ஆட்சிக்கு மதச்சாயம் பூசலாமா? அமைச்சரே?
தமிழ்நாட்டில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் கொண்டு வரப்படுமா? என்று திமுக சட்டமன்ற உறுப்பினர் எழிலன் சட்டமன்றத்தில் கேள்வி எழுப்பினார். இதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி பதிலளிக்கையில், மூடநம்பிக்கை மக்களுக்கு நம்பிக்கையாக இருக்கிறது. எனவே, சட்டம் கொண்டு வர முடியாது என்று பதில் அளித்துள்ளது வன்மையான கண்டனத்திற்கு உரியது. துணைவேந்தர்கள் மாநாட்டில் பேசிய தமிழ்நாடு முதல்வர் பகுத்தறிவும் அறிவியலும் பாடத்திட்டத்தில் முதன்மையாக இருக்க வேண்டும் என்று பேசி உள்ளார்.இந்திய அரசியல் சட்டம் அறிவியல் மனப்பான்மையை வளர்க்க வேண்டும் என்று கூறுகிறது. மகாராஷ்டிரம், கர்நாடகம் போன்ற மாநிலங்களில் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டம் அமலில் இருக்கிறது.
கலைஞர் முதல்வராக இருந்தபோது பேராசிரியர் நன்னன் தலைமையில் ‘மூடநம்பிக்கை ஒழிப்புக் குழு’ ஒன்றை உருவாக்கினார். ‘பகுத்தறிவு கலை இலக்கிய மன்றம்’ திமுகவின் ஒரு அணியாக செயல்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றையும் புறந்தள்ளி விட்டு ஏற்கெனவே ராமன் சமூக நீதியின் சின்னம் என்று பேசிய அமைச்சர் ரகுபதி இப்போது மூடநம்பிக்கைகளை நியாயப்படுத்திக் கொண்டிருக்கிறார். பேரவைத் தலைவரும் இதை நியாயப்படுத்துகிறார்.
அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த அமைச்சர்கள் இப்படி எல்லாம் தங்கள் பிற்போக்குக் கருத்துகளைப் பேசிக்கொண்டு ஆட்சிக்கு மதச்சாயம் பூசுவது ஆட்சியை களங்கப்படுத்துவதாகும்..
– விடுதலை இராசேந்திரன், பொதுச்செயலாளர்,
திராவிடர் விடுதலைக் கழகம்
பெரியார் முழக்கம் 24042025இதழ்
