சுயாட்சியா? பழிவாங்கும் ஆட்சியா? I

அக்கிரகாரச் சனியன்கள் பிரிட்டிஷ் சர்க்காரை சரணாகதி அடைந்து மந்திரி ஸ்தானத்தில் அமர்ந்து ஆட்சி செலுத்த ஆரம்பித்தது முதல் ஒவ்வொரு துறையிலும் பழி வாங்கும் குணத்தையும் அக்கிரகார ஆதிக்கத்தை என்றென்றும் நிலைநிறுத்தும் கவலையையும் கொண்டு சூழ்ச்சி ஆட்சி நடத்தப்பட்டு வருகின்றது.

அரசியல் துறையில் இச்சரணாகதி கூட்டங்கள் எவ்வித கொள்கைகள் கையாண்ட போதிலும் நமக்கு கவலையில்லை. வெள்ளைக்காரர்கள் விஷயத்தில் எவ்வளவு சீக்கிரமாக விரட்டி அடிக்க முயற்சித்தாலும் நாம் குறுக்கே நிற்கப்போவதில்லை.

ஆனால் பொய் பித்தலாட்டங்கள் பேசி பாமர மக்கள் ஏய்த்து பிரிட்டீஷாருக்கு அடிமை முறிச்சீட்டு எழுதிக் கொடுத்து பிரிட்டிஷ் ஆட்சியை உலகமுள்ளளவும் காப்பாற்றித் தருவதாய் பிரமாண வாக்குக்கொடுத்து பதவியில் உட்கார்ந்து கொண்டு தமிழ் மக்களை பூண்டோடு அழிக்கத்தக்க சூழ்ச்சி ஆட்சி நடத்துவதை யார் தான்- எந்த உண்மைத்தமிழ் மகன் தான் சகித்துக்கொண்டிருக்க முடியும்? பிரிட்டிஷ் ஆட்சி முறையைப்பற்றி நாம் குறை கூற வரவில்லை. ஏனெனில் அவர்களது ராஜ தர்மம் எல்லாம் எப்படியாவது இந்தியாவில் பிரிட்டிஷ் (யூனியன் ஜாக்) கொடி பறக்கவேண்டும் என்பதே ஒழிய, மற்றபடி நீதி, ஒழுங்கு, யோக்கியம், நாணயம் என்பவைகள் ஆகியவற்றிற்குப் பொருள் அவர்கள் அகராதியில் வேறு மாதிரியாகவும் நம் அகராதியில் வேறு மாதிரியாகவும் இருந்து வருகிறது.

ஆகவே இன்று நமக்கு தொல்லையாயும் நம் சுயமரியாதை வாழ்வுக்கு ஈனமாகவும் இருந்துவரும் ஆட்சி பார்ப்பன ஆட்சியேயாகும். பிரிட்டீஷ் ஆட்சிக்கு எப்படியாவது பிரிட்டீஷ் கொடி பறக்க வேண்டியது தான் அதன் முக்கிய கொள்கையோ அதே போல் பார்ப்பன ஆட்சிக்கும் எப்படியாவது பார்ப்பனரல்லாத மக்களை அழுத்தி அழித்து பார்ப்பன ஆட்சியை (மனுநீதி கொடுங்கோல் ஆட்சியை) நிலை நிறுத்தவேண்டும் என்பதேயாகும்.

இந்த ஒரு காரணத்துக்கு ஆகவே நாம் பார்ப்பனியம் நம் நாட்டில் மாத்திரமல்லாமல் இந்தியாவை விட்டே உலகத்தை விட்டே அடியோடு ஒழியும் படியாக அழிக்கப்பட வேண்டும் என்பதாகப் போராடி வருகிறோம். இந்தப் போராட்டம் நமக்கு ஆக மாத்திரமே அல்ல; அதாவது பார்ப்பனரல்லாதார் சமூகத்துக்கு மாத்திரமே அல்ல; உலக முற்போக்குக்கும் மனித சமூக முன்னேற்ற உயர்வுக்குமே என்று கருதி நடத்தி வருகிறோம்.

மந்திரி சபை அமைப்பைப் பற்றி முன்னமேயே பல விஷயங்கள் எழுதி இருக்கிறோம். மற்றும் பல பத்திரிகைகள் மூலமும் பல அறிஞர்கள் பிரமுகர்கள் மூலமும் வெளியாகி இருக்கின்றன. அவற்றைப் பற்றிய மற்றும் அநேக ரகசியங்கள் இருக்கின்றன. அவை ஒருபுறமிருக்கட்டும். இப்போது அம் மந்திரி ஆட்சியின் யோக்கியதைப்பற்றியே இதில் கூறுகிறோம். அக்கிரகார மந்திரி ஆட்சியை தோழர் சேலம் பாரிஸ்டர் எஸ்.வி. ராமசாமி சரியான உபமானத்துடன் வருணித்துக் காட்டினார். அதாவது இன்றைய மந்திரி ஆட்சியை ஒரு பிளேக்கு வியாதிக்கு ஒப்பிட்டார். அதுபோலவே அக்கிரகார சரணாகதி மந்திரி ஆட்சி இந்த நாட்டு முன்னேற்றத்துக்கும் சமூக வுயர் வாழ்வுக்கும் பிளேக்கு வியாதிபோன்று நாசத்தைக் கொடுக்கக் கூடியதாகவே இருந்து வருகிறது.

அக்கிரகார ஆட்சி இன்று நம் மக்களின் அறிவுசுதந்திரம், பொருளாதாரம், நாகரிகம் ஆகிய மூன்று நான்கு முக்கிய காரியங்களிலும் வெளிப் படையாய் தைரியமாய் பழிவாங்கும் தன்மையோடு கை வைத்து காரியங்களைக் காட்டு மிருகத்தனமாய் நடத்த ஆரம்பித்து விட்டது. மனித சமூக அறிவைப் பாழ்ப்படுத்த வேண்டியதற்கு ஆகவே ஹிந்திபாஷையைத் தமிழ் மக்கள் படித்தாக வேண்டும் என்று கட்டாயப்படுத்தும் கல்வியும், உண்மையான சுதந்திரத்தை ஒழிப்பதற்கே பிரதிநிதித்துவ தேர்தல் முறையில் வர்ணப் பெட்டி முறைகளைப் புகுத்தவும், பொருளாதார முன்னேற்றமும் நாகரிகமும் பாழ்படவே கதரைப் பிரதானப் படுத்தவுமான காரியங்களில் இறங்கிவிட்டது.

கல்வி விஷயத்தில் நம் நாட்டு மக்களுக்கு இரண்டு முக்கிய விஷயம் கையாளப்பட வேண்டியது அவசியம் என்பதை எவரும் மறுக்க முடியாது. ஒன்று கல்வியால் மக்களுக்குப் பகுத்தறிவும் சுயமரியாதை உணர்ச்சியும் ஏற்பட வேண்டும்.

மற்றொன்று மேன்மையான வாழ்வுக்குத் தொழில் செய்யவோ அலுவல் பார்க்கவோ பயன்படவேண்டும்.

நம் நாட்டைப் பொறுத்தவரை இவ்விரண்டு காரியங்களுக்கும் அனுகூலமான கல்விக்கு ஏற்ற பாஷை தமிழும் ஆங்கிலமுமே ஆகும். பிரிட்டிஷ் ஆட்சி இந்த நாட்டில் ஏற்பட்டிருந்தும் 200 வருஷகாலமாக அந்த ஆட்சி நடந்தும் கூட பார்ப்பன ஆதிக்கத்தின் பயனால் இந்த இரண்டுபாஷைகளிலும் பொது மக்களுக்கு சராசரி 100க்கு 10 பேருக்கு கூட எழுத்து வாசனையே இல்லாமல் போய் விட்டது. தமிழ்நாட்டில் தாய் பாஷையான தமிழ் எழுதப் படிக்கத் தெரியாத மக்களே இன்று 100க்கு 90 பேர்கள் இருக்கிறார்கள். ஆங்கிலம் கற்ற மக்கள் இன்று 100க்கு 2 பேரோ 3 பேரோ இருக்கக் கூடுமானால் அதிலும் உள்ளதில் முக்கால்வாசிப் பேர்கள் பார்ப்பனர்களே யாவார்கள். தமிழ்பாஷையோ 100க்கு 100 பேர்கள் பார்ப்பனர்கள் தான் கற்றிருப்பார்கள். ஆகவே அறிவுப்பழக்கம், சமூகக் கட்டுப்பாடு, பொது வாழ்வு ஆதிக்கம் ஆகிய காரியங்களிலும் மேன்மையான வாழ்க்கை நிலை உயர்விலும் பார்ப்பனர்களே முன்நிற்கிறார்கள். மற்றவர்கள் எவ்வளவுதான் மேன்மையான குணமுடையவர்களாய் இருந்தாலும் இன்றும் கீழ் மக்கள் கூட்டத்திலேயே சேர்க்கப்படுகிறது. இனியும் சுமார் 25 -வருஷத்துக்கு வெறும் தமிழும் ஆங்கிலமும் மாத்திரமே அதாவது அறிவுக்கும் வாழ்க்கைக்கும் ஏற்ற கல்விக்கு உற்ற பாஷை மாத்திரமே கட்டாயமாய் கற்பிப்பது என்று வைத்தாலும் இன்றுள்ள நிலை ஒரு கால்வாசியாவது மாற்றமடையும் என்று சொல்ல முடியாது. 100க்கு 25, 30 பேர்களாவது அறிவும் மேன்மையான வாழ்வும் வாழத் தகுதி உடையவர்களாக ஆகிவிடுவார்கள் என்றும் சொல்லி விட முடியாது. இப்படிப்பட்ட நிலையில் அதுவும் ஏதோ ஒரு வழியில் பொது உணர்ச்சி ஏற்பட்டு எல்லா மக்களும் படிக்கவேண்டும் என்றும் எல்லா மக்களுக்கும் படிப்பு செளகரியம் ஏற்படுத்த வேண்டும் என்றும் உணர்ச்சி பரவி இருக்கிற இந்த காலத்தில் அதை பாழ்படுத்துவதற்கு பாமரமக்கள் கல்வியில் – மானத்தில் மனிதத் தன்மையில் வேரைப்பறித்து நெருப்பு வைப்பதற்கு ஆக இன்று பார்ப்பன ஆட்சியானது பிள்ளைகளின் சிறு பிராயத்தில் இருந்தே ஹிந்தியை புகுத்த வேண்டுமென்றும் அதுவும் கட்டாயமாக வைக்கப்பட்டு படிப்பிக்க வேண்டும் என்றும் நிர்ப்பந்தப் படுத்தும் படியான ஒரு கல்வி முறையை ஏற்படுத்துவதென்றால் இதில் யோக்கியமோ நாணயமான கல்விமுறை அபிப்பிராயமோ இருக்கிறதென்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கிறோம்.

தமிழும் இங்கிலீஷும் ஆகிய இரண்டு பாஷைகள் மாத்திரம் இருந்தே இன்று பள்ளியில் படிக்கும் மாணவர்களில் அதிலும் பார்ப்பனரல்லாத மாணவர்களில் 100க்கு 25 பேர் கூட தேர்ச்சி பெற முடிவதில்லை என்பது புள்ளி விவரங்களிலிருந்து அறியலாம். அப்படி இருக்க அதாவது 8 முதல் 12 வயது வரை உள்ள குழந்தைப் பிராயத்தில் உள்ள பிள்ளைகளை 3 பாஷையில் தேர்ச்சி பெற வேண்டுமென்று நிர்ப்பந்தப்படுத்துவது என்றால் இது மக்களை படிக்கச் செய்யாமல் – படித்து தேர்ச்சி பெற்றவர்கள் என்று செய்யச் செய்யாமல் பாழாக்கி குட்டிச்சுவராக்கும் சூழ்ச்சித்திறமா யோக்கியமான கல்வி புகட்டும் திறமா என்று கேட்கின்றோம்.

ஹிந்தி கட்டாய பாடமாக ஆகும் பட்சத்தில் கண்டிப்பாக பார்ப்பனரல்லாத பிள்ளைகள் 100க்கு 90க்கு மேல் தேர்ச்சியில் தவறிவிடுவதோடு பார்ப்பனப் பிள்ளைகள் 100க்கு 100 பிரைஸ் விழுந்து தேர்ச்சி பெற உதவியாயிருக்கும். ஆகவே பார்ப்பனரல்லாத பிள்ளைகளை மேல் படிப்பில்லாமல் அழுத்தத்தான் இது (ஹிந்தி) ஒரு நல்ல சாதனமாகுமே தவிர இந்தி மனித வாழ்க்கைக்கோ அறிவுக்கோ தமிழர்களுக்கு எந்த விதத்திலும் இன்றியமையாததாகாது.

கட்டாயப் படிப்பு என்பது நாட்டின் சமூகத்தின் பொதுக்காரியமாகும். அதற்கு ஆக செலவு செய்யும் நேரம், பணம், ஊக்கம் ஆகியவைகள் நாட்டின் பொது சொத்தாகும். அப்படிப்பட்டதைக் கொண்டு போய் பாழான – பார்ப்பன சூழ்ச்சியான – முட்டாள் தனத்துக்கு வித்தான காரியத்துக்கு பயன்படுத்துவது என்றால் யார் தான் சம்மதிக்க முடியும்?

“ஹிந்தி படித்தால் துளசிதாஸ் ராமாயணம் படிக்கலாம்” என்கிறார் நமது அக்ரகார பிரதம மந்திரி. “ஹிந்தி படித்தால் வட நாட்டில் சுற்றுப் பிரயாணம் செய்யலாம்” என்கிறார் நமது விபீஷணாள்வாரான கல்வி மந்திரி.

துளசிதாஸ் ராமாயணம் நமக்கு எதற்கு? சோற்றுக்கு வழியில்லாத மக்களுக்கு வடநாட்டுச் சுற்றுப் பிரயாணம் எதற்கு?

கம்பராமாயணம் படித்து முட்டாள்களாகி, துரோகிகளாகி, சுயமரியாதை இழந்து எதிரிகளின் கால் அலம்பிக்குடித்து வயிறுவளர்க்கும் ஈன மக்கள் போதாது என்று கருதியா நமது அக்ரகார மந்திரி துளசிதாஸ் ராமாயணம் படிக்கச் சொல்லுகிறார் என்று யோசிக்க வேண்டியிருக்கிறது. கம்பராமாயணத்தின் கருப்பொருள் கண்டு பிடித்துப் படித்த மக்களில் 100க்கு 5 பேருக்காவது சுயமரியாதையோ, சமூகப் பற்றோ, தாய் மொழிப் பற்றோ இருக்கிறது என்று யாராவது சொல்ல முடியுமா? என்று கேட்கின்றோம். ஆரிய ராமாயணத்தை நெருப்பிலிட்டுக் கொளுத்த வேண்டும் என்று ஆதியில் நாம் சொன்ன காலத்தில் “ராமாயணக் கதை ஆபாசமானது, வெறுக்கத் தகுந்தது, கீழ் மக்கள் இயற்கையையும் கெட்ட குணங்களையும் சித்திரிப்பது என்றும் ஆனால் கம்பன் கவித்திறம், தமிழின் கலைத்திறம் முதலியவை கம்பராமாயணத்தில் மலத்தில் கிடக்கும் முத்துப் போல் பொதிந்து கிடப்பதால் அதை எரிக்கக் கூடாது” என்றும் சொன்ன கம்பராமாயணக் கருப் பொருள் பண்டிதர்கள் இன்று பக்கா பட்டரான ஆச்சாரியார் துளசிதாஸ் ராமாயணம் படிப்பதற்கு ஆக ஹிந்தியை குழந்தை களுக்கு கட்டாய பாடமாக்க வேண்டும் என்று சொல்லி அதற்கு வேண்டிய காரியங்கள் செய்து வரும் போது “மனைவியை மற்றொருவன் சேலையை அவிழ்த்துப் பலாத்காரம் செய்வதைப் பார்த்துக்கொண்டிருந்த வீரர்கள் கதை” போல் இன்று வாய் திறவாமல் அடிமையாய் துரோகியாய் தமிழ்மாதுக்கு மாதுரு துரோகியாய் வீற்றிருக்கும் காரணம் என்ன என்று கேட்கிறோம்.

தமிழ் பாஷையில் உள்ள புராணங்களின் ஆபாசங்களையும் சூழ்ச்சிகளையும் ஜனங்கள் சுலபமாய் அறிந்து ஆரிய மதத்திலிருந்து மக்கள் விலகி அதை இழிவு படுத்தி வருகிறார்கள் என்பதை உணர்ந்தே தமிழை ஒழிக்கவும் ஹிந்தியை பரப்பவும் பார்ப்பன ஆட்சி முயலுகின்றது. அதை நம் மக்கள் சிறிதும் அறியவில்லை. ஆரிய புராணங்களை ஆரிய கடவுள்களின் தன்மைகளை மனிதன் படித்தால் அவன் மனிதன் என்று சொல்லக்கூடிய நிலையை அடைய முடியுமா என்று கேட்கின்றோம். சிறு வயதிலேயே குழந்தைகளின் பகுத்தறிவையும் ஆராய்ச்சி உணர்ச்சியையும் பாழ்படுத்த அதன் எதிரியை ரத்தத்தில் செலுத்துவதுபோல் அல்லவா ஹிந்திபடிப்பதின் பலன் ஏற்படக்கூடும்? இன்று மனிதனுக்கு அறிவோ தொழில் திறமையோ ஏற்பட வேண்டுமானால் ஆங்கில பாஷைமூலம் தான் கற்க வசதி இருக்கிறது. நமது தமிழ் பண்டிதர் கம்பராமாயணத்தில் கருப் பொருள் தேடவும் திருவிளையாடல் புராணத்துக்கு 77வது உரை எழுதவும் பெரிய புராணத்துக்கு 113 வது உரையும் தத்துவார்த்தமும் எழுதவும் தான் தகுதியுடையவர்களாகவும் கவலையுடையவர்களாகவும் இருக்கின்றார்களே ஒழிய, பகுத்தறிவு அடையத்தக்கதாகவோ, மானத்துடன் பிழைப்புக்கு ஏற்ற ஒரு தொழில் கற்றுக்கொள்ளத் தக்கதாகவோ இன்று ஒரு புத்தகமும் ஒருவராலும் எழுதப்பட்டதாக இல்லை. சாமி வேதாசல மென்னும் மறைமலை அடிகள் இந்த கருத்தை மனதில் கொண்ட “பாவத்துக்கு” சற்றேறக்குறைய 100க்கு 75 தமிழ்ப் பண்டிதர்கள் அடிகளை காட்டிக் கொடுத்து வயிறு வளர்க்க முற்பட்டார்கள் என்றால் தமிழ்ப் படிப்பதினாலாவது தமிழ் தாய் பக்தியினாலாவது மனிதனுக்கு சுயமரியாதை உணர்ச்சியும் பகுத்தறிவு உணர்ச்சியும் வருமா என்று சந்தேகப்பட வேண்டியிருக்கிறது. இன்று தமிழ்நாட்டில் ஒரு ஆரியப் பார்ப்பனர்- நாட்டை மனுஆட்சிக்கு கீழ் கொண்டு வரும் முயற்சிக்கு சூழ்ச்சி கர்த்தர் – தமிழ் பாஷையை எப்படி பரப்புவது, எப்படி மேன்மைப் படுத்துவது என்பதை விட்டு விட்டு குழந்தை களுக்கு கட்டாயமாக ஹிந்தி கற்பிக்க வேண்டும், துளசிதாஸ் ராமாயணம் மற்ற புராணம் ஆகியவைகள் மூலம் படிக்க வேண்டும் என்று சொல்லுவது என்றால் இந்த நாட்டில் உண்மைத் தமிழ் ரத்தம் ஓடும் மக்கள் ஒருவர் இருவராவது இருக்கிறார்களா என்றே சந்தேகப்பட வேண்டியிருக்கிறது.

இந்த சரணாகதி மந்திரிகள் வாழ்வு இன்னும் எத்தனை நாள் என்பது ஒவ்வொருவரும் அறிந்ததேயாகும். உள்ளுக்குள்ளாகவே கரையான் அரிப்பது போல் ஆளுக்காள் குழி தோண்டும் புகைபுகைந்து கொண்டு இருக்கிறது ஒரு பக்கம், பொது ஜனங்கள் இவர்களுக்கு ஓட்டுக் கொடுத்த முட்டாள் தனத்தை நினைத்து நினைத்து வருந்திக் கொண்டு அடியோடு கவிழ்க்க சமயம் பார்த்து இருப்பது ஒருபக்கம், தாங்களாகவே விட்டு விட்டு ஓடித் தீர வேண்டிய நிர்ப்பந்தம் அவர்களை அறியாமலே வளர்ந்து வருவது ஒருபக்கம், மற்றொரு பக்கம் இன்னம் சில கழுத்தறுப்புகள் கத்தி ஏந்திக் கொண்டிருக்கின்றன.

இந்த சந்தர்ப்பத்தில் வேகின்ற வீட்டில் பிடுங்கினவரையில் லாபம் என்பதுபோல் வட மொழியைப் புகுத்தி விட்டுப்போக துணிவு கொண்டிருப்பதற்கு எப்படி இடம் கொடுக்க முடியும் என்று கேட்கிறோம்.

ஆகையால் ஆங்காங்குள்ள தமிழ் மக்கள் பொதுக் கூட்டம் போட்டு இந்த சூழ்ச்சியைக் கண்டித்துத் தீர்மானம் போட்டு மேன்மை தங்கிய கவர்னருக்கும் தமிழ் – வேளாள மந்திரி கனம் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கும் ஆரிய மந்திரி கனம் ஆச்சாரியாருக்கும் பத்திரிகைகளுக்கும் தெரியப் படுத்த வேண்டும்.

விடுதலைப் பத்திரிகை மற்றும் ஒரு யோசனை சொல்லி இருக்கிறது. அதன்படி திருநெல்வேலியிலிருந்து ஒரு “ஜாதா” அதாவது தமிழ் பாஷை அபிமானம் கொண்ட மக்கள் முறையீட்டுக் கூட்டம் ஒன்று தொடங்கி நேரே சென்னை வரையில் கால்நடையாய் நடந்து வழியில் ஆங்காங்கு கூட்டம் போட்டு தீர்மானமும் செய்து மக்களுக்கு ஹிந்திப் புரட்டையும் சூழ்ச்சியையும் விளக்கிக் கொண்டு போய் சரணாகதி மந்திரிகளுக்கு தெரிவித்துத் தமிழைக் காப்பாற்றவும் விரோதமான சூழ்ச்சியை அழிக்கவும் முயற்சிக்க வேண்டியது முக்கிய கடமையாகும். இந்த சமயம் தமிழ் மக்கள் தூங்கி இருப்பார்களேயானால் தமிழ் மக்கள் பின்னால் உண்மையிலேயே சூத்திரர்களாகவே ஆகிவிடவேண்டி வரும். இதில் காங்கிரஸ் ஜஸ்டிஸ் சுயமரியாதை என்கின்ற பிரிவுகளோ, ஆஸ்திகம் நாஸ்திகம் என்கின்ற உணர்ச்சிகளோ சைவம் வைணவம் என்கின்ற சமய பேதமோ வேண்டியதில்லை என்பதோடு ஆரியரல்லாத தமிழ் மக்கள் யாவரும் ஒன்றுகூடி முயற்சித்து வேலை செய்ய வேண்டியது அவசியமும் அவசரமுமான காரியம் என்பதை கவலையோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

மற்ற விஷயங்களான கதர், எலக்ஷன் விஷயங்களைப்பற்றி பின்னால் எழுதுவோம்.

குடி அரசு – தலையங்கம் – 22.08.1937

You may also like...