“சவுண்ட் – ஆக்க்ஷன் “டயலாக்”

ரசிகர்களை வெறியூட்டுவதற்கும் உசுப்பேற்றுவதற்கும் தயாரிக்கப்பட்ட பேச்சுகளை பேசி பழக்கப்பட்டவர் விஜய். இப்போது முதல்வர் பதவிக்கு வந்த பிறகும் அதைத் தவிர வேறு எந்த பேச்சையும் அவரால் பேச முடியவில்லை. எனவே தான் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவரையும் அவையை விட்டு வெளியேற்றிவிட வேண்டும் என்பது அவரது முதல் பிரச்சினையாக இருந்தது. அதற்காகவே வசைச் சொற்களை வீசினார் ; எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு தான் அவருக்கு நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைத்தது” அப்பாடா; இனி ஸ்கிரிப்ட்டை ரசிகர்களிடம் பேசுவது போல் பேசலாம் என்ற நிம்மதி பெருமூச்சு அவருக்கு வந்திருக்கிறது. எதிரே அமர்ந்திருக்கும் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தான் ரசிகர்கள் அல்ல! அவர்கள் முதல்வர் விஜயின் பேச்சுக்கு விசில் அடித்து கைதட்டி ஆரவாரம் செய்ய சட்டமன்றத்திற்கு வரவில்லை என்பதை அவருக்கு பேச்சு தயாரித்து கொடுத்தவர்கள் உணர்ந்திருக்க வேண்டும்.

விஜய் வருகைக்கு முன் தங்கள் அலுவலகத்துக்கு சோபா வந்தது என்பதை சில தலைவர்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள்; இதற்கு முதல்வர் விஜய்யிடம் இருந்து ஏன் திட்டவட்டமான மறுப்பு வரவில்லை? பூசி மெழுகி அதை கடந்து செல்வதற்கு இவர் ஏன் முயற்சிக்கிறார்? தமிழ்நாடு அரசு நிகழ்ச்சிகளில் “தமிழ்த்தாய் வாழ்த்து” பாடி தொடங்கும் மரபு தமிழ் நாட்டில் நீடிக்கிறது. “தமிழ்த்தாய் வாழ்த்து” தான் தமிழ்நாடு அரசின் பாடல் என்று திராவிட மாடல் ஆட்சி நடத்திய மு.க.ஸ்டாலின் அரசு ஆணையும் பிறப்பித்திருக்கிறார். அதேபோல் சட்டமன்ற நிகழ்வு தொடங்குவதற்கு முன்பும் “தமிழ்த் தாய் வாழ்த்து” தான் பாடப்பட்டு வந்தது இதில் “ஜன கன மன” தேசிய கீதத்தை ஏன் இணைக்க வேண்டும் ? “வந்தே மாதரம்” பாடலைப் போல் தமிழ் வாழ்த்துப் பாடலும் ஒரு விருப்ப தேர்வுதானே தவிர சட்டபூர்வ தமிழ்நாட்டுக்கான பாடல் அல்ல ; தேசிய கீதமே சட்டபூர்வமான பாடல் என்ற கருத்தியலை உறுதிப்படுத்துவதே இதன் நோக்கம்.

மாநில உரிமையை அடகு வைத்து விட்ட இந்த செயலை மறைப்பதற்கு ஒரு ஆதாரத்தை தேடித் தேடி கண்டுபிடித்து இருக்கிறார்கள். அதாவது சட்டமன்றத்தில் கலைஞர் படத்தை திறந்து வைக்கும் நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் பங்கேற்றபோது முதலில் தேசிய கீதமும் பிறகு தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப் பெற்றது என்று முதலமைச்சர் விஜய் கூறுகிறார். இந்த ஓட்டைவாதம் மக்களிடம் எடுபடாது என்பதை தெரிந்து கொண்ட அவரே இதற்கான பதிலையும் கூறிவிட்டார் குடியரசுத் தலைவர் பங்கேற்ற நிகழ்ச்சி என்பதால் தேசிய கீதம் பாடி இருக்கலாம் என்று அவரே அதற்கு விளக்கமும் கூறியிருக்கிறார். பிறகு இதில் குற்றம் சாட்டுவதற்கு என்ன இருக்கிறது?

சொல்லப்போனால் இந்திய அரசியல் சட்டத்தின் படி இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பங்கேற்கும் நிகழ்ச்சியில் தொடக்கத்திலும் இறுதியிலும் தேசிய கீதம் மட்டுமே பாடப்பட வேண்டும் என்று இருந்த மரபை தமிழ்நாடு அப்படியே ஏற்காது ; தேசிய கீதத்தோடு தமிழ்த்தாய் வாழ்த்தையும் இணைத்து இங்கே பாட வேண்டும் என்று அதிலும் மாநில உரிமையை நிலைநாட்டி இருக்கிறார் அன்றைய முதல்வர் மு.க ஸ்டாலின். இதற்கு நேர் மாறாக தமிழ்நாடு சட்டமன்ற மரபுகளை மாற்றி தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு தேசிய கீதத்தையும் கொண்டு வந்து இணைத்து தமிழ்நாட்டின் தனித்துவமான அடையாளத்தை சிதைத்து இருக்கிறார் முதல்வர் விஜய்.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சட்டமன்றத்தில் நிகழ்த்திய உரையில் எடுத்து வைத்த எந்த குற்றச்சாட்டுக்கும் முதல்வரிடம் இருந்து பதில் வரவில்லை.மாறாக வசை மொழிகளை முதல்வர் என்ற தகுதியிலிருந்து கீழே இறங்கி வீசி இருக்கிறார். எதிர்க்கட்சிகள் இல்லாத போது அவர்கள் மீதான குற்றச்சாட்டுகளை பேசலாமா? என்று அவரே கேட்டுக் கொண்டு அதற்கு பேரவை தலைவர் அனுமதியையும் வாங்கிக்கொண்டு பிறகு தனது “ஜிக்கு புக்கு” வசனங்களில் நடிக்க ஆரம்பித்து விட்டார்.பொதுவாக சட்டமன்ற உரைகளில் மேடைப் பேச்சு போல உரத்த குரலில் முதல்வர்கள் பேசுவதில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் காதில் விழ வேண்டும் என்பதற்காக உரத்த குரலில் பேசுகிறேன் என்றும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டும் என்றும் உலக சட்டமன்ற வரலாற்றில் எந்த முதலமைச்சரும் கேட்காத ஒரு அனுமதியை முதல்வர் விஜய் கேட்டு அதற்கு பேரவைத் தலைவர் அனுமதியும் வழங்கிய ஒரு அதிசய காட்சியும் சட்டமன்றத்தில் நிகழ்ந்திருக்கிறது.

இத்துடன் கூடுதலான ஒரு கோரிக்கையையும் முதலமைச்சர் வைத்திருக்கலாம்; உரத்த குரலில் பேசும்போது அவையில் ஒலிபெருக்கிகளை அணைத்து விட வேண்டும் என்றும் கேட்டு இருக்கலாம். அதேபோல் உரையின் இறுதியில் தான் ஒரு “ஆக்க்ஷன்” நடிப்பு செய்யப் போவதாகவும் அதற்கு பேரவைத் தலைவர் அனுமதிக்க வேண்டுமென்றும் கேட்டிருக்கிறார். உடனே பேரவைத் தலைவர் உங்கள் விருப்பப்படி எந்த “ஆக்க்ஷனையும்” செய்து கொள்ளுங்கள் என்றும் அனுமதி அளித்திருக்கிறார். முதல்வர் விஜய் நிகழ்த்திய அந்த ஆக்க்ஷன் என்ன தெரியுமா? கழுத்தை சீவுவது போல ஒரு ஆக்க்ஷன்! பின் வரிசையில் அமர்ந்திருந்த அவரது கட்சி உறுப்பினர்களும் இந்த அரியகாட்சியை கண்டு ரசிப்பதற்கு ஒரு டிஜிட்டல் திரையை ஏற்பாடு செய்திருக்கலாம். பேரவைத் தலைவர் இந்த ஆக்க்ஷனை சபை குறிப்பேட்டில் எப்படி பதிவு செய்யப் போகிறார் என்பது தெரியவில்லை! ஆனால் தமிழ்நாட்டு மக்கள் தொலைக்காட்சியில் இந்த ஆக்ஷனை நேரில் பார்த்திருக்கிறார்கள். தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு இப்படி ஒரு முதலமைச்சரா என்று தலைகுனிய வைத்து விட்டது முதல்வரின்
சவுண்ட் – ஆக்‌ஷன்-டயலாக்.

விடுதலை இராசேந்திரன்
முகநூல் பதிவு
23.06.2026

பெரியார் முழக்கம் இதழ் 25062026

You may also like...