இஸ்லாத்தில் உயர்வு தாழ்வில்லை வகுப்பு நீதிக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களே

 

 

முஸ்லீமும் ஜஸ்டிஸ் சு.ம.வும் ஒன்றுபட வேண்டும் ஹிந்திக்கு என்ன அவசியம்?

அன்புள்ள தோழர்களே! வட ஆற்காடு ஜில்லா 2 வது சுயமரியாதை மகாநாட்டுக்கு வந்த சந்தர்ப்பத்தில் தாங்கள் என்னை அன்புடன் வரவழைத்து தங்கள் லீக்கின் சார்பாக வரவேற்புப் பத்திரமளித்து கவுரவித்ததிற்கு மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.

நான் இதுவரை என்னுடைய இந்த 20 வருஷ பொதுவாழ்வில் காங்கரஸ், சுயமரியாதை, பொதுஉடமை, சமதர்மம், ஜஸ்டிஸ், முதலிய இயக்கங்களாலும் மற்றும் பலவித சீர்திருத்த சங்கங்களாலும், முஸ்லீம்கள் சங்கங்களாலும் இந்தியா, கொளும்பு, மலாய், ஐரோப்பா, ரஷ்யா முதலிய தேசங்களிலுள்ள பலவித சங்கங்களாலும் சுமார் ஆயிரக்கணக்கான வரவேற்புப்பத்திரங்கள் பெற்றிருந்தாலும் இந்திய முஸ்லீம் லீக்கில் பெறும் உபசாரப்பத்திர மென்பதில் இதுவே முதலாவதாகும்.

உண்மையிலேயே இவ்வரவேற்புப் பத்திரத்தினால் நான் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன்.

ஆனாலும் இவ்வரவேற்புப் பத்திரத்தில் என்னைப்பற்றி குறிப்பிட்டிருக்கும் புகழ்ச்சிகள் முழுவதையும் நான் ஏற்றுக்கொள்ள முடியாது என்பதை தெரிவித்துக் கொள்ளுகிறேன். என்றாலும் இதிலிருந்து நான் முஸ்லீம் சமூக நம்பிக்கைக்கு பாத்திரமாயிருக்கிறேன் என்பதை உணர்ந்து பெருமை கொள்ளுகிறேன்.

முஸ்லீம்களுக்கு ஆக என்று தாங்கள் புகழ்ந்திருக்கிற அளவுக்கு நான் அவ்வளவு காரியம் செய்து விடவில்லை.

இஸ்லாத்தில் பிறவி உயர்வு தாழ்வில்லை

சமூக சம்மந்தமாக முஸ்லீம்கள் அனுசரித்து வரும் சில கொள்கைகளை நான் ஆதரிக்கிறேன். முக்கியமாக உங்கள் மார்க்கத்தில் மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வு இல்லை என்பதும் மக்களுக்குள் ஜாதிபேதப் பிரிவு இல்லை என்பதும் சமூக காரியங்களில் உள்ள ஒற்றுமையும் மனிதாபிமானமுள்ள எந்த மனிதனும் ஒப்புக்கொள்ளவேண்டிய விஷயமாகும்.

இந்து மதத்தின் யோக்கியதையும் கிறிஸ்து மதத்தின் யோக்கியதையும் முறையே ஆதாரத்திலும் அனுபவத்திலும் அப்படி இல்லை. இதை நான் அடிக்கடி மக்களுக்கு எடுத்துக்காட்டி வந்திருக்கிறேன். மற்ற மதக்காரர்கள் இதற்காக பொறாமையும் கோபமும் அடைகிறார்களே தவிர தங்களைத் திருத்திக் கொள்ள யாரும் எந்த மாந்தரும் முன் வருவதில்லை.

தவிர அரசியல் விஷயத்திலும் நான் பெரிதும் முஸ்லிம்களுடைய ஆதரவை எதிர்பார்த்தவனாய் இருக்கிறேன்.

ஏனெனில் கல்வியிலும் சமூகத்துறையிலும் பொருளாதாரத்திலும் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டு தாழ்த்தப்பட்டு கிடந்த மக்கள் முன்னேற்றமடைய முயற்சிக்க வழி காட்டியவர்கள் முதல் முதல் முஸ்லீம் களேயாகும். எனது தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் சுயமரியாதை இயக்கத்துக்கு 1500 வருஷத்துக்கு முன்பே வழிகாட்டியது இஸ்லாம் மார்க்கமே என்றார். ஆனால் நான் ஜஸ்டிஸ் இயக்கத்துக்கு கூட 35 வருஷத்துக்கு முன்னமேயே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்துக்கு வழிகாட்டியவர்கள் முஸ்லீம்களேயாகும் அதாவது முஸ்லீம்லீக்கேயாகும் என்று சொல்லுவேன்.

முஸ்லீமும் ஜஸ்டிஸ், சு.ம.வும் ஒன்றுபடவேண்டும்

ஏனெனில் முஸ்லீம்கள் தான் முதன் முதல் காங்கரசின் சூழ்ச்சியை உணர்ந்து பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் முற்போக்கடைய வகுப்பு நீதி, வகுப்பு உரிமை, வகுப்பு பிரதிநிதித்துவம் வழங்க வேண்டுமென்று வாதாடி 1910லேயே தனித்தொகுதி மூலம் உரிமைபெற்று 1916-ல் காங்கரசையும் ஒப்புக்கொள்ளும்படி செய்தவர்கள் ஆவார்கள். ஆதலால் இன்று வகுப்பு நீதியையும் வகுப்புரிமையையும் மக்களுக்கு முதல் முதல் இவ்வளவு ஞாபகப்படுத்திக் கொடுத்தவர்களே முஸ்லீம்கள் என்கிறேன். அந்த ஒரு காரணத்தாலேயே ஜஸ்டிஸ் கட்சிக்காரரும் சுயமரியாதைக்காரரும் முஸ்லீம்களை ஆதரித்தும் அண்டியும் நின்று தொண்டாற்ற வேண்டுமென்று மக்களுக்கு போதித்துவருகிறேன்.

சில தேசீயப் புலிகள் என்னும் காங்கரஸ் “வீரர்கள்” நான் இம்மாதிரி பேசுவதுபற்றி மனதில் சங்கடப்படலாம். என்னையும் கேவலமாக எண்ணலாம். நான் இதை கொஞ்சமும் லôயம் செய்வதில்லை. மேலும் அதை ஒரு கவுரவமாகவே மதிக்கிறேன். ஆனால் பார்ப்பனர்கள் வால்பிடித்துக்கொண்டு பார்ப்பனர்களைப் புகழ்ந்துகொண்டு பார்ப்பனருக்கு இடம் கொடுத்து தமது சமூகத்தைக் காட்டிக்கொடுத்து வயிறு வளர்க்கும் ஈனர்களைக் கண்டுதான் நான் வெட்கமடைகிறேன்.

நமக்கும் பார்ப்பனர்களுக்கும் என்ன சம்மந்தம்? பிச்சைக்கு வந்தவன் பெண்டுக்கு மாப்பிள்ளையானான் என்பதுபோல எந்த நாட்டிலிருந்தோ இந்த நாட்டுக்கு பிழைக்க வந்தவன் மத ஆதிக்கம், ஜாதி மேன்மை, பொருளாதார ஆதிக்கம் “மோக்ஷ” ஆதிக்கம், அரசியல் ஆதிக்கம் ஆகியவைகளை பெற்றுக்கொண்டு தங்களை கடவுள்கள் என்றும் நம்மை அவர்களது அடிமைகள் வைப்பாட்டி மக்கள் என்றும் ஆதாரப்பூர்வமாய் சொல்லி அனுபவபூர்வமாய் அடக்கி ஆண்டு வருபவனை மானமில்லாமல் சாமி என்று கும்பிட்டுக்கொண்டு அவர்கள் கால் அலம்பிய தண்ணீரை மோக்ஷசாதனம் என்று குடித்துக்கொண்டு அதைவிட நம்மை சகோதரர்களாய் தங்களுக்கு சமமான மனிதர்களாய் கருதும் முஸ்லீம்களிடம் சமத்துவமாய் அளவளாவுவதில் இருக்கும் குற்றம் என்ன என்று அவர்களை கேட்கிறேன்.

பழைய நிலையை நினைத்து பாருங்கள்

இந்த நாட்டிலுள்ள முஸ்லீம்கள் 100க்கு 95 பேர்கள் நமது ரத்த கலப்பு உள்ளவர்களேயாவார்கள். எப்படி எனில் ஆரியக் கொடுமைக்கு முன் அவர்களும் நாமும் இந்நாட்டு பழங்குடி மக்களேயாவோம். ஆரியக் கொடுமை தாங்கமாட்டாமல் அவர்களது சுயமரியாதையைக் காப்பாற்றி கொள்ள இஸ்லாமானவர்கள் அநேகர் உண்டு. ஆனால் ஆரியர்கள் அப்படி இல்லை. நம்மையும் இழிஜாதியாக்கிவிட்டு நமது பெண்களையும் பெண்டாள வேத சாஸ்திரங்களை எழுதிவைத்துக் கொண்டவர்கள். மலையாளத்தைப்பார்த்து அதிலிருந்து ஜஸ்டிஸ் சுயமரியாதை இயக்கங்களுக்கு முன்பு தமிழர்கள் நிலை எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து அதிலிருந்தும் உணர்ந்து பாருங்கள். 50, 60 வயது வந்த தமிழர்களை கேட்டுப் பாருங்கள்.

ஆகவே ஒரு உண்மைத் தமிழ் மகன் பார்ப்பான் பின் திரிவதைவிட ஒரு முஸ்லீம் பின் திரிபவன் எவ்வளவோ பெரிய சுயமரியாதைக்காரன்தான் என்பது எனது அபிப்பிராயம். இதை ஏன் சொல்லுகிறேனென்றால் எனக்கு பலபேர் மொட்டைக் கடிதங்கள் எழுதுகிறார்கள். வெளிப்படையாக குறை கூறுகிறார்கள். அதற்காகவே இதை சொல்லுகிறேன்.

இன்று பார்ப்பனரல்லாத மக்கள் பார்ப்பன சூழ்ச்சியில் இருந்தும் பார்ப்பன ஆதிக்கத்திலிருந்தும் விடுபட வேண்டுமானால் அதிலும் இன்று பார்ப்பன சரணாகதி மந்திரிகளின் கொடுங்கோன்மை ஆட்சி முறையிலிருந்தும் அவர்களது ஒற்றரான காந்தியாரின் விஷமத்தனமான கெடுதிகளிலிருந்தும் தப்பவேண்டுமானால் நமக்குக் கண்டிப்பாக முஸ்லீம்களின் உதவி தேவை இருக்கிறது. முஸ்லீம்களும் இன்று நம் நிலையில் தான் இருந்து கொண்டு பல சங்கடங்களை அனுபவித்துக்கொண்டு நம் ஒத்துழைப்பை நாடுகிறார்கள். பார்ப்பன மந்திரி ஆட்சியானது முஸ்லீம் சமூகத்துக்கும் நம் சமூகத்துக்கும் சேர்ந்தேதான் ஒரே குழி வெட்டுகிறது.

ஹிந்திக்கு என்ன அவசியம்

அப்படிக்கில்லாமலா 100க்கு 92 பேர்கள் அவரவர்கள் தாய் பாஷையைக்கூட எழுதப்படிக்கத் தெரியாமலும் கையொப்பமிடவும், கணக்குப் போடவும் தெரியாமலும் இருக்கும்போது ஆயிரத்து ஐநூறு மைலுக்கு அப்பால் இருக்கிற ஹிந்தி பாஷையை அதுவும் கட்டாயப் பாடமாக அதுவும் நம் மக்களை குழந்தைப் பருவத்தில் இருந்தே படித்தாக வேண்டும் என்றும் அது படித்தால்தான் மேல் வகுப்புக்கு அனுப்ப முடியும், உத்தியோகம் கொடுக்க முடியும் என்று சொல்ல தைரியமும் துணிவும் ஏற்பட்டிருக்க முடியுமா?

ஒரு ஆரியப் பார்ப்பனர் தமிழ் மக்களை வந்து நீ ஹிந்தி படிக்கிறாயா இல்லையா? கட்டாயம் படித்துதான் ஆகவேண்டும் என்று ஆக்கினை இடுவது என்றால் அவர் தமிழர்களுக்கும் முஸ்லீம்களுக்கும் மானமும் வீரமும் கடுகளவாவது இருக்கக் கூடும் என்று கருதி இருப்பாரானால் அப்படி ஆக்கினை அவர் வாயிலிருந்து புறப்பட்டிருக்குமா என்று கேட்கின்றேன்.

தமிழனுக்கு என்ன மீதி இருக்கிறது?

தமிழன் அறிவு மதத்தால் சுரண்டப்பட்டு விட்டது. தமிழனின் செல்வம் மோக்ஷத்தின் பேராலும், பாவமன்னிப்பின் பேராலும், புண்ணியத்தின் பேராலும் சுரண்டப்பட்டு விட்டது. இவற்றை சமாளித்து கொஞ்சம் நஞ்சம் பணமும் புத்தியும் உள்ள தமிழ் மக்கள் பார்ப்பனக் கோர்ட்டாலும் பார்ப்பன உத்தியோகத்தாலும் பார்ப்பன வக்கீலாலும் பார்ப்பன புரோகிதத்தாலும் வேறு பல இழிவான காரியங்களாலும் சுரண்டப்பட்டாய்விட்டது.

இனி தமிழனுக்கு என்ன மீதி இருக்கிறது என்று கேட்கின்றேன். ஜஸ்டிஸ்காரர்களும் சுயமரியாதைக்காரர்களும் எவ்வளவோ பாடுபட்டு பார்ப்பனீயத்தை அடக்கினார்கள். இப்போது குலத்தை கெடுக்கும் கோடாலிக் காம்புகள்போல் மானமற்ற சுரணையற்ற வாழ்க்கைக்கு வேறு வகையற்ற சில தமிழர்களும் பேராசை பிடித்த சமூகத் துரோகிகளும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி அனுமாராகி தங்கள் சமூகத்தைக் காட்டிக்கொடுத்து பார்ப்பன ஆதிக்கம் மறுபடியும் துளிரும்படி செய்து வருகிறார்கள். வெட்கம்! வெட்கம்! என்றுதான் சொல்லவேண்டியிருக்கிறது.

ஒரு பெரிய ஆச்சரியம்

மொத்தத்தில் நம் மக்கள் 100க்கு 95 தற்குறி எனலாம். இப்படிப்பட்ட பாமரக்கூட்டம் 100க்கு 100 படித்த மக்களால் ஏமாற்றப்படாமலோ, அடிமை கொள்ளப்படாமலோ இருப்பது எப்படி சாத்தியமாகும்? ஆகவே சில தமிழர் பார்ப்பனர்களுக்கு அடிமையாகி சமூகத்தைக் காட்டிக் கொடுத்து வாழும் ஆச்சரியத்தை விட, பல தமிழ் மக்கள் எப்படி இன்னமும் பார்ப்பனர்களுக்கு அடிமையாகாமல் எதிர்த்து நிற்கிறார் என்பதே இப்போதைய ஒரு பெரும் ஆச்சரியமாகும்.

முஸ்லிம்கள் நிலைமையும் நம் நிலையைப் போன்றதே. ஆனதினால்தான் இப்போது முஸ்லீமானவர்களுக்கும் தமிழாதிகளுக்கும் ஒரு இயற்கை உறவு ஏற்படுகிறது.

இன்று பார்ப்பனர் ஆதிக்கத்துக்கு எமனாய் இருப்பது தென்னாட்டில் சுயமரியாதை இயக்கமும் வடநாட்டில் முஸ்லிம் லீக்குமே ஆகும். இந்த இரண்டையும் எப்படியாவது ஒழித்துவிட வேண்டுமென்பது பார்ப்பனர் விரதமெடுத்துக் கொண்டிருக்கும் காரியமாகும். “ஜின்னாவுக்கு தாடி இல்லாததினால் அவர் முஸ்லிம் அல்ல” என்று ஒரு முஸ்லீமை விட்டே சொல்லச் சொல்லுகிறார்கள். அது போலவே கடவுள்கள் புரட்டையும் கோவில் குளங்களின் பேரால் நடக்கும் கொள்ளையையும் எடுத்துச் சொல்லுவதால் நான் நாஸ்திகன் என்றும் தமிழன் அல்ல என்றும் சில அன்னக்காவடிகளை விட்டு சொல்லும்படி செய்துவருகிறார்கள். இவற்றைக்கண்டு அறிவுள்ள மனிதன் எவனும் மலைத்துவிட மாட்டான். ஆனாலும் முஸ்லீம்களில்கூட சிலர் சுயமரியாதை இயக்கம் நாஸ்திக இயக்கம் என்று புலப்படுவதாக தெரிகிறது. அப்படிப்பட்டவர்களில் பலர் தங்களுக்கு ஒன்றும் பயமில்லாவிட்டாலும் மற்றவர்கள் தங்களை ஏதாவது சொல்லி விடுவார்களோ என்று பயந்து பந்தோபஸ்துக்கு ஆக இந்த அணையைக் கட்டிக் கொள்கிறார்கள் என்றே நினைக்கிறேன். சுயமரியாதை இயக்கத்தை ஆதரிக்கவோ தழுவவோ வரும் முஸ்லீம்களுக்கும் மற்றவர்களுக்கும் இயக்கத்தின் பேரால் நான் ஒன்று சொல்லுகிறேன். அதாவது, சுயமரியாதை இயக்கத்துக்கு என்று வகுத்திருக்கும் கொள்கைகளில் நாஸ்திகம் ஒரு கொள்கை யாகவோ நிபந்தனையாகவோ குறிப்பிட்டிருக்கவில்லை என்பதேயாகும்.

சுயமரியாதைக் கொள்கைகள்

சுயமரியாதை இயக்கத்தில் சகல மதக்காரருக்கும் சகல அபிப்பிராயக் காரருக்கும் இடமுண்டு. அதன் கொள்கை இவ்வளவுதான் “மனித சமூகத்தில் உள்ள குருட்டுப் பழக்க வழக்கங்களையும் மூடநம்பிக்கைகளையும், விளக்க மறியாச் சடங்குகளையும், அவற்றிற்காகச் செய்யப்படும் செலவுகளையும் ஒழித்தல்.

ஜாதி, மதம், வகுப்பு ஆகியவைகளின் பேரால் ஏற்பட்டுள்ள பேதங்களையும் சமூகத்துறையிலும் பொருளாதாரத் துறையிலும் இருந்துவரும் உயர்வு தாழ்வுகளையும் அகற்றி மக்கள் யாவரும் ஒரே சமூகமாகவும் சகோதரத்துவமாகவும் சமமாகவும் வாழும்படி செய்தல்.

பகுத்தறிவுக்கும் சுயமரியாதைக்கும் கட்டுப்பட்டு நடக்கும்படி மக்களுக்கு சுயமரியாதை உணர்ச்சியை உண்டாக்குதல்” (என்று சுயமரியாதை இயக்க அங்கத்தினர் சேர்க்கும் ரசீதின் பின்புறமுள்ளதை படித்துக்காட்டப்பட்டது) இதை நடத்திவைக்க வேண்டிய காரியத்துக்கும் ஆஸ்திக நாஸ்திகத்துக்கும் என்ன சம்பந்தமிருக்கிறது? ஆஸ்திக நாஸ்திகம் அவரவருடைய அபிப்பிராயமும் ஆராய்ச்சித் திறமுமாகும். இன்று முஸ்லீமும் தமிழனும் ஒத்துழைத்து சாதிக்க வேண்டிய காரியத்துக்கும் ஆஸ்திக நாஸ்திக பிரச்சினைக்கும் எவ்வித சம்மந்தமும் தொடர்பும் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஆதலால் இந்த நெருக்கடியான சமயத்தில் நம் இரு சமூகமும் தோளோடு தோள்புனைந்து வேலை செய்ய வேண்டும். தோழர் கலிபுல்லா சாயபு அவர்கள் வெகு நாளாகவே சுயமரியாதை இயக்கத்துக்கு ஆதரவு அளித்து வந்திருக்கிறார். அவர் இந்த மகாநாட்டுக்கு தலைமை வகிக்க ஒப்புக்கொண்டதானது இயக்கத்துக்கே ஒரு பெரிய ஆஸ்தி சேகரித்தது போல் ஆகும். அவர் சு.ம. இயக்கத்தைப் பற்றி பேசிய பல புகழ் வார்த்தைகளுக்கும் மற்றும் முஸ்லீம் தோழர்கள் புகழ்ந்து கூறியதற்கும் இயக்க சார்பாக நான் நன்றியறிதலை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

குறிப்பு: 28.11.1937 இல் ஆம்பூர் அகில இந்திய முஸ்லீம்லிக் கிளையின் சார்பில் அளிக்கப்பட்ட வரவேற்புப் பத்திரத்திரத்திற்கு பதில் அளித்து பேசியது.

குடி அரசு – சொற்பொழிவு – 05.12.1937

You may also like...