குமாரபாளையத்தில் முப்பெரும் விழா

தந்தை பெரியார் 140ஆவது பிறந்தாள், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் 138 ஆவது பிறந்தநாள், பெருந்தலைவர் காமராசர் 118 ஆவது பிறந்தநாள் முப்பெரும் விழா பொதுக் கூட்டம்,  13.10.2018 ம் தேதி குமாரபாளையம்  பேருந்து நிலையத்தில்  மாலை 5 மணிக்கு, டி.கே.ஆர். இசைக் குழுவின் பகுத்தறிவுப் பாடல்கள் மற்றும் தலித் மக்களின் உரிமை சார்ந்த பாடல்கள் மூலம் நிகழ்வு தொடங்கியது.

இந்நிகழ்விற்கு, கழகத்தின் நாமக்கல் மாவட்ட தலைவர் மு.சாமிநாதன் தலைமை வகித்தார். மேலும், கேப்டன் அண்ணாதுரை மாவட்ட காப்பாளர், சரவணன் மாவட்ட செயலாளர், வைரவேல் மாவட்ட அமைப்பாளர், முத்துப்பாண்டி மாவட்ட பொருளாளர், மோகன் குமாரபாளையம், ரேணுகா திராவிடமணி குமாரபாளையம் ஆகியோர் முன்னிலை வகிக்க, குமாரபாளையம் இரா.மோகன் வரவேற்புரையாற்றினார். மேலும் நிகழ்வில், காமராசர் உருவப்படத்தை அறிவியல் மன்ற தலைவர் சிவகாமி திறந்து வைத்தார், புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் உருவப்படத்தை சாக்கோட்டை இளங்கோவன், தந்தை பெரியார் உருவப்படத்தை திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி திறந்து வைத்தனர்.

முதலாவதாக, அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி உரையாற்றினார். அம்பேத்கர் மற்றும் பெரியார், ஜாதி ஒழிப்பு களத்தில்  எப்படி ஒரே நேர்கோட்டில் செயல்பட்டனர் என்பதைப் பல வரலாற்று தகவல்களுடன், சாக்கோட்டை இளங்கோவன் உரையாற்றினார். இறுதியாக, அம்பேத்கர், பெரியார், காமராசர் ஆகிய தலைவர்களின் இன்றைய தேவை, அம்பேத்கர், பெரியார், காமராசரின் இந்துத்துவ எதிர்ப்பு போன்றவைகளைப் பற்றி வரலாற்றுத் தகவல்களுடன் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். இறுதியாக, குமாரபாளையம் வடிவேலு நன்றியுரையாற்றினார்.  குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி மற்றும் வெங்கட் நிகழ்வை சிறப்பாக ஏற்பாடு செய்தனர்.

பெரியார் முழக்கம் 18102018 இதழ்

You may also like...