கிராம சீர்திருத்தம் என்பது புரட்டு கிராமங்கள் அழியவேண்டும்

முன்னுரை

தோழர்களே!

கிராம உத்தியோகஸ்தர்கள் ஸ்பெஷல் டெக்ஸ்ட் பயிற்சி சாலையின் 6வது ஆண்டு விழாவிற்குத் தலைமை வகிக்கும்படியான கௌரவத்தை எனக்கு அளித்ததற்கு நான் இதன் முக்கியஸ்தர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.

நீங்கள் முதலில் எதிர்பார்த்தபடி இவ்வாண்டு விழாவிற்கு ஒரு ரெவின்யூ அதிகாரி தலைமை வகித்திருந்தால் மிகவும் பொருத்தமாய் இருந்திருக்கும். ஏதோ எதிர்பாராத காரணத்தால் அவர்கள் வர முடியாமல் போனதால் எதிர்பாராத நிலைமையில் என்னைத் திடீரென்று பிரேரேபித்து விட்டீர்கள். உங்கள் ஆண்டு விழாவில் பேசுவதற்கு எனக்கு மிகவும் ஆசைதான். நான் இதை ஒரு நல்ல சந்தர்ப்பமாகவும் கருதுகிறேன். ஆனால் ஒரு உபன்யாசகராய் இருந்தால் எவ்வளவு சுதந்திரமாய்ப் பேசுவேனோ அவ்வளவு தலைவன் என்கின்ற முறைமையில் பேசுவதற்கு முடியாது. ஏனெனில் தலைமை வகிப்பவருக்கு சில பொறுப்புகளும் கடமைகளும் உண்டு. உபன்யாசகர்களின் சொற்பொழிவுகளையும் அபிப்பிராயங்களையும் தலைவர் மறுக்கவோ கண்டிக்கவோ செய்வது தர்மமாகாது.

ஏனெனில் தலைவர் முடிவுரை கூறியபின் உபன்யாசகர்களுக்கு சமாதானம் சொல்ல சந்தர்ப்பமில்லை அல்லவா?

அன்றியும் நீங்களும் சில நிர்ப்பந்தங்களுக்குக் கட்டுப்பட்டவர் களாவீர்கள். ஆகையால் நான் இப்போது பேசப்போகும் உபன்யாசகர்களின் அபிப்பிராயங்களைத் தழுவி சில வார்த்தைகள் பேசி விட்டு என் அபிப்பிராயமாக சில வார்த்தை முடிவுரையில் சொல்லிவிட்டு இவ்விழாவை முடிவுக்குக் கொண்டு வருகிறேன்.

~subhead

முடிவுரை

~shend

தோழர்கள் கரூர் கே. வேலாயுதம் அவர்கள் “கிராம முன்னேற்றத்துக்கு ஆன வழி” என்பது பற்றிப் பேசினார்.

பிறகு இந்த ரேஞ்சு டிப்டி இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல் தோழர் துரைசாமி பிள்ளை அவர்கள் “கிராமக் கல்வி” என்பது பற்றிப் பேசினார். இருவர் பேசியதும் ஏறக்குறைய எல்லாம் என் அபிப்பிராயத்தை தழுவுவதேயாகும். அவர்கள் இரண்டு முக்கிய விஷயங்களைப் பற்றியும் நன்றாய் கையாண்டு இருக்கிறார்கள். அவற்றிலிருந்து நானும் பல விஷயங் களைக் கற்றுக்கொண்டிருக்கிறேன் என்று சொன்னால் அது மிகையாகாது. கிராமாதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் என்பது பற்றி நான் சில வார்த்தைகள் சொல்லவேண்டும் என்றும் என்னை கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்.

ஆனால் நான் தலைவன் என்கின்ற முறையில் உபன்யாசகர்களை அறிமுகப்படுத்தி விட்டு உபன்யாசகர்களை எடுத்துக்கொண்ட விஷயத்துக் குள்ளும் குறிப்பிட்ட நேரத்துக்குள்ளும் பேசும்படி பார்த்துக்கொள்ளுவதே தலைவரின் நியாயமான கடமையாகும்.

ஆகையால் எல்லாவற்றையும் கவனித்து, நான் பேசவேண்டுமென்று நீங்கள் எதிர்பார்ப்பதையும் சேர்த்து முடிவுரையாக சில வார்த்தை பேசுகிறேன். அவற்றை நீங்கள் ஒருவருடைய அபிப்பிராயமாகக் கொள்ளவேண்டுமே ஒழிய ஒரு உபதேசமாகக் கொள்ளாதீர்கள் என்று உங்களை முதலில் கேட்டுக்கொள்கிறேன்.

தோழர்களே!

கிராமாதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் ஆகிய இரு கூட்டத்தார்கள் அவர்களது தொழிலின் காரணமாக அடிமைகளேயாவார்கள். ஏனெனில் இருவர்களும் அரசியல் முறைப்படி இரு இலாக்காவின் கடசி தர அடிமைகள்.

விளக்கமாகச் சொல்லவேண்டுமானால் கிராமாதிகாரிகள் “தலைவிதி” தாசீல்தார், ரிவின்யூ டிவிஷன் ஆபீசர் முதலியவர்களுடைய பேனா முனையில் அடங்கி உள்ளதாகும். இந்த கிராமாதிகாரிகளுடையது மாத்திரமல்லாமல் இவர்களது பின் சந்ததிகளுடைய “தலைவிதி”யும் அது போன்றதேயாகும். கிராமாதிகாரிகள் சர்க்கார் உத்தியோகஸ்தர்களுக்கு முறிச் சீட்டு எழுதிக்கொடுத்த அடிமை என்று சொன்னால் மறுப்பதற்கு போதிய காரணங்கள் கிடையாது. அது போலவே ஆரம்ப ஆசிரியர்கள் தலையெழுத்தும் இன்ஸ்பெக்டர் ஆப் ஸ்கூல், ஜில்லா போர்ட் பிரசிடெண்ட், சேர்மென் ஆகியவர்கள் கை பேனா முனையில் தான் இருக்கிறது என்பது என் அபிப்பிராயம். இவர்களுக்கு அளிக்கப்படும் நற்சாட்சிப் பத்திரங்கள் எல்லாம் நல்ல நிபந்தனை இல்லாத அடிமைகளா என்பதைப் பொருத்ததே தவிர இவர்களின் நடத்தையையோ சாமார்த்தியத்தையோ பொருத்தது என்று அடியோடு சொல்லிவிட முடியாது.

ஆனால் இவர்கள் மேல் அதிகாரிகளால் யோக்கியமாய் கையாளப் படுவார்களேயானால் இவர்களும் நல்ல யோக்கியர்களாகவும் கெட்டிக்காரர் களாகவும் அமைவார்களானால் இவர்களால் ஜன சமூகத்துக்கு எவ்வளவோ நன்மை செய்ய வசதி இருக்கிறது. இவர்களது நிலைமை அடிமைத் தன்மையானது என்றாலும் இவர்களது பதவி நல்ல பொறுப்பும் பயனும் உள்ளது என்பதை நான் அழுத்தம் திருத்தமாய்ச் சொல்லுவேன் இவர்கள் புது உலகத்தை சிருஷ்டிக்கலாம். கிராமாதிகாரி என்பவர் கிராம மக்களுக்கு தகப்பனார் ஆவார். சிட்டி பாதர் இடிtதூ ஊச்tடஞுணூ என்பது போல் இவர்கள் ஙடிடூடூச்ஞ்ஞு ஊச்tடஞுணூண் வில்லேஜ் பாதர்ஸ் ஆவார்கள். அதுபோலவே ஆரம்ப ஆசிரியர்களும் பிள்ளைகளுக்கு வெளிச்சத்தை கொடுத்து அந்த வெளிச்சத்திலேயே வாழ்நாள் முழுதும் நடக்கும்படி செய்யக் கூடிய ஒரு உயர்ந்த தச்சன் ஆவார்கள். இவர்கள் இருவர்களும் இன்றைய உலக வாழ்வில் ஒரு முக்கியமான ஸ்தானம் வகிப்பவர்களாவார்கள்.

தோழர் வேலாயுதம் அவர்கள் இவ்விருவரும் கிராமத்தை எந்த எந்த வழியில் முன்னுக்குக் கொண்டு வரலாம் என்பதைப்பற்றி பலவழிகள் சொன்னார்கள் என்றாலும் நானும் ஒரு வழி சொல்லுகிறேன். அந்த ஒரே வழியின் மூலம் தான் கிராமங்களை முன்னுக்கு கொண்டுவரலாமே ஒழிய மற்ற எந்த வழிகளாலும் கிராமங்களை முன்னுக்குக் கொண்டு வர முடியாது என்பது என் அபிப்பிராயம்.

~subhead

கிராம முன்னேற்றம்

~shend

அந்த வழி என்ன வென்றால் நாட்டில் கிராமங்களே இல்லாமல் செய்து விடுவது தான். ஏனெனில் கிராமம் என்பது ஒரு வித வருணாச்சிரம தர்ம முறையில் கீழான ஜாதிக்கு சமமாய் இருப்பது. மேல் ஜாதியானுக்கு உழைத்துப்போட வேண்டியது எப்படி கீழ் ஜாதியானின் கடமையாக இருந்து வருகின்றதோ அதாவது கீழ்ஜாதியான் ஒப்புக்கொண்டாலும் ஒப்புக்கொள்ளாவிட்டாலும் ஜாதி முறையில் கட்டுப்பட்டு இருப்பதின் காரணமாகவே எப்படி கீழ் ஜாதியான் என்பவன் உழைப்பவனாகவும் மேல் ஜாதியான் என்பவன் அவ்வுழைப்பை அனுபவிப்பவனாகவும் தானாகவே இருந்துவர முடிகின்றதோ அது போலவே பட்டணங்கள் மேல் ஜாதியாகவும் கிராமங்கள் கீழ்ஜாதியாகவும் இருந்து வருகின்றன. எப்படி கீழ் ஜாதிக்காக எவ்வளவு தான் பாடுபட்டு அவர்கள் முன்னேற்றத்துக்கு ஆக நாம் எவ்வளவுதான் உழைத்தாலும் அவர்கள் அடியோடு ஜாதிமதத்தை விட்டு விட்டு வேறு மதத்திற்கு போய்விட்டால் ஒழிய அவர்களது கீழ்ஜாதித் தன்மை ஒழிவதில்லையோ அதுபோல் மேல்ஜாதித்தன்மையும் ஒழிவதில்லையோ அது போலவேதான் கிராமங்கள் அடியோடு ஒழிந்து கிராமவாசி என்கின்ற மதம் மாறி பட்டணவாசி நகர வாசி என்கின்ற மதக்காரன் ஆனால் ஒழிய கிராமவாசி கஷ்டம் ஒழியப்போவதில்லை.

ஆதலால் கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும் கிராம முன்னேற்றம் என்னும் துறையில் ஏதாவது உழைக்க வேண்டும் என்கின்ற ஆசை இருந்தால் அவர்கள் கிராம ஜனங்களையெல்லாம் நயத்திலோ பயத்திலோ பட்டணங்கள் நகரங்கள் ஆகியவைகளுக்குத் துரத்திவிடுவதேயாகும்.

கிராம முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய முன்னேற்றம் என்பதேயாகும்.

கிராம ஜனங்கள் முன்னேற்றம் என்றால் என்ன? கிராம ஜனங்களுடைய சவுக்கியமேயாகும்.

கிராம ஜனங்களுடைய சவுக்கியம் என்றால் என்ன? கிராம ஜனங்கள் பட்டணத்தில் உள்ள ஜனங்கள் அடைகின்ற சௌகரியங்களையும் சுகங்களையும் அடையவேண்டும் என்பதாகவே ஆக வேண்டும் அல்லவா?

அப்படிக்கில்லாமல் கிராமத்துக்கு இட்டேரி போட்டு ஒரு கிணறு வெட்டிக்கொடுத்து ஒரு பள்ளிக்கூடம் கட்டிவைத்து கம்பு இப்படி விதைக்கிறது, சோளம் இப்படி அறுக்கிறது, விறகு இப்படி உடைக்கிறது, ஆடுமாடு இப்படி மேய்க்கிறது, பால் வெண்ணெய் இப்படி எடுத்து நகரத்துக்காரனுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு போவது, சாணி இப்படி சேகரம் செய்வது, எருமுட்டை இப்படித் தட்டுவது, ஏர் இப்படி உழுவது, களை இப்படி எடுப்பது, தண்ணீர் இப்படிப் பாய்ச்சுவது, இப்படி அறுப்பது, அறுத்து பட்டணத்தானுக்கு இப்படிக் கொண்டுவந்து சேர்ப்பது என்பன முதலியவைகளை கிராம மக்களுக்குச் சொல்லிக்கொடுத்தால் போதுமா?

அதுபோலவே கைத்தொழில் விஷயத்திலும் இப்படிப் பஞ்சு அரைப்பது, இப்படிப் பஞ்சு கொட்டுவது, இப்படி ராட்டினத்தில் நூல் நூற்பது, இப்படி நூல் கொண்டுவந்து பட்டணத்தில் விற்றுவிட்டு உப்பு, மிளகாய், கடுகு, மிளகு, சீரகம் வாங்கிக்கொண்டு போவது என்பன போன்றவை சொல்லிக் கொடுத்தால் போதுமா?

இவற்றால் எல்லாம் கிராமவாசி சினிமா பார்க்க முடியுமா? நல்ல துணிமணி மேல்சட்டை போட முடியுமா? பார்க்கில் உலாவ முடியுமா? அவன் பெண்டு பிள்ளை கு.கு.ஃ.இ. இல்லாவிட்டாலும் தாய் பாஷையில் கையெழுத்துப் போடவாவது கற்றுக்கொள்ள முடியுமா? அல்லது கிராமவாசிகளுக்கு இந்த உரிமை, மனுவோ “கடவுளோ”பிறவியிலேயே கொடுக்கவில்லையா? சூத்திரன், முதல் மூன்று வருணத்தானுக்கு உழைக்கவே பிறந்தான், சூத்திரன் பணம் வைத்துக்கொண்டிருந்தால் பலாத்காரமாய் மேல்ஜாதிக்காரன் பிடுங்கிக் கொள்ளலாம் என்கின்ற மனுதர்ம சாஸ்திரம் போல் கிராமவாசி பட்டணவாசிக்கு உழைத்துப் போடவே பிறந்தான், கிராமவாசி பணம் வைத்துக் கொண்டிருந்தால் வக்கீலும் வியாபாரியும் லேவாதேவிக்காரனும் “கழுத்தைத்திருகி” பிடுங்கிக் கொள்ளலாம் என்று ஏதாவது, கினு சாஸ்திரம் இருக்கிறதா?

கிராமவாசியை மனிதன் என்று இன்று யாராவது மதிக்கிறார்களா? அவர்களின் வாழ்க்கை மிருக வாழ்க்கையை விட வேறு வழியில் மாற்றம் இருக்கிறதா?

இன்று இந்தியாவில் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள் என்றால் அந்த 8 பேர் யார்? கிராமவாசிகளுள்படவா விகிதாச்சாரம்? அவர்களிலும் 100க்கு 8 பேர் படித்து இருக்கிறார்கள்? மேல் ஜாதிக்காரர்கள் 100க்கு 100பேர், பட்டண வாசிகள் 100க்கு 50 அல்லது 60 பேர் ஆக இந்தக் கூட்டத்தாரின் எண்ணிக்கைப் பெருக்கத்தால்தான் எல்லா மக்களுக்கும் இந்தியாவில், 100க்கு 8 வீதம் கணக்கு ஆகிறதே தவிர கிராம வாசிகள் 100க்கு 2, 3 பேர் கூட படித்து இருக்கவில்லை.

ஒரு கிராமம் என்றால் ஒரு பணக்காரன் ஆதிக்கமும், மற்ற மக்களை அவன் அடக்கி ஆளுவதும் அந்த பணக்காரன் பட்டணத்தான்களுக்கு அடிமையாகி மற்ற கிராம ஜனங்களை அரித்துக் கொண்டு வந்து கொடுப்பதும் என்பதல்லாமல் வேறு என்ன நிலையில் கிராமம் இருக்கிறது என்று பாருங்கள்.

கிராமநிலை குப்பை மேடு, கக்கூஸ் ஜலதாரைநாற்றம், தரித்திரக்குச்சுகள் நோய் உருவங்கள், முட்டாள்தனமும் மூடநம்பிக்கையும் தாண்டவம் என்பவை போன்றவை அல்லாமல் வேறு என்ன காணமுடிகின்றது என்று நீங்களே யோசித்துப்பாருங்கள். நமது நாட்டு வரிகள் முழுவதும் கிராமவாசிகள் உழைப்பையே அஸ்திவாரமாய்க் கொண்டதாகும். அவர்களை நாம் மனுஷ வர்க்கத்தில் சேர்ப்பதில்லை. ஆனால் அவர்களுக்காகவே பாடுபடுகிறோம் என்று வேஷம் போட்டு நாம் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளுகிறோம். நமது சுயராஜ்யத்தாலோ, நமது பூரண சுயேச்சையாலோ, சமூக முன்னேற்றத்தாலோ, ராமராஜ்யத்தாலோ கிராமவாசிகளுக்கு ஏற்படும் நன்மை என்ன? இதுவரை ஏற்பட்டதென்ன என்று நீங்களே யோசித்துப் பாருங்கள். இந்திய காங்கிரஸ் சர்வாதிகாரியான அல்லது சூஸ்தரதாரியான தோழர் காந்தியாரின் கிராம முன்னேற்ற திட்டம் என்ன என்று பாருங்கள்.

“கிராமவாசிகள் பெட்டிகளில் வெள்ளி நாணையம் இருக்கக்கூடாது” என்று காந்தியார் பல தடவை சொல்லிஇருக்கிறார். நெல்லுக் குத்த வேண்டும், கருப்பட்டி காய்ச்ச வேண்டும், ராட்டினம் நூற்க வேண்டும் என்பது போன்ற திட்டங்கள் மூலம் 1000 வருஷத்துக்கு முன்னால் இருந்த உலகத்துக்கு போகச் சொல்லுகிறார். இதனால் கிராமம்தான் ஆகட்டும் கிராமவாசிதான் ஆகட்டும் எப்படி முன்னுக்கு வரமுடியும்? என்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். நகரத்தில் பட்டணத்தில் இருக்கிற ஒரு தொழிலாளிக்கோ வீதி கூட்டுபவனுக்கோ உள்ள சவுகரியம் அனுபவம் கிராமாந்தர மிராசுதாரனுக்கு இல்லை என்றால் நீங்கள் நம்பவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன்.

யந்திரசாலைத் தொழிலாளிகளைப்பற்றி பிரமாதமாகப் பேசுகிறோம்; அவர்கள் நன்மையே உலக நன்மை என்று பிரசாரம் செய்கிறோம். அவர் களாலேயே உலகம் இருக்கிறது என்று சொல்லுகின்றோம். யந்திரசாலைத் தொழிலாளிகளின் உழைப்பைவிட கிராமவாசிகள் உழைப்பு கொஞ்சமானதா? அல்லது யந்திரசாலைத் தொழிலாளிகளால் நாட்டுக்கு ஏற்படுகின்ற நன்மையைவிட கிராமவாசிகளால் ஏற்படும் நன்மை குறைந்ததா? என்று யோசித்துப்பாருங்கள். ஆனால் அவர்கள் நிலைமையையும் கிராமவாசிகளின் நிலைமையையும் சிறிது ஒத்திட்டுப் பாருங்கள், கிராம வாசிகள் நிலை எவ்வளவு பரிதாபகரமானது என்று பாருங்கள்.

என்றாலும் ஒரு விஷயத்தில் நான் நம்பிக்கையும் மகிழ்ச்சியும் அடைகிறேன். என்னுடைய ஆசை தானாகவே நிறைவேறி வருகிறது. அதாவது கிராமங்கள் தானாகவே அழிந்து வருகின்றன. கிராம ஜனங்கள் பட்டணங்களுக்குத் தானாகவே குடி ஏறி வருகிறார்கள். இந்த 25 வருஷத்தில் பழைய கிராமங்கள் ஒன்றுக்கு பகுதி ஆகிவிட்டன. பட்டணங்கள் ஒன்றுக்கு ஒன்றரை இரண்டு பங்குகூட ஜனப்பெருக்கம் ஆகி பெருத்துவிட்டன.

உதாரணமாக இந்த ஈரோட்டை எடுத்துக்கொள்ளுங்கள். 1910ல் (16000) பதினாறு ஆயிரம் ஜனங்கள் ஈரோட்டில் இருந்தார்கள். 1920ல் 22 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1930ல் 34 ஆயிரம் ஜனங்கள் ஆனார்கள். 1936ல் இப்போது கிட்டத்தட்ட (40000) நாற்பது ஆயிரம் ஜனங்கள் ஆகி இருப்பார்கள்.

இதுபோலவே நமது ஜில்லாவிலேயே கோயமுத்தூர், திருப்பூர், பொள்ளாச்சி முதலிய நகரங்கள் இரட்டிப்பு ஆகிவருகின்றன. இந்த ஜனங்கள் எங்கிருந்து உற்பத்தி ஆனார்கள்? சொல்லுங்கள் பார்க்கலாம். கிராமங்கள் காலி ஆகிவருகின்றன. கிராம ஜனங்களுக்கு பட்டண வாசத்தில் மையல் ஏற்பட்டுவிட்டது. இனி அதைத் தடுக்க யாராலும் ஆகாது என்பதை மனதில் வையுங்கள்.

ஒரு சமூகம் முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த சமூகத்தில் எப்படி கீழ் ஜாதி ஈன ஜாதி மக்கள் என்பவர்கள் இருக்கக் கூடாதோ அதுபோலவே ஒரு நாடு முன்னேற்றம் அடைந்தது என்றால் அந்த நாட்டில் கிராமங்கள், பட்டிகள், தொட்டிகள் இருக்கக்கூடாது என்பது என் கருத்து. நாடெல்லாமே நகரங்களாய் இருக்க வேண்டும். சூரியன், சந்திரன், தென்றல் எப்படி எல்லோருக்கும் பொதுவோ அப்படியே பொதுவாழ்க்கை போக்கியங்கள் எல்லோருக்கும் பொதுவாய் இருக்க வேண்டும்; “பட்டணத்தில் இருப்பதால் மாத்திரம் தான் அனுபவிக்க முடிகின்றது, கிராமத்தில் இருப்பதால் அனுபவிக்க முடிகிறதில்லை” என்கின்ற நிபந்தனை இருக்கக்கூடாது.

சமதர்மம் ஓங்கும் நாடுகளில் கிராமம் என்பதாக ஒன்று இல்லை. வேண்டுமானால் ஒரு நகரத்தில் 25 லக்ஷம் பேர் இருக்கலாம், மற்றொரு நகரத்தில் 250 பேர் இருக்கலாம். பாடும் அனுபவமும் இருவருக்கும் ஒரே மாதிரி தான். இந்த சௌகரியம் செய்ய பொது உடமையோ, சமதர்மமோ, சட்ட மறுப்போ, ஒத்துழையாமையோ, பூரண சுயேச்சையோ தேவை இல்லை; ஜனப்பிரதிநிதிகள் ஜனத்தலைவர்கள் யோக்கியர்களாக இருந்தால் போதும். அவர் அப்படி இல்லாவிட்டாலும் ஆரம்ப ஆசிரியர்களும் கிராம அதிகாரிகளுமாவது இந்த வேலை செய்தால் போதும். நீங்கள் ஒருவரும் செய்யாவிட்டாலும் இயற்கை செய்யப்போகிறது; செய்து கொண்டு இருக்கிறது. அதை தடுக்காமல் இருந்தாலும் போதும்.

~subhead

கல்வி

~shend

கல்வியைப்பற்றி தோழர் துரைசாமி பிள்ளை அவர்கள் பேசினதைக் கேட்டீர்கள்.

நமது நாட்டு கல்விக்கு லட்சியமே இல்லை. நமது வாழ்வுக்கே லட்சியமில்லை என்பதோடு சுயநலப் போட்டியும் பேராசையுமே ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் அடிமைப் படுத்திக்கொண்டிருக்கிறது என்றால் கல்விக்கு என்ன லட்சியம் இருக்கப் போகிறது? என்ன படிப்பது? என்பதை எத்தனை பண்டிதர்கள் கல்வியில் பெரிய பட்டம் பெற்ற மேதாவிகள் உணர்ந்திருக்கிறார்கள்?

ஏதோ படிப்பது, என்னமோ வாய்ப்பது, வாய்த்ததை பிடித்துக்கொண்டு சப்புச் சப்பென்று சப்பி அதன் உயிரை வாங்கி கடைசியில் “ஓய்வு” எடுத்து சாவது என்பதல்லாமல் இன்றைய கல்விக்கு என்ன லட்சியமோ மரியாதையோ பயனோ இருக்கிறது என்று யோசித்துப்பாருங்கள்.

எல்லா மக்களுக்கும் கல்வி பரவுவது நம் நாட்டில் பொது உடமைக் கொள்கை பரப்புவது போன்ற அவ்வளவு கஷ்டமான காரியமாய் இருக்கிறது.

“எல்லோருக்கும் உள்ள சொத்துக்களை சரியாய் பங்குபோட்டுவிட்டால் அப்புறம் பணக்காரன் ஏழை இருக்கமாட்டானே, உலகம் ஒழுங்காய் நடவாதே” என்று சொல்லிகின்ற வாதம் தான் இன்று கல்விக்கும் ரகசியத்தில் அனுஷ்டிக்கப்படுகிறது. ஏனென்றால் “எல்லாரும் படித்துவிட்டால் பிறகு முட்டாள் யார், புத்திசாலி யார் என்கின்ற பேதமே இல்லாமல் போய்விடுமே, படித்தால் பாடுபடாமல் வாழ்க்கை நடத்தும் சவுகரியம் போய்விடுமே” என்று கருதியே கல்வியை இந்த நாட்டில் இவ்வளவு மோசமாக்கிவிட்டார்கள். மேல் நாடுகளில் கல்விக்கு இப்படிப்பட்ட நிர்ப்பந்தம் கிடையாது; யாவருக்கும் ஒரு அளவு கல்வி சுதந்திரமாய் நிர்ப்பந்தமாய் வினியோகிக்கப்படுகிறது?

மற்றும் இங்கு கல்வி பிழைப்பிற்கு வழியே தவிர அறிவுக்கு வழியல்ல என்கின்ற தன்மையில் வந்தவிட்டதால் கல்வி இவ்வளவு பூஜ்ஜியமாகப் போய்விட்டது. ஆதலால் எல்லா மக்களுக்கும் கல்வி பரவ வேண்டுமானால் கிராமங்களை ஒழித்தாலே போதுமானது. பட்டண வாழ்க்கையே ஒருவிதமான கல்வி ஸ்தாபனம் என்று சொல்லலாம். கிராம வாழ்க்கையே ஒரு விதமான மௌடீக ஸ்தாபனம் என்றும் சொல்லலாம்.

பட்டண வாசம் அறியாமையைப் போக்குவது மாத்திரமல்லாமல் ஏழ்மையையும் போக்கும், நோயையும் கூட போக்கும் என்று சொல்லலாம்.

ஆகவே மக்களின் இன்றைய பெருவாரியான குறைகளுக்கு கிராம வாசம் ஒரு காரணமாகும் என்பதை நன்றாய் ஞாபகத்தில் வையுங்கள்.

தோழர்களே! முடிக்கப்போகிறேன். கிராமாதிகாரிகளுக்குப் பரீக்ஷை என்று இம்மாதிரி ஒரு ஸ்தாபனம் வைத்து பயிற்சி கொடுத்து வருவது மிகவும் பாராட்டத்தக்கதும் பயன்படத்தக்கதுமான காரியம். இதைத் தொடர்ந்து நடத்தவேண்டும் என்று ஆசைப்படுகிறேன்.

கிராமாதிகாரிகளும் உபாத்தியாயர்களும் அரசியலில் சம்மந்தப் படாதீர்கள். உங்களுக்கும் அரசியலுக்கும் சம்மந்தமில்லை. உங்களுக்குக் கஷ்டம் வந்தால் சர்க்கார்தான் காப்பாற்றவேண்டும். அவர்கள் தயவிலேயே இருக்க வேண்டியவர்களாவீர்கள். நீங்கள் ஒரு அளவுக்கு சர்க்கார் உத்தியோகஸ்தர்களே ஆவீர்கள். சில கிராமாதிகாரிகள் என் பேச்சைக் கேட்டு அரசியலில் தலையிட்டு வேலை போய் உள்ளூரில் போட்டி ஏற்பட்டு 4000, 5000 செலவு செய்து நியூ ஜெண்ட்கிராண்ட் வைத்து மன்னிப்பு எழுதிக் கொடுத்து தப்பவேண்டியதாயிற்று. உங்களுக்கு கோர்ட்டோ விசாரணையோ ஒன்றும் கிடையாது. மேல் அதிகாரிகளின் இஷ்டம்தான். ஆகையால் நீங்கள் கிராமாதிகாரிகளாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கும் வரை உங்கள் வேலைகளைக் காப்பாற்றிக்கொள்ளுவதில் கவலையாயிருங்கள். உங்கள் ஒப்பந்தம் எஜமானுக்கு கீழ்ப்படிந்திருப்பதுதான். அந்த ஒப்பந்தத்தைக் காப்பாற்றிக்கொள்ளுவதில் உங்கள் உத்தியோகத்தின் பெரும் பகுதியை செலுத்துங்கள்.

ஒரு போலீசுக்காரனுக்கு ஒரு சூப்பிரண்டு ஒருவனை தடியால் அடிக்கும்படி உத்திரவு செய்தால் அந்த போலீசுக்காரன் அடிப்பது நியாயமா அநியாயமா அது “தேசீயமா” “பரதேசீயமா” என்று யோசிக்கலாமா? யோசித்தால் நாணையத்தையும் கடமையையும் செய்ததாகுமா? ஒப்பந்தப்படி நடக்க வேண்டாமா? அதுபோல் தான் உங்கள் நிலையும் என்பதை எப்போதும் மனதிலிருத்துங்கள்.

மற்றுமொருமுறை என்னை நீங்கள் தலைவராகத் தெரிந்தெடுத்ததற்கு நன்றி செலுத்திவிட்டு நான் சொன்னவைகள் என்னுடைய அபிப்பிராயம் என்றும் அதை நீங்கள் நன்றாக ஆலோசித்துப் பார்த்து தள்ளுவதை தைரியமாய் தள்ளி, கொள்ளுவது உண்டானால் உங்கள் சௌகரியம், சந்தர்ப்பம் ஆகியவைகளை கவனித்து கொள்ளுங்கள் என்றும் கேட்டுக் கொண்டு எனது முடிவுரையை முடித்துக்கொள்ளுகிறேன்.

குறிப்பு: 31.10.1936 ஆம் நாள் ஈரோடு கிராம உத்தியோகஸ்தர்கள் பயிற்சி சாலையின் 6ஆவது ஆண்டு விழாவில் தலைமையேற்று “கிராம அதிகாரிகளும் ஆரம்ப ஆசிரியர்களும்” என்ற பொருள்பற்றி ஆற்றிய உரை.

குடி அரசு சொற்பொழிவு 22.11.1936

You may also like...