வந்துவிட்டது கட்சிமாறல் கலாச்சாரம்!

தமிழ்நாடு இதுவரை இத்தகைய கட்சி மாறும் காட்சிகளைக் கண்டது இல்லை. குதிரை பேரம் கொடி கட்டி பறக்கிறது. பெரும்பான்மை இல்லாத ’தமிழக வெற்றிக் கழகத்திற்கு’ காங்கிரஸ் ஓடிப்போய் ஆதரவு அளித்தது. திமுக அணியில் இருந்து போட்டியிட்டு தவெக, அஇஅதிமுக வேட்பாளர்களைத் தோற்கடித்தவர்கள் ஒரே நாளில் அணி மாறினார்கள். அடுத்த 5-ஆண்டுகளுக்கு தவெக அணிதான் என்று கூச்சமின்றி அறிவித்தார்கள். பாஜக தலையிடாமல் தடுக்கிறோம் என்று காரணம் கூறினார்கள். ஆனால் பாஜகவின் கட்சிமாறல் கலாச்சாரத்தை அப்படியே ஏற்றுக் கொண்டார்கள் என்பதுதான் உண்மை!

காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று ஆட்சி அமைத்த பல மாநிலங்களில் அந்த கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை பேரம் பேசி இழுத்து கட்சி மாறசெய்யும் பாஜகவின் அரசியல் கலாச்சாரத்தை அப்படியே இப்போது வெட்கமின்றி பின்பற்றுகிறது காங்கிரஸ். அசாம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, கோவா, மணிப்பூர், அருணாச்சல பிரதேசம் போன்ற மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிகளை உடைத்து தனது ஆட்சிகளை நியமித்துக் கொண்டது பாஜக.

2017-ல் கோவாவில் 13 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்ற பாஜக 17 இடங்களில் வெற்றி பெற்று இருந்த காங்கிரஸ் உறுப்பினர்களை கட்சி மாற வைத்து ஆட்சி அமைத்தது. மனோகர் பாரிக்கர் முதலமைச்சரானார்; அவர் மரணம் அடைந்தார்; 2019ல் 10 காங்கிரஸ் உறுப்பினர்களை விலைக்கு வாங்கியது பாஜக. 1967-ல் தேர்தலில் `கயா ராம்’ என்பவர் அடிக்கடி கட்சி தாவல் செய்து கொண்டிருந்தார். எனவே இந்த கட்சித் தாவலுக்கு `ஆயா ராம் கயா ராம்’ என்று பெயர் சூட்டப்பட்டது.

ஆந்திராவில் என்.டி.ராமராவ் தொடங்கிய தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியை அவர் வெளிநாடு சென்ற காலத்தில் பாஸ்கர் ராவ் என்பவர் இரண்டாக உடைத்து துரோகம் செய்தார். நாடு திரும்பிய என்.டி. ராமராவ் கட்சி தாவியவர்களை மீண்டும் இணைத்து குடியரசுத் தலைவர் முன்நிறுத்தி இழந்த ஆட்சியை மீட்டார் என்பது வரலாறு!

பாஜக கூட்டணியில் போட்டியிட்ட அஇஅதிமுகவினரை தவெகவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது என்று நிபந்தனை விதித்த காங்கிரஸ்; இப்போது பாஜக கூட்டணியில் போட்டியிட்ட ஒரு பிரிவினரை குதிரை பேரம் நடத்தி தன் பக்கம் தவெக எடுத்திருக்கிறது இதை காங்கிரஸ் தலைவர் மாணிக் தாகூர் நியாயப்படுத்துகிறார். அதே கட்சியை சேர்ந்த எம்.பி ஜோதிமணி எதிர்க்கிறார்.

மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்படக் கூடாது அல்லது குடியரசுத் தலைவர் ஆட்சி திணிக்கப்பட்டு விடக்கூடாது என்ற ஒரே நோக்கத்தோடு இடதுசாரி கட்சிகள் வெளியில் இருந்து மெஜாரிட்டி எண்ணிக்கையைக் காட்டுவதற்கு தங்கள் கட்சி வாக்குகளை அளிக்க முன்வந்தார்கள். ஆட்சியைக் கவிழ்க்கக் கூடாது என்பதாலேயெ திமுகவும் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது. இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மட்டும் வேறுபட்ட நிலையை எடுத்தது. வெளியில் இருந்து ஆதரவு என்று அறிவித்த அக்கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் பிறகு காங்கிரஸ் கட்சியின் வழியில் கூட்டணி அமைச்சரவையில் இணையும் முடிவை எடுத்து அனைவரையும் வியப்படையச் செய்து விட்டார்.

அம்பேத்கர் கூறிய அதிகாரத்தில் பங்கு என்பது என்ன? அரசியல் அதிகாரத்தின் தேவையை உணர்த்திய அம்பேத்கர் தேர்தல் ஜனநாயகம் மட்டும் வெற்றியைத் தேடி தராது; சமூக ஜனநாயகம் அதைவிட முக்கியம் என்றார். 33 பேர் அமைச்சரவையில் ஒரே ஒருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள் சார்பில் அமைச்சராகி மக்களுக்கான அதிகாரத்தை மீட்டு விடமுடியுமா? 120 உறுப்பினர்களில் இருவர் மட்டுமே விடுதலை சிறுத்தைகள்.

இனி எதிர்காலத்தில் அக்கட்சியின் செயல்பாடுகள் எப்படி அமையப் போகின்றன என்ற கேள்விகள் எழுகின்றன. கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்றுக் கொண்டு தவெக கூட்டணியில் இல்லை என்று கூறுவதில் கூட்டணி நேர்மை இல்லை. இந்தியாவில் மாநிலங்கள் ஒரு நகரசபை போலத்தான் அதிகாரமற்று இயங்குகின்றன. எனவே தமிழ்த்தேசிய அரசியலே உண்மையான அதிகாரத்தை மீட்டெடுக்கும் என்ற உண்மையான கருத்தை பேசிவந்த கட்சி மாநிலத்தில் ஒரு அமைச்சர் பதவியை ஏற்பதை அதிகாரத்தில் பங்கு என்று கூறுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?.

பெரும்பான்மை எண்ணிக்கைக்குத் தேவையான இடங்கள் கிடைத்த பிறகு அஇஅதிமுக கூட்டணியை உடைக்கும் முயற்சிகளில் தவெக ஏன் இறங்க வேண்டும்? உறுப்பினர்கள் அவர்களாகவே விரும்பி வருகிறார்கள் என்ற கருத்து மக்களை ஏமாற்றுவதாகும். காங்கிரசை உடைத்த பாஜக இதே கருத்தை தான் கூறியது. அமைச்சர் செங்கோட்டையன் போல் தேர்தலுக்கு முன் தானாக போய் சேர்ந்தார்களா? தங்களது கட்சி வெற்றி பெறவில்லை, தவெகவிற்கு பெரும்பான்மை இல்லாமல் போனதாலும் பதவி ஆசையால் உருவான விருப்பத்தை எப்படி தானாக வந்த விருப்பமாக கூறமுடியும்?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய வேலுமணி அணியை மட்டும் தனிமைப்படுத்தி முதலமைச்சர் ஜோசப். விஜய் சந்தித்து ஆடை போர்த்தி வரவேற்றார். அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அவர் சந்தித்தது போல அஇஅதிமுக கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமியை ஏன் சந்திக்கவில்லை? அதற்கு மாறாக பழனிசாமிக்கு எதிராக போர்க் கொடி தூக்கிய எதிர்ப்பு அணியை மட்டும் ஏன் முதலமைச்சர் சந்தித்தார்? இதிலிருந்து அவர் கட்சியை உடைக்கவே விரும்புகிறார் என்ற முடிவுக்கு எளிதாக வந்துவிட முடியும். பெரும்பான்மையை எட்டிய நிலையில் ஊழல்வாதிகளாக குற்றம்சாட்டப்பட்டவர்களை ஏன் சேர்க்க வேண்டும்?

பேரவைத் தலைவரிடம் விலகல் கடிதத்தை தந்த உடனேயே அவர்களுக்காக ஏற்கனவே தயாராக வைக்கப்பட்டிருந்த தவெக கட்சி உறுப்பினர் அட்டையும் உடனடியாக வழங்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்து பிண்னனியில் தவெக இருக்கிறது உறுதியாகிறது. 20 நாட்களுக்கு முன்பு எந்த விசில் சின்னத்தை எதிர்த்து ஓட்டு கேட்டார்களோ அதே விசில் சின்னத்துக்கு ஓட்டு கேட்பது வழியாக வாக்களித்த மக்களை இவர்கள் அவமதிக்கிறார்கள்?

தேர்தல் ஆணையம் தேர்தலை உடனே நடத்துமா? வழக்கு நீதிமன்றம் போவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டால் நீதிமன்றத்தில் எவ்வளவு காலம் வழக்கு நடக்கும்? நீதிமன்றத்தினுடைய முடிவு என்னவாக இருக்கப் போகிறது.

தூய சக்தி என கூறிக்கொண்டு ஆட்சிக்கு வந்த கட்சி அதிமுக ஆதரவை பெற மாட்டோம் என்று ஆதரவு சக்திகளிடம் உறுதியளித்துவிட்டு அக்கட்சிகளை உடைக்க முயற்சிப்பதுதான் தூய சக்தியா? இது பாஜக வழியில் நடைபோடுவதாகும். இனி எப்போது அமைச்சர் பதவி கிடைக்கப்போகிறது? இந்த சந்தர்ப்பத்தை நழுவ விடலாமா? என்ற துடிப்புதான் மேலோங்கி இருக்கிறது. வட மாநிலங்களில் நடக்கும் கட்சி தாவல் கலாச்சாரம் தமிழ்நாட்டில் நுழைந்திருப்பது தமிழ்நாட்டை தலைகுனிய வைத்து விட்டது என்பது மட்டும் உண்மை!
பெரியார் முழக்கம் இதழ் 29052026

You may also like...