கட்சி மாறினால் பதவி, பணம்; ஜாதி மாறினால் மரணமா?

மயிலாடுதுறை மாவட்டத்தில் சாத்தான்குடி கிராமத்தில் ஜாதி மாறி காதலித்த இளைஞர்களை ஜாதிவெறி உயிர்ப்பலி வாங்கியிருக்கிறது. பட்டியல் இனப் பிரிவைச் சேர்ந்த 19 வயது இளைஞரும் பிளஸ் டூ வகுப்பை முடித்த மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த 17 வயது பெண்ணும் காதலித்துள்ளனர்.

பெண்ணின் பெற்றோர்கள் ஜாதி வெறியுடன் எதிர்ப்பு தெரிவித்து பட்டியல் இனப்பிரிவு இளைஞர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பொறையார் காவல் நிலையத்தில் திங்கட்கிழமை இளைஞர் புகார் செய்திருக்கிறார்.செவ்வாய்க்கிழமை விடியற்காலை தங்களது மகளைக் காணவில்லை என்றும் பட்டியல் சமூகத்தின் இளைஞர் மீது சந்தேகம் இருப்பதாகவும் பெண்ணின் பெற்றோர்கள் புகார் செய்துள்ளனர். புகார் பதிவு செய்யப்பட்டது. அதே நேரத்தில் காதலர் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் பெண்ணின் பெற்றோர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜாதி மாறி திருமணம் செய்ய விரும்பினால் அவர்கள் உயிருடனே வாழ முடியாது என்ற கொடூரமான சமூக அமைப்பில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். புரையோடி நிற்கும் இந்த ஜாதி அவலங்களைப் பேசுவதற்கு எந்த அரசியல் கட்சியும் தயாராக இல்லை. கட்சி மாறினால் பதவியும் பணமும் கிடைக்கும். ஜாதி மாறி காதலித்து வாழ விரும்பினால் மரணம் பரிசாக கிடைக்கும். இதுதான் இங்கே சனாதன தர்மம்!
பெரியார் முழக்கம் இதழ் 09072026

You may also like...