மண்ணின் மைந்தர்களின் உரிமை முழக்க பரப்புரை

மண்ணின் மைந்தர்களின்  வேலை வாய்ப்பு உரிமையைப் பறிக்காதே!

புதிய கல்வி என்ற பெயரில் குலக்கல்வியை திணிக்காதே!

தமிழ் நாட்டை வட நாடாக்காதே!

  • நாம் மண்ணின் மைந்தர்கள் தலைமுறை தலைமுறையாக இந்த மண்ணில் பிறந்தோம், வாழ்கிறோம், ஆனாலும், பிற வட மாநிலங்களைவிட – நாம் வேறுபட்டுள்ளோம்.
  • எவ்வளவு ஒடுக்கப்பட்ட ஜாதியானாலும் சரி; ஏழ்மையும், வறுமையும் நம்மை வாட்டினாலும் சரி; எப்பாடுபட்டாவது – நமது மகளை,  மகனை  படிக்க  வைக்க வேண்டும்; உயர் கல்வியைத் தர வேண்டும் என்ற கொள்கையே நமது பண்பாடு!
  • பெரியார் இட ஒதுக்கீட்டுக்காக 1919 முதலே போராடினார். உரிமையைப் பெற்று தந்தார். காமராசர், அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர்- அந்த  உரிமைகளை படிப்படியாக வளர்த்தார்கள். அம்பேத்கர் சட்டத்தின் வழியாக நமக்கான இட ஒதுக்கீட்டு உரிமைகளை உறுதிப்படுத்தினார். வி.பி.சிங் மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு தந்தார். போராடிப் பெற்ற சமூக நீதி உரிமைகளை தற்போது பறிகொடுத்து வருகிறோம் .

இப்போது பாஜக ஆட்சியில் என்ன நடக்கிறது?

  • “உங்கள் கல்விக் கொள்கையை நீங்கள் தீர்மானிக்க முடியாது. நாங்களே தீர்மானிப்போம்” என்கிறது பாஜக ஆட்சி.
  • நாம் வேண்டாம் என்ற ‘நீட்’டைத் திணிக்கிறார்கள்; இந்தியை , சமஸ்கிருதத்தைப் படி என்கிறார்கள்; கல்வி வேலை இட ஒதுக்கீடுகளைப் பார்ப்பன உயர் ஜாதி யினருக்கும் தருவோம். அவர்கள் பட்டியலின பழங்குடியினரைவிட குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாலே போதும் என்கிறார்கள்.
  • மீண்டும் குலக் கல்வியை புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் நம் தலையில் சுமத்துகிறார்கள்.
  • பாடத்திட்டத்தையும் அகில இந்திய அடிப்படையில் தயார் செய்வார்களாம்; நமக்கான கல்விக் கொள்கையை மத்திய அரசே தீர்மானிக்குமாம்.

புதிய கல்வி கொள்கை என்ன கூறுகிறது?

  • 8 வயது குழந்தைக்கும் பொது தேர்வு என்கிறது. ஒருங்கிணைந்த கல்வி வளாகம் என்ற பெயரில் கிராமப்புறப் பள்ளிகளை மூட வழி செய்கிறது; 8ஆம் வகுப்பு முடித்த 12 வயது குழந்தைகள் விருப்பமான தொழில் கல்வியை கற்கலாம் என்ற பெயரில் குலக் கல்விக்கு கதவு திறக்கிறது.

அதுமட்டுமா தோழர்களே!

  • நமது வேலை வாய்ப்புகளை வடநாட்டார்களுக்கு வாரி வழங்குகிறார்கள்; நெஞ்சு பதறும் இந்த புள்ளி விவரங்களைப் படியுங்கள்.
  • தென்னக இரயில்வேயில் திருச்சி கோட்டத்தில் சமீபத்தில் எலக்டிரிசியன், பிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1765 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அதில் 1600 பேர் வட இந்தியர்கள்.
  • சென்னை மணலியில் உள்ள பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல், இயந்திரவியல், மின்னியல் போன்ற 8 வகையான பொறியாளர் (ENGINEERING) பணிகளுக்கு 65 பேர் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டனர். அவர்களில் ஒருவர் கூட தமிழர்கள் இல்லை.
  • தமிழக வருமான வரித்துறையில் 2012இல் சேர்க்கப்பட்ட 384 பேரில் 28 பேர் தான் தமிழர்கள். 2014இல் சேர்க்கப்பட்ட 78 பேரில் 3 பேர்தான் தமிழர்கள். 2018இல் பணியிலமர்த்தப்பட்ட 100 ஆய்வாளர்களில் ஒருவர் தான் தமிழர்.
  • வருமான வரித்துறையின், டேக்ஸ் அசிஸ்டென்ட் ப ணியில் அமர்த்தப்பட்ட 265 பேர்களில் 5 பேர்தான் தமிழர்கள். கடந்த சிலஆண்டுகளில் 10 சதவீதத்தை கூட எட்டவில்லை.
  • சமீப காலமாக நடைபெற்ற இரயில்வே தேர்வுகளில் கிட்டத்தட்ட 90 சதவீத அளவில் வட மாநிலத்தினர் தேர்ச்சியடைந்துள்ளனர். குறிப்பாக பீகாரைச் சேர்ந்தவர்கள் 2010-2019 வரை 18ரூ தேர்வாகியுள்ளனர்.
  • தமிழகத்தில் வருமான வரித்துறை, கலால்துறை, பாஸ்போர்ட் அலுவலகம் என மத்திய அரசின் 55 வகையான அலுவலகங்கள் உள்ளன. இவ்வாறான, பல்வேறு துறைகளில் 2011இல் இருந்து பணியிலமர்த்தப்பட்டவர்களில் 99ரூ வட இந்தியர்கள்தான். 0.5ரூ தான் தமிழர்கள்.
  • மோடி தலைமையேற்ற கடந்த 62 மாதங்களில் தான், பாரத் மிகுமின் நிறுவனம், பெட்ரோலிய நிறுவனம், இரயில்வே, பெல் உள்ளிட்ட தமிழகத்தின் மத்திய அரசு நிறுவனங்களில் 90ரூ வட இந்தியர்களை பணியில் அமர்த்தியுள்ளது மோடி அரசு.
  • மண்ணின் மைந்தர்களாகிய நமது – கல்வி, வேலை, மொழி உரிமைகளை மறுத்து தமிழ்நாட்டை வடநாடாக்கும் முயற்சிகள் வேக வேகமாக நடக்கின்றன விழித்துக் கொள்வோம் தோழர்களே!
  • ஆபத்துகளை தடுத்து நிறுத்துவோம்; மக்கள் கருத்தை உருவாக்குவோம்; இதற்காகவே இந்த பரப்புரை பயணம்.

உரத்து முழங்குவோம்!

நடுவண் அரசே! எங்கள் தலைமுறையை வாழவிடு!

நாங்கள் மண்ணின் மைந்தர்கள்!

(பரப்புரைப் பயணத்திற்கான துண்டறிக்கை)

பெரியார் முழக்கம் 15082019 இதழ்

You may also like...