செங்கல்பட்டு ஜில்லா போர்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாடு

“திரு. ரெட்டியார் அவர்களே! உபாத்தியாயர்களே மற்றும் இங்கு கூடியிருக்கும் சகோதர சகோதரிகளே! இந்த ஆசிரியர் மகாநாட்டுக்கு இந்த ஜில்லா போர்டார் என்னைத் தலைவனாக யிருக்க வேணுமாய் கேட்டுக் கொண்டது எனக்கு மிகவும் ஆச்சரியமாயிருக்கிறது. ஏனென்றால் இது “கல்வி” என்பது சம்பந்தமான ஆசிரியர் மகாநாடாயிருப்பதால், அந்தக் கல்வி என்பது ஒரு சிறிதும் இல்லாதவனும், ஆசிரியர் என்பவர்களிடத்தில் கொஞ்சமாவது பயிற்சி பெறாதவனுமான நான் இம் மகாநாட்டுக்கு தலைமை வகிக்க எவ்விதத்தில் தகுதியுடையவன் ஆவேன் என்பதுதான். நான் என்னுடைய ஒன்பதாவது பத்தாவது வயதிற்கு மேல் எந்த பள்ளிக் கூடத் திலுமே வாசித்தவனும் அல்ல. அந்த ஒன்பது வயதிற்கு உள்பட்ட காலத்திலும் என்னை பள்ளிக்கு அனுப்பிய காரணமெல்லாம், நான் வீட்டில் உள்ளவர்களுக்கு தொல்லை விளைவிக்காமலிருக்க வேண்டுமென்ற கருத்துக்கொண்டு ஓர் திட்டத்தில் காவலில் வைப்பதற்காகவே, அதுவும் ஒரு திண்ணைப் பள்ளி உபாத்தியாயர் வசமே ஒப்படைக்கப்பட்டிருந்தேன். அந்தப் பள்ளியில் இருந்த காலமும், உபாத்தியாயர்களுக்கும் பிள்ளை களுக்கும் தொல்லை விளைவிப்பதும், அவர்களிடம் அடிபடுவதுமான காலந்தான், நான் ஏதாவது இரண்டொரு எழுத்தை கற்றக் காலமாயிருக்கும். இதை நான் அநேக சந்தர்ப்பங்களில் பல பொதுக் கூட்டங்களில் சொல்லி யிருக்கின்றேன். இதை ஆதாரமாய் வைத்துக் கொண்டுதான் ஒரு சிலர் அதாவது என்னுடைய கொள்கைகளுக்கு முரண்பட்டவர்களோ அதனால் நஷ்டப்பட நேரிடுகிறவர்களோ என்னைக் கண்டிப்பதற்கு இதை உபயோ கித்துக் கொள்கிறார்கள். என்னவென்றால் “நான் கல்வி அறிவு அற்றவ னென்றும் அதனால் எனது கொள்கைகள் அறிவு அற்றதென்றும்” சொல்லி யும் எழுதியும் வருவதைப் பார்க்கின்றேன். ஆனாலும் உங்கள் ஜில்லா போர்டு தலைவர் திரு. எம். கே. ரெட்டியார் அவர்களுக்கு என்மீதுள்ள அன்பும் நம்பிக்கையும், நான் எவ்வளவோ மறுத்தும் என்னையே மகாநாட் டுக்கு தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தியதால் வேறு வழியில்லாமல் நான் ஒப்புக்கொள்ள வேண்டியதாயிற்று. நீங்கள் எந்தவித மான சிறந்த உபந்நியாசத்தையோ எதிர்பார்க்க முடியாது. உங்கள் ஜில்லா போர்டு தலைவர் இந்த மகாநாட்டை திறந்து வைக்கும்போது செய்த வரவேற்புப் பிரசங்கமானது மிகவும் அற்புதமாகவும் ஆணித்தரமானதாகவும் பெரிய அநுபோகமும் ஆராய்ச்சியும் பொருந்தியதாகவும் இருந்தது. அது உங்கள் நிலையை விளக்கியதுடன் நீங்கள் செய்ய வேண்டியதையும் நன்றாய் எடுத்துக்காட்டி இருக்கின்றது. அவ்வுபன்னியாசம் உங்களுக்கு மாத்திர மல்லாமல் உங்கள் மாணாக்கர்களுக்கும் அவர்கள் பெற்றோர்களுக்கும் மற்றும் கிராம வாசிக ளுக்கும் பொதுநல சேவைக்காரர்களுக்கும் மிகுதியும் பயன்படக்கூடியது.

அது போல நான் எதையும் எடுத்துச் சொல்ல முடியாது. தவிர அக்கிராசனம் வகித்தவன் என்கின்ற முறையில் நான் ஏதாவது இரண்டு வார்த்தை சொல்ல வேண்டும் என்றால் அதுபோல் ஆராய்ச்சியோடு ஒன்றும் சொல்ல முடியாது என்றும் ஏதோ என் சிற்றறிவிற்கு எட்டிய விஷயம் எதையாவது என் சொந்த முறையில்தான் சொல்லக் கூடும் என்றும் முதலில் தெரிவித்துக் கொள்ளுகின்றேன்.

ஆசிரியர்களே! நான் அறிந்த வரையில் தற்கால ஆசிரியர்கள் என்கின்றவர்கள் ஒருவித தொழிலாளிகளே. அதாவது ஜீவனத்திற்காக வேலையோ கூலியோ செய்கின்ற மக்களைப் போல் வயிற்றுப் பிழைப்புக் காரர்களேயல்லாமல் உண்மையான ஆசிரியத்தன்மையுடையவர்கள் அல்ல என்பதே எனது அபிப்பிராயம். எப்படி ஒரு மனிதன் தன் ஜீவனத்திற்கு மூட்டை தூக்குகிறானோ, மாடு மேய்க்கிறானோ, வண்டி ஓட்டுகிறானோ, வக்கீல் வேலை செய்கிறானோ, குமாஸ்தாவாக இருக்கிறானோ அப்படியே உபாத்தியாயர் வேலை என்பதும் ஒரு தொழிலாகவே ஏற்பட்டு விட்டது. ஒவ்வொரு உபாத்தியாயரும் தங்கள் தங்களை உபாத்தியாயர் வேலைக்குத் தகுதி ஆக்கிக் கொண்டதின் கருத்தே அவர்களின் ஜீவனத்திற்கு ஏதாவது தொழில் வேண்டாமா என்கின்ற கருத்து கொண்டுதானேயல்லாமல் ஏதாவது ஆசிரியத்தன்மையில் ஆசை இருந்து ஏற்பட்டதாக எனக்கு தோன்றுவ தில்லை. ஆதலால் இம் மாதிரி மகாநாட்டுக்கு உபாத்திமைத் தொழிலாளர் மகாநாடு என்று சொல்லுவதுதான் பொருத்தமான பெயராகும். அதுபோலவே உங்களிடம் தங்கள் பிள்ளைகளை படிக்கவிடும் பெற்றோர்களும், பிள்ளை களின் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதாவது வழி ஏற்பட சற்றுப் படிக்க வேண்டும் என்கிற எண்ணத்தோடுதான் தமது பிள்ளைகளை படிக்க வைக்கிறார்களே யொழிய அவர்களும் படிப்பை வயிற்றுப் பிழைப்பைத் தவிர வேறு காரியத் திற்கு கருதுவதில்லை. உங்கள் ஜில்லா, தாலூக்கா போர்டுகளும் முனிசிபா லிட்டிகளும் கூட அந்த கருத்துடன்தான் பள்ளிக்கூட நிர்வாகம் செய்து வருகின்றார்கள். கடைசியாக சர்க்காரும் கூட இவ்வளவு வரிப் பணத்தை படிப்புக்காக செலவு செய்தும் படிப்பு இலாக்கா விஷயத்தில் எவ்வளவோ கவலை செலுத்தியும் வந்தாலும் தங்கள் அரசாங்கம் தங்கள் இஷ்டப்படி நடைபெற கூலிகளைத் தயார் செய்யும் கருத்தோடுதான் செய் கின்றார்கள். அதனால்தான் பலவழிகளிலும் தற்கால கல்விக்கு வயிற்றுப் பிழைப்புக் கல்வி என்றும் அடிமைக் கல்வி என்றும் சொல்லப்படுகிறது. மனிதனுக்கு கல்வியின் அவசியமெல்லாம் மனிதன் தன் அறிவை வளர்க்கவும் அவ்வறிவால் தான் இன்புறவும் மக்கள் இன்புறவுமான தன்மை ஏற்படவும் அனுகூலமானதாக இருக்க வேண்டும் என்பதற்கே. இப்போதைய கல்வி எவ்வளவு அதிகமாக கற்றவனானாலும் அது அவனது அறிவுக்கு ஒரு சிறிதும் சம்மந்தமில்லாத தாகவே இருக்கின்றது. எவ்வளவு பெரிய கல்வியும் ஒரு கலையாகவும் தொழி லாகவும் போய்விட்டதேயல்லாமல் பகுத்தறிவுக்கு ஒரு சிறிதும் பயன்படு வதாக இல்லை. ஒரு நிமிஷத்திற்கு 100 கவி பாடக் கூடிய வித்வானானாலும் அவன் அக்கவி பாடுவதில் அதாவது ஒரு நிமிஷத்திற்கு நூறு அச்செழுத்தை கோர்க்கும் ஒரு கம்பாசிட்டருக்கு சமானமான தொழிலாளிதானே ஒழிய அவனை ஒரு பெரிய அறிவாளி என்று சொல்லிவிட முடியாது. அது போலவே ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லக்கூடிய ஒரு பண்டிதனோ ஒரு பாஷ்யக்காரனோ என்பவன், ஒரே தோலில் நூறுவிதமான செருப்புத் தைக்க கற்றுக் கொண்ட ஒரு சக்கிலிக்கு மேலானவனென்று சொல்லிவிட முடியாது.

ஒரு பாட்டுக்கு நூறு அர்த்தம் சொல்லும் பண்டிதனுக்கு எப்படி செருப்பு தைக்க தெரியாதோ அது போல சக்கிலிக்கும் அர்த்தம் சொல்லத் தெரியாது. ஆனாலும், இருவர்களும் இரு தொழிலில் இரு வித்தையில் சிறந்தவர்களே ஒழிய அறிவாளிகள் என்று சொல்லிவிட முடியாது.

உதாரணமாக சில பெரிய சட்டம் படித்த வக்கீல்களை விட சிறிய சட்டம் படித்த வக்கீல்கள் கெட்டிக்காரர்களாய் இருக்கின்றார்கள்.

சிலருக்கு படிப்பெல்லாம், நெட்டுருப்போட்டு ஒப்புவிக்க முடிகிற தல்லாமல் தங்களுக்கு ஒரு காரியத்திற்கும் உபயோகப்படுவதில்லை.

உதாரணமாக ஒரு பெரிய விஞ்ஞான சாஸ்திரி அதாவது சைன்ஸ் படித்த பண்டிதன் ஒரு புளியமரத்தடியில் பேய் இருப்பதாக யாராவது சொல்லிவிட்டால் அந்தப் புளிய மரத்தடியில் நடக்க நேரும்போது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு நடுக்கத்துடன் நடக்கின்றான். தன் பெண்ஜாதியை பேயோட்ட கோயிலுக்கு அனுப்பிக் கொடுக்கிறான், உடற்கூறும் அதன் சிகிச்சையும் படித்த பெரிய பண்டிதனான டாக்டர் கூட தன் பெண்ஜாதியோ மகளோ வீட்டிற்கு தூரம் என்றால் உடனே வெளியில் உட்கார வைத்து விடுகிறான் அல்லது கோழிக்கூடு போன்ற சிறு அறைக்குள் இருக்கச் செய்து விடுகின்றான் அல்லது நிழல் மேலேபட்டால் தீட்டு என்று சொல்லி விடுகின்றான். இரவில் வெளியில் தள்ளி கதவைத் தாளிட்டு விட்டு உள்ளே படுத்து தூங்குகிறான். தனது குழந்தை நொண்டியாய்ப் பிறந்தால், தான் முன் ஜென்மத்தில் செய்த வினை என்று வருத்தப்படுகின்றான்.

பெரிய வான சாஸ்திர பண்டிதன் கிரகணத்தின் போது ஊறுகாய்ச் சட்டியில் அருகம்பில்லைப் போட்டுவிட்டு கிரகணம் ஆரம்பிக்கும்போது ஒரு முழுக்கும் நீங்கும்போது ஒரு முழுக்கும் போடுகிறான். பெரிய ஞான சாஸ்த்திர பண்டிதன் என்பவனும் குறிப்பிட்ட நாளில் குறிப்பிட்ட ஊருக்குப் போனால் மோட்சம் என்று குறிப்பிட்ட குளத்து தண்ணீரில் (அது எவ்வளவு அழுக்காயிருந்தாலும்) முழுகினால் தான் செய்த அக்கிரமங்களின் பலன் எல்லாம் தீர்ந்து விடும் என்றும் நினைத்துக் கொண்டு முழுகி விட்டு இதுவரையில் செய்த பாவம் எல்லாம் தீர்ந்துவிட்டது என்று தன்னை தைரியப் படுத்திக் கொண்டு புதுக்கணக்கு போட்டு மறுபடியும் அக்கிரமங்களைச் செய்ய தைரியவானாகி விடுகிறான். பெரிய ஸ்தாவர சாஸ்திரமும் ஜீவ ஜெந்து சாஸ்திரமும் படித்தவன் நாயைக் கொன்றால் பாவம் இல்லை, நரியைக் கொன்றால் பாவம் இல்லை, கெருடனைக் கொன்றால், குரங்கைக் கொன்றால் பாவம் என்கிறான். பால் சாப்பிட்டால் மாம்ச பக்ஷணமல்ல, ஆடு, கோழி சாப்பிட்டால் மாம்ச பக்ஷணம் என்கின்றான்.

இம்மாதிரி எத்தனையோ காரியங்களில் படித்தவர்கள் என்பவர்
களின் நிலைமை அறிவுக்கும், படிப்புக்கும் சம்பந்தமில்லாமலே இருக்
கின்றது. எப்படிப் பல புஸ்தகங்கள் நிறைந்த அலமாரிக்கு ஒரு சிறிதும் புஸ்தகங்களின் தன்மை தெரியாதோ அதுபோலவே பல புஸ்தகங்களையும் அலமாரிக்கு பதிலாக அவைகளை உள்ளத்தில் வைத்து இருக்கிறதாகக் காணப்படும் நகரும் அலமாரிகளான பண்டிதர்கள் கடுகளவு பகுத்தறிவும் புஸ்தகத்தின் தன்மையும் அறியாதவர்கள் அனேகர்கள் இருப்பது எனக்குத் தெரியும். எனவே கல்வி என்றும் பெயர் வைத்துக் கொண்டு நாம் செய்யும் இம்மாதிரியான அநேக பிரயத்தனங்கள் மக்களின் ஒரு சிறு பகுத்தறிவிற்கும் உபயோகப்படாமலே இருந்து வருகின்றது. உதாரணமாக நமது நாட்டின் சரித்திரம் என்பதாக சொல்லப்படும் எந்த பழஞ் சரித்திரத்தை எடுத்துக் கொண்டாலும் அதில் மற்ற நாட்டார் எல்லோரையும் விட நாம் மேல் நிலையில் இருந்ததாகவே காணப்படுகின்றது. ஆனால் இன்று நாம் இருக்கும் நிலையானது மற்ற எல்லா நாட்டாரின் நிலைமையை விட தாழ்மையாகவே இருக்கின்றது. ( தொடர்ச்சி 03.06.1928 குடி அரசு )

குறிப்பு:- 19.05.1928 அன்று பூந்தமல்லி கண்டோண்மெண்ட் கட்டிடத்தில் நடந்த செங்கல்பட்டு ஆரம்ப ஆசிரியர் மகாநாட்டுக்குத் தலைமை வகித்து ஆற்றிய உரையின் முதல் பகுதி.


குடி அரசு – சொற்பொழிவு – 27.05.1928

You may also like...

Leave a Reply