‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது.

திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார்.

உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம்.

“வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார்.

சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள் இரண்டும் அவ்வப்போது தளர்ந்துபோகும் நேரங்களில் கைகள் தாமாகவே அவற்றை இறுக்கி விடுகின்றன. நாய் ஒன்று வீட்டுக்குள்ளேயே குறுக்கும் நெடுக்கும் அலைகிறது. சிற்சில சமயங்களில் பலமாகக் குரைத்து வீட்டையே அதிர வைக்கிறது. பெரியாரின் பேச்சு எதனாலும் தடைபடவே இல்லை.

“ஆனந்த விகடன் பத்திரிகையிலிருந்து வந்திருக்கோம்.”

“தெரியுமே. வாசன் அவங்களை எனக்கு ரொம்பக் காலமாகத் தெரியும். நான் ‘குடிஅரசு’ பத்திரிகை ஆரம்பிச்ச காலத்திலே அடிக்கடி சந்திச்சுக்குவோம். ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தியும் என்கிட்டேதான் கதர் போர்டிலே கிளார்க்கா இருந்தார். ரொம்ப யோக்யமானவரு. கதர் போர்டு ஆட்டம் கொடுத்ததும், நான்தான் திரு.வி.க.வுக்கு கடுதாசி கொடுத்தனுப்பிச்சேன். ‘நவசக்தி’யிலே சேர்ந்து கொஞ்ச நாளைக்கு வேலை செஞ்சாரு. அப்புறம்தான் விகடன்லே சேர்ந்துட்டார்.”

“ராஜாஜியோடு தங்களுக்குப் பழக்கம் ஏற்பட்டது எப்போது?”

“அதுவா? அந்தக் காலத்துலே ஈரோட்லே பி.வி. நரசிம்மய்யர்னு எனக்கு ரொம்ப வேண்டிய வக்கீல் ஒருத்தர் இருந்தார். ஈரோட்லே நான் சேர்மனா இருந்தப்போ, குடியானவங்க வழக்கெல்லாம் என்கிட்டே நிறைய வரும். அந்த கேஸ் எல்லாம் அவருக்கு அனுப்புவேன். யாருக்கு? நரசிம்மய்யரு(க்கு. நான் சேர்மனா வர்றது சில பேருக்குப் பிடிக்கலே. பொறாமையினாலே எம் பேரிலே கலெக்டருக்கு பெட்டிஷன் எழுதிப் போட்டாங்க. சேர்மன் பதவின்னா இப்ப மாதிரி  எலெக்ஷன்ல ஜெயிச்சதும் நேராப் போயி சேர்ல உட்கார்ந்துட முடியாது. கலெக்டர் சிபாரிசு செய்யணும்னு வெச்சிருந்தாங்க. அந்தச் சமயத்துலே சர். பி.ராஜகோபாலாச் சாரிங்கிறவர் சப்-கலெக்டரா இருந்தார். அவருக்கு என்னைப் பத்தி நல்லாத் தெரியுமானதாலே, பெட்டிஷனைப் பொய்னு தள்ளிட்டு என்னை சேர்மனாக்கிவிட்டார்.”

“ஆமாம். அந்த மாதிரி உங்களைப் பற்றித் தவறா பெட்டிஷன் எழுதிப் போட்ட ஆசாமி யார்?”

“சீனிவாச முதலின்னு ஒரு வக்கீல். ஒரு நான் பிராமின் வக்கீலாயிருக்காரே, முன்னுக்குக் கொண்டாருவோம்னு நான்தான் அவரை முன்னுக்குக் கொண்டுவந்தேன். ஆனால், அவரே என் பேரில் பெட்டிஷன் கொண்டு வந்தார். அப்ப ராஜ கோபாலாச்சாரி சேலத்துலே வக்கீல். கெட்டிக்கார வக்கீல்னு சொல்வாங்க. அதனாலே என்கிட்டே வர்ற கேஸெல்லாம் அவருக்கு அனுப்பி வைப்பேன். அந்தப் பழக்கத்துலே அவர் வரப்போக இருந்தாரு. எங்க வூட்டுக்கு அடிக்கடி வருவார். அவரும் அப்ப சேலத்துலே சேர்மன்.”

“எந்த வருஷம் அது?”

“தொள்ளாயிரத்துப் பத்தொன்பதுனு ஞாபகம்…”

“வரதராஜுலு நாயுடு கேஸ் சம்பந்தமா அவர் மதுரைக்குப் போறப்ப நீங்களும் கூடப் போறது உண்டு இல்லையா?”

“ஆமா; போயிருக்கேன். ‘நீ சேர்மன் பதவியை விட்டுட்டு காங்கிரஸ்ல சேர்ந்துடு. நானும் விட்டுடறேன். ரெண்டு பேரும் சேர்ந்து பொதுப் பணி செய்யலாம்’னார். வரதராஜுலு நாயுடுவும் வற்புறுத்தினார். சரின்னு விட்டுட்டேன். அப்ப காங்கிரஸ் சத்தியமூர்த்தி ‘குரூப்’ கையிலே இருந்தது. அமிர்தசரஸ் காங்கிரசின்போது காங்கிரஸ் பிளவுபட்டு ரெண்டு குரூப்பாப் பிரிஞ்சுட்டது. சத்திய மூர்த்தி, ரங்கசாமி ஐயங்கார், திலகர் இவங்க ஒரு ‘குரூப்’… காந்தி, ராஜகோபாலாச்சாரி, டாக்டர் ராஜன் இவங்களெல்லாம் ஒரு ‘குரூப்’’.

நான் காங்கிரஸ்ல சேர்ந்ததே அமிர்தசரஸ் காங்கிரசுக்கு அப்புறம்தான். அதுவரைக்கும் ராஜகோபாலாச்சாரியும் நானும் நண்பர்கள்தான். அப்புறம்தான் சேர்ந்து வேலை செஞ்சோம்.”

“அதுக்கப்புறம் என்ன ஆச்சு?”

“எங்க நட்பு வளர்ந்தது. காங்கிரசும் வளர்ந்தது. எங்களுக்குள்ளே ஒற்றுமையாயிருந்தோம். நான் கோவை ஜில்லா காங்கிரஸ் காரியதரிசி. அப்பவெல்லாம் செகரெட்டரி தான்; பிரசிடென்ட் கிடையாது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வந்தது. அப்பவும் நான்தான் செகரெட்டரி.”

“ஆமாம்; ராஜாஜி உங்களை எதுக்கு காங்கிரஸுக்கு இழுத்தார்?”

“ஐஸ்டிஸ் பார்ட்டிக்கு எதிரா காங்கிரஸ் வளர்றதுக்கு காங்கிரஸ்ல நான் பிராமின்ஸ் இருக்காங்கன்னு காட்டிக்க வேண்டியிருந்தது.

“உங்களோடு வேறு யாரும் இல்லையா?”

“இருந்தாங்க… திரு.வி.க.வும் வரதராஜுலு நாயுடுவும் இருந்தாங்க. எங்க மூணு பேரையும்தான் எந்தக் கூட்டத்துலேயும் முதல்லே பேச விடுவாங்க. வரதராஜுலு நாயுடு பேச்சில் வசவு இருக்கும். திரு.வி.க. பேச்சு தித்திப்பா இருக்கும். நல்ல தமிழ் பேசுவார். என் பேச்சில் பாயின்ட் இருக்கும். பாயின்ட்டாப் பேசி கன்வின்ஸ் பண்ணுவேன். நாங்க மூணு பேரும் பேசினப்பறம்தான், சத்தியமூர்த்தி, ராஜகோபா லாச்சாரி எல்லாம் எழுந்து பேசுவாங்க.”

“இந்த ‘பிராமின்-நான்பிராமின்’ தகராறு முதல் முதல் எப்ப ஏற்பட்டது?”

“எப்படி வந்தது வினைன்னா – வ.வே.சு. ஐயரால் வந்தது. சேரன்மாதேவியில் ‘நேஷனல் காலேஜ்னு’ ஒண்ணு ஆரம்பிச்சு, வீரர்களை உற்பத்தி செய்யப் போறதாச் சொன்னாங்க. பரத்வாஜ் ஆசிரமமோ என்னவோ அதுக்குப் பேர். அந்த குருகுலத்துக்கு எல்லாரும் ஆதரவு கொடுத்தாங்க. சிங்கப்பூர், மலேயாவில் இருந்தெல்லாம் பணம் வசூல் செஞ்சாங்க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியிலே யிருந்தும் பணம் கேட்டாங்க. நான் அப்ப தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செகரெட்டரி. ராஜாஜி ‘நாயக்கரைக் கேளு’ன்னுட்டார். வ.வே.சு. ஐயர் வந்து உட்கார்ந்துக்கிட்டு இருபதாயிரம் வேணும்னார். நான், ‘முதல்லே பத்தாயிரம் இருக்கட்டும், அப்புறம் பார்க்கலாம்னு’ சொன்னேன். ராஜாஜி சரின்னுட்டார்.”

வ.வே.சு. ஐயர் அன்னிக்கு சாயந்திரமே பணம் வேணும்னு அவசரப்படுத்தினார். ஐயாயிரம்தான் கொடுத்தனுப்பிச்சேன்..

“பத்தாயிரம் இருக்கட்டும்னு சொன்னீங் களே…”

“ஆமாம்; அப்படித்தான் சொன்னேன். ஆனா, எனக்கென்னவோ சரியாப்படலே. அதனாலே ஐயாயிரம்தான் கொடுத்தேன். நான் சந்தேகப்பட் டதுக்குத் தகுந்தாப்பலேயே காரியம் நடந்துட்டுதே!”

“என்ன ஆச்சு?”

“முதல் மந்திரியாயிருந்தாரே ஓ.பி.ஆர். ரெட்டியார்….” (ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்)

“ஆமாம்…”

“அவர் மகன் அந்தக் குருகுலத்துலே படிச்சுட்டிருந்தான். அடுத்த மாசமே அவன் வந்து கம்ப்ளெய்ன்ட் சொன்னான். ‘என்னடா?’னு கேட்டோம். ‘குருகுலத்துலே பார்ப்பனப் பிள்ளைங் களையும் எங்களையும் வித்தியாசமா நடத்துறாங்க. அவங்களுக்கு இலை போட்டு சாப்பாடு. எங்களுக்கு பிளேட். அவங்களுக்கு உப்புமா. எங்களுக்கு பழைய சோறு. அவங்க உள்ளே படுக்கணும். நாங்க வெளியே படுக்கணும். அவங்களுக்கு ஒரு பிரார்த்தனை. எங்களுக்கு ஒரு பிரார்த்தனை’னான். அவ்வளவுதான். ஜாதி வேற்றுமையை வளர்க்கிற குருகுலத்துக்கு இனி பணம் கிடையாதுன்னுட்டேன். அத்தோடு இந்த சங்கதியைப் பற்றி ராஜகோபாலாச்சாரிக்குத் தெரியப்படுத்தினேன். அவர் உடனே வ.வே..சு. ஐயரைக் கூப்பிட்டு விசாரிச்சாரு. ‘என்ன இது? காலம் என்ன? இதான் தேசியமா? தேசாபிமானமா? கொஞ்சம்கூட நல்லாயில்லேனு கோபிச்சுக்கிட்டார்.”

“வ.வே.சு. ஐயர் அதுக்கு என்ன சொன்னார்?”

“என்ன சொன்னாரு! ‘நான் என்ன செய்யட்டும்? குருகுலம் ஆரம்பிச்சிருக்கிற இடம் ஒரு வைதீக சென்டர். அதனாலே அந்த இடத்துல அப்படி நடக்க வேண்டி வந்துட்டுதுனு’ சமாதானம் சொன்னார். அப்ப ரெண்டு ஜாயின்ட் செகரெட்டரிங்க. கே.எஸ். சுப்பிரமணியம்னு கடையத்துக்காரர் ஒருத்தர். அவர் ஒரு செகரெட்டரி. வ.வே.சு. ஐயர், எனக்குத் தெரியாம அவர் கிட்டே போய் இன்னொரு ஐயாயிரத்துக்கு செக்கை வாங்கிட்டுப் போயிட்டார். அதுக்குப் பின்னாலே ஒரு  மாசம் கழிச்சுத்தான் இந்த சங்கதி அம்பலத்துக்கு வந்தது.”

“கடையத்துக்காரர் எப்படி செக் கொடுக்கலாம்?”

“செகரெட்டரி டு சைன்ங்கிறது ரெசல்யூஷன். கடையத்துக்காரர் ஒரு செகரெட்டரிங்கிறதால, அவர் கிட்டே தந்திரமா கையெழுத்து வாங்கிட்டுப் போயிட்டார்.”

“அந்தக் கடையத்துக்காரர் இப்போ எங்கே இருக்காரு?”

“அவரா! அவர் அப்ப எடுத்த ஓட்டம் தான். அப்புறம் எங்கே போனாரோ? ஆசாமி திரும்பி வரலே.”

ராஜாஜிக்கு அப்பவே எல்லாம் புரிஞ்சு போச்சு, கோளாறுன்னு வந்துட்டுதுன்னு. அதுக்கப்புறம் நான் சும்மா இருக்க முடியுமா? அந்த விஷயத்தை ஒரு முக்கியப் போராட்டமா எடுத்துக்கிட்டேன். அதுக்கு சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்னு பேர். டாக்டர் வரதராஜுலு நாயுடு, திரு.வி.க. இவங்க ரெண்டு பேரும் எனக்கு ஆதரவு கொடுத்தாங்க. வரதராஜுலு நாயுடுவே இந்தப் போராட்டத்தை நடத்தினார்.  குருகுலம் ஒழிஞ்சது.”

“ராஜாஜி உங்க போராட்டத்தில் சேர்ந் தாரா?”

“சொல்லிக்கிட்டு வர்றேனே கேளுங்க… வரதராஜுலு நாயுடு காங்கிரஸ் கொள்கைக்கு விரோதமா வகுப்பு உணர்ச்சியைத் தூண்டுற மாதிரி நடந்துக்கிறார்னு அடுத்த கமிட்டி மீட்டிங்ல ராஜாஜி ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். எனக்கு அது சரியாப்படலே. வோட்டுக்கு விட்டாங்க. ஈக்வல் ஓட்டாச்சு. நான் தலைவன்கிற முறையில் ஒரு வோட்டைப் போட்டு ராஜாஜி தீர்மானத்தைத் தோற்கடிச்சேன். ராஜாஜி ராஜினாமா பண்ணிட்டார். என்.எஸ்.வரதாச்சாரி, சாமிநாதன் சாஸ்திரி, டாக்டர் ராஜன், கே. சந்தானம், ஹாலாஸ்யம் இவங்களெல் லாம் ராஜாஜி பக்கம் சேர்ந்துட்டாங்க. நான், ஓமந்தூர் ராமசாமி செட்டியார், வரதராஜுலு நாயுடு எல்லாம் ஒரு பக்கம். எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேற்றுமை பச்சையா நான் கண்டிக்கிற அளவுக்கு வளர்ந்துட்டுது…”

“க்ளிக்!” போட்டோகிராபர் படமெடுத்துக் கொள்கிறார்.

இந்தச் சமயம் கறுப்புச் சட்டை அணிந்த இளைஞர் பெரியசாமி, காபி கொண்டுவந்து எங்கள் முன் வைக்கிறார். நானும் நண்பர் மணியனும் அந்தக் காபியை எடுத்து அருந்துகிறோம்.

“சாதி வேற்றுமையெல்லாம் இப்போ ரொம்பக் குறைஞ்சுபோச்சு. முப்பது வருஷங்களுக்கு முன்னாலே பிராமணர்கள் யாராவது உங்க வீட்டில் இந்த மாதிரி வந்து சாப்பிட்டிருக்காங்களா?” – இவ்வாறு நான் கேட்டதும் பெரியார் ஒரு கணம் என்னை உற்றுப் பார்க்கிறார்.

“வெங்காயம்! அதுக்கு இத்தனை வருஷமா நான் செய்துக்கிட்டு வர்ற பிரச்சாரம்தான் காரணம். இன்னும் ரொம்ப மாறணும். புத்தனுக்கு அப்புறம் பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்தவன் யாரு? நான் ஒருத்தன் தானே!”

உணர்ச்சியுடன் பேசிக் கொண்டிருக்கும் பெரியாரின் கைகள், தளர்ந்துவிட்ட வேட்டியின் முடிகளைத் தாமாகவே  இறுக்கிக் கட்டுகின்றன.

“அந்தக் காலத்துல எங்க வீட்டுக்கு ஒரு ஐயர் வருவார். எங்க அம்மா ரொம்ப ஆசாரம். ஒருநாள் அந்த ஐயர் தாகத்துக்குத் தண்ணி வேணும்னு கேட்டார். குடுத்தோம். அந்த தண்ணியைக் குடிக்க வேண்டியது தானே? கொஞ்சம் மோர் இருக்குமானு கேட்டார். மோர் கொண்டுவந்து கொடுத்தோம். அந்தத் தண்ணியிலே கொஞ்சம் மோரை ஊத்திக் குடிச்சாரு. அந்த மோர், அந்தத் தண்ணியைச் சுத்தப்படுத்திட்டுதாம். அதெப்படி சுத்தப்படுத்தும்? தண்ணி எங்க வூட்டுது. மோரும் எங்க வூட்டுது. எங்க வூட்டு மோர், எங்க வூட்டுத் தண்ணியைச் சுத்தப்படுத்திடுமா?” – சிரிக்கிறார் பெரியார்.                                                          (அடுத்த இதழில்)

பெரியார் முழக்கம் 13022014 இதழ்

You may also like...