பெண் மருத்துவரின் நன்றி உணர்வு: பெரியார் தொண்டரின் உருக்கமான கடிதம்

மேட்டுப்பாளையம் மூத்த பெரியார் தொண்டர் தி.வி.க. தோழர் பா. ராமச்சந்திரன் எழுதியுள்ள கடிதம்.

அன்புடையீர் வணக்கம்,

மேட்டுப்பாளையத்தில் பல் மருத்துவராக இருக்கும் டாக்டர் மனோன்மணி அவர்கள், என் வயது முதிர்வு காரணமாக கொள்கை உணர்வோடு உதவி வருகிறார். சிகிச்சைக்காக பல முறை கருப்புச் சட்டையுடன் செல்வேன். பெண் ஏன் அடிமையானாள்? பெண்களின் முன்னேற்றம் குறித்த சிறு சிறு பெரியார் எழுதிய நூல்களை வாசிக்கக் கொடுப்பேன் . அவர் ஆர்வமாக வாங்கிக் கொள்வார். கடந்த ஆண்டு நமது இயக்க காலண்டரைக் கொடுத்தேன் . பலரும் பார்க்கின்ற இடத்தில் வைத்தார். நான் பலமுறை பல் சிகிச்சைக்காக போகும்போது என்னிடம் பணம் வாங்குவதைத் தவிர்த்து விடுவார். கடைசியாக எனது கீழ் வரிசை பல்லை எடுத்து விட்டு புதியதாக பல் செட்டு வைக்க வேண்டிய நிலைமை வந்தது. அந்த சிகிச்சையும் சரி செய்து விட்டார். அதற்குரிய கட்டணத்தை வாங்க மறுத்து, உங்களைப் போன்ற மூத்த பெரியாரின் தொண்டருக்கு சிகிச்சை அளித்ததை நல்ல வாய்ப்பாக மனநிறைவாகக் கருதுகிறேன் என்று கூறி விட்டார்.

பெரியார் என்ற கொள்கை உணர்வு எத்தனை வலிமையானது என்பதை டாக்டர் மனோன்மணி உணர்த்திவிட்டார். அந்த உணர்வோடு பெரியார் கொள்கைகளைத் தொடர்ந்து இன்று வரை பரப்பிவரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் வார ஏடான

‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தின் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாய் தருகிறேன்.

வாழ்க பெரியார்.

பா. ராமசந்திரன் ,

மேட்டுப்பாளையம், கோவை மாவட்ட தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம்.

 

பெரியார் முழக்கம் 03022022 இதழ்

You may also like...