சென்னையில் குழுமிய சீர் பெருங்கூட்டம்

“சுயராஜ்யத்தைவிட சுயமரியாதையே பிரதானம்’’
“மகாத்மா காந்திக்கு மண்டையில் மூளையில்லை’’ என்று சொன்ன மகான் ( ! ) இப்பொழுது காங்கிரஸ் தலைவராய் விளங்குகிறார்
திரு.இராஜகோபாலாச்சாரியாரின் இரகசியம்
“சென்னையிலும் வங்காளத்தைப் போல் கலவரம் மூட்ட பார்ப்பனர்கள் முயலுகிறார்களா?’’


பலனடைந்தவர் பார்ப்பனரே
காங்கிரசின் ஆரம்பமே பார்ப்பனர்கள் எப்படி உத்தியோகம் சம்பாதிக்கலாம் என்கிற கருத்தைக் கொண்டுதான் ஆரம்பிக்கப்பட்டதே யல்லாமல் வேறல்ல. அது போலவே காங்கிரஸ் ஏற்பட்டதற்குப் பிறகுதான் உத்தியோகங்களெல்லாம் பார்ப்பன மயமாவதற்கு அநுகூலமேற்பட்டது. மகாத்மா காந்தி காங்கிரசை தலைமை வகித்து நடத்திய காலத்தில் பார்ப்பனர் களுக்கு ஆதிக்கமும் செல்வாக்கும் உத்தியோகமும் குறையத் தலைப்பட் டது. அதனால்தான் இந்தப் பார்ப்பனர்கள் மகாத்மாவை காங்கிரசை விட்டு ஓடும்படி செய்துவிட்டார்கள். அதனாலேயேதான் தமிழ்நாட்டில் மகாத்மா காங்கிரசுக்காக உழைத்து வந்த பார்ப்பனரல்லாத பிரமுகர்களையும் காங்கிரசை விட்டு ஓடும் படி செய்து விட்டார்கள். காங்கிரஸ் ஏற்பட்டதின் பலனாய் பார்ப்பனர்கள் லாபமடைந்தார்களே ஒழிய ஏழைகளுக்கும் தொழி லாளர்களுக்கும் குடியானவர்களுக்கும் அதிக கஷ்டம் தான் ஏற்பட்டது.

சீர்திருத்தத்தால் விளைந்த கேடு
உதாரணமாக காங்கிரசுக்கு முன்பாக 50 கோடி ரூபாயிக்குள்ளாகத் தான் நாம் சர்க்காருக்கு வரிகொடுத்துக் கொண்டு வந்தோம். காங்கிரஸ் பெருக்கப் பெருக்க ஏழைகளுக்கும் வரி பெருகிக் கொண்டே வந்து 50 கோடி ரூபாயிலிருந்த வரி இன்றை தினம் 160 கோடி ரூபாயில் வந்து நிற்கிறது. காங்கிரஸ் பெற்ற பிள்ளைகளான இரண்டு சீர்திருத்தங்களும் தேசத்திற்கு கஷ்டத்தையும் அதிக வரியையும் ஒற்றுமைக் குறைவையும் ஜனங்களுக்கு பந்தோபஸ்துக் குறைவையும்தான் ஏற்படுத்தி இருக்கிறதே யல்லாமல் வேறு ஒருவித நன்மையும் உண்டாக்கவேயில்லை. இன்னும் ஒரு சீர்திருத்தம் வருமேயானால் இனியும் அதிகமான வரியும் கஷ்டமும் பந்தோபஸ்து குறைவும் தான் ஏற்படுமேயல்லாமல் அநுகூலம் ஒன்றும் ஏற்படப் போவதில்லை. இப்பொழுதிருக்கும் காங்கிரஸ் பார்ப்பன ஆதிக் கத்திற்காக வேண்டி பொய்யும் புரட்டும் ஏமாற்றமும் நிறைந்து கிடக்கின்றன.

தூக்குமேடை!
அதில் ஏமாற்றுகிறவர்களுக்கும் வஞ்சிக்கிறவர்களுக்கும் சுயநலக் காரர்களுக்கும் பார்ப்பனர்களுக்கும்தான் இடமிருக்கிறதே யல்லாமல் யோக்கியர்களுக்கு இடமில்லாததோடு ஏழைகளுக்கனுகூலமான திட்டங் களும் அதில் ஒன்றுகூட இல்லை. காங்கிரசின் குற்றங்களை எடுத்து யாராவது வெளியில் சொன்னால் அவர்களை காங்கிரஸ் துரோகி என்று சொல்லுகி றார்கள். சர்க்காரின் குற்றங்களை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் எப்படி அவன் ராஜத் துரோகியாய் விடுகிறானோ, பார்ப்பனர் குற்றங்களை யாராவது வெளியில் எடுத்துச் சொன்னால் எப்படி அவன் பிராமணத் துவேஷியாய் விடுகிறானோ, சாஸ்திரங்களின் புரட்டுகளை யாராவது வெளி யில் எடுத்து சொன்னால் எப்படி அவன் மதத்துரோகியாய் விடுகிறானோ அது போலவே நமது பார்ப்பனர்களும் தங்கள் அநுகூலத்திற்காக ஏற்படுத்தி வைத்திருக்கிற காங்கிரஸ் குற்றத்தை யாராவது பேசினால் அவனைக் காங்கிரஸ் துரோகி என்பதோடு மாத்திரமல்லாமல் தேசத் துரோகி என்றும்கூட சொல்லி பிரசாரம் செய்கிறார்கள். இதற்காக வேண்டியே என்னை தூக்கில் இடுவதற்காக நமது பார்ப்பனர்கள் ஒரு கமிட்டி ஏற்படுத்தியிருக்கிறார்கள். எனது நண்பர்கள் ஸ்ரீமான்கள் சக்கரை, ஆரியா இவர்களை தூக்கில் போட்டு விட்டார்கள். மற்றும் ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியார், வரதராஜுலு நாயுடுகாரு இவர்களை மிரட்டிக் கொண்டும் இருக்கிறார்கள்.

தலைவிரித்தாடும் தற்காலத் தலைவர்கள்
காங்கிரசைப் பற்றி குற்றம் சொல்லாத மனிதர்கள் யாராவது இருக்கி றார்களா? ஒரு காலத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பேரில் செருப்பையும் ஜோட்டையும் வீசி யெறிந்துவிட்டு வெளியில் வந்து விட்ட மகான்களின் படம் இன்றைய தினம் உங்கள் வீடுகளிலெல்லாம் தொங்குகிறதா, இல்லையா? காங்கிரசையும் காந்தியையும் குழி தோண்டிப் புதைக்க வேண்டுமென்று சொன்னவர்கள் இன்றைய தினம் பெரிய தலைவர் களாகவில்லையா? “மகாத்மாவிற்கு மண்டையில் மூளை இல்லை” என்று சொன்னவர்களும் மகாத்மா சொல்லுவது சட்டத்திற்கு விரோதமென்று சொல்லி அவரைக் கைது செய்யச் சொன்னவர்களும் இன்றைய தினம் காங்கிரசுக்கும், சுயராஜ்யக் கட்சிக்கும் தலைவராக இல்லையா? இன்னும் ஸ்ரீமதி பெஸண்ட் அம்மையார் முதற்கொண்டு, மகா மகாகனம் ஸ்ரீனிவாச சாஸ்திரி முதற் கொண்டு ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி அய்யர், ரெங்கசாமி ஐயங்கார் வரையிலும் எத்தனையோ பேர் காங்கிரசையும் மகாத்மாவையும் திட்டிக்கொண்டு அதன் கொள்கைகளுக்கு விரோதமாய் எதிர்ப்பிரசாரமும் திருட்டுப் பிரசாரமும் செய்துகொண்டு இருந்தவர்கள் இன்றைய தினம் யோக்கியர்களாகி விடவில்லையா? அவர்களுக்கெல்லாம் தூக்குக் கிடை யாது; எங்களை மாத்திரம் தூக்கில் போட வேண்டுமாம். காங்கிரஸ் யோக்கியமாயிருந்த காலமாகிய மகாத்மா காங்கிரசில் இருந்த காலத்தில் இப்போதைய காங்கிரஸ் தலைவர்களாகிய இந்தப் பார்ப்பனர்களெல்லாம் அப்பொழுது எங்கு போயிருந்தார்கள்?

காங்கிரஸ் யோக்கியப் பொறுப்பற்று விபசாரித்தனமாயிருக்கிற காலத் தில் இப்பொழுது வந்து அதைக்கட்டி அணைந்து கொண்டாடுகிறார்கள். இப்போதைய காங்கிரஸ் தேசத்திற்கனுகூலமாக என்ன திட்டத்தை உடைத்தா யிருக்கிறது? என்ன காரியத்தைக் கொண்டு காங்கிரசை நாம் மதிக்கக் கூடிய தாயிருக்கிறது? ஒரு ஸ்தாபனத்திற்கு நாம் மதிப்புக் கொடுப்பதாயிருந்தால் அதனிடத்திலிருக்கிற கொள்கைக்காகவேயல்லாமல் அதனுடைய பெயருக் காக அல்ல. அதுபோலவே மகாத்மா காந்தியை நாம் மதிப்பதும் அவரிடத் தில் பக்தி செலுத்துவதும் அவரிடத்திலுள்ள கொள்கைக்கும், குணத்திற்கும், நடவடிக்கைக்குமேயல்லாமல் அவருடைய பெயருக்கும், சரீரத்துக்கும், யௌவன அழகுக்குமல்ல. ஆதலால் காங்கிரசின் குற்றத்தை வெளியில் எடுத்துச் சொல்வதினாலேயே ஒருவன் தேசத் துரோகியென்று அழைப்ப தென்றால் அப்பேர்ப்பட்ட தேசத் துரோகத்திற்கு நான் கொஞ்சமும் பயப் படவில்லை.

இராஜகோபாலாச்சாரியாரின் இரகசியம்
1923 – ´ த்தில் நடந்த சென்ற சட்டசபைத் தேர்தலின்போது கூட நானும் எனது நண்பர்கள் ஸ்ரீமான்கள் எஸ்.இராமநாதன், தண்டபாணி பிள்ளை, ஆர்.சின்னைய பிள்ளை முதலிய அநேகர் ஒத்துழையாமைக்கு விரோதமாய்ப் புறப்பட்டு டில்லி ஸ்பெஷல் காங்கிரஸ் கட்டளைக்கு விரோத மாக எங்கள் சொந்தத்திலிருந்து ஆயிரக்கணக்கான ரூபாய்கள் செலவு செய்து கொண்டு பிரசாரங்கள் செய்தோம். மறுபடியும் என்னையேதான் காங்கிரஸ் கமிட்டிக்குத் தலைவராகவும் ஸ்ரீமான் இராமநாதன் அவர்களைக் காரியதரிசியாகவும் நியமித்தார்கள். நாங்கள் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று கூட சொன்னோம். ஆனால் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் அவர்கள், இப்பொழுது ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் அஸ்ஸாம் காங்கிரஸில் எல்லாம் சரிப்படுத்தி விடுகிறேன் என்று சொல்லி ஏமாற்றி ஆள் சேர்த்து வருவதுபோல், காக்கிநாடாக் காங்கிரசில் எல்லாம் சரிப்படுத்தி விடுகிறேன் என்று சொல்லி எங்களை ஒத்துக் கொள்ளும்படி செய்தார். காக்கிநாடா காங்கிரசில் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார்தான் எங்களிடம் சொன்ன தற்கு விரோதமாய் சட்ட சபைப் பிரவேசத்தை ஆதரித்துத் தீர்மானத்தை பிரேரேபித்தார். அது முதற் கொண்டே எங்களுக்கும் அவருக்குமிருந்த கட்டுப்பாடும் நம்பிக்கையும் குலைந்து போய் விட்டது. அதிலிருந்துதான் ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் பார்ப்பனர்களுக்கு அனுகூலமாகவும், நாங்கள் பார்ப்பனரல்லாதாருக்கு அனுகூலமாகவும் இருந்து வருகிறோம். ஆனால் அவர் இரகசியமாகவும் தந்திரமாகவும் செய்கிறார்; நாங்கள் வெளிப்படையாகவும் தைரியமாகவும் செய்கிறோம். கள்ளை நிறுத்துவது என்கிற பெயரை வைத்துக் கொண்டு பார்ப்பனர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதற்காக ஸ்ரீமான் இராஜகோபாலாச்சாரியார் ஒரு இயக்கம் என்று ஆரம்பித்துக் கொண்டு ஊர் ஊராய்ப் பிரசாரம் செய்தார். அதன் பலனாகத் தான் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுப் பதற்காக சில கிராமங்களுக்குச் சென்று பிரசாரமும் செய்தார். அதனால்தான் ஸ்ரீமான் வெங்கிட்டரமணய்யங்காரின் உண்மை நிலையைப் பற்றி நானும் எனது பத்திரிகையின் மூலம் பிரசாரம் செய்தேன். ஸ்ரீமான் இராஜகோபா லாச்சாரியார் சுயராஜ்யக் கட்சிக்காரர் கள்ளை நிறுத்துவதாக ஒப்புக் கொண் டார்கள், ஆதலால் அவர்களுக்கு ஓட்டுக் கொடுங்கள் என்கிறார்; ஆனால் சுயராஜ்யக் கட்சிக்காரர்களோ, ஒருவர் சட்டசபையில் கள்ளை நிறுத்த முடி யாது என்கிறார்; மற்றொருவர் முட்டுக்கட்டை போடுவோமென்கிறார்; வேறொருவர் முட்டுக் கட்டை போட முடியாது அரசாங்கத்தைத் திணறச் செய்யலாமென்கிறார்; பிரிதொருவர் அரசாங்கத்தை அசைக்க முடியாது, இதன் மூலம் ஜனங்களுக்கு ஒரு படிப்பினை உண்டாக்கலாமென்கிறார்; இன்னொருவர் படிப்பு ஒன்றும் உண்டாக்க முடியாது; இரட்டை ஆட்சியை ஒழிக்கலாமென்கிறார்; மற்றொருவர் இரட்டை ஆட்சியை ஒழிப்பதில் ஒரு காரியமும் முடிந்து விடாது, சர்க்கார் சொல்லுகிறபடி கேட்கிற ஆள்கள் போய் உட்காருவதைவிட தேசீயவாதியாகிய நாம் போய் உட்காருவது நல்லதல்லவா என்கிறார்; வேறொருவர் தேசீயவாதியானாலும் சரி, யாரா னாலும் சரி எப்படியாவது ஜஸ்டிஸ் கட்சியை ஒழிப்பதற்காகப் போக வேண்டுமென்கிறார்.

சென்னையைக் கல்கத்தாவாக்க முயலுகிறார்களா?
வெளியில் இப்படி பலவித அபிப்பிராய பேதங்களிருப்பதாகக் காட்டிக் கொண்டாலும் உள் அந்தரங்கத்தில் இவர்கள் எல்லோருக்கும் ஒரே அபிப்பிராயந்தான். அதென்ன வென்றால் எப்படியாவது பார்ப்பனரல்லா தாருக்கு இதுசமயம் கொஞ்ச நஞ்சமிருந்துவரும் செல்வாக்கையும், அதிகா ரங்களையும், உத்தியோகங்களையும் ஒழித்து அந்த ஸ்தானங்களையும் பார்ப்பனர்களே கைப்பற்ற வேண்டுமென்பதுதான். இந்த மாதிரி கெட்ட எண்ணங்கள் என்றைக்கிருந்தாலும் ஒரு நாளைக்கு நமது பார்ப்பனர் களுக்கு ஆபத்தாய்த்தான் முடியப் போகிறது. உதாரணமாக, கல்கத்தாவில் இரட்டையாட்சியை ஒழித்ததன் பலன்தான் அங்கு இந்து முஸ்லீம் கலகமென்னும் நெருப்பு பற்றி எரிந்துக் கொண்டிருக்கிறது. கல்கத்தா இரட்டையாட்சியை ஒழிக்க வேண்டுமென்ற எண்ணமே அங்குள்ள மகமதிய மந்திரிகளை ஒழிப்பதற்காக செய்த சூழ்ச்சிகளேயாகும். மந்திரி களை ஒழித்து வெற்றி பெற்றதன் பலன் இந்து முஸ்லீம் கலகமாய்ப் போய் விட்டது. அதுபோலவே சென்னையிலும் பார்ப்பனரல்லாத மந்திரிகளை ஒழிக்க நமது பார்ப்பனர்கள், காங்கிரஸ் பெயராலும் தேசத்தின் பெயராலும் செய்யும் சூழ்ச்சிகள் நிறைவேறுமானால் என்ன நடக்குமென்பதை நீங்களே யோசித்துப் பாருங்கள். சென்ற வருடம் சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்கள் செய்த சூழ்ச்சி வெற்றியடைந்ததினால் இவ் வருடம் அத்தேர்தல்களில் என்ன நடக்கிறதென்பதைக் கவனித்தால் நடக்கப் போவது நன்றாய் விளங்கும். சென்ற வருடத்திய பஜனை எங்கே? கொடிகள் எங்கே? மகாத்மாவின் படமெங்கே? தேங்காய் பழம் பூஜையெங்கே? இவர் களுக்காகப் பிரசாரம் செய்த ஸ்ரீமான்கள் சக்கரைச் செட்டியார், டாக்டர் வரத ராஜுலு நாயுடு, கலியாணசுந்தர முதலியார் முதலிய பெரியார்களெங்கே? வீதிவீதிக்கு கூட்டமெங்கே? சோம்பேறிப் பையன்களுக்குக் காசு கொடுத்து பார்ப்பனரல்லாத பெரியார்களை திட்டச் சொன்னதும், அடிக்கச் சொன்னது மான தைரியமெங்கே? ஒரு சிறு புரட்டு வெளியானதெங்கே? இவ்வளவு பலன் கள் காரியங்கள் மறைபட்டிருந்தால் இனி பெரும் புரட்டு வெளியாய் விட்டால் இந்தப் பார்ப்பனர்களின் கதி என்ன ஆகுமென்று நினைக்கிறீர் கள்? வங்காளத்தை விட எண்மடங்கு அதிகமாகுமா இல்லையா? அப்புறம் யாரால் இக்கலகங்களை அடக்க முடியும். அரசாங்கத்தாரும் நன்றாய் வேடிக்கை பார்த்துக் கொண்டு சிரிப்பார்களேயொழிய ஒரு கட்சிக்கும் சிபார் சுக்கு வரமாட்டார்கள். பின்னால் கையில் பலத்தவன் காரியமாய்த்தான் போய் விடும். பிராமணர்களே மந்திரியாயும் போலீஸ் அதிகாரியாகவும் வந்தாலும் கூட பார்ப்பனரல்லாதார்கள்தான் போலீஸ்காரர்களாகவும் பட்டா ளத்து சிப்பாய்களாவும் இருப்பார்கள். அதுசமயம் மகாத்மா காந்தி வந்தா லும் 4 நாள் பட்டினி இருக்கத்தான்முடியுமே தவிர வேறு ஒரு காரிய மும் செய்து விட முடியாது. ஆதலால் இப்பொழுதிருக்கிற ஏதோ சில விஷமக் கார பார்ப்பனர்கள் தாங்கள் வெகு புத்திசாலிகளென்றும் தந்திரசாலி களென்றும் நினைத்துக் கொண்டு செய்வதின் பலன் நாளைய தினம் ஒரு பாவமுமறியாத இவர்களின் குழந்தை குட்டிகளுக்கும் மாணவர்களுக்கும் மற்றும் உள்ளவர்களுக்கும் கஷ்டத்தை விளைவிக்குமென்று வருத்தப் படாமலிருக்க முடியவில்லை. ஆதலால் பார்ப்பனர்களில் வாலிபர் களாகவும் பட்ச பாதமற்ற வர்களாகவும், பரிசுத்தர்களாகவும் இருக்கிறவர்கள் தேச நன்மையையும், தங்களது சமூக நன்மையையும் உத்தேசித்து ஒன்று சேர்ந்து தங்கள் சமூகத்திற்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணம் வைத்துக்கொண்டு தேசத்தின் பெயரால் சாது ஜனங்களுக்குச் செய்யும் கொடுமையைத் தடை செய்து கர்மபலனை அடையாமலிருக்கும்படி பிரயத்தனப்பட வேண்டியது அவர்களது கடமையாகும்.

பார்ப்பனர்கள் கடமை
இவ்விஷயங்களைப் பற்றி எடுத்து நான் சொல்லுவதை நீங்கள் அலட்சியமாய் கருதிவிடக்கூடாது. என்னைப் பொருத்தவரையிலும் நான் உண்மையாய் உணர்வதையும் எனக்கு உண்மை என்று பட்டதையுமே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன். பார்ப்பனர்களை உதைத்துவிட முடியுமென் றாவது இந்நாட்டை விட்டு ஓட்டிவிட முடியுமென்றாவது நான் ஒரு காலமும் நினைக்கவே இல்லை. எப்படியானாலும் மகமதியர் கிறிஸ்தவ சகோதரர் களைப் போலவே அவர்களும் இந்த நாட்டிலேயே இருக்கவேண்டியதுதான். ஆனால் அவர்கள் நம்பிக்கைக்குப் பாத்திரர்களாகவும் தேச நன்மைக்குற்ற வர்களாகவும் நடந்து கொள்ள வேண்டும். தேசத்தில் அவர்களிடத்தில் யாருக்கும் நம்பிக்கையில்லை.

சுயராஜ்யமா? சுயமரியாதையா?
இக்காலத்தில் நானும் இந்தப் பார்ப்பனர்களை நம்பி அவர்கள் பின்னால் திரிந்துகொண்டு ஜஸ்டிஸ் கட்சியார் உத்தியோக வேட்டைக் காரர்கள் என்று சொன்னதுண்டு. ஜஸ்டிஸ் கட்சிக்கு எதிரிடையாக வேலை செய்த காலமுமுண்டு. அப்படியிருக்க அவர்களைப் பற்றி நான் ஏன் இப்பொ ழுது குறை கூறுகிறேன். அவர்களால் எனக்கு ஒரு கெடுதியும் ஏற்பட்டு விடவில்லை. ஆனால் அவர்களுடைய அந்தரங்கத்தைக் கூடவேயிருந்து பார்த்ததில் அவர்களை விட ஜஸ்டிஸ் கட்சிக்காரர்கள் ஆயிரம் மடங்கு யோக்கியர்களென்பதே எனது அபிப்பிராயம். பார்ப்பனர்கள் தங்கள் நன்மைக்கும் பார்ப்பனரல்லாதாரை ஒழிப்பதற்கும் நம்மை உபயோகப் படுத்திக் கொண்டார்களென்பதையும், இவர்களால் என்றைக்கும் நமது நாட்டிற்கு சுயராஜ்யம் வராதென்பதையும் நன்றாய் நான் அறிந்து கொண் டேன். சுயராஜ்யத்தை விட சுயமரியாதை தான் இப்போது எனக்குப் பெரிதா யிருக்கிறது. நமது சமூகத்திற்கு ‘சூத்திரன்’ என்கிற பெயர் இனி அரை நாழி கையும் இருக்கக்கூடாது. நம்மை அடிமை என்றும் வைப்பாட்டி மகன் என்றும் சண்டையில் ஜெயித்த கைதிகளென்றும் பொருள்கள் கொண்ட ‘சூத்திரன்’ என்கிற பெயரால் அழைப்பதை எப்படி பொறுத்துக் கொண்டிருக்கலாம். ஆதலால் சுயமதிப்பையே பிரதானமாகக் கருதுவது ஒருக்காலும் குற்ற மாகாது. இம்மாதிரி ஒரு வகுப்பாரை ஒரு வகுப்பார் கொடுமைப்படுத்தியும் தாழ்மைப் படுத்தியும் தீண்டாதாராக்கியும் நடத்திக் கொண்டிருப்பதை விட மனதில் லாதிருக்கும் போது அந்த தேசம் எப்படி சுயராஜ்யம் அடைய முடியும்?

யார் சம்மதிக்கிறார்கள் ?
இவ்விதம் தங்கள் சுயமரியாதையைப் பெறமுடியாத ஜனங்கள் எப்படி சுயராஜ்யம் பெறத் தகுதியுடையவர்களாவார்கள்? வெள்ளைக்காரர் கள் நம்மைப் பார்த்து உங்கள் ராஜ்யத்தை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள், நாங்கள் போகிறோம் என்று சொன்னால் ஏற்றுக் கொள்ளுவதற்கு இந்திய ராகிய நம்மில் யார் தயாராயிருக்கிறோம்? யார் ஏற்றுக் கொள்வதை யார் சம்மதிக்கத் தயாராயிருக்கிறார்கள் ? இந்துக்கள் வசம் ஒப்படைத்தால் முஸ்லீம்கள் சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம் இருவர்களும் சம்மதித்தால் கிறிஸ்தவர்கள் சம்மதிப்பார்களா? இந்து முஸ்லீம் கிறிஸ்தவர்கள் மூவரும் சம்மதித்தாலும் தீண்டக் கூடாது, தொடக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது என்று கொடுமைப்படுத்தி வைத்திருக்கும் பஞ்சமர்கள் என்று சொல்லும் சகோதரர்கள் சம்மதிப்பார்களா? முதலாவது இந்துக்களிலேயே யார் ஏற்றுக் கொள்வதை யார் சம்மதிக்கப் போகிறார்கள்? (பனகால் அரசர் ஏற்றுக் கொள் வதை நானும் நீங்களும் சம்மதிப்போம் என்கிற குரல்) நானும் நீங்களும் சம்மதித்தால் போதுமா? மயிலாப்பூர் அய்யங்கார், அய்யர் சம்மதிப்பார் களா? அல்லது பார்ப்பனர்கள் ஏற்றுக்கொள்வதை நாம் சம்மதிப்போமா? ஆகையால் இதுசமயம் ஒற்றுமைக்கும், நம்பிக்கைக்கும், சுயமரியாதைக்கும் பாடுபடுவதை விட்டுவிட்டு சுயராஜ்யத்தைப் பற்றிப் பேசுவது வீண் பேச்சேயாகும்.

குறிப்பு: சென்னை திருவல்லிக்கேணியில் 31.07.1926 இல் நடைபெற்ற கூட்டத் தின் சொற்பொழிவு தொடர்ச்சி.

குடி அரசு – சொற்பொழிவு – 22.08.1926

You may also like...

Leave a Reply