திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர்.

முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்:

உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை இங்கே தாராளமாக விற்கலாம். ஆனால், இந்தியாவின் உற்பத்தி, வெளிநாட்டில் விற்பதற்கு கடும் கட்டுப் பாடுகள் விதிக்கப்பட்டன. வாடகை வீட்டுக்காரன், சொந்த வீட்டுக்காரனுக்கு நிபந்தனை விதிப்பது போல்தான்! அத்துடன், வெளிநாட்டு உற்பத்திப் பொருள்கள் எல்லாமே ‘தரம்’ மிக்கவை என்ற மூடநம்பிக்கையும் சேர்ந்து கொண்டது. இதன் வளர்ச்சிப் போக்கில், இந்தியாவை அன்னிய நாடுகள் மிரட்டத் தொடங்கிவிட்டன. ஒரு குடும்பம், அன்பினால் கட்டுண்டதாக இருக்கலாம். ஆனால், அதிகாரத்தால் கட்டுண்டு இருப்பதை பெரியார் எதிர்த்தார். எதையும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறி என்ற கோட்டுபாடுதான், உலகமயமாக்களின் அடிப்படையாகும். அவ்வப்போது கிடைக்கக்கூடிய தங்களின் லாபத்தையும் சுரண்டலைiயும் மட்டுமே அன்னிய மூலதனம் குறி வைத்தது. சமூகத்தின் பாதிப்புகளைப் பற்றி அவர்களுக்கு கவலை இல்லை. இது மனுசாஸ்திரம் கட்டமைத்த சிந்தனைதான். பார்ப்பனிய மேலாதிக்கம் ஒன்றை மட்டுமே நோக்கமாகக் கொண்டு மனுசாஸ்திரத்தை எழுதி, அதை பார்ப்பனர்கள் சமுதாயத்தின் சட்டமாக்கி விட்டார்கள். அதேபோல்தான் வளர்ந்த நாடுகள், தங்களை மேலும் வளமாக்கிக் கொள்ள வளரும் ஏழை நாடுகளை இந்த உலகமயமாக்கல் கொள்கை வழியாக சுரண்டி வருகிறார்கள்.

உலகமயமாக்கல் கொண்டு வந்த மற்றொரு ஆபத்து ‘சிறப்பு பொருளாதார மண்டலம்’ ஆகும். முரசொலி மாறன், மத்திய அமைச்சராக இருந்த போது கொண்டுவந்த திட்டம், சிறப்புப் பொரு ளாதார மண்டலம், நாட்டின் சட்டங்களிலிருந்து விடுவிக்கப் பெற்ற மண்டலமாக்கப்பட்டு, தொழி லாளர் சட்டங்கள் எதுவும் பொருந்தாது என்று அறிவித்ததோடு, தொழில் நிறுவனங்கள் செய்யும் முறைகேடுகளை தட்டிக் கேட்கும் தொழி லாளர்களின் சுயமரியாதையையும் பறித்தது.

சுற்றுச் சூழலை பாதிக்கக்கூடிய நஞ்சை, விஷ வாயுவை கக்கக்கூடிய ஆபத்தான தொழிற்சாலை களுக்கு இங்கே கதவு திறந்து விடப்பட்டது.

கூடங்குளம் மின்நிலையமும் அப்படித்தான் வந்தது. மக்களின் வாழ்வாதாரத்துக்கு, சுற்றுச் சூழலுக்கு ஆபத்துக்களை உருவாக்கும் திட்டங்களை சில விஞ்ஞானிகளைக் கொண்டு நியாயம் கற்பிக்கத் தொடங்கினார்கள். விஞ்ஞானத்தின் வளர்ச்சி என்றார்கள். இது விஞ்ஞானிகள் பரப்பி வரும் மூடநம்பிக்கை. விஞ்ஞானமும் அதன் வளர்ச்சியும் யாருக்கானது? அதனால் சமூகத்துக்குக் கிடைக்கும் பயன் என்ன என்பதே சரியான பெரியாரியல் பார்வையாக இருக்க முடியும்.

இந்த நாட்டில் பார்ப்பனர்கள் உருவாக்கிய சாஸ்திரங்களும், சட்டங்களும்தான் மக்களுக்கான ‘தர்மம்’ என்று கட்டமைத்து, ஒடுக்கப்பட்ட மக்களை பார்ப்பனியத்துக்கு சேவை செய்ய வைத்ததுதான் வரலாறாக இருந்து வந்திருக்கிறது. இதை எதிர்த்துப் போராடிய பெரியாரை, ‘பிரிட்டிஷ் ஆட்சியின் கைக்கூலி’ என்று பார்ப்பனர்கள் பேசினார்கள், எழுதினார்கள். இன்று வரை பேசி வருகிறார்கள். அதே பார்ப்பனர்கள்தான், இன்று நாட்டைச் சுரண்ட வந்திருக்கும் அன்னிய தொழில் நிறு வனங்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கைக்கூலி களாக செயல்படுகிறார்கள்.

பார்ப்பன சக்திகள், பிரதமர் பதவிக்கு முன்னிலைப்படுத்தும் நரேந்திரமோடி யார்? அவர் பன்னாட்டு நிறுவனத்தின் முகவர். அந்த நிறு வனங்கள்தான் பார்ப்பனர்களோடு இணைந்து, இந்தியாவின் அரசியல், பொருளாதார அதிகாரத்தை மோடியிடம் ஒப்படைத்துவிட வேண்டும் என்று திட்டமிட்டு களமிறங்கியுள்ளன.

இந்த சக்திகள், இந்துத்துவாவையும் அணி சேர்த்துக் கொண்டிருக்கின்றன. வரலாறு முழுதும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு துரோகம் செய்த பார்ப்பனர்கள் காட்டிய வழியில், இப்போது பன்னாட்டு நிறுவனங்களில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடுகளை மறுக்கிறார்கள்.

இந்த சமுதாயத்திலிருந்து கல்வி பெற்று, முன்னேறி, திறமைகளை வளர்த்துக் கொண்ட இளைஞர்கள், பன்னாட்டு நிறுவனங்களில் நுழைந்து விட முடியாது. அவர்கள் நடத்தும் நேர்முகத் தேர்வில் எல்லாவற்றுக்கும் சரியான விடை தந்தாலும்கூட, அவர்களின் சமூகப் பின்னணியையே முக்கியமாகக் கருதிப் பார்க்கின்றன. விவசாயக் கூலியாகப் பிறந்தவரின் மகன் என்னதான் கல்வித் தேர்ச்சிப் பெற்றிருந்தாலும் ஒரு பெரிய நிறுவனத்தை நிர்வகிக்கும் அனுபவத்தைப் பெற்றிருக்க மாட்டார் என்று கூறி, அவர்களை புறந்தள்ளுகிறார்கள். இந்தச் செய்தியை ‘இந்தியா டுடே’ பத்திரிகை ஒரு முறை வெளியிட்டது.

சுரண்டலுக்கு ஏற்ற, சமூக அமைப்பு ஜாதிய சமூக அமைப்புதான். அதில்தான் மக்கள் ஒற்றுமை சிதைந்து நிற்கும். ஓரணியில் திரண்டு போராட மாட்டார்கள் என்று முடிவுக்கு வந்த பார்ப்பனிய பன்னாட்டு இந்துத்துவ சக்திகள் திட்டமிட்டு ஜாதியத்தைக் காப்பாற்றவும், அதற்காக ஜாதிய மோதல்களை உருவாக்கவும் விரும்புகிறார்கள். 2002 இல் மத அடிப்படையில் இஸ்லாமியர்களை இனப்படுகொலை செய்த மோடி தான், இப்போது பிரதமர் பதவிக்கு கூர்தீட்டப்படுகிறார். உலக மயமும், பார்ப்பனியமும் சந்திக்கும் புள்ளி, ஜாதியமைப்பைக் கூர்மைப்படுத்தும் இடம் தான். அதற்காக ‘இந்துத்துவா கருத்தாக்கம் கட்டமைக்கப்படுகிறது.

உலக வங்கியிடம் கையேந்தி நிற்கும் இந்தியா, அது விதிக்கும் நிபந்தனைகளை அப்படியே ஏற்றுக் கொள்கிறது. உர மான்யம், மருத்துவம், கல்வி போன்ற மக்கள் அடிப்படைத் தேவைகளுக்கான செலவு களை நிறுத்தச் சொல்வது யார்? உலக வங்கிதான். நாடு திவாலாகும; நிலைவரும்போது, பார்ப்பனர்கள் அமெரிக்காவுக்கும், அய்ரோப்பாவுக்கும் ஓடி விடுவார்கள். ஆனால், அப்போது உழைப்பால் இந்த நாட்டை உருவாக்கிக் கொண்டிருக்கும் மக்கள், நிலம், நீர், சுற்றுச் சூழல் ஆபத்துகளால் சூழப்பட்டு, இந்த மண்ணிலேயே பாதிக்கப்பட்டவர்களாக வாழ வேண்டியிருக்கும். இது பார்ப்பானின் தேசமல்ல; எனவே அதுபற்றி அவர்களுக்கு கவலையும் இல்லை.

சென்னை நகரத்தின் கொசுக்கள், கொசு எதிர்ப்பு-அழிப்பு மருந்துகள், தடுப்பு முறைகள் அத்தனையையும் எதிர்கொண்டு தங்களை அழிய விடாமல் பாதுகாத்துக் கொள்வதுபோல் பார்ப்பனியம் தனது நெருக்கடியைத் தவிர்த்துக் கொள்ள பன்னாட்டு நிறுவனங்களுக்கு கதவு திறந்துவிட்டு, அதன் உயர் அதிகாரப் பொறுப்பிலும் தன்னை அமர்த்திக் கொண்டுவிட்டது. இதைச் சந்திப்பதற்கு பெரியாரியம்தான் இன்று நமக்கான ஆயுதமாக திகழ்கிறது.

இந்த நிலையில் இங்கே, தமிழ் தேசியம் பேசும் சில அமைப்புகள், பெரியாரை புறக்கணிக்கத் துடிக் கின்றன. ‘கொக்கோகோலா’ சுரண்டலைவிட, அதில் தமிழில் எழுதினால் போதும் என்று நினைக் கிறார்கள்.

நம்மைச் சுற்றி நிற்கும் பிரச்சினைகளை நாம் எப்படிப் பார்க்கிறோம் என்பது முக்கியம். சுற்றுச் சூழல் பிரச்சினையானாலும், சமூகப் பிரச்சினை யானாலும் அதற்கான தத்துவக் காரணங்கள், நடை முறை காரணங்கள், தற்காலிகத் தீர்வுகள், நிரந்தரத் தீர்வுகள் அனைத்தையும் ஆய்வுக்குட்படுத்தி, அந்தப் பிரச்சிகளை சமூகப் பார்வையில் எப்படி அணுகுவது என்பதுதான் பகுத்தறிவு!

திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பார்வையில் செயல்படத் தொடங்கியிருக்கிறது. பார்ப்பனியத்தின் ஜாதி, தீண்டாமை, இந்துமத எதிர்ப்பு என்ற கொள்கைகளோடு திராவிடர் விடுதலைக் கழகம் , தனது செயல்பாடுகளை நிறுத்திக் கொள்ளாமல், பன்னாட்டு உலகமயமாக்கல் சுரண்டலையும் எதிர்க்கத் தொடங்கியிருப்பதுதான் பார்ப்பன மேலாதிக்கத்துக்கு அதன் சுரண்டலுக்கு தரும் சரியான நெருக்கடியாகும். பெரியாரியத்தின் அடுத்தக் கட்ட நகர்தலை தீவிரப்படுத்தும்போது, அது பார்ப்பனியத்துக்கு கடும் சவாலாகவே இருக்கும். இதைப் புரிந்து, பெரியாரியலை வளர்த்தெடுக்கும் பார்வையைக் கொண்டிருக்கும் ஒரே அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று நான் உறதியாகக் கூறுவேன். பெரியார் இந்த நாட்டின் மக்கள் விடுதலைக் கண்ணோட்டத்தில் இயல்பான தமிழ் தேசியத்தை முன் வைத்தார். ஆனால், இதைப் புறந்தள்ளிவிட்டு, மொழியை மட்டுமே முன்னிறுத் தும் இறக்குமதி தமிழ் தேசியத்தைப் பேசும் சில அமைப்புகள், பெரியாரை விமர்சிக்கவும், அவரை மக்களின் எதிரியாகவும் சித்திரிக்க முயலுகின்றன. இந்த முயற்சிகள் பார்ப்பனிய ஜாதி சமூக கட்டமைப்பைத் தகர்ப்பதற்குப் பயன்படப் போவது இல்லை, என்றார் முனைவர் ஜீவா.

நமது  செய்தியாளர்

பெரியார் முழக்கம் 02012014 இதழ்

You may also like...