நீட் : ஆளுநர் கூறும் வாதங்கள் சரியா?

ஆளுநர் நீட் தேர்வு விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிட குறிப்பிட்டிருந்த இரண்டு காரணங்கள், ஒன்று – மசோதா மாணவர்களின் நலனுக்கு எதிராக இருக்கிறது; இரண்டு – ‘நீட்’ தேர்வு ஏழை மாணவர்களின் மீதான பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்கிறது. நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது.

இந்த காரணங்களுமே நகைப்புக்குரியது மட்டுமல்ல, ‘நீட்’ தேர்வு குறித்த புரிதல் இன்மையை வெளிக் காட்டுகிறது சட்டம் இயற்றும் அதிகாரம் சட்டமன்றத் துக்கும் உண்டு.

மாணவி அனிதா முதல் ‘நீட்’ தேர்வு காரணமாக தங்களை மாய்த்துக் கொண்ட பலரும் சமூகத்தின் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள்தாம். அவர்கள் பன்னி ரெண்டாம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்து, ‘நீட்’ தேர்வுக்கான பயிற்சியை பல லட்சம் கொடுத்து பயிற்சி பெற முடியாமல் வாய்ப்பை இழந்துள்ளனர்.

இதைத்தான் உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி டாக்டர் ஏ.கே.ராஜன் குழு புள்ளி விவரங்களுடன் எடுத்துக் காட்டியுள்ளது.

ஏன், தற்போது வெளிவந்துள்ள மருத்துவ இளங்கலை படிப்பு முடித்து (எம்.பி.பி.எஸ்.)க்கான கலந்தாய்வு சில விவரங்களை வெட்டவெளிச்சமாக நமக்குத் தருகிறது. இவ்வாண்டு நிலை என்ன?

மொத்த இடங்கள்:  6999 இடங்கள் – அரசு கல்லூரிகள்: 4349 இடங்கள் – நிகர்நிலைப் பல்கலைக் கழகங்கள்: 2650 இடங்கள்.

சி.பி.எஸ்.இ. மாணவர்களின் ஆதிக்கம் தரவரிசைப் பட்டியல்: முதல் 10 ரேங்கில், சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 8; மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 2.

முதல் 100 ரேங்கில் : சி.பி.எஸ்.இ. மாணவர்கள் 81; மாநில பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள் 17.

முதல் 1000 ரேங்கில் : மாநில பாடத் திட்டத்தில் படித்த 394 மாணவர்கள் மட்டுமே தேர்வு.

நீட் தேர்விற்குமுன் : சி.பி.எஸ்.இ. வாரியத்தில் இருந்து ஒரு சதவிகிதம் (1ரூ) மட்டுமே மருத்துவப் படிப்பில் சேர முடிந்தது. இப்போது அது 39 சதவிகிதமாக (39ரூ) ஆகிவிட்டது! என்னே கொடுமை!

நீட்தேர்வுக்குமுன் : மாநில பாடத் திட்டத்தில் படித்த 98.2 சதவிகித மாணவர்கள் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர முடிந்தது. தற்போது அது 59 சதவிகிதமாக குறைந்துள்ளது.

‘நீட்8 தேர்வுக்குமுன், : கிட்டத்தட்ட 14.8 சதவிகிதம் தமிழ் வழி மாணவர்கள், எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர்ந்தனர். ஆனால், தற்போது அது 2 சதவிகிதத்திற்கும் கீழே குறைந்துள்ளது.

‘நீட்’ தேர்வு சிபிஎஸ்இ. மாணவர்களுக்கும், வசதிபடைத்த குடும்பத்தினருக்கும் மட்டுமே ஆதரவாக உள்ளது.

யார் யாருக்கு இடம் கிடைத்துள்ளது?

ஆங்கில ‘இந்து’ பத்திரிகையில் நேற்று (6.2.2022) வந்துள்ள ‘நீட்’ தேர்வு குறித்த கட்டுரையிலும், பிளஸ் 2 இல் 1137 மதிப்பெண் பெற்ற நட்சத்திர ப்ரியா, 2017 இல் ‘நீட்’ எழுதத் தொடங்கி, மூன்று ஆண்டுகால முயற்சிக்குப் பின், 7.5 சதவிகித ஒதுக் கீட்டின் காரணமாக நெல்லை மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்திருக்கிறது.

மூன்று ஆண்டுகாலம் வீண் அல்லவா? பிளஸ் 2 அடிப்படையிலேயே இருந்திருந்தால் இந்நிலை ஏற்பட்டிருக்குமா?

தகுதிப் பட்டியலில் 9976 பேர் மட்டுமே இவ்வாண்டு தேர்வெழுதியோர். 14,973 பேர் திரும்ப எழுதியவர்கள் (ரிப்பீட்டர்ஸ்). அதாவது, 2, 3, 4 ஆண்டுகள் கோச்சிங் சென்று விடாது படையெடுப்போர்.

வசதி, வாய்ப்பு உள்ளவர்களால் மட்டுமே பல லட்சங்கள் செலவு செய்து, ஒரே தேர்வை ஈராண்டு, மூவாண்டு எழுத செலவிடவும் முடியும். குடும்பச் சூழலும் அதை அனுமதிக்கும். சேர்க்கை முடிவில் இன்னும் தெளிவு பிறக்கும்.

மறுமுறை தேர்வு எழுதுவோரும், நடப்பாண்டு படிப்பை முடித்துவரும் புதியவர்களும், ஒரே தேர்வை எழுதினால் யாருக்குசாதகமாக அத்தேர்வு அமையும் என்பது வெளிப்படை. அதுதான் ‘நீட்’ தேர்வில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

‘நீட்’ தேர்வு, சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்களுக்கும், தேர்வை பலமுறை எழுதவும், கோச்சிங்மூலம் பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வாய்ப்பும் உள்ளவர்களுக்கு மட்டுமே சாதகமாக இருக்கிறது. நடப்பு ஆண்டிலும் அதே நிலைதான்.

தேர்வு மார்க்குகள் – திறமை (ஆநசவைள) திறனறிவின் உண்மை அளவுகோல் ஆகாது என்ற உச்சநீதிமன்றத்தின் அண்மைத் தீர்ப்பில் இரு நீதிபதிகளின் தீர்ப்புப்படியே, ‘நீட்’ தேர்வு ஏற்கத் தக்கதா?

12 ஆண்டுகள் படித்த படிப்பில் பெற்ற மதிப்பெண்களைக் குப்பைக்கூடையில் தூக்கியெறிந்து, குறிப்பிட்ட பாடத் திட்டத்தில் (சி.பி.எஸ்.இ.) படித்த மேட்டுக் குடி மாணவர்களுக்குச் சாதகமாக நடத்தும் தேர்வுதான் தகுதி- திறமைக்கு அடையாளமா? அளவுகோலா? பணம் படைத்தவர்களுக்குத் தான் படிப்பா?

‘நீட்’டுக்குமுன் ஒரு சதவிகிதம் இடம்பெற்ற சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் படித்த மாணவர்கள், மருத்துவக் கல்லூரிகளில், ‘நீட்’டுக்குப் பிறகு 39 சதவிகித இடத்தைப் பிடித்துள்ளனர் என்றால், ‘நீட்’ யாருக்கு சாதகம்? யாருக்குப் பாதகம்? என்பதைத் தெரிந்துகொள்ளலாமே!

(திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அறிக்கையிலிருந்து)

பெரியார் முழக்கம் 24022022 இதழ்

You may also like...