களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

கழகம் நடத்தும் ஏப்.29, 30இல் “இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான களப் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சேலம் மாவட்ட கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுதல்களை தெரிவித்து பயனாடை அணிவித்தார்.

கழகத் தலைவரின் ஆலோசனைப்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாநாட்டிற்கான ஆதரவு திரட்டுதல் மற்றும் நிதி வசூலுக்காக நங்கவள்ளி அன்பு, இராஜேந்திரன் தலைமையில் சேலம் மேற்கு குழுவும், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை தங்கதுரை தலைமையில் சேலம் கிழக்கு குழுவும் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் துண்டறிக்கை வழங்குவது மற்றும் நிதிதிரட்டுவது ஆகியவற்றில் தோழர்கள்  தொய்வின்றி கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக களப்பணியாற்றி வந்ததை நாள்தோறும் கவனித்து வந்த கழகத் தலைவர், தோழர்களைப் பாராட்டும் விதமாக நிகழ்வு ஒன்றை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டார்

அதன்படி மேட்டூர் கழக நகரத் தலைவர் செ. மார்ட்டின் உணவு ஏற்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு கழகத் தோழர்கள் கருப்பு உடைக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டனர்.

களப்பணித் தோழர்களை மேலும் உற்சாகமூட்டும் வகையில் 09.04.23 அன்று மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் மதியம் அசைவ உணவு விருந்தளிக்கப் பட்டு, கறுப்பு ஆடை அணிவித்து கழகத் தலைவர் சிறப்பு செய்தார். தோழர்கள் தங்கள் பணிகளில் ஏற்பட்ட அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் சி. கோவிந்தராசு முன்னின்று நடத்தினார்.

பெரியார் முழக்கம் 13042023 இதழ்

You may also like...