தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியே போனாலும், சனாதன எதிர்ப்பை கைவிட மாட்டோம், திராவிட இயக்கம் தோன்றியதே சனாதன எதிர்ப்புக்காகத்தான் என்று உறுதியுடன் அறிவித்து விட்டார். இந்த கொள்கை உறுதியை நாம் பாராட்டி வரவேற்கிறோம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்று வந்துவிட்டால், பல நேரங்களில் கொள்கைகளை பின்வாங்கச் செய்துவிடும். இதுதான் பொதுவான தமிழகத்தின் அரசியல், ஆனால் உதயநிதி என்ற இளைஞர் அதில் மாறுபட்டு தனது கொள்கை அடையாளத்தைப் பற்றி நிற்பது அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறுவோம்.

பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு  அவர் பதிலளிக்கும் பண்பும், பாங்கும் கூட மிகவும் மாறுபட்டதாகவே இருக்கிறது. போகிறப் போக்கில் ஊதித்தள்ளிவிடுகிறார்.

இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டிய மோடியின் முயற்சி குறித்த கேள்விக்கு ‘9 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார் மோடி, இதோ மாற்றிவிட்டார்’ என்று பதிலளிக்கிறார். தனது தலைக்கு 5 கோடி விலை நிர்ணியிக்கும் துறவி முற்றும் துறந்த சாமியாரா? அல்லது போலிச் சாமியாரா? சாமியாருக்கு இவ்வளவு  கோடி பணம் எப்படி வந்தது என்று திருப்பிக் கேட்டார்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில் பேசிய உதயநிதியை மட்டும் குறிவைத்து சங்கிகள் அரசியல் காரணங்களுக்காக சனாதன ஒழிப்பு என்று அவர் பேசியதை, இந்துக்களை படுகொலை செய்யச் சொன்னதாக திரித்துப் பேசுகிறார்கள். நாட்டின் பிரதமரே அமைச்சரவையைக் கூட்டி சனாதனத்தை எதிர்ப்போரை  அமைச்சர்கள் மக்களிடம் அம்பலப்படுத்த வேண்டும் என்று மிகவும் தரம்தாழ்ந்து பேசியுள்ளார். அதன் விளைவாக ஒன்றிய ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத் என்பவர் சனாதனத்தை எதிர்ப்பவர்கள் நாக்கை வெட்ட வேண்டும், கண்களை பிடுங்க வேண்டும் என்று  ‘மனுசாஸ்திர வழியில்’ பேசியிருக்கிறார்.

சனாதன வாழ்க்கை முறை என்பது பட்டாக்கத்திகளுடன் திரியும் வன்முறை வாழ்க்கை முறை தான் என்று அமைச்சர் இந்த பேச்சு மூலம் ஒப்புக்கொண்டிருக்கிறார்.

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கோயிலுக்குள் தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்த நந்தனை சிவபெருமான் உள்ளே அழைக்காமல் நந்தியை விலகச் சொல்லி தரிசனம் செய்தது தான் சனாதனப் பெருமை என்று தீண்டாமைப் பெருமை பேசுகிறார். சதி என்பது பெண்கள் கற்பை காப்பாற்றிக் கொள்ள பிரிட்டிஷ் படை வந்த போது உருவானது என்றும், அதற்கும் சனாதன தர்மத்திற்கும் தொடர்பில்லை என்றும் அண்ணாமலை கூறுகிறார். சதியை ஒழித்துக்கட்ட சட்டம் கொண்டுவந்ததே பிரிட்டிஷ் ஆட்சி தான். 1828ல்  வில்லியம் பெண்டிங் சதியை ஒழித்து ஆணை பிறப்பித்தார். அப்போது சதி எனும் இந்து சனாதன பண்பாட்டில் பிரிட்டிஷ் ஆட்சி தலையிடக்கூடாது என்று வழக்கு போட்டு லண்டன் பிரிவி கவுன்சில் வரை கொண்டு சென்றதே ரதா கந்தா தேவ் என்ற பார்ப்பனர் தான். ராஜாராம் மோகன் ராய் பிரிவி கவுன்சிலில் எதிர் மனு போட்டு வழக்காடினார் என்பது வரலாறு.

உதயநிதி ஸ்டாலின் உரை இத்தகைய ’வெட்டுக்குத்து’ அமைச்சர்களையும், வரலாறு தெரியாத அண்ணாமலைகளையும், கீழ்த்தர அரசியல் நடத்தும் மோடிகளையும் மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி இருக்கிறது. அதற்காகவே உதயநிதியை பாராட்ட வேண்டும்.

இத்தகைய கொள்கை உறுதி கொண்ட துடிப்பும், செயலாற்றலுமிக்க தலைமை திமுகவுக்கு கிடைத்திருப்பது திராவிடத்தின் வெற்றியையும் சனாதனத்தின் வீழ்ச்சியையும் விரைவுபடுத்தி இருக்கிறது என்பதாகவே நாம் கருதுகிறோம்.  உதயநிதியின் இலட்சியப் பயணம் தொடரட்டும், கோடானு கோடி இளைஞர்கள் அதில் இணைந்து நிற்க தயாராக இருக்கிறார்கள்.

 

பெரியார் முழக்கம் 14092023

You may also like...