48அ. என் பெயரால்

என்பேரால் விடுதலையில் 28-07-149ம் தேதி பிரசுரிக்கப் பட்டிருந்த வருத்தமும், விஞ்ஞாபனமும் என்னும் சேதிக்கு ஆதாரமான பொய்க்கடிதத்தை அனுப்பிக் கொடுக்கும்படி சென்னைக்கு டிரங்க் டெலிபோன் பேசி வரவழைத்துப் பார்த்தேன்.  அது திராவிடர் கழகத் தலைமைக் காரியாலய (லெட்டர் பேப்பர் – ஸிளமிமிள³ ணைழிஸ்ரீள³) காகிதத்தில் எழுதப்பட்டிருக்கிறது. அடியில் ஈ.வெ.ராமசாமி, தலைவர், திராவிடர் கழகம் என்று கையொப்பமிடப்படிருக்கிறது.

அக்கடிதத்தின் மேல் கவரில் (போஸ்ட் கவரில்) கோயமுத்தூர் ஜில்லாவில், அவிநாசிக்குப் பக்கமான கரவலூர் – லுழி³ழிஸழியிலி³ள (தமிழில் கருவலூர் உச்சரிப்பு) என்ற ஒரு பிராஞ்ச போஸ்டாபீசில் போஸ்ட் செய்த தபால் சீல் போடப்பட்டிருக்கிறது என்று தெரிய முடிகிறது. தமிழில் கருவலூர் என்று சொல்லுவார்கள். அக்கடிதத்தின் மேல் கவரின் பின்புறம் அவினாசி போஸ்டாபீஸ் முத்திரையுள்ள சீலும் (முத்திரை இடப்பட்டு) இருக்கிறது.

கடிதத்தில் தேதி 28-07-1949 என்று போடப்பட்டிருக்கிறது. இதில் 8-மாத்திரம் சிறிது விளம்பி எழுதப்பட்டதாக இருக்கிறது. கோயமுத்தூர் சீலில் 27-ந் தேதி முத்திரையும், அவினாசிசீலில் 27ந்தேதி முத்திரையும், மதராஸ் மவுண்ட்ரோட் சீலில் 28-ந் தேதி முத்திரையும் இடப் பட்டிருக்கிறது. அதில் அடியில் போடப்பட்டிருக்கும்  கையெழுத்து என்னுடைய கையெழுத்துப் போலவே, அதாவது என்னுடைய கையெழுத்து என்றே சொல்லத்தக்கதாக இருக்கிறது.

இந்தக் கையொப்பமிட்ட வெத்துக்கடிதம் பெட்ரோல் வாங்கும் விஷயமாக அவசரம் கருதி வெறும் காகிதத்தில் கையொப்பமிட்டு கோயமுத்தூரில் ஒரு தோழருக்கும் சென்னையில் இரு தோழருக்கும் அனுப்பியதாகவும் நேரில் கொடுத்ததாகவும் எனக்கு ஞாபகம் இருப்பதோடு எனது காரியத்தரிரசியும் இதைப் பார்த்து சென்னையிலிருந்து ஞாபக மூட்டி எழுதியிருக்கிறார்.

விஷயம் எழுதப்பட்ட கையெழுத்தானது தனித்தனி எழுத்தாகவும், யாருடைய கையெழுத்து என்று புரிந்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்கின்ற கருத்தின் மீது ஜாக்கிரதையாக எழுதப்பட்டதாகவும் காணப்படுகிறது. அந்தக் கடிதமானது எனது கையொப்பமிட்ட வெறுங்காகிதம் எப்படியோ ஒருவருக்குக் கிடைத்து, அதில் இந்த விஷயங்கள் எழுதி அனுப்பப் பட்டிருப்பதாகக் கருதும்படி காணப்படுகிறது. இதற்குச் சரியான ஆதாரம் என்னவென்றால், கையெழுத்துக்கும் சேதிக்கும் மத்தியில் கொஞ்சம் இடம் இருந்து அதைச் சரி செய்ய பொருத்தமில்லாத ஒருவரி பொருத்தமற்ற இடைவெளிவிட்டு எழுதப்பட்டிருக்கிறது. அன்றியும் கையொப்பம் செய்த இங்கி வேறாகவும், விஷயம் எழுதின இங்கி வேறாகவும் இருக்கிறது.

அன்றியும் அந்தக் காரியத்துக்கு எழுதும் கடிதத்தில்தான் கையெழுத்துக்குக் கீழாக தலைவர், திராவிட கழகம் என்று எழுதுவது வழக்கம். ஏனெனில் திராவிடர்கழக (பொது)க் காரியத்திற்கு ஆக என்று சப்ளிமெண்டரி எண்ணெய்க்கு அனுமதிபெற்று இருப்பதால் அது சம்பந்தமான கரஸ் பாண்டன்சுக்கு தலைவர், திராவிடகழகம் என்று போடுவது அவசியமாயிற்று; வழக்கமுமாயிற்று அப்படிப்பட்ட வெறுங்காகிதம் இந்தக் காரியத்திற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்பதில் அய்யமில்லை.

இக்காகிதத்தைப் போட்டோ எடுத்து பிளாக் செய்து பத்திரிகையில் பிரசுரிக்கும்படி தெரிவித்து இருக்கிறேன். சீக்கிரத்தில் வெளிவரலாம். இதே சமயத்தில் மற்றொன்றும் தெரிவித்துக் கொள்ள வேண்டியவனாக இருக்கிறேன். என் கையொப்பமிட்ட வக்காலத்து (பூர்த்தி செய்யப்படாதவெத்து)ப் பாரங்கள் வக்கீல்களுக்கு அனுப்பப் பட்டவை சில வக்கீல்களிடமும், வக்கீல் குமாஸ்தாக்களிடமும் இருக்கின்றன. அதுபோலவே அபிடெவிட்டுக்கு ஆக என்று வெத்துக் காகிதத்தில் நான் கையெழுத்துப் போட்ட காகிதங்களும் சில அவர்களிடமும் இருக்கலாம். மற்றும் உதாரணமாகவும் சில சொல்ல இருக்கிறது. அதாவது 16-07-1949ந் தேதி உடுமலைப்பேட்டை விசாரணையின்போது குடி அரசு காரியாலய உதவி ஆசிரியர் புலவர் மாணிக்கம் அவர்கள் உடுமலைப்பேட்டைக்கு விசாரணையைப் பார்க்க வரும்போது எனது ஈரோட்டு வக்கீலிடம் எனக்கு ஆக சில சிவில் கோர்ட்டு பிராதுகள் எழுதித் தயார் செய்துகொண்டு கையெழுத்து வாங்க பிராதுகளும், வக்காலத்துப் பாரங்களும் கொண்டுவந்தார்.

அவைகளில் கையெழுத்துச் செய்து அவரிடம் அவசரத்தில் கொடுத்தேன். அவைகளை அவர் ரயில் நெருக்கடியில் ஏறும்போது கை நழுவ விட்டுவிட்டதாக வருந்தி மன்னிப்புக் கடிதம் எழுதிவிட்டார். என் சொந்தக் காரியங்களில் இப்படித் தவறுகள் சில இருப்பதோடு, கழக – பொதுக் காரியங்களில் சிறிதும் கவலை இல்லாமல் அனேக சந்தர்ப்பங்களில் பல தவறுகள் அதாவது என் கையெழுத்து உள்ள வெத்துக் காகிதங்கள் பல வெளியில் இருக்கலாம். விடுதலை ஆபீசிலும் இருந்திருக்கலாம்.

அதிலும் என் கையெழுத்து (ஆட்டோ கிராப்) வாங்குகிற ஆட்கள், பெண்கள், மாணவர்கள் முதலியவர்கள் ஏராளமான துண்டுத்தாள்களிலும் கையொப்பம் வாங்கி இருக்கிறார்கள். அவற்றுள் பலவற்றில் நான் கையெழுத்துப் போடும்போது, இப்படி வெத்துக்காகிதத்தில் கையெழுத்து வாங்குகிறீர்களே, இது தர்மமாகுமா? என்று வேடிக்கையாகச் சொல்லிக் கொண்டே கையொப்பமிட்டு இருக்கிறேன். அதுவும் பலரிடம் இருக்கலாம். அதிலும் என்சொந்த விஷயத்தைவிட கழக விஷயத்தில் அநேக தோழர்களை அளவுக்கு மீறி நம்பி அவர்களுடன் மிக தாராளமாய் நடந்துகொண்டு வந்து இருக்கிறேன். அவைகள் விரைவில் பின்னால் வரும். அவற்றுள் இப்படிப்பட்ட காரியங்கள் இன்னும் குறிப்பிடத் தகுந்தவை பல இருக்கலாம்.

இவைகளில் மிகுதியும் குறிப்பிடத்தக்க விஷயம் என்ன வென்றால், மனதார சதிகாரர்கள் என்று தெரிந்தும், சதிக்காகவே கூட இருந்து கொண்டு நடிக்கிறார்கள் என்று தெரிந்தும், சதிக்கூட்டத்தில் கலந்தவர்கள் என்று தெரிந்தும், ஒன்று, இரண்டுதடவை மோசடியாய் ? நாணயக் குறைவாய் ? நடந்தவர்கள் என்று தெரிந்தும் அவர்களுடன் சாதாரண மாகவே, நட்புரிமையாகவே, நம்பிக்கை காட்டி வந்திருக்கிறேன்.

இதற்குக் காரணம் சராசரி மக்கள் இப்படித்தானே இருக்கிறார்கள், பொதுக் காரியத்துக்குத்தானே இவர்களுடன் நேசமாக இருக்கிறோம்  நம் சுயநலனுக்கு ஆக நாம் கூடாத மக்கள் நேசம் கொண்டு எதையும் சாதித்துக் கொள்ளவில்லையே, என்பதுபோன்ற ஒரு மன உறுதியேயாகும். ஆதலால் இப்போது, எதிரிகள் போய்க்கொண்டிருக்கும் போக்கையும், துணிவையும் பார்த்தால் இன்னமும் என்ன என்ன தொல்லைகளும் ஆபத்துகளும் நேரலாமோவென்று கருத வேண்டியவனாகிறேன்.

இந்த நெருக்கடியான சமயத்தில் நீங்களும் ஜெயிலுக்குப் பேகப்போகிறீர்களே என்று தோழர் குருசாமி சுட்டிக் காட்டியிருப்பது போல் இன்னும் பல தொல்லைகள் ஏற்படலாம். ஆனால் எனக்கொரு தெளிவு உண்டு.

யாருடைய தயவால் நமக்கு ஆகவேண்டிய காரியம் என்ன இருக்கிறது? நம்மைக் கொண்டு நம் உழைப்பால், நாம் அடையும் கஷ்டநஷ்டத்தால் நாட்டுக்கோ, மக்களுக்கோ, தனிப்பட்ட நபர்களுக்கோ செய்யவேண்டிய காரியம் ஏதாவது இருந்தால், இருந்திருந்தால், இருக்கவேண்டு மானால் இருக்கலாமே ஒழிய, யாரைக்கொண்டும் நமக்கு ஆகவேண்டிய காரியம் எதுவும் இல்லை என்கிற ஒரு பத்திரமான நிலையில், தன்மையில், நான் இருப்பதாகக் கருதிக் கொண்டு இருப்பதால், எனக்கு எந்தவித கஷ்டமோ, நஷ்டமோ, ஏமாற்றமோ, சொந்தமானம், மரியாதைக் குறைவோ ஏற்படப் போவதில்லை. அதுபோலவேதான் எனது உடல், உயிர் பற்றியும் இனிக் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாதவனாக ஆகிவிட்டேன்.

இனி தான் எனது குதிரை கடிவாளாம் இல்லாமல் போகக் கூடிய சுதந்திரம் பெற்றுவிட்டதாகக் கருதுகிறேன். எனக்கு என்றுமே துணைவர்கள் இருந்ததில்லை. எதிரிகள், சதிகாரர்கள் மத்தியில் இருந்து பழகிப் பழகி (சிஐளதுதீ-ஸ்ரீ³லிலிக்ஷ], வீ³ழிஷ்மிலி³ – ஸ்ரீ³லிலிக்ஷ] என்பது போன்ற) எதிரிகளுடையவும், துரோகிகளுடையவும் கடுஞ் செய்கைக்குப் பாதிக்கப்பட முடியாத தன்மை உடையவனாக ஆகிவிட்டேன். என் முயற்சிகள், செய்கைகள் எதற்கும் எப்போதும் என்னையே எண்ணி, என்னையே பிணையாக்கிக் கொண்டு இறங்குவது என்பதல்லாமல், வேறுயாரையும் கருதக்கூட வேண்டியதல்லாத தன்மையிலேயே வாழ்ந்து வந்திருக்கிறேன்; நடந்து வந்திருக்கிறேன். இதை இன்று மாத்திரம் சொல்லவரவில்லை. நான் இந்த 25 வருஷகாலமாக சுமார் 100 தடவை சொல்லி இருப்பேன். மற்றும் இது என்னைத் தலைவராகக் கொண்டதாகவும், நிபந்தனை இன்றி என்னைப் பின்பற்றுவதகாவும் நடித்து, பல வழிகளில் எனது ஆதரவை, ஆசியைப் பெற்றவர்கள் சுமார் ஆயிரம் தடவை சொன்ன சொற்களும் கூவிய கூப்பாடுகளுமாகும்.

கடைசியாகச் சொல்லுகிறேன். தோழர் ஷண்முகவேலாயுதம் அவர்கள் எடுத்துத் காட்டியதுபோல, சுமார் 2 ஆண்டுகளுக்கு முன்பதாகவே நான் ஒரு இளைஞர்கள் மாநாட்டில், தங்கள் பகுத்தறிவுக்குச் சிறிது சுதந்தரம் வேண்டும் என்பவர்களுக்கு எனது இயக்கத்தில் இடமில்லை; நான் சொல்லுவதை ஏற்று நடப்பவர்களுக்கே இங்கு இடமுண்டு.

ஆதலால் உங்கள் பகுத்தறிவைக் கொண்டு இதை நன்றாய் தீர யோசித்து முடிவுசெய்து கொண்டு இதில் சேருங்கள். சேர்ந்த பின் சிந்தியாதீர்கள் என்று சொல்லி இருக்கிறேன். மேற்கொண்டும் இந்த இரண்டாண்டாய்ச் சொல்லியும் வருகிறேன்.

ஆதலால், என்னிடம் எந்த உரிமையில் என்னைப் பின்பற்றுவதாய் நடித்துவந்தவர்கள் தவறு காணுவது, என்பதை யோசிக்கவேண்டியது ஒவ்வொருவரின் கடமையாகும். – ஈ.வெ.ரா.

குடி அரசு 06.08.1949

ஜோசியத்தில் சித்திரபுத்திரன்

வெள்ளைக்காரன் ஜோசியத்தில் இந்தியர்களைப் போல் எத்தனை பெண் சாதி என்பதை அறிய இடம் இருக்குமா?

திருத்தில் இருக்கிற பெண்கள் ஜாதகத்தில் இத்தனை புருஷன் என்பதை அறிவதற்கு வசமிருக்கிறது போல் இந்தியாவில் விதவை மணமில்லாத பெண்களுக்கு இத்தனை புருஷன் இருக்கிறார்கள் என்று அறியமுடியுமா?

இந்தியாவில் உள்ள மக்களுக்கு பூமி, கன்று, காலி, வீடு, வாசல், சொத்து இவ்வளவு என்று கண்டுபிடிக்க வசமிருபது போல் ரஷியர்களுக்கும் கண்டு பிடிக்க வசமிருக்குமா?

You may also like...