தமிழ்நாடு மாடல் வளர்ச்சி மாடல்

தேர்தல் கள ஆய்வுக்காக தமிழ்நாடு வந்திருந்த மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எக்ஸ் தளத்தில் இட்டிருக்கும் பதிவுகள் கவனம் பெற்றுள்ளன. “தமிழ்நாடு அரசியல் எப்போதுமே என்னை ஈர்த்திருக்கிறது. ஏனெனில் தமிழ்நாடு தனக்கென ஒரு தனி வழி அமைத்து, அதில் முன்னேறி வந்திருக்கிறது. இந்தியா கொண்டிருக்கும் பன்மைத்துவமே அதன் வலிமை. தமிழ்நாடு அதற்கு நல்ல உதாரணம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான பரந்த கூட்டணியை வீழ்த்துவது எளிதல்ல. யார் எதிர்க்கட்சி என்பதற்கு இங்கே போட்டி நடக்கிறது” என்று பதிவிட்டுள்ளார்.
மேலும், “ஒன்றிய பாஜக அரசின் ஜிஎஸ்டி, பணமதிப்பழிப்பு நடவடிக்கைகளால் கோவை 30% சிறு, குறு நிறுவனங்கள் மூடுவிழா கண்டுவிட்டன. தொழில் நிறுவனங்கள் வைத்திருந்த சிலர் இப்போது ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள். பெரிய நிறுவனங்கள் மட்டுமே சிறிய அளவிலான ஆதாயம் பெற்றுள்ளன.
தமிழ்நாட்டு களத்தை ஆய்வு செய்ததில் நான் புரிந்துகொண்ட விஷயம் இதுதான். குஜராத் மாடலைப் பற்றி பேசும் நாம், சமூகநீதி மற்றும் வளர்ச்சிகொண்ட தமிழ்நாட்டு மாடலைப் பற்றி எப்போது பேசப்போகிறோம்? இந்தியா முழுவதும் பணிபுரியும் பெண்களில் தமிழ்நாட்டில் மட்டும் 43% இருக்கிறார்கள். அதிகாரம் பெற்ற இப்பெண்கள் சிறந்த தமிழ்நாடு மற்றும் இந்தியாவை உருவாக்குகிறார்கள். தமிழ்நாடு எட்டியிருக்கும் பல சாதனைகளில் இதுவும் ஒன்று” என்றும் பதிவிட்டுக்கிறார்.

பெரியார் முழக்கம் 11.04.2024 இதழ்

You may also like...