ஈஷா மய்ய மர்மங்கள் : கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் சனவரி 26, காலை 10 மணிக்கு கோவை ஆதித்தமிழர் பேரவை அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் பா. இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது, இக்கூட்டத்தில் அண்மையில் மறைந்த தூத்துக்குடி மாவட்ட தலைவர் பால்ராசு, தபெதிக பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் இணையர் வசந்தி, தியாகி இம்மானுவேல் சேகரன் பேரவைப் பொதுச்செயலாளர் சந்திரபோஸ், ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

ஈசா யோகா மையத்தில் தொடரும் மர்மங்களைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்துவது, பெரியார் கொள்கைகளை விளக்கி புதிய இடங்களில் தெருமுனைக் கூட்டம் நடத்துவது, தலைமைக் கழக வெளியீடுகளை மக்களிடத்தில் பரவலாக கொண்டு சேர்ப்பது, பெரியாரியல், திராவிடர் இயக்க பயிலரங்கங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு அரசு நூலகங்களில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ செல்கிறதா என்பதில் தோழர்கள் கவனம் செலுத்தி இதழ் செல்வதற்கு வழி செய்ய தோழர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

2023ஆம் ஆண்டிற்கான கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டு சந்தா 406, அய்ந்தாண்டு சந்தா 3-க்கான சந்தா தொகை முதல் தவணையாக ரூ.25,200/- வழங்கப்பட்டிருந்த நிலையில், இரண்டாம் தவணையாக ரூ.74,800/- கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கப்பட்டது.

கழகக் கொள்கைகளுக்கு முரணாக செயல்பட்டு வருகிற ஆனைமலை சிவா, தற்காலிகமாக கழகத்தில் இருந்து விலக்கி வைக்கப்படுகிறார், அவருடன் கழகம் தொடர்பான நிகழ்ச்சிகளில் கழகத் தோழர்கள் எவ்வித தொடர்பும் வைத்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது.

பெரியார் முழக்கம் 02022023 இதழ்

You may also like...