தமிழ்நாடு அரசின் 12-ம் வகுப்பு பாடத்தில் திணிக்கப்பட்டுள்ள சனாதன கருத்துக்களை திரும்பப் பெறுக!

தேசியகல்விக் கொள்கை நடைமுறைக்கு வந்தபோது அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததோடு மட்டுமல்லாமல் அதற்கு எதிராக தமிழ்நாடு மாநில கல்விக் கொள்கை என்ற ஒன்றை தமிழ்நாடு அரசு சமீபத்தில் முன்வைத்தது. தமிழ்நாடு அரசு முன்வைத்த மாநில கல்விக் கொள்கையில் பல்வேறு பிரிவுகள் தேசியகல்விக் கொள்கையை ஒத்ததாக இருப்பதாக பல்வேறு கல்வியாளர்கள் குற்றம் சாட்டி வந்தனர். இதற்கிடையே தமிழ்நாடு அரசு தேசியகல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டுவிட்டது போல் தமிழ்நாடு அரசின் கீழ் இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள 12-ம் வகுப்பு “அறவியலும் இந்திய பண்பாடும்” என்கிற பாட புத்தகத்தில் தேசிய கல்விக் கொள்கையில் சொல்லப்பட்ட பல்வேறு கருத்துக்கள் இந்த பாடப்புத்தகத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

உதாரணமாக பக்கம் 53 மற்றும் 54 இல் “நவீன காலத்திற்கு வேதங்களின் ஏற்புடைமை” என்கிற தலைப்பின் கீழ் “விண்வெளியில் காணப்படும் பல்வேறு கிரகங்கள் நட்சத்திரங்கள் பற்றி விளக்கமான செய்திகள் வேதங்களில் கூறப்பட்டுள்ளன” என்றும், பக்கம்- 53-இல் “புராணங்களின் இன்றியமையாமை” என்கிற தலைப்பின் கீழ் “பரமாத்மாவிற்கு மேலானது எதுவும் இல்லை என்கிற உயரிய கருத்துக்கள் புராணங்களில் இடம்பெற்றுள்ளன” என்றும், பக்கம் 58-இல் “இந்து என்கிற சொல்லின் பொருள் என்ற தலைப்பில் சனாதன தர்மம் என்றால், அழிவில்லாத நிலையான அறம் எனப்படும்” என்றும், ஒரு உயிர் எந்த காரணத்தினாலாவது துயரப்படுவதாக இருந்தால் அத்துயரத்தை தனக்கு ஏற்பட்ட துயரமாக கருதி அகற்ற முன்வருபவனே இந்து ஆவான் என்றும், அதே 58-ம் பக்கத்தில் “இந்து சமயம் என்கிற தலைப்பின் கீழ் இந்தியாவில் தோன்றிய சமயங்களில் முதன்மையானது இந்து சமயமாகும்” என்றும், பக்கம் 58 மற்றும் 59-ல் ஆன்மா, கர்மா, புனர்ஜென்மம் அதாவது மறுபிறப்பு, வீடுபேறு அதாவது மோட்சம் பற்றிய பல்வேறு இந்துமத கருத்துகளும் கூறப்பட்டுள்ளன. வேதங்கள், உபநிடதங்கள், ராமாயணம், மகாபாரதம் ஆகியவை பற்றி பல்வேறு பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பக்கம் 59-ல் இந்துதர்மம் என்கிற தலைப்பின்கீழ் சமூகம் பிராமணர், சத்திரியர்,வைசியர்,சூத்திரர் என்று நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இவை சமூகத்திற்கான தொழில் கடமைகள் ஆகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் பக்கம் 43 மற்றும் 44-ல் பிராமணர்கள் என்கிற தலைப்பின் கீழ் கல்வி கற்பது சமய சடங்குகள் செய்வது வெகுமதிகளை பெறுவது சமுதாயத்திற்கு நல்வழி உலக நன்மைக்காக இறைவனை தியானிப்பது இவர்களது வாழ்வியல் ஒழுக்கமாகும் என்றும், சத்திரியர்கள் மற்றும் வைசியர்கள் என்கிற தலைப்புகளின் கீழ் முறையே நாட்டை ஆள்வதும், வணிகம் செய்வதும் அவர்களது கடமை மற்றும் பணியாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் சூத்திரர்கள் என்கிற தலைப்பின் கீழ் “முதல் மூன்று பிரிவினர்களுக்கும் வேண்டிய பணிகளை செய்வது இவர்களது பணிகள் ஆகும்” என்று சூத்திரர்களை தாழ்ந்தவர்களாகவே குறிப்பிடுகிறது.

இந்தப் பாடப்புத்தகத்தில் உள்ள 264 பக்கங்களில் பெரும்பான்மை பக்கங்கள் இந்து மதத்தை, இந்துமத வேதங்களை, உபநிடதங்களை ராமாயணத்தை, மகாபாரதத்தை பேசுவதாக இருக்கிறது. ஆனால் பௌத்தம், சமணம், இஸ்லாம், கிறிஸ்தவம் உள்ளிட்ட சமயங்களுக்கு பெயருக்காக வெறும் மூன்று நான்கு பக்கங்களில் மட்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்படி தேசிய கல்விக் கொள்கை 2020இல் குறிப்பிடப்பட்டுள்ள இந்துமத வேதங்கள், புராணங்கள், இதிகாசங்கள், சனாதன தர்மம், வர்ணாசிரம தர்மம் ஆகியவற்றை நியாயப்படுத்தும் கருத்துக்கள் என பல்வேறு வகையில் இந்த தமிழ்நாடு அரசின் கீழே இயங்கக்கூடிய தமிழ்நாடு பாடநூல் கழகம் வெளியிட்டுள்ள புத்தகம், தேசியக் கல்விக் கொள்கை 2020 உடன் ஒத்துப் போகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு துணை முதலமைச்சர் ஆக இருக்கக்கூடிய உதயநிதி ஸ்டாலின் அவர்கள் “சனாதனம் என்பது ஒழிக்கப்பட வேண்டியது” என்று குறிப்பிட்டு இருந்ததும் அதற்கு எதிராக நாடு முழுவதும் அவர் மீது நடத்தப்பட்ட கருத்தியல் தாக்குதலை சட்ட ரீதியாக எதிர்கொண்டதும் தங்களுடைய கொள்கைத் தெளிவையும் அதிலுள்ள உறுதிப்பாட்டையும் காட்டியதாகப் பார்க்கப்பட்டது.

ஒருபுறம் தேசியக் கல்விக் கொள்கை 2020 ஐ தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது என்று சொல்லிவிட்டு மறுபுறம் தேசிய கல்விக் கொள்கையில் உள்ள பல்வேறு கருத்துக்களை தமிழ்நாடு அரசு தன்னுடைய பாடப்புத்தகத்தில் வைத்திருப்பதற்கு “தமிழ்நாடு மாணவர் கழகம்” எங்களுடைய வன்மையான கண்டனத்தை பதிவு செய்கிறோம். இதற்கான உரிய விளக்கத்தை தருவதோடு அறியவியலுக்கு எதிரான, இந்து மதக் கருத்துகளை திணிக்கிற இப்படியான கருத்துக்களை பாடப் புத்தகத்தில் இருந்து நீக்க வேண்டும். அவ்வாறு நீக்காத பட்சத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் மாணவர்களை ஒருங்கிணைத்து போராட்டங்களை முன்னெடுக்கும்.
-பேரன்பு,
ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்.
பெரியார் முழக்கம் இதழ் 02102025

You may also like...