வடஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மகாநாடு

சகோதரி சகோதரர்களே!
இந்த மகாநாட்டின் திறப்பு விழா நடத்த என்று நான் இங்கு வந்தவன். இந்தச் சமயத்தில் என்னைப் பற்றி இவ்வளவு காரியங்கள் நடக்குமென்றும் இவ்வளவு தூரம் புகழ்ந்து பேசப்படும் என்றும் நான் நினைக்கவில்லை. ஊர்வல மூலமாகவும், வரவேற்புப் பத்திர மூலமாகவும், எனது படத்திறப்பு மூலமாகவும், அளவுக்கு மீறிய உற்சாகமும் வரவேற்பும், புகழ்ச்சி உரைகளும் காணவும் கேட்கவும் நான் மிகுதியும் சந்தோஷமடைகிறேன். எனது தொண்டில் உள்ள இடையராத கஷ்டங்களிடையே இம்மாதிரியான சில வைப வங்கள் ஏற்படுவதால் சிலசமயங்களில் பரிகாசமாகவும் சில சமயங்களில் உற்சாகமாகவும் இருக்கச் செய்கின்றது.

என்னைப் பற்றிய ஆடம்பர வரவேற்பும் புகழுரைகளும் நான் உங்களிடம் ஒரு சிறிதும் எதிர்பார்க்கவில்லை. நீங்களும் இத்துடன் உங்கள் கடமை தீர்ந்து விட்டதாக தயவு செய்து நினைத்து விடாதீர்கள்.
நாம் பிரவாகமான எதிர் வெள்ளத்தில் நீந்துகின்றோம் என்பதையும், நமக்கு எதிரிகளும் எதிர்ப்பிரசாரங்களும் வெளிப்படையாயும், திரை மறைவிலும் சூழ்ச்சிகளுடனும் நடைபெற்று வருகின்றதை கருத்தில் வையுங்கள். அவற்றிற்குத் தலைகொடுக்கத் தயாராயிருங்கள். நமது தலைவர் பனகால் அரசர் காலமான ஒரு நெருக்கடியான சமயமானதால் இந்த சமயத் தில் உங்கள் விழிப்பும் தியாகமும் அதிகம் தேவை இருக்கின்றது என்பதை உங்களுக்குத் தெரிவித்துக் கொள்வதுடன் உங்களுக்கும் சிறப்பாக திருமதி மார்த்தா ஆரியா அம்மையார் அவர்களுக்கும் எனது நன்றி யறிதலைத் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

குறிப்பு : 04,05-01-1929 நாட்களில் இராயவேலூர் லட்சுமணசாமி முதலியார் நகர மண்டபத்தில் கூடிய வட ஆற்காடு ஜில்லா பார்ப்பனரல்லாத வாலிபர்கள் முதலாவது மாநாட்டில் தமது படத்திறப்பு நிகழ்ச்சியின் போது ஆற்றிய நன்றியுரை.

குடி அரசு – சொற்பொழிவு – 13.01.1929

You may also like...

Leave a Reply