வினாக்கள்… விடைகள்…!

தில்லை தீட்சதர் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிட முடியாது.  – உச்சநீதிமன்றம்

சரி; அப்படியானால், அரசு நிறுவனமான நீதிமன்றம் தலையிடு வதும், வழக்கை விசாரித்து, தீர்ப்பு வழங்குவதும் நியாயமா?

திருநாவுக்கரசர், திருஞானசம் பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் போன்ற சைவக் குரவர்கள் பாடல் பெற்ற திருத்தலம் தில்லை.  – செய்தி

அது அந்தக் காலம். இப்போது தீட்சதர்கள் மட்டுமே பாடலாம்; ஓதுவார்கள் நுழைந்தால் அடி, உதை!

பொது தீட்சதர்கள் சபைக்கு தலைவரே, தில்லை நடராசன் தான்.  – தீட்சதர்கள் வாதம்

தலைவர் பதவி வேண்டாம்; பொரு ளாளர் பதவியைக் கொடுத்து விடுங்கள்; உண்டியல் பணம், நகைகள் திருட்டுப் போனால் தீட்சதர்களை நோக்கி எவனும் கேள்வி கேட்க முடியாது?

அறநிலையத் துறை சட்டத்தின் கீழ் தில்லை நடராஜன் கோயில் வராது.  – உச்சநீதிமன்றம்

அதேபோல், இந்திய அரசியல் சட்டம், இந்திய கிரிமினல் சட்டத்தின் கீழ் தீட்சதர்களும் வர மாட்டார்கள் என்பதையும் இப்போதே உறுதி செய்து விடுங்கள்.

ஒரு வேளை நிர்வாகத் தவறு களுக்காக அரசு தலையிட்டால், அந்தத் தவறைத் திருத்திய உடனேயே நிர்வாகத்தை மீண்டும் தீட்சதர்களிடம் ஒப்படைத்து விட வேண்டும்.  – உச்சநீதிமன்றம்

ஆமாம்! உடனடியாக தீட்சதர் களிடம் ஒப்படைக்காமல், அரசே, நிர்வாகத்தைத் தொடர்ந்து எடுத்துக் கொண்டால், தீட்சதர்கள் தவறு செய்வதற்கான உரிமைகளைப் பறித்த ‘பாவத்துக்கு’ உள்ளாக நேரிடும்!

தீட்சதர்கள் பட்டாசு வெடித்து வெற்றியைக் கொண்டாடி னார்கள்.         – செய்தி

நன்றி மறந்த செயல். தீர்ப்புக்கு உதவிய தமிழக ஆட்சியாளர்களை வெற்றிக் கொண்டாட்டத்தில் சேர்த்துக் கொள்ளாமல் ஒதுக்கி விடலாமா?

நாங்கள் நடராசருக்கு செய்த உண்மையான பூஜைக்கு அவர் எங்களுக்கு தந்த பரிசு இந்தத் தீர்ப்பு. – தீட்சதர்கள் பேட்டி

நடராசன், பரிசை நேரடியாகவே கொடுத்திருக்கலாம். உயர்நீதி மன்றத்தில் பரிசை தடுத்து வைத்து, உச்சநீதிமன்றம் வரை இழுத் தடித்து வழங்கியிருக்க வேண் டாமே!

தில்லை நடராசன் கோயிலே தீட்சதர்களின் சொத்துதான்.    -பார்ப்பன சங்கத் தலைவர்  நாராயணன்

அப்படிப் போடுங்க! அடுத்து தில்லை நடராசன் வாழும் ஊரே, தீட்சதர்களின் சொத்து என்று பட்டா கேட்டு போராடுங்க!

பெரியார் முழக்கம் 09012014 இதழ்

You may also like...