ஈழத்தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்; 13-ஆண்டுகளுக்கு பிறகு விடுதலை!

2013-ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், சென்னை மைலாப்பூர் தபால் நிலையத்தில் பெட்ரோல் குண்டு வீசி சேதம் விளைவித்ததாகக் கூறி, திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் தபசி குமரன், உமாபதி, ராவணன், மனோகரன், மாரிமுத்து, ஜான்சன் மற்றும் முகிலன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 13 ஆண்டுகளாக வழக்கு நடந்தது. தோழர்கள் நீதிமன்றம் சென்று வந்தனர். இது ஈழத் தமிழர்களுக்காக கழகத் தோழர்கள் நடத்திய போராட்டம்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் செயல்பட்டு வரும் 15-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது, அரசு தரப்பில் ஆஜர்படுத்தப்பட்ட அனைத்து சாட்சிகளும் வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களால் குறுக்கு விசாரணை செய்யப்பட்டனர். வழக்கில் குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில் போதுமான ஆதாரங்கள் எதுவும் இல்லை என்றும், குற்றம் சாட்டப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அன்றாடம் மக்கள் நலன் சார்ந்த சமூகப் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருபவர்கள் என்பதாலும், அவர்கள் மீது வழக்கு புனையப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்கள் தோழர்கள் சார்பில் வழக்கை நடத்தி வந்தார்.

இந்நிலையில் (14.07.2026), சென்னை சிங்காரவேலர் மாளிகை 15-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றம், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லையெனக் கண்டறிந்து, மேற்கண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட கழகத் தோழர்கள் அனைவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தது. தீர்ப்பு வந்தவுடன் தோழர்கள் பத்ரிநாரயாணன் படிப்பகத்தில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். வழக்கறிஞர் திருமூர்த்தி அவர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
பெரியார் முழக்கம் இதழ் 23072026

You may also like...