வினாக்கள்… விடைகள்…!

‘அம்மா’தான் பிரதமராக வேண்டும் என்பது “ஞானசம்பந்த சாமி”களின் கட்டளை. அவர் என் கனவில் வந்து கூறிவிட்டார்.          – மதுரை ஆதினம்.

கனவில் வந்த ‘ஞானசம்பந்தனும்’ ஹெலி காப்டரில்தான் வந்தானா, ‘சாமி’?

அரசியல் சட்டத்துக்கு உட்பட்டு, அயோத்தியில் இராமன் கோயில் கட்டுவோம்.    – பா.ஜ.க. தேர்தல் அறிக்கை

புரியம்படி கூற வேண்டுமானால், “சட்டத்துக்கு உட்பட்டு” எப்படி பாபர் மசூதியை இடித்துத் தள்ளினோமோ, அதேபோல்! சரியா?

காந்தி சமாதியில் ‘மவுன விரதம்’ நடத்த கெஜ்ரிவால், தனது ஆதரவாளர்களுடன் கூடியது சட்ட விரோதம்.  – தேர்தல் ஆணையம் நோட்டீஸ்

விடாதீங்க! தேசத் தந்தை சமாதியில் ‘மவுன விரதம்’ இருப்பதும், மக்கள் கூடுவதும், சட்ட விரோதம் மட்டுமல்ல, ‘தேசத்துக்கே விரோதம்’. இதையெல்லாம் அனுமதிக்கவே முடியாதுங்க…

தேர்தலில் ஓட்டுப் போட்டவர்கள் அடையாள ‘மை’யை காட்டினால், மருத்துவ கட்டணம், பெட்ரோல் விலையில் சலுகை. – செய்தி

தேர்தலில் ஓட்டுப் போடுவதற்கே ‘லஞ்சம்’ வந்துடுச்சா… கிழிஞ்சுது போங்க…

40 ஆண்டுகளுக்குப் பிறகு, தனக்கு திருமணமாகி மனைவி இருப்பதை மோடி ஒப்புக் கொண் டுள்ளார்.     – செய்தி

ஒரு உண்மையை ஒப்புக் கொண்டாச்சு. இனப் படுகொலையை நடத்திய உண்மையை எப்போ ஒப்புக் கொள்வீங்க?

தேர்தலையொட்டி கருப்புப் பணம் புழக்கத்தில் வரலாம். கண்காணிக்க அதிகாரிகள் எச்சரிக்கை.   – செய்தி

கருப்புப் பணம் மக்களிடம் புழக்கத்துக்கு வருவதே தேர்தல் காலத்தில்தான். அதையும் விட மாட்டீங்க….

பா.ஜ.க. வேட்பாளர்களுக்கும் அ.தி.மு.க. வேட் பாளர்களுக்கும் வாக்களியுங்கள்! பா.ஜ.க.வின் கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாம்! – ‘துக்ளக்’ சோ

ஆக, பா.ஜ.க. வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் கூட்டணி கட்சிக்காரர்களின் ஓட்டுகள் விழுந்து விடாமல் தடுத்து, பா.ஜ.க.வை தோற்கடிக்க ‘சோ’ ஆசைப்படுகிறார் போல! நல்ல மனசு!

நாட்டில் மோடி அலை வீசவில்லை; பா.ஜ.க. அலை தான் வீசுகிறது!  – பா.ஜ.க. தலைவர்  முரளிமனோகர் ஜோஷி

அலை வீசுதோ, இல்லையோ! மோடிக்கு எதிராக பா.ஜ.க.வுக்குள் புயல் சுழன்று சுழன்று அடிக்குது!

45 நாட்கள் மீனவர்கள் மீன்பிடிக்க போக மாட்டார்கள். ‘மீன்பிடி தடைக்காலம்’ அமுலுக்கு வந்தது.   – செய்தி

அப்பாடா! நிம்மதி. தமிழக மீனவர்கள் சிங்களர் களால் தாக்கப்படும் செய்தியும் 45 நாட்களுக்கு வராது!

தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரம்!    – பத்திரிகை செய்தி

பிரச்சாரம் இல்லாவிட்டாலும் கோடையில் அனல் தாங்க அடிக்கும்! ஏங்க, இப்படி காதுல பூ சுத்துறீங்க….

அம்பேத்கர் இல்லாமல் போயிருந்தால் என்னைப் போன்றவர்கள் இன்றைக்கு உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்க முடியாது.  – மோடி பேச்சு

உண்மைதான். இதற்காகத்தான் இந்துமதத்தை ஒழிக்கச் சொன்னார் அம்பேத்கர்! அது புரியாமல், ‘இந்து ராஜ்யம்’ அமைக்கக் கிளம்பியிருப்பது, அம்பேத்கருக்கு துரோகம் இல்லையா? ஓட்டுக்கு அம்பேத்கர்; கொள்கைக்கு ஆர்.எஸ்.எஸ்ஸா?

இந்த “தமிழ் புத்தாண்டு” நாளில் நாட்டு மக்களுக்கு ‘வரங்களை’ அள்ளித்தர வேண்டும் என்று ‘லட்சுமி தேவி’, ‘சரசுவதி தேவி’யை மன்றாடி கேட்டுக் கொள்கிறேன். – சென்னையில் மோடி பேச்சு

என்ன புரியாம பேசுறீங்க மோடி! தேர்தல் காலத்தில் அப்படி எல்லாம் ‘தேவிகள்’ ‘வரங்களை’ வாரி வழங்க முடியாது. அதற்கு தேர்தல் ஆணையத்தின் அனுமதி வேண்டும்.

தி.மு.க., அ.தி.மு.க., தே.மு.தி.க., பா.ஜ.க., காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளும், ஓட்டுக்குப் பணம் தருவதை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் தனித்தனியாக வலியுறுத்தின.   – செய்தி

அதாவது, தங்கள் கட்சியைத் தவிர மற்ற கட்சிகள் பணம் தருவதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தவே தனித்தனியாக போயிருக் கிறார்கள் போல! நியாயம் தானே!

பெரியார் முழக்கம் 17042014 இதழ்,

You may also like...