பாடு கண்ணே பாடு – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பிறந்தநாள்

பாடு கண்ணே பாடு – பாவேந்தர்
பாரதி தாசனார் பைந்தமிழ் பாட்டினைப்
பாடு கண்ணே பாடு
யாழோடும் குழலோடும் பறைமுழங்க
ஊரோடும் இசையோடும் பாடு.
அயர்வினை உன்னில் நீக்கும் – மின்
ஆற்றலை உடலில் சேர்க்கும்
துயருனை அண்டாது காக்கும் – வாழ்வில்
தூயநல் இன்பமே தேக்கும்
தீயதாம் அச்சத்தை ஓட்டும் – அஞ்சா
துணிவெனும் ஆயுதம் நீட்டும்
மாயையாம் மூடத்தைத் தீய்க்கும் – உன்னை
மாசற்ற மனிதனா யாக்கும்
மானுட அறிவினை பெருக்கும் – இன
மானமே குருதியில் கலக்கும்
ஊனினில் தமிழையே நாட்டும் – உரிமை
விடுதலை புரட்சியை மூட்டும்
கன்னல் பாகாய் வார்ப்பாய் – அமிழ்தாம்
கருத்தை மீட்டியே ஆர்ப்பாய்
அன்னைத் தமிழில் தீட்டிய – பாட்டை
ஆருயிர் ஊறிட பாடு!

– குயில்தாசன்

பெரியார் முழக்கம் 16042015 இதழ்

You may also like...

Leave a Reply