‘தேவதைகள்’ பட்டம் வேண்டாம்

“தீண்டப்படாத மக்களுக்கு காந்தியார் சூட்டிய பெயர் “ஹரிஜன்”; அதாவது கடவுளின் குழந்தைகள் என்றார்.இந்த அவமதிப்புச் சொல்லை அம்பேத்கர், பெரியார் உள்ளிட்ட அனைத்து முற்போக்கு சிந்தனையாளர்களும் கடுமையாக எதிர்த்தார்கள். அந்தச் சொல் இன்றைக்கு வெறுப்புக்குரிய சொல்லாகவே மாற்றப்பட்டுவிட்டது. இன்று (31.08.2026) சட்டமன்றத்தில் தூய்மைப் பணியாளர் பிரச்சனை எழுந்த போது அதற்கு பதில் அளித்த அமைச்சர் ராஜ்மோகன் தூய்மைப் பணியாளர்களுக்கு “தேவதைகள் ” என்று பெயர் சூட்டுகிறார். தேவர்கள் பட்டமோ, தேவதைகள் பட்டமோ இந்த மக்களுக்கு வேண்டாம் ; முதலில் மனிதர்களாக அவர்களை நடத்துங்கள். அவர்களுக்கு வழங்கப்படுகிற ஊதியம் குறைந்தது ஒரு நாளுக்கு 2,000 ரூபாயாவது இருக்க வேண்டும்.

அனைத்து ஜாதியினரும் பங்கேற்கும் அரசு வேலையாக அது மாற்றப்பட வேண்டும். பணி நிரந்தரம் ஊதிய உயர்வு போன்ற அடிப்படை கோரிக்கைகள் பற்றி அமைச்சர் ராஜ்மோகன் வாய் திறக்கவே இல்லை.
முதலமைச்சரை நேரில் சந்திக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்பதில் இவர்களுக்கு என்ன தடை இருக்கிறது?

தொழிலதிபர்களும், முதலீட்டாளர்களும் கோட்டு சூட்டு பிரபலங்களும் மட்டும்தான் முதலமைச்சரை சந்திக்க முடியுமா? அதற்கான உரிமை அவர்களுக்கு மட்டும்தான் இருக்கிறதா?

எத்தனை கார்கள் இருந்தாலும் அரசு காரில் செல்வது தான் கெத்து என்று சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கெத்து காட்டத் துடிக்கும் ஆட்சியாளர்கள்; அதற்காக பல கோடி ரூபாய் செலவு செய்யத் தயாராக இருக்கும் ஆட்சியாளர்கள்; இந்தத் தூய்மைப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியம் வழங்க முடியாதா? பார்ப்பனியமும் மனுதர்மமும் தான் சமூகத்தை இப்போதும் இயக்கிக் கொண்டிருக்கிறது.
– விடுதலை இராசேந்திரன்
31.08.2026
பெரியார் முழக்கம் இதழ் 03092026

You may also like...