தோழர் சி.சுப்பிரமணியன் மறைந்தார் சடங்குகளை மறுத்து உடல் அடக்கம்

சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத் தோழர், கொளத்தூர், அய்யம்புதூர் சி.சுப்பிரமணியன் அவர்கள் 21.04.2024 அன்று முடிவெய்தினார்.
அவரது உடலை கழகப் பெண் தோழர்கள் சுமந்து சென்று இறுதி ஊர்வலத்தை முன்னின்று நடத்தினார்கள். இறுதி ஊர்வலத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, திராவிடர் விடுதலைக் கழக மாநில, மாவட்ட நிர்வாகிகள், தோழமை இயக்கத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனர்.
இறந்தவர்களின் உடலை பெண்கள் சுமக்க கூடாது. சுடுகாடு வரை பெண்கள் வரக்கூடாது என்ற மூடத்தனத்தை மறுத்து, ஜாதி – மத சடங்குகளை மறுத்து பெண்களே முன்னின்று இறுதி நிகழ்வுகளை நடத்தியது அப்பகுதியில் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மாலை 5 மணிக்கு மறைந்த சி.சுப்பிரமணியம் அவர்களின் படத்திறப்பு – நினைவேந்தல் நிகழ்வு அவரது இல்லத்தில் நடைபெற்றது.
கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மறைந்த தோழர் சி.சுப்பிரமணியன் படத்தை திறந்துவைத்து நினைவேந்தல் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் கழக ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் நாத்திகசோதி, குடும்ப உறவினர் ஆசிரியர் ரவி, கழக சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ஆகியோர் பங்கேற்றனர். நிறைவாக அவரது பேரன் ரோகித் நன்றி கூறினார். இந்நிகழ்வில் கழகத் தோழர்கள், வி.சி.க, தமிழ்ப்புலிகள் கட்சி மற்றும் உறவினர்கள் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

பெரியார் முழக்கம் 25.04.2024 இதழ்

You may also like...