தலையங்கம் – பாராட்டுகிறோம்; ஆனால்…
இது உண்மைதானா என்று வியக்க வைக்கும், ஒரு செய்தி வந்திருக்கிறது. தமிழக காவல்துறையும் கல்வித் துறையும் இணைந்து, ஜாதி, தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக, தமிழகம் முழுதும் வீதி நாடகங்கள் உள்ளிட்ட கலை வடிவங்களில் பரப்புரை நடத்துகிறது என்பதுதான் அந்த செய்தி. தமிழகக் காவல்துறைக்கு இப்படி ஓர் அரிய ஆலோசனை எங்கிருந்து வந்தது என்று நமக்குத் தெரியவில்லை. இப்படி ஒரு திட்டத்தை காவல்துறையும் கல்வித் துறையும் உருவாக்கி, களமிறங்கியதற்காக நாம் மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறோம். காரணம், இந்த அடிப்படையான பிரச்சினையை தனது தோளில் சுமந்து, பல ஆண்டுகளாகவே களத்தில் நிற்கும் அமைப்பு திராவிடர் விடுதலைக் கழகம். பெரியார் திராவிடர் கழகமாக இருந்தபோதே இந்தத் திட்டங்கள் தொடங்கப்பட்டன. தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை, முடிவெட்ட மறுத்தல், செருப்பு அணிய, சைக்கிள் ஓட்ட, அலைபேசி பேச தடை என்று பல்வேறு வடிவங்களில் தீண்டாமைகள் தொடருகின்றன. இவற்றின் விவரங்களைத் தொகுத்தும் இரட்டைக் குவளை முறைகளை பின்பற்றும்...