தீற்கும் பிரபுத்தன்மைக்கும் விரோதமாய் வேலைசெய்யும் போது பிரிட்டிஷ் ஆதிக்கம் குறுக்கிட்டால் அதை யும் சேர்த்து அழிக்கத்தான் சுயமரியாதை இயக்கம் வேலை செய்யும். ஆகவே உண்மை விடுதலைக்கு மார்க்கம் தேடுவதை விட்டுவிட்டு போலிக் கூச்சல் போடும் வேலையில் சுயமரியாதை இயக்கம் ஒருநாளும் இரங்காது என்பதை வாசகர்கள் உணர்வார்களாக.

குடி அரசு – தலையங்கம் – 19.04.1931

You may also like...

Leave a Reply