சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் மூன்றாவது ஆண்டுவிழா வாலிபர்களும் பொதுசேவையும் ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம் ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

ஜஸ்டிஸ் கட்சியை ஏன் ஆதரிக்கிறோம்

ஆதி திராவிடர்கள் இஸ்லாம் மதத்தில் ஏன் சேரவேண்டும்?

தோழர்களே!

இந்த சுயமரியாதை வாலிப சங்க ஆண்டு விழாவுக்கு நானே தலைமை வகிக்க வேண்டுமென்று விரும்பியழைத்த எனது வாலிப தோழருக்கு முதல் நன்றி செலுத்துகிறேன்.

இப்போது என்னை இங்கு தலைமை வகிக்க பிரேரேபித்த தோழர் இ.ஈ. நாயகம் அவர்கள் என்னைப்பற்றி புகழ்ந்து பேசினார்கள்.

அப்புகழ்ச்சி சகிக்கமுடியாததும் எனக்கு வெட்கத்தை உண்டாக்கக் கூடியதாகவுமே இருந்தது.

நான் செய்திருப்பதாகச் சொல்லப்படும் காரியங்களில் எதிலும் தோழர் நாயகம் பின்னடைந்தவரல்ல. அவர்களது ஆசை, ஊக்கம், உணர்ச்சி ஆகியவை எதுவும் எவ்வகையாலும் குறைந்ததல்ல. ஆதலால் அப்படிப்பட்ட பெரியார் என்னைப் புகழ்வது என்றால் அது அதிகம் என்று சொல்லாமலிருக்க முடியவில்லை. அன்றியும் நாங்கள் இருவரும் ஒருவரை யொருவர் புகழ்வது என்பதும் பரிகாசத்துக்கு இடமானதேயாகும். ஆனாலும் அவர்களுடைய அன்புக்கு நான் பாத்திரனாக ஆக்கிக் கொள்ளப்பட்டேனே என்கின்ற முறையில் நன்றி செலுத்துகிறேன்.

 

வாலிபர்கள் பெருமை

தோழர்களே இன்று இங்கு கூடியுள்ள சுயமரியாதை வாலிபசங்க ஆண்டுவிழா சம்பந்தமாய் தலைவர் என்கின்ற முறையில் நான் முன்னுரையாகவோ, முடிவுரையாகவோ ஏதாவது பேசியாக வேண்டு மென்பதும் அப்படிப் பேசுவதாய் இருந்தால், முதலில் வாலிபர்களைப் பற்றி பொதுவாக சில வார்த்தைகள் பேசவேண்டுமென்பது அவசியமாகும் என்று கருதுகிறேன்.

வாலிபர்களாகிய இளைஞர்களிடத்தில் எனக்கு எப்பவும் நம்பிக்கையுண்டு.

இளைஞர்களுடைய சாகவாசமே எனக்கு எப்போதும் மகிழ்ச்சியை அளிக்கத்தக்கது. ஆதலால் நான் அதையே அதிகம் விரும்புகிறேன். எனக்கு 60 வயது போல் ஆகியும் இளைஞர் சாகவாசத்தாலேயே எனது உணர்ச்சி முதுமையை அடையவில்லை. ஏதாவது ஒரு காரியம் செய்யாமலிருக்க எப்பொழுதும் மனம் வருவதில்லை. ஓய்வு சலிப்பு என்பவற்றை தற்கொலை என்றே கருதுகிறேன்.

இளைஞர் கூட்டுறவும், அவர்களிடம் எனக்குள்ள நம்பிக்கையும் எனது தொண்டிற்கோ கொள்கைக்கோ எப்படிப்பட்ட எதிர்ப்பு ஏற்பட்டாலும், எப்படிப்பட்டவர்கள் எதிர்த்தாலும் யார் பிரிந்துபோனாலும் சிறிதும் மனமுறிவோ சலிப்போ இல்லாமல் எவ்வித எதிர்ப்புகளும் அடிக்கும் பந்து உயர்வதுபோல் எனது வுணர்ச்சிகளையும் ஊக்கத்தையும் தட்டி எழுப்பக் கூடியதாகவே முடிகிறது.

ஆதலால் இளைஞர்களைப் போற்றுகிறேன். விசுவாசிக்கிறேன் அவர்களுடன் இடையறாப் பற்றுதல் இருக்கவேண்டுமென்றே ஆசிக்கிறேன்.

மற்றும் உலகசரித்திரத்திலும் இளைஞர்களுக்கு நல்ல இடம் இருந்து வருகிறது. இளைஞர்கள் வீரமுள்ளவர்கள் காரியத்தை சாதிப்பதில் பிடிவாதக் குணம் காட்டக்கூடியவர்கள். காரிய சாதிப்புக்காக எத்தகைய தியாகத்தையும் செய்ய தயங்காத துணிவுள்ளவர்கள். இளைஞர்களுக்கு இளைஞர்களாக இருப்பதாலேயே அதாவது அவர்களுக்கு எவ்வித கவலைக்கும் இடமில்லாமல் அவர்களது பருவம் இருப்பதினாலேயே அப்பேர்ப்பட்ட அருங் குணங்களுக்குத் தகுதியுமுள்ளவர்களாய் இருக்கிறார்கள். தியாகத்துக்கு ஆதாரமே பற்றற்ற தன்மையும் ஒரு குறிப்பிட்ட காரியத்தைத்தவிர வேறு ஒன்றிலும் லட்சியமற்ற தன்மையுமே யாகும். இதே இளைஞர்கள் பெரியவர்களென்பவர்களாகிவிட்டால் அவர்களால் ஆகக்கூடிய காரியம் மிகமிகச் சுருக்கமேயாகும்.

பெரியவர் என்றால் என்ன அருத்தம்? பெண்டு, பிள்ளை, வீடு, வாசல் சொத்து, சுகம் இவைகள் சம்மந்தமான தொடர்பும் கவலையும் உள்ளவர்கள்தான் பெரியவர்களே ஒழிய வெறும் வயதே பிரதானமல்ல.

வாலிபத்தன்மையின் அபாயம்

வாலிபர்கள் என்பதற்கும் மேற்கண்டவைகள் என்பவற்றைப் பற்றிய கவலை அற்ற தன்மையே ஒழிய சிறு வயது மாத்திரமே காரணமல்ல. ஆதலால் தான் வாலிபர்கள் ஒவ்வொரு தேச சரித்திரத்திலும் நல்லிடம் பெற்றிருக்கிறார்கள். ஆனால் அப்படிப்பட்ட இளைஞர்கள் சுலபத்தில் பற்றிக் கொள்ளக் கூடிய ஒரு அபாயகரமான வஸ்து என்பதற்கு உவமையாகச் சொல்லக்கூடியவர்கள் என்பதையும் நான் சொல்லாமல் இருக்க முடியாது. ஏன் என்றால், இளைஞர்கள் குழந்தைகளுக்குச் சமானமானவர்கள். சமீபத்தில் உள்ளதைப் பற்றுகிறவர்கள். பின் விளைவை அனுபவித்து அறியாதவர்கள். கண்ணோட்டம் விழுந்தால் பற்றிவிடுபவர்கள். எழுச்சி என்பது எங்கெங்கு காணப்படுகின்றதோ, கூட்டம் குதூகலம் என்பவை எங்கெங்கு காணப்படுகின்றனவோ அவற்றை யெல்லாம் பற்றுவதும், அவை மறைந்தால் கைவிட்டு விடுவதுமான குணமுடையவர்கள்.

உதாரணமாக குழந்தைகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லா சாமிப் பண்டிகை வந்து அக்கொண்டாட்டம் முடிந்த பிறகு சுமார் 5 நாள் அல்லது ஒரு மாதம் வரை குழந்தைகள் புலி வேஷம் ஆடிக் கொண்டு விளையாடுவதைப் பார்க்கலாம்.

அதுபோலவே மாரியம்மன் பண்டிகைக் கொண்டாட்டம் வந்தால் அது முடிந்த 15 நாள் 1 மாதம்வரை கரகம் எடுத்தாடுவதும், கம்பம் எடுத்தாடுவதும், நெருப்பு சட்டி எடுத்தாடுவதுமாய் விளையாடுவதைப் பார்க்கலாம்.

அதுபோலவே, புரட்டாசி, மார்கழி மாதம் பஜனை கொண்டாட்டங்கள் வந்து போனால் 5 நாள் வரையிலாவது ராம் ராம் ஜெய சீதாராம் என்றும், கோவிந்தம் பஜரே கோபாலம் பஜரே என்றும் கைதட்டி ஆடும் கூத்துக் களையும் குழந்தைகளிடம் பார்க்கலாம். இவைகளுக்கெல்லாம் காரணம் கொண்டாட்டங்களையும், குதூகலங்களையும் கண்டு அவைகளால் இவர்கள் மயங்கி இழுக்கப்பட்டு விடுவதேயாகும்.

சுலபத்தில் வழுக்கி விழக்கூடும்

அது போல் தான் வாலிபர்கள் ஒரு செல்வாக்கையோ ஒரு பிரசாரத்தையோ காதலையோ கண்டு விட்டால் சுலபத்தில் வழுக்கி விழக்கூடும். செல்வாக்கற்ற காரியத்தில் பற்றாய் இருப்பது மிகச் சங்கடமாகத் தோன்றும். பொது ஜன ஆதரவு, புகழ், உற்சாகம் ஆன காரியங்களில் இருக்கும் அவா, ஒரு தேக்கமான காரியத்தில் உற்சாகம் காட்ட இடம் தராது.

ஆதலால் வெறும்செல்வாக்கும் புகழுமான காரியங்களில் காட்டக் கூடிய உற்சாகம், ஊக்கம், துணிவு, தியாகம் ஆகியவை சிற்சில சமயங்களில் நன்மையை விட தீமையை அதிகமாக உண்டாக்கி விடுகின்றது. ஆதலால் வாலிபர்களுக்கு வெறும் உற்சாகமும், துணிவும், தியாகபுத்தியும் மாத்திரம் இருந்தால் போதாது. நன்மை தீமையை அறியும் குணமும், சாத்தியம் அசாத்தியம் அறியும் குணமும், காலதேச வர்த்தமானத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் குணமும், ஆய்ந்து ஓய்ந்து பார்க்கும் தன்மையும் ஆகியவைகள் இருந்தால் தான் வாலிபர்கள் பொதுவில் பயன்படக் கூடியவர்கள் ஆவார்கள். இல்லாவிட்டால் அவர்கள் ஒரு குறிப்பிட்ட சுயநல சூழ்ச்சிக்கு இரையாகிவிடுவார்கள். இதை நான் அனுபவத்தில் பார்த்திருக்கின்றேன். எனது வாலிப பருவமும் எனக்கு இன்று இந்த புத்தி கற்பிக்கக் கூடியதாய்த் தான் இருந்து வந்தது.

புகழுக்கு அடிமைப்படக் கூடாது

ஆதலால் அவர்களை நான் வேண்டிக் கொள்வது உற்சாகத்துக்கும், புகழுக்கும் அடிமை ஆகாதீர்கள் என்பதேயாகும். இதை ஏன் இவ்வளவு அழுத்திச் சொல்லுகிறேனென்றால், பாமர மக்களிடம் இன்று இருந்து வரும் தேசீயம், தேசபக்தி என்பவைகள் சம்பந்தமான செல்வாக்குக்கு நமது எண்ணரிய வாலிபர்கள் அடிமையாகி மனித சமூகத்துக்குச் செய்யவேண்டிய உண்மைத் தொண்டை மறந்து அவர்களது துணிவையும், ஊக்கத்தையும், தன்நல மறுப்பையும் பாழாக்கி வருவதைப் பார்த்தே சகிக்காமல் இவ்வாறு கூறுகிறேன்.

எப்படி இருந்தபோதிலும் நான் ஆற்றிவரும் இச்சுயமரியாதைத் தொண்டிற்கு இளைஞர்களின் ஆதரவே இன்று வரை உள்ள இவ்வளவு வெற்றியையும் அளித்திருக்கிறது.

இதிலும் எவ்வளவோ விஷமங்களும், சூழ்ச்சிகளும் இயக்கத்திலீடு பட்டவர்கள் என்பவர்களாலேயே நடந்தும், பல வாலிபர்கள் தங்கள் உறுதிகளை கெடுத்துக்கொள்ளாமல் துணிந்து இருந்ததானது எனது ஊக்கத்தை தட்டி எழுப்பி வருகிறது.

நமது நிலை

இன்று முதலில் பேசிய தோழர் முருகப்பா அவர்கள் நமக்குள்ள கஷ்ட நிலைமையையும், எதிர்ப்புகளையும் நன்றாய் விளக்கிக் காட்டினார்.

நாம் பொருளாதாரத்தில் மிக்க கஷ்ட நிலையில் இருக்கிறோம். நாம் யாருக்காகப் பாடுபடுகின்றோமோ அவர்களை நம் எதிரிகளுக்கு பொருளைக் கொடுத்து நம்மை எதிர்க்கச் செய்தவர்களாகிறார்கள். நம் மக்களில் செல்வமும் செல்வாக்கும் உடையவர்கள் பலருக்கு அறிவும் இல்லை; சுயமரியாதையும் இல்லை. நாம் ஜாதிவித்தியாசத்தை ஒழிக்க வேண்டு மென்றால் ஜாதி முறையில் நான்காம் ஜாதியாய் கீழ்ஜாதியாய் இழிவான ஜாதியாய் இருப்பவனே ஜாதிவித்தியாசம் வளர்க்கப் பொருள்கொடுத்து உதவுகிறான். நம் இயக்கத்துக்கு உதவ அஞ்சுகிறான்; ஏன்? மறுக்கவும் செய்கிறான். சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம் உணர்ந்தவர்கள் யார்?

பொருளாதாரம்

இந்த சென்னையில் உள்ள இந்த இளைஞர் மன்றம் இந்த வருஷ மெல்லாம் 40 ரூபாயில் வேலை செய்து இன்று இவ்வளவு விமரிசையாக ஆண்டுவிழா கொண்டாடுகிறது.

மற்ற பிற்போக்கான இயக்கங்களுக்கு லக்ஷக்கணக்கான ரூபாய்கள் வசூலாகின்றன. அவற்றால் ஜாதி வித்தியாசங்கள் காப்பாற்றப்படுகின்றன. உதாரணமாக இந்நாட்டில் உள்ள ராமகிருஷ்ண சங்கத்தை எடுத்துக் கொள்ளுங்கள். சென்ற விடங்களில் எல்லாம் 1000, 10000 கணக்காக பொருள் பறித்துவிடுகிறது.

ராஜாக்கள், ஜமீன்தாரர்கள், லேவாதேவிக்காரர்கள் கண்ணை மூடிக் கொண்டு அள்ளிக்கொடுத்து முட்டாள்களாகி தங்கள் ஜாதி இழிவைக் காப்பாற்றிக்கொள்ளுகிறார்கள்.

அச்சங்கத்தின் கொள்கை என்ன? அங்கு நடப்பதென்ன? என்பன வாதிகள் யாவருக்காவது தெரியுமா? அங்கு போய் பாருங்கள். ஜாதி வித்தியாசமும் ஜாதிபாகுபாடும் எவ்வளவு தாண்டவமாடுகின்றன? எப்படி பாதுகாக்கப்படுகின்றன? என்பதை பாருங்கள்.

தமிழ் மக்களுக்கு ஞானமோ சுயமரியாதை உணர்ச்சியோ இருந்தால் நமது பிறவி எதிரிகள் நன்மைக்கு ஆகவும், நமது இழிவை காப்பாற்றுவதற்கு ஆகவும் நடக்கும் ஸ்தாபனங்களுக்கு அள்ளி அள்ளிக்கொடுப்பார்களா?

சேரமாதேவி குருகுலத்தை தோழர் வரதராஜுலு போர்தொடுத்து அழித்த மாதிரியல்லவா அழித்திருப்பார்கள். விவேகானந்தரின் பெயரைப் பயன்படுத்தி வாழுகிறார்கள். விவேகானந்தரின் உபதேசமோ கொள்கையோ அங்கு காணப்படுகிறதா?

ஆகவே நமக்கு பொருளாதாரத்துக்கு எப்பொழுதும் வசதி ஏற்படாது. நாமாக நம் பொருளைச் செலவு செய்துதான் இப்படிப்பட்ட காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.

நாம் வெற்றி அடைந்தவர்கள்

நாம் பொதுஜனங்களுக்கு ஒரு விஷயத்தில் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். அதென்னவென்றால் பொதுஜனங்கள் நம்மை இதுவரை கொல்லாமல் உயிருடன் இருக்கவிட்டு வைத்திருப்பதேயாகும்.

ஏனெனில், நமது கொள்கைகள் அப்படிப்பட்டவைகள்.

இன்று இந்நாட்டில் மாத்திரமல்லாமல் உலகில் செல்வாக்குடனும் பக்தியுடனும் போற்றுதலுடனும் இருந்துவரும் கொள்கைகளையும், அமைப்புகளையும், ஸ்தாபனங்களையும் எல்லாம் எதிர்க்கின்றோம்; பழிக்கின்றோம்; பலவற்றை தலைகீழாக மாற்ற வேண்டும் என்கிறோம்; பலவற்றை அழித்து ஒழிக்க வேண்டும் என்கிறோம். இப்படிப்பட்ட நாம் இன்று இங்கு இந்த பிரிட்டிஷ் ஆட்சி இல்லாதிருந்தால் என்ன கதி அடைந் திருப்போம் என்பதை இந்த பிரிட்டிஷ் ஆட்சி இல்லாத காலத்தில் நம் போன்றவர்கள் பட்ட பாட்டையும், அவர்களுக்கு ஆக எழுதி வைத்திருக்கும் தண்டனை கண்டன முறைகளையும் சரித்திரங்களில், புராணங்களில், சாஸ்திரங்களில் வாசித்துப் பாருங்கள்.

ஆகவே நாம் பொருளையோ செல்வாக்கையோ எதிர்பார்த்தால் நசிந்தே போய்விடுவோம். என்றாலும் நாம் வெற்றியே அடைந்துள்ளோம்.

மனிதன் சுயேச்சைக்கு உரியவன்

மனிதன் சுயேச்சைக்கு உரிமையுள்ளவன். காரணம் அவனுக்கு சௌகரியம் இருக்கிறது என்பது மாத்திரமல்லாமல் மனிதனுக்கு அதற்கு ஏற்ற அறிவு சக்தி இருக்கிறது. ஆனால் மனிதன் அப்படிப்பட்ட சௌகரியத்தையும், அறிவு சக்தியையும் அடிமைத்தன்மைக்கும் இழிவுக்குமே பயன்படுத்திக் கொள்ளுகிறான். அதனாலேயே மனித வர்க்க வாழ்வில் ஒரு பெரும் புரட்சியை உண்டாக்க ஆசைப்படுகிறோம். இது நமது விளையாட்டுக்கு ஆக அல்ல; நேரம் போக்குக்காக அல்ல; கண்டு கண்டு சகிக்க முடியாத பரிதாபத்தினாலேயே இக்காரியத்தைச் செய்யத் துணிகின்றோம். பகுத்தறிவு காரணமாகவே மனிதன் மிருகத்திலும் இழிவான ஜீவனிலும் கேடாக வாழ்கிறான். இது தானா நாம் பகுத்தறிவுக்குச் செய்யும் மரியாதை?

ஜாதி வித்தியாசம்

ஜாதி வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?

பொருள் வித்தியாசத்துக்கும் பகுத்தறிவுக்கும் ஏதாவது சம்மந்தமுண்டா?

இவ் வித்தியாசங்கள் பகுத்தறிவினாலா? அல்லது மிருக சுபாவத்தாலா? அயோக்கியத்தனத்தாலா? என்று யோசித்துப் பாருங்கள். இவைகள் கடவுள்கள் முதல் தீர்க்கதரிசிகள், மகாத்மாக்கள், கடவுள் அவதாரங்கள் முதல் எல்லாராலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கின்றனவே. ஆகவே இவர்கள் இத்தனை பேர்களும் (இருந்திருந்தால்) பகுத்தறிவாளர்கள் என்றோ மனிதத்தன்மை உடையவர்கள் என்றோ சொல்ல முடியுமா? எந்த தர்ம ராஜ்ஜியமும் நீதிராஜ்ஜியமும் மக்களுக்குள் இப்படிப்பட்ட பிறவி இழிவையும் தொல்லையையும் ஏற்படுத்துவதை இருந்து வருவதை ஒழிக்க முடியவில்லையே. எப்படிப்பட்ட மதமும் மத தர்மமும் இவைகளை ஒழிக்கவில்லையே. ஆகவே நாம் இவைகளை எதிர்ப்பதால் என்ன கெடுதி என்று கேட்கின்றேன்.

சுயமரியாதை இயக்கம் ஜாதியிலும், மதத்திலும், கடவுளிலும் பிரவேசித்த தாலேயே அதன் யோக்கியதையை கெடுத்துக்கொண்டது என்கிறார்கள்.

ஒன்றுக்கொன்று சம்பந்தம்

மனிதனுக்கு இழிவு ஜாதியால்தானே உண்டாகி வருகிறது. ஜாதியோ மதத்தினால்தானே உண்டாகி வருகின்றது. மதமோ கடவுளால் தானே உண்டாகி வருகின்றது. இவற்றுள் ஒன்றை வைத்துக்கொண்டு ஒன்றை அழிக்க முடியுமா? ஒன்றுக்கொன்று எவ்வளவு கட்டுப்பாடும் பந்தமும் உடையதாக இருக்கின்றன என்று யோசித்துப் பாருங்கள்.

ஜாதியை அழித்துவிட்டால் இந்துமதம் நிலைக்குமா? அல்லது இந்துமதத்தை வைத்துக்கொண்டு ஜாதியை அழிக்க முடியுமா?

ஜாதியையும் மதத்தையும் அழித்துவிட்டுக் கடவுளை வைத்துக் கொண்டிருக்க முடியுமா?

ஜாதியும் மதமும் அழிந்தால் கடவுள் இருக்க முடியுமா?

உதாரணம்

ஒரு உதாரணம் சொல்லுகிறேன். தயவு செய்து கேளுங்கள்.

நான்கு ஜாதியை இந்து மத தர்ம சாஸ்திரமாகிய மனுதர்ம சாஸ்திரங்கள் முதலியவை ஒப்புக் கொள்ளுகின்றன. நான்கு ஜாதிமுறை களை கீதை முதலிய கடவுள் வாக்குகள் ஒப்புக்கொள்கின்றன.

“நான்கு ஜாதிகளையும் நானே சிருஷ்டி செய்தேன். அந்தந்த ஜாதிகளுக்கு ஏற்ற தர்மங்களை (தொழில்களை)யும் நானே சிருஷ்டி செய்தேன், அத்தருமங்கள் தவறி எவனாவது நடந்தால் அவனை மீளா நரகத்தில் அழுத்தி இம்சிப்பேன்” என்று இந்துக்களின் ஒப்பற்ற உயர் தத்துவமுள்ள கடவுளான கிருஷ்ண பகவான் என்பவர் கூறி இருக்கிறார்.

இதிலிருந்து ஜாதிக் கொடுமை, ஜாதி இழிவு, ஜாதி பேதம், ஜாதிப்பிரிவு ஆகியவைகளையோ, இவற்றில் ஏதாவது ஒன்றையோ ஒழிக்க வேண்டுமானால் மதங்களையும் கடவுள்களையும் சாஸ்திரங்களையும் ஒழிக்காமல் முடியுமா? அல்லது இவைகளுக்கு பதில் ஏற்படுத்தாமலாவது முடியுமா? என்று யோசித்துப்பாருங்கள். வீணாய் சுயமரியாதைக்காரர்கள் ஜாதியை மதத்தை கடவுளை எதிர்க்கிறார்கள், ஒழிக்க வேண்டுமென்கிறார்கள் என்பதில் ஏதாவது அர்த்தமோ அறிவோ இருக்கிறதா என்று பாருங்கள்.

நாம் மாத்திரமா எதிர்க்கிறோம்?

கடவுளை, மதத்தை, சாஸ்திரங்களை நாங்கள் தானா எதிர்க்கிறோம். மற்றவர்கள் வாழ்த்துகிறார்களா? என்று பாருங்கள். எந்த இந்து ஒருவன் ஜாதிபேதமும், ஜாதிப்பிரிவும், ஜாதி தர்மமும் ஒழிய வேண்டும் என்று சொல்லுகிறானோ, யார் யார் தீண்டாமை ஒழிய வேண்டும் என்று கூட சொல்லுகிறார்களோ, அவர்கள் எல்லோரும் மதத்தையும், கடவுளையும் ஒழித்தவர்கள் அல்லவா? அல்லது மதத்தையும் கடவுளையும் எதிர்த்தவர்கள் அல்லவா? மீறினவர்கள் அல்லவா? என்று யோசித்துப் பாருங்கள்.

கிருஷ்ணன் கடவுளென்றும், கீதை அவன் உபதேசமென்றும் கருதுபவர்கள் ஜாதியையும் ஜாதி தர்மத்தை (தொழிலையும்) ஒழிக்க முடியுமா ஒழிய வேண்டுமென்று சொல்லவாவது முடியுமா? என்று கேட்கின்றேன். இந்த காரணத்தால் தானே காந்தியார் வெகு ஜாக்கிரதையாக நான்கு ஜாதிகளையும் அவைகளினது தர்மங்களையும் (வர்ணாசிரம தர்மத்தை) காக்கவே நான் உயிர் வைத்திருக்கிறேன். அதற்காகவே சுயராஜ்யம் கேட்கிறேன். அதற்காகவே தீண்டாதவர்களுக்கு தனிப்பிரதிநிதித்துவம் செத்தாலும் கொடுக்கமாட்டேன் என்று சொல்லுகிறேன் என்கிறார்.

காந்தி அவதார புருஷரானதேன்

அதனால் தானே அவர் பழய தர்மங்களைக் கெடாமல் காப்பாற்ற அவதாரமெடுத்த அவதார புருஷர் என்றும், மகாத்மா என்றும் பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள். ஆகவே அவர் ஒழிந்த மற்றவர்கள் அதாவது ஜாதி வித்தியாசமும், ஜாதி தர்மமும் ஒழிக்க வேண்டுமென்கின்றவர்கள் எல்லோரும் ஒரு அளவுக்காவது சுயமரியாதைக்காரர் அல்லவா என்று பாருங்கள். கராச்சி தீர்மானத்தின் முக்கிய தத்துவமே பழைய சாஸ்திரங்கள் பழக்க வழக்கங்கள் தொழில் முறை முதலியவைகள் கூட காப்பாற்றப்பட வேண்டும் என்று சொல்லப்பட்டதும், அந்தப்படி தீர்மானங்கள் இன்றும் வைத்துக் கொண்டிருப்பதும், ஆஸ்திகத்தைக் காப்பாற்றவும் கிருஷ்ணனையும் கீதையையும் மனுதர்ம சாஸ்திரத்தையும் வருணாசிரம தர்மத்தையும் காப்பாற்றவுமே ஒழிய வேறு என்ன?

நாஸ்திகர்களாகாமல் முடியாது

ஆகவே நாம் உண்மையில் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும் வருணாச்சிரம தர்மத்தையும் சூத்திரத் தன்மையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது ஒரு வழியில் நாஸ்திகர்களாகாமல் முடியாது என்பதை ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள். நாம் மாத்திரமல்லாமல் மற்றபடி வேறு யார் ஜாதியை ஒழிப்பதானாலும் நாஸ்திகர்களாகித்தான் தீரவேண்டும்.

நாம் மாத்திரம் துணிவுடன் முன் வைத்த காலைப் பின் வைக்காமல் இந்த விஷயங்களில் உறுதியாய் இருப்போமானால் ஜாதி பேதத்தால் ஜாதிக் கிரமத்தால் கஷ்டப்படும் மக்கள் எல்லோரும் நம்முடன் சேர்ந்துதான் தீருவார்கள்.

பார்ப்பனர்கள் மாத்திரம் எந்தக்காலத்திலும் நம்முடன் சேரமாட்டார்கள். ஏனெனில் இந்த நமது இந்துமதமும், சாஸ்திரமும், கடவுள்களும் அவர்களுக்காக பயன்படும்படியான முறையிலேயே கற்பிக்கப்பட்டு அவர்களே அவற்றால் பயனடைந்து உலகில் உள்ள மனித சமூகத்திலேயே உயர்நிலையை அடைந்து வாழ்ந்து வருவதால் இன்று பார்ப்பனர் ஒழிவதா ஜாதி ஒழிவதா என்கின்ற நிலையில் நம்முயற்சி இருந்து வருகிறது.

பார்ப்பனர் ஒழிந்தால் ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்ததென்றே சொல்லலாம்; ஜாதியும் மதமும் கடவுளும் ஒழிந்தால் பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்றே சொல்லலாம்; இவ்வளவு ஏன்? ஜாதி ஒழிந்தாலே பார்ப்பனர்கள் ஒழிந்தார்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதனால் தான் சு.ம. இயக்கமும் ஜஸ்டிஸ் கட்சியும் பார்ப்பனர்களுக்கே இவ்வளவு பயங்கரமான எதிரிகளாய் காணப்படுகின்றன.

ஜாதி ஒழிப்புக்குக் காங்கிரஸ் எதிரி

ஜாதி ஒழிப்புக்கு விரோதமாய் பார்ப்பனர்களின் சூழ்ச்சி எப்படிப் பட்டது என்பதை நமது மக்கள் உணரவில்லை.

தீண்டாமை ஒழிப்புக்கு காந்தியார் பாடுபடுகிறார். ஆனால் தாழ்த்தப் பட்ட மக்கள் செருப்பு தைக்கவேண்டும். தோல் பதனிடவேண்டும் என்பதை மாத்திரம் அவர் மாற்றிக்கொள்ள மாட்டார்.

நமது காங்கிரஸ் அபிமானிகள் தீண்டாமை வேலை மேற்கொண்டார்கள். பணம் வசூலித்தார்கள். அதைப் பயன்படுத்தி தோழர் சகஜானந்தத்தைப் பிடித்து இந்துமதமும் இந்து மத தர்மமும் காப்பாற்ற வேண்டும் என்று பிரசாரம் செய்ய ஏற்பாடு செய்து பத்திரிகை நடத்தவும் உதவி செய்தார்கள்.

தோழர் M.C. ராஜாவைப் பிடித்து இந்து மதத்தின் புனிதத்தன்மையை பிரசாரம் செய்தார்கள். இப்படிப்பட்ட ஆட்கள் இருந்தன்மையில் இருப்பதை கண்டே டாக்டர் அம்பேத்கார் இந்துமதத்தை அழிக்க தன்னால் முடியாதென்று கருதியும், இந்துமதத்தில் இருந்துகொண்டு தீண்டாமையை ஒழித்துக்கொள்ள முடியாதென்று கருதியும் இந்துமதத்தை விட்டுத் தாம் விலகிக் கொள்வதாக முடிவு செய்துகொண்டார்.

தீண்டாமை விலக்குப் பண்டிலிருந்து கொடுக்கப்படும் சம்பளம் பார்ப்பனருக்குத்தான் பயன்படுகின்றன.

தீண்டாமை விலக்குப் பண்டு போன யோக்கியதையை இன்று யாராவது தெரியவேண்டுமானால் திலகர்நிதி மோசடியே மேலென்று கருதலாம். நடத்தையைப் பார்த்தாலும் காங்கிரஸ்காரர் தோழர்கள் ராமசாமி வரதராஜுலு முதலியவர்களை நடத்திய மாதிரியே மேலென்று தோன்றலாம். தோழர் சன்யாசியை நடத்திய மாதிரியை யோசித்துப்பாருங்கள்.

காங்கிரசிலும் ஜாதியுணர்ச்சி

எந்தக் காங்கிரஸ் கூட்டத்திலாவது பிராமணர்கள் வேறு மற்றவர்கள் வேறு என்கின்ற பிரிவு இல்லாமல் உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறார்களா? சமீபத்தில் நடந்த காங்கிரஸ் கூட்டங்களில் கூட பார்ப்பனரல்லாதவர்களை வெளியில் வைத்து சாப்பாடு போடவில்லையா?

காங்கிரஸ் கான்பரன்ஸ் முதலிய எந்தக் கூட்டங்களிலும் பார்ப்பனர் களைக் கொண்டுதான் சமையல் செய்திருக்கிறார்களே ஒழிய மற்ற ஜாதிக்காரர்களை சமையல் வீட்டில் நுழையவிட்டிருக்கிறார்களா?

சுயமரியாதை மகாநாடுகளையோ, கூட்டங்களையோ எடுத்துக் கொள்ளுங்கள். நாடார், நாயுடு, முஸ்லீம், தீண்டப்படாதார் என்கின்றவர்கள் எல்லோரும் கலந்து சமையல் செய்கிறார்கள். இவர்கள் எல்லோருமே கலந்து பரிமாறுகிறார்கள். சைவர் முதல் எல்லாப் “பெரிய” ஜாதிக்காரர்கள் என்பவர்களும் ஒன்றாய் உட்கார்ந்து தான் சாப்பிடுகிறார்கள்.

ஆகவே காங்கிரஸ்காரர்களின் தீண்டாமை ஒழிப்புச் சூட்சியை நீங்கள் இதிலிருந்தாவது தெரிந்து கொள்ளுங்கள்.

சுயமரியாதைக்காரர்களுக்கு நம்பிக்கை இல்லாவிட்டாலும் தீண்டாமை இல்லை என்கின்ற காரணத்துக்காகவே சில மதங்களைப் பாராட்டுகிறார்கள். தீண்டாதவர்களுக்கும் சம உரிமை கொடுக்கிறார்கள் என்பதற்காகவே சில அரசியல் இயக்கங்களையும் ஆதரிக்கிறார்கள். மனித உரிமையை அளிக்க மறுக்கும் எதையும் ஒழித்துத் தீரவேண்டியது மனிதத் தன்மையின் குணம் என்பதை சுயமரியாதை இயக்கம் பறையடிக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியும் சுயமரியாதை இயக்கமும்

நிற்க, தோழர்களே,

சுயமரியாதை இயக்கத்தைச் சேர்ந்த மக்களிடையே சில அபிப்பிராய பேதமிருந்து வருவதாகச் சொல்லப்படுகிறது.

அவ்வவிப்பிராயபேதங்களுள் ஒன்று, நாம் ஜஸ்டிஸ் கக்ஷியாருடன் சம்மந்தப்பட்டு அதை ஆதரிப்பதாக கூறப்படுகிறது.

இதைப்பற்றி நான் சிறிதும் கவலைகொள்ளவில்லை. அது அவரவர்கள் அபிப்பிராயம். சுயமரியாதை இயக்கம் ஜஸ்டிஸ் கக்ஷியை விட்டு பிரிந்து ஒருநாளும் இருக்கவில்லை. ஜஸ்டிஸ் கக்ஷி சுயமரியாதை இயக்கத்தை விட்டுப்பிரிந்து இருக்கலாம். அது மாத்திரமல்லாமல் ஜஸ்டிஸ் கக்ஷியார் சுயமரியாதை இயக்கத்துக்கு பல தொல்லைகள் விளைவித்து இருக்கலாம் என்றும் வைத்துக்கொள்ளுங்கள்.

ஆனால் அவற்றிற்கு ஜஸ்டிஸ் கக்ஷி காரணமல்ல. அவ்வியக்கத்தில் ஈடுபட்டு அவ்வியக்கத்தை கைப்பற்றிய சுயநலக்காரர்களின் செய்கை என்றுதான் கருதவேண்டும். ஜஸ்டிஸ் இயக்கத்தின் கொள்கை நம்மை ஒரு கெடுதியும் செய்துவிடவில்லை.

ஜஸ்டிஸ்கக்ஷியானது ஒவ்வொரு தனிப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகத்தின் நன்மையையும் உண்மையாய் கவனித்து அவற்றிற்கு உரிய உரிமைகளையும், சந்தர்ப்பங்களையும் கொடுப்பது, ஏற்படுத்துவதே முக்கியக் கொள்கை என்பதை அக்கக்ஷி தங்கள் கொள்கையாக வைத்திருக்கும் வரை அதன் தலைவர்களால் அதைக் கைப்பற்றி இருப்பவர்களால் நமக்கு எவ்வித கெடுதி ஏற்படுவதாயினும் அதை வெறுக்க நம்மால் முடியாது.

கடமையை மறக்கலாமா?

அதற்கு பார்ப்பனர்களால் கஷ்டம் உண்டாக்கப்பட்ட காலங்களில் எல்லாம் சுயமரியாதை இயக்கம் இந்தப் பத்து வருஷகாலமாய் ஆதரவளித்து வந்திருக்கிறது. அதை அக்கட்சி உணராமல் இருக்கலாம். காரணம் அதில் சில பதவிகளும் பெரும்பணம் வருவாய்களும் இருப்பதால் சிலர் நாணயமாய் யோக்கியமாய் நடந்துகொள்ள முடியாமல் போகிறது. இது மனித இயற்கை என்பதோடு இதற்காகவே நாம் நமது கடமையில் இருந்து தவறிவிட முடியாது. நமக்கு வேண்டிய கொள்கைகளில் சிலதாவது அங்கு இருக்கிறது.

ஜஸ்டிஸ் கட்சியைப்பற்றி பார்ப்பனர்களும், அதனால் பயன் எதிர்பார்த்து ஏமாந்தவர்களும் செய்து வந்த விஷமப் பிரசாரத்தினால் அக் கட்சி பாமர மக்களிடை போதிய செல்வாக்கற்றுப் போனதால் நமது இளைஞர்கள் பலருக்கு எழுச்சி குன்றிவிட்டதென்பது தவிர, மற்றபடி ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டும் என்று பிரசாரம் செய்கின்ற தோழர்களிடம் வேறு தக்க காரணங்களை நான் காணமுடியவில்லை. ஆதலால் நான் அப்படிப்பட்ட அபிப்பிராயங்களுக்கு செவிசாய்க்க முடியாதவனாயிருக்கின்றேன். ஆனபோதிலும் இவற்றால் எல்லாம் எதிரிகளுக்கேற்பட்ட செல்வாக்கினாலும் இனியும் ஏற்படப்போகிற செல்வாக்கினாலும் அவர்கள் என்ன செய்யப் போகிறார்களென்பதைப் பார்க்கவே நான் காத்திருக்கிறேன்.

ஆதலால் ஜஸ்டிஸ் கட்சி என்ன செய்தது என்கின்ற கேள்விக்கு ஆக யாரும் பதில் சொல்ல கவலை எடுத்துக்கொள்ள வேண்டியதில்லை.

ஜஸ்டிஸ் கட்சி செய்த வேலை

ஜஸ்டிஸ் கட்சி மனித சமூக உரிமையை சூதுவாதில்லாமல் பாரபக்ஷ மில்லாமல் ஒப்புக்கொண்டிருக்கிறது. அதன் அதிகாரத்தில் அது அதற்கானவற்றை செய்திருக்கிறது. அது எந்த நிலையிலும் மக்களை ஏமாற்றி வஞ்சிக்க வில்லை. அதன் தொண்டாகிய ஜனப் பிரதிநிதித்துவத்தை சகல வகுப்புக்கும் அது அளித்திருக்கிறது. மற்ற மாகாணங்கள் பின்பற்றும்படியாக அனேக உயர்ந்த காரியங்களைச் செய்திருக்கிறது. இந்தியாவுக்கு வந்த எந்த அரசாங்கமும் செய்துமுடிக்காத காரியங்களை செய்திருக்கிறது. மனிதனை பொதுவாழ்வில் சமமாக பாவிக்காவிட்டால் தண்டனையென்று பினல் கோர்ட்டில் சட்டமியற்றியிருக்கிறது.

பாமர மக்களுக்கு, தாழ்த்தப்பட்டவர்களுக்கு, பிற்பட்ட வகுப்பாருக்கு நன்மைகள் செய்த காரணத்தாலேயே ஏக போக உரிமைக்காரர்கள், பார்ப்பனர்கள் ஜஸ்டிஸ் கட்சியை ஒழிக்க வேண்டுமென்கிறார்கள். நாமும் அதற்கு ஆதரவாளிகளாயிருப்பதா?

காங்கிரஸ் என்ன செய்தது?

இவ்வளவு குறைகூறும் காங்கிரஸ்காரர்கள் இந்த 50 வருடமாய் இந்திய மக்களுக்குச் செய்த நன்மையென்னவென்று கேட்கின்றேன்.

சென்றவாரத்தில், காங்கிரசுக்காக 50 வருஷ பொன் விழா கொண்டாடினார்கள். இது மக்களை ஏய்க்கவல்லாமல் இதனால் ஏற்பட்ட பலன் என்ன? காங்கிரசினிடம் ஒரு பற்றுதலும் மாய்கையும் ஏற்பட்டு காங்கிரஸ் பூசாரிகளுக்கு மதிப்பும் வயிறு வளர்ப்பும் ஏற்படவேண்டும் என்பதல்லால் வேறு ஏதாவதுண்டா?

வெள்ளி விழா கொண்டாடினார்களா? காங்கிரசுக்கு 25 வயதானதுக்கு வெள்ளிவிழா கொண்டாடியிருந்தால் இப்போது 50 வயதுக்கு பொன்விழா கொண்டாடுவது முறையாகும் என்று சொல்லலாம். அதில்லாமல் இப்போது திடீரென்று 50ஆண்டுபொன்விழா கொண்டாடினார்கள். காங்கிரசு செய்த ஒரு நன்மையாவது அவ்விழாவில் எடுத்து சொல்லப்பட்டதா? சொல்ல முடிந்ததா? சொல்ல ஏதாவது இருக்கிறதா?

எவ்வளவு புரட்டு பாருங்கள்! சாமிகள் என்பவற்றிற்கு செய்யும் உற்சவங்கள் போல் காந்திப்படம் காந்தி உருவம் ஆகியவைகளுக்கு ஊர் கோலம் முதலியவைகள், மேளவாத்தியங்கள் தேங்காய் பழ நைவேத்தியம், கற்பூர ஆலத்தி முதலிய காரியங்கள் நடந்தன. இவையெல்லாம் இந்தியரின் காட்டுமிராண்டித் தனத்தை, மிருகப் பிராயத்தை, மடமையைக் குறிக் கின்றனவே அல்லாமல் வேறு ஏதாவது அறிவுடமையை விளக்குகிறதா நாணையத்தை விளக்குகிறதா? இதற்குத் துணை புரிந்த பாதகர்கள் இந்திய மக்களை என்ன செய்யத்தான் பயப்படுவார்கள்? இந்தக் கூட்டத்தார்கள் தானே இன்று தேசபக்தர்கள் தேசாபிமானச் சிங்கங்கள், மகாத்மாக்கள், மகா மகாத்மாக்களாக மூட மக்கள் முன் விளங்குகிறார்கள். இதைப் பற்றி எந்த சர்க்காராவது, எந்த அறிவாளியாவது கவனித்தார்களா?

10 நிமிஷம் கொடுக்கிறேன்

இங்கு இப்போது 10 நிமிஷ நேரம் சாவகாசம் கொடுக்கிறேன். ஒருவராவது காங்கிரஸ் இந்திய மக்களுக்கு இன்ன நன்மை செய்தது என்று ஒரு விரலை விடட்டும் பார்க்கிறேன்.

சமுதாயத் துறையில் நடந்ததையும் கெடுத்து, நடப்பதையும் கெடுத்தது என்பதை யார் மறுக்கிறீர்கள்? அதுவிஷமாய் ஏதாவது ஒரு சட்டம் கொண்டுவந்தார்களா? அல்லது கொண்டு வந்த எந்த சட்டத்தை யாவது எதிர்க்காமல் ஆதரித்தார்களா?

பொருளாதார விஷயத்தில் ஏழை மக்களுக்குப் பயன்படும்படி என்ன செய்தார்கள்? பெரும் பெரும் சம்பளங்களை அரசாங்கத்தில் ஏற்படுத்தி நாட்டில் யோக்கியர்களே ஒருவர் கூட இருக்க முடியாமற்படி செய்தார்கள்.

விவசாயத் துறையில் என்ன செய்தார்கள்? பல உத்தியோகங்கள் ஏற்படுத்தி அவைகளை மனித சமூகத்துக்கு துரோகம் செய்தாவது கைப் பற்றும்படி செய்தார்கள்.

அரசியலில் என்ன சீர்திருத்தம் ஏற்படுத்தினார்கள்?

ஜஸ்டிஸ்காரர்கள் 10, 15, வருஷமாய்த் தான் மந்திரி ஆனார்கள். அதற்கு முன் 35, 40 வருஷம் காங்கிரஸ் ஸ்தாபனம் அரசாங்கத்தார் ஆதரவு பெற்றதாகவே இருந்து வந்ததல்லவா? ராஜபக்தி ராஜவிஸ்வாசத்தோடே நடைபெற்று வந்ததல்லவா? தோழர் டி. ரங்காச்சாரியாரும் டி. விஜய ரங்காச்சாரியாரும் அரசர்கள் விஷ்ணு அம்சம் என்று ஐரோப்பாவில் போய் சொல்லிவிட்டு வந்தார்கள் அல்லவா? காங்கிரஸ் தலைவர்கள் எழுந்து நின்று ராஜ விஸ்வாசம் கூறிவந்தார்களல்லவா? அந்தக்காலம் முதல் ஜஸ்டிஸ் கட்சியார் மந்திரியாய் வந்தவரை என்ன நன்மை செய்ய முடிந்தது?

சொல்லட்டுமே ஒரு ஆண்மையுள்ள காங்கிரஸ் பக்தன் என்றுதான் கேட்கிறேன்.

காங்கிரசின் நாணயம்

காங்கிரசுக்காரர்கள் நாணயத்துக்கு உங்களுக்கு உதாரணம் வேண்டுமானால் காங்கிரஸ் சரித்திரத்தையும், அதில் தோன்றின தலைவர்களின் யோக்கியதைகளையும், அவர்கள் உபதேசங்களையும், காங்கிரஸ் கொள்கைகளையும், அவற்றின் திட்டங்களையும் அவற்றைப் பின் பற்றின யோக்கியதைகளையும் அவற்றிற்கு ஆக கோடிக்கணக்கான பணங்கள் செலவு செய்து வினியோகித்த நாணையங்களையும் அப்பணம் வசூலிக்கவும் எலக்ஷனில் வெற்றிபெறவும் மக்களுக்கு அவர்கள் கொடுத்த வாக்குறுதி களையும் கவனித்துப் பாருங்கள். சுயமரியாதைக்காரர்கள் ராமாயணத்தை ஆராய்ச்சி செய்கிறமாதிரி கூட ஆராய்ச்சி செய்யாதீர்கள். ஒரு காங்கிரஸ் பக்தனாய் இருந்தே யோக்கியமாய் பகுத்தறிவோடு ஆராய்ச்சி செய்து பாருங்கள். நீங்கள் வெட்கப்படாமலிருக்கமாட்டீர்கள் என்று உறுதி கூறுகிறேன்.

ஆதலால் காங்கிரஸ் பயித்தியம் என்பது மனிதனின் பலவீனம், அறிவற்ற தன்மை அல்லது சுயநலம் என்பதல்லாமல் வேறு இல்லை.

ஆகவே தோழர்களே போகிறவர்கள் போகட்டும். இருக்கிறவர்கள் இருக்கட்டும். சுயமரியாதை இளைஞர்கள் தாங்கள் சரி என்று பட்டதற்கு ஆக தைரியமாய் உழையுங்கள். இச்சென்னையில் 16சுயமரியாதைச் சங்கங்கள் இருப்பதாய் அறிகிறேன். அவைகளில் இரண்டொன்று உள்ளுக்குள் இருந்தே தொல்லை விளைவிக்கும் முறையைக்கொண்டிருப்பதாய் சேதி எட்டுகிறது. அதைப்பற்றி கவலை இல்லை. அவர்களே நம்மை ஏமாற்றி விட்ட பெருமை அடையட்டும். ஆனால் நீங்கள் மாத்திரம் தைரியத்தை விடாமல் உழையுங்கள்.

கேள்விகள்

திலகர் நிதி

முதல் கேள்வி :

திலகர் சுயராஜ்ஜிய நிதியைப்பற்றி தோழர் ஈ.வெ.ரா. மீது தினமணி எழுதியிருந்த குறையைப் பற்றியதாகும். அதாவது வைக்கம் சத்தியாக்கிரக சம்மந்தமாய் 1000 ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லை என்பது தொக்கி இருந்தது.

இந்தப் புகாரானது திலகர் நிதியைப் பற்றி காங்கிரஸ்காரர்கள் மீது ஏற்பட்ட புகார்களுக்கு ஒரு பத்திரிகை ஜஸ்டிஸ் கட்சி தலைவர்களில் ஒருவரான ஈ.வெ.ராமசாமியே கணக்கு கொடுக்கவில்லை என்று சமாதானங் கூறிற்று. இது மிகவும் வேடிக்கையான சமாதானம். ஏனெனில் ஈ.வெ.ராமசாமி ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு கொடுக்கவில்லையானால் அதற்கு ஆகவே இந்தியன் பினல் கோட்டில் திருட்டு செக்ஷனையே எடுத்து விடவேண்டுமா என்று கேட்கின்றேன். நான் இந்த ஆயிரம் ரூபாய்க்கு கணக்கு கொடுத்ததையும் மற்றும் விவரத்தையும் எடுத்துக் கூறிய பின்பே கருவாடு திருட்டுக் கொடுத்த பார்ப்பனர் போல் அது சம்மந்தமாக மறுபடியும் பேச முடியாமல் இந்த மாகாணத்து பார்ப்பனர்கள் வாயும் அவர்களது பத்திரிக்கைகளின் விஷமங்களும் அடங்கின. ஆயிர ரூபாய் விஷயமாய் நான் கணக்கு அப்போதே கொடுத்து இருக்கிறேன் என்பதோடு அதைத்தெரிய வேண்டியவர்கள் ஈரோட்டுக்கு வந்தால் இன்னும் விவரமாக காட்டத்தயாராய் இருக்கிறேன். அன்றியும் திலகர் நிதியைப்பற்றி ஜஸ்டிஸ் கக்ஷி மாத்திரம் குறை கூறினதாய் எழுதி தப்பித்துக் கொள்ளப் பார்த்தார்கள்.

இந்தியாவில் எல்லா மாகாணத்தில் உள்ள பத்திரிகைகளும், ஜெயகர் போன்ற பெரியார்களும், பல காங்கிரஸ்காரர்களும் குறை கூறினார்கள். இன்றும் பந்தயம் கூறுகிறார்கள். நடுநிலைமை கொண்ட ஒரு கமிட்டியாரின் பரிசீலனைக்கு காங்கிரஸ்காரர்கள் ஒப்புக்கொள்ளுகிறார்களா என்று கேட்கிறார்கள். ஆகவே திலகர்நிதி ஒழுங்காகவும் நேர்மையாகவும் நாணயமாகவும் பயன்படுத்தப்படவில்லை என்பதை நான் கூறுவதோடு என்னால் கணக்குக் கொடுபடாத தொகை பாக்கி இருந்தால் எப்பவும் கொடுக்கத் தயாராய் இருக்கிறேன்.

மறுஜன்மம்

மதுராவில் ஒருபெண் போன ஜன்மத்தைப்பற்றி பேசுவதாகவும் ஆகவே மறுஜன்மத்தைப்பற்றி அபிப்பிராயம் என்ன என்பது ஒரு சீட்டு.

மறுஜன்மம் என்பது மதசம்மந்தமான ஒரு விவகாரத்திற்கு உரிய விஷயமே தவிர விஞ்ஞான சம்மந்தமானதல்ல. இதைப்பற்றி பல இடங்களில் பேசி யிருக்கிறேன். நான் ஆத்மாவை ஒப்புக்கொள்வதில்லை. அப்படி இருக்க ஆத்மாவுக்கு மறுஜன்மம் உண்டா என்பது பற்றி என் அபிப்பிராயம் தெரிய வேண்டுமா?

அது எப்படியோ போகட்டும். மதுராவில் பெண் போன ஜன்ம சங்கதி பேசுகிறார் என்பது கற்பனையேயாகும். பத்திரிகைகளில் வருவதெல்லாம் நிஜம் என்றால் எதையும் விசாரிக்க வேண்டிய அவசியமே இருக்கா தல்லவா? இந்தப்படியான கற்பனைகள் அறியாமையால் கற்பித்துக் கொள்பவைகள் வெகுகாலமாகவே இருந்து வருகின்றன.

இன்றும் பழனிக்கு காவடி கொண்டு போனால் கொன்ற பாம்பு, அறுத்துச் சமைத்த கோழி, மீன், ஆகியவை உயிர் பெற்று விடுகின்றன என்று இன்னும் அனேகர்கள் நம்புகிறார்கள். அனேகர்கள் காவடி கொண்டும் போகிறார்கள்.

ஒரு சமயத்தில் நானும் முன் ஒருதடவை முதன் மந்திரியாய் இருந்த முனிசாமி நாயுடு அவர்களும் எனது நண்பர் சி.எஸ். இரத்தினசபாபதி முதலியார் அவர்களும் பழனிக்குப் போனோம். அப்போது நான் அடிவாரத்தில் இருந்து கொண்டேன். அவர்கள் மலை ஏறிவிட்டு இறங்கி வந்தார்கள்.

இந்த சமயத்தில் அடிவாரத்தில் ஒரு விபூதிக்கடைக்காரன் 2 சாவல்களை தன் கடைமுன் கட்டி அதன் மீது மஞ்சள் குங்குமம் தெளித்து வெத்திலை பாக்கை முன்னால் வைத்து ஒரு உண்டியல் பெட்டியும் வைத்து இருந்தான். இங்கு ஜனங்கள் கூட்டமாக நின்று சாவல்களைக் கும்பிட்டு உண்டியல் கலயத்தில் காசு போட்டுக் கொண்டிருந்தார்கள்.

நான் இதை என்ன என்று கேட்டேன். அதற்கு அந்த கடைக்காரன் என்னையும் ஒரு பக்தன் என்றும் மந்திரி என்றும் நினைத்துக் கொண்டு பயபக்தியுடன் எழுந்து நின்று “இந்த சாவல்கள் நேற்று வந்த சோதனைக் காவடியின் அருள்” என்று சொன்னான். அதாவது அறுத்து சமைத்து காவடி கட்டி கொண்டுவந்த சாவல்கள் கடவுள் சன்னதியில் உயிர்பெற்று விட்டது என்று விளக்கினான்.

இதை நான் இரு நண்பர்களுக்கும் காட்டி விளக்கினேன். அவர்கள் சிரித்துவிட்டு “இப்படிப்பட்ட ஆள்கள் தான் உங்கள் பிரசாரத்துக்கு அனு கூலம் செய்துவிடுகிறார்கள்” என்றும், நாங்கள் இதையெல்லாம் நம்பமாட்டோம் என்றும் சொல்லிச் சிரித்தார்கள்.

ஆகவே இப்படிப் பலபேர் மக்களின் முட்டாள் தனத்தால் பிழைக்க வேண்டியவர்கள் கற்பனை செய்வதுண்டு.

நம் நாட்டில் கூட அனேக பத்திராதிபர்கள் வேண்டுமென்றே தங்களுக்கு பொய் என்று பட்டவிஷயத்தைக் கூட ஜனங்கள் ஏமாறத்தக்க விஷயமாய் பிரசுரிக்கிறார்கள். மதமும் தேசீயமும் வெற்றி பெற வேண்டுமானால் மக்களை மூடர்களாக ஆக்கிவைப்பதினால் தான் முடியும்.

ஆதலால் இப்படிப்பட்ட கேள்விகள் அநேகவற்றிற்கு நான் எத்தனையோ தடவை பதில் சொல்லி இருக்கிறேன்.

இம்மாதிரி கேள்விகளுக்கு ஒருவர் இருவருக்குச் சமாதானம் சொல்லி விடுவதாலும் அடங்கிவிடாது ஒன்று கூறுகிறேன். நல்ல நீதிபதிகள் போல் நான்கு பேரை நியமிக்கலாம். அதற்கு ஆகும் செலவை நான் பொதுக்கட்டி விடுகிறேன். அதில் நம்பிக்கை உள்ளவர்களும் பொதுக் கட்டட்டும். விசாரித்து அறிந்த பிறகு அது உண்மையானால் நான் கட்டிய தொகையை செலவுக்கு எடுத்துக் கொள்ளட்டும். அது பொய்யானால் அவர்கள் கட்டிய தொகையை எடுத்துக்கொள்ளட்டும். அப்படிக்கில்லாமல் எவ்விதப் பொறுப்பும் இல்லாதவர்கள் இப்படி கண்டபடி கண்டவர்கள் சொல்லுவதை நம்பி உளறிக் கொண்டே இருந்தால் இதற்கு எத்தனை சமாதானம் சொல்ல முடியும்? இவை சில சமயங்களில் வேண்டுமென்றே கற்பிக்கப்படுவது எனக்குத் தெரியும்.

ஜோசியம்

ஜோசியம் பொய்யா மெய்யா என்று அடுத்த கேள்விச் சீட்டில் இருந்தது.

சோதிட ஆராய்ச்சி என்று ஒரு புத்தகம் எழுதியிருக்கிறேன். அது பற்றி அநேக வியாசங்கள் குடி அரசிலும் பகுத்தறிவிலும் எழுதி இருக்கிறேன். அப்புத்தக விளம்பரத்துக்கு இம்மாதிரி சொல்லவில்லை. அதன் விலை 4 அணாத்தான்.

இப்பிரச்சினைக்கு முழு சமாதானம் சொல்ல காலம் போதாது. இப்பொழுதே நான் பேச ஆரம்பித்து இரண்டுமணி ஆகிவிட்டது.

பொதுவாக, ஜோசியம் பெரிதும் மனிதன் பிறந்த நேரத்தைப் பொறுத்ததாயிருக்கிறது. அந்த நேரத்துக்கும், அப்பொழுது இருந்த நட்சத்திர நிலைக்கும் மனிதனுடைய வாழ்க்கை நடத்தைகளுக்கும் சம்பவங்களுக்கும் சம்பந்தமில்லை. ஒரே குறிப்பிட்ட நேரங்களில் 100க் கணக்கான குழந்தைகளுக்குக் குறையாமல் ஆயிரக்கணக்கான குழந்தைகள் பிறக்கின்றன. பலன் எல்லாம் ஒன்றாய் இருக்க முடியாது. அப்படி இருக்குமானால் அபிசீனியா இதாலி சண்டை நடக்க இடமே இருக்காது. இந்தியாவில் உள்ள காந்தி ஜோசியர்களை ஏன் விலை கொடுத்தாவது கொண்டுபோய் விஷயம் தெரிந்து ஒருவரிடம் ஒருவர் ராஜ்யத்தை ஒப்புவித்து சுகமே இருப்பார்கள். நம்மைவிட எந்தக் காரியத்திலும் (முட்டாள் தனத்தைத் தவிர) ஐரோப்பியர்கள் இளைத்தவர்கள் அல்ல. ஆதலால் ஜோசியம் என்பது சொல்லுகிறவர்கள் தந்திரமும் கேட்கிறவர்கள் முட்டாள்தனமும் அல்லாமல் வேறில்லை.

அம்பேத்கார்

அடுத்தது எந்த மதத்திலும் நம்பிக்கை இல்லாத நீர் அம்பேத்கார் வேறு மதத்துக்குப் போவதை ஏன் ஆதரிக்கிறீர். இஸ்லாம் மதத்தைத் தழுவும்படி ஏன் கூறுகிறீர்? என்பதாக எழுதப்பட்ட ஒரு சீட்டு கொடுக்கப் பட்டது. தீண்டாதவர்கள் முஸ்லீம் மதத்தில் சேர்ந்து விட்டால் தீண்டாமை ஒழிந்து விடும் என்று 1926ல் வெளிப்படையாகக் கூறியிருக்கிறேன். 28, 29 முதல் குடிஅரசுப் பத்திரிகையில் எழுதி வந்திருக்கிறேன். இதை முதல் முதல் சொன்னவன் நான் தான். அந்தக்காலத்தில் பல சுயமரியாதைத் தோழர்கள் துருக்கி தொப்பி வாங்கிப் போட்டு அழகு பார்த்ததும், லுங்கி கட்டி அழகு பார்த்ததும் எனக்குத் தெரியும். நான் இஸ்லாம் மதத்தில் தீண்டப்படாதவர்கள் சேர்ந்து கொள்ளுவதை ஆதரிப்பது முஸ்லீம் கடவுள் இந்துக் கடவுள்களை விட மேலான கடவுள் என்றோ, முஸ்லீம் மோட்சம் இந்து மோட்சத்தைவிட மேலானதென்றோ கருதி அல்ல. அவற்றைப் பற்றி எனக்கு நம்பிக்கையுமில்லை கவலையுமில்லை.

முஸ்லீம் மார்க்கத்தில் தீண்டாமைக்கு இடமில்லை; முஸ்லீம் களுக்குள் தீண்டாமை அனுபவத்திலும் இல்லை. ஆதலால் தீண்டாமையை ஒழித்துக் கொள்ள வேண்டியவர்கள் முஸ்லீம்களாகிவிடுவதில் ஆட்சேபணை இல்லை என்றும் ஆலோசனை சொல்லுகின்றேன் என்றும் சொல்லுகிறேன். எனக்கு மாறுபாடாகப் பேசுகிறவர்கள் முஸ்லீம் மார்க்கத்திலும் தீண்டாமை இருக்கிறது என்று மெய்ப்பித்தால் அந்த அபிப்பிராயத்தை விட்டு விடத் தயாராய் இருக்கிறேன். தீண்டாமை இல்லாத சமயங்கள் பல இருப்பதாக சொல்லிக் கொள்ளலாம். பிரம்ம சமாஜத்தில் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. பவுத்த மதத்திலும் ஜெயின மதத்திலும் சேர்ந்தால் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிடவில்லை.

ஆரிய சமாஜத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப்பட்டு விடவில்லை. கிறிஸ்துவ மதத்தில் சேர்ந்தாலும் தீண்டாமை ஒழிக்கப் பட்டுவிடவில்லை.

இந்து மதத்திலும் தீண்டாமைக்கு இடமில்லை என்று தான் சிலரால் சொல்லப்படுகிறது. ஆனால் பலனில் பிரத்தியட்சத்தில் அவரவர்களுக் குள்ளாகவே தீண்டாமை அனுஷ்டிக்கப்படுகிறது.

அது மாத்திரமில்லாமல் நாஸ்திகர்களுக்குள்ளாகவும், பகுத்தறிவுவாதி களுக்குள்ளாகவும் தீண்டாமை அனுஷ்டிக்கப்படுகிறது.

இஸ்லாம் மதத்தில் தீண்டாமை இல்லை

ஆனால் முஸ்லீம்களுக்குள் மனிதப் பிறவியின் காரணமாய் தீண்டாமை அனுஷ்டிப்பதில்லை.

நான் ஆஸ்திக தீண்டாமைக்காரர்களையே முஸ்லீம்களாகி விடுங்கள் என்று சொல்லுவதோடு நாஸ்திக தீண்டாதவர்களுக்கும் கூட தீண்டாமை ஒழிய வேண்டுமானால் வேறு மார்க்கத்தைக் காணோம் என்றும் கூறுகிறேன்.

தவிர இப்போது வர வர இந்திய மனித சமூக ஒற்றுமைக்கும் சுதந்திர சித்திக்கும் கூட இந்திய மக்கள் முஸ்லீம்களாக ஆகிவிட்டால் பயன்படும் என்றும் நினைக்கிறேன்.

இந்தியர்களில் இந்துக்களுக்கு சமூக அபிமானம் கிடையாது. ஒற்றுமையும் கிடையாது. இரண்டுமில்லாத மக்களுக்கு சுயமரியாதை வெற்றி ஏற்படுவது கடினம். இந்துக்கள் 20 கோடிபேர் இருந்தும் சமுதாய துறையில் முஸ்லீம்கள் பெற்ற வெற்றி இந்துக்கள் பெறமுடியவில்லை.

ஒரு பொது வீதியில் சிறு மஜீது கட்டிக்கொண்டு இங்கு மேளவாத்தியம் கூடாது என்று உத்திரவு போட்டால் பொப்பிலி ராஜா ஊர் கோலமோ காந்தியார் ஊர்கோலமோ கூட செல்ல முடியாது. ஏன்? இந்துக்கள் கடவுள்கள் ஊர்வலம் கூட செல்லமுடியாது. இரண்டு நாளைக்கு சத்தம் போட்டு விட்டு பிறகு நமக்கு ஏனிந்தத் தொல்லை என்று சொல்லிவிடுவான். சுதந்திரப்போர் என்பதிலும் முஸ்லீம்களுக்கு உள்ள வீரமும் பிடிவாத குணமும் உறுதியும் இந்துக்களுக்கு இல்லை.

முஸ்லீம்கள் வலிமை

அவர்கள் பிடித்ததை எல்லாம் சாதித்தவர்கள். இந்துக்கள் இதுவரை ஒன்றிலும் வெற்றிபெறவில்லை.

34 கோடி பேர்களுக்கு “பொது ஸ்தாபனமாகிய” காங்கிரசுக்கு உள்ள மதிப்பையும் முஸ்லீம்லீக்குக்குள்ள மதிப்பையும் நீங்களே யோசித்துப் பாருங்கள்.

இன்றய 9 கோடி முஸ்லீம் மக்களுடன் 7 கோடி தாழ்த்தப்பட்டவர்கள் சேர்ந்தால் இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியல்ல வேறு எந்த ஆட்சியும் முஸ்லீம்களின் சர்வாதிகாரத்தன்மையின் கீழ்தான் நடந்தாக வேண்டும்.

இந்தியாவின் செல்வம் ஒரு காசு வெளியில் போய்விட முடியாது.

ஜயிலில் கூட நான் பார்த்தேன். இந்தியக் கைதிக்கு தொடைக்குமேல் ஒரு துணி கொடுக்கிறார்கள். முஸ்லீம் கைதிக்கு வீதி கூட்டும்படி கால் அளவு கால் செராய் கொடுக்கிறார்கள்.

முஸ்லீம்களை வேறு சமூகத்தார் எந்தக்காரணம் கொண்டும் அடக்கி விட முடியாது.

தேச விடுதலைக்கும் இஸ்லாமே சிறந்தது

ஆதலால் தீண்டாமை ஒழிவது மாத்திரமல்லாமல் தேச விடுதலைக்கும் கூட தாழ்த்தப்பட்ட மக்கள் முஸ்லீம்களாகிவிடுவது ஆட்சேபிக்க முடியாததாகும்.

நான் சாவதானமாய் நடுநிலையில் இருந்து யோசித்துப் பார்த்தே பேசுகின்றேன்.

நம்மவர்களுக்கு மதப்பிடிவாதம் எதற்காக இருக்க வேண்டும்? இந்து மதத்தால் ஏற்பட்ட நன்மையைச் சொல்லுங்கள் பார்க்கலாம்.

முஸ்லீம் ஆட்சி நம் நாட்டில் இதுவரை இருந்து இருக்குமானால் அன்னிய ஆட்சி என்கிறீர்களே அது இந்த நாட்டில் இருந்திருக்க முடியுமா?

நம் தெய்வங்களும் சடங்குகளும் நம்பிறவி எதிரிகளான பார்ப்பனர் களும் இவ்வளவு பணம் கொள்ளைகொண்டு நம் மக்களை இவ்வளவு மூடர்களாகவும் சுயமரியாதை அற்றவர்களாகவும் வைத்திருக்குமா என்பதை சரித்திரங்கள் கொண்டுபாருங்கள். அன்றியும் உலக சமாதானத்துக்கும் ஓய்வுக்கும் மக்கள் முதலில் ஒரு சமூகமாக ஆகித் தீர வேண்டும். அந்த முறையிலும் இந்து சமூகம் ஒழிவதும், முஸ்லீம் சமூகம் பெருகுவதும் அனுகூலமேயாகும். கடைசியில் உலகில் இரண்டு சமூகம்தான் நிலைக்கும். அவை கிறிஸ்து முஸ்லீம் சமூகமே ஆகும்.

உலகம் நாஸ்திக அதாவது பகுத்தறிவான சமூகம் ஆக வேண்டு மானால் கிறிஸ்தவ சமூகத்தைவிட முஸ்லீம் சமூகம் தாராளமாய் இடம் கொடுக்கக் கூடியதாகும்.

இந்துக்கள் இதுவரை சமூக ஒற்றுமைக்கு யாதொரு முயற்சியும் செய்யவில்லை. அதைப்பற்றி லட்சியமும் இல்லை.

அம்பத்கார் முஸ்லீம் ஆவதாகச் சொன்னதற்கு யார் என்ன சமாதானம் சொன்னார்கள். வேண்டாம் வேண்டாம் என்கிறார்களே தவிர, வேண்டாம் உனக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்று யார் சொன்னார்கள்.

இந்துக்கள் ஏமாற்றுவித்தை

இந்துக்களுக்கோ இந்துத் தலைவர்களுக்கோ இவ்விஷயத்தில் ஆக்ஷேபணை இருக்குமானால் இதற்குள் தீண்டாதவர்களுக்கு சமூகக் கொடுமையும் இழிவையும் நீக்க ஏதாவது ஒரு சட்டம் கொண்டு வந்திருக்க மாட்டார்களா? ஒரு சில வருணாச்சிரமக்காரர்களை மதிக்கிறார்களே ஒழிய, 7கோடி தீண்டாதவர்களை காங்கிரஸ்காரர் மதிக்கிறார்களா? இந்துக்களாவது கவலைப்படுகிறார்களா? வீண் வேஷத்துக்கும், தாழ்த்தப்பட்ட மக்கள் அரசியல் பங்கை அபகரிப்பதற்கும் தான் இந்துக்கள் தீண்டாதவர்களை பயன்படுத்திக் கொள்ளுகிறார்களே ஒழிய வேறில்லை. ஆகையால் அதைப்பற்றி யாரும் கவலைப்படாதீர்கள்.

முஸ்லீம் சமூகத்தைப் பெருக்கித் தீண்டாமையை ஒழிப்பதோடு இந்தியாவை விடுதலையடையும்படி செய்யுங்கள்.

குறிப்பு: 12.01.1936 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை சென்னை பச்சையப்பன் கல்லூரி பெரிய மண்டபத்தில் சென்னை சுயமரியாதை இளைஞர் மன்றத்தின் 3வது ஆண்டுவிழாவில் ஆற்றிய தலைமையுரை.

குடி அரசு சொற்பொழிவு 19.01.1936

You may also like...