சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியர் – முதல்வர் கைது கோரி போராட்டம் : கழகம் பங்கேற்பு

கோவை கோட்டைமேடு சின்மயா வித்யாலயா பள்ளி 12ஆம் வகுப்பு மாணவி, ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தியின் பாலியல் துன்புறுத்தலால் தற்கொலை செய்து கொண்டார். ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனிடமும் இது குறித்து புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல், மாணவிக்கு மனநல ஆலோசனைகளுக்கு ஏற்பாடு செய்துள்ளார். முதல்வரையும் கைது செய்யக் கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து அவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆசிரியரையும் முதல்வரையும் கைது செய்யக் கோரி பள்ளி முன்பு பல்வேறு முற்போக்கு இயக்கங்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்துக்குப் பிறகே ஆசிரியரும், முதல்வரும் கைது செய்யப்பட்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் போராடிய அமைப்பினரிடம் நேரடியாக வந்து குடும்பத்துக்கு இழப்பீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை  என்று உறுதியளித்துள்ளார். போராட்டத்தில் கோவை தி.வி.க. தோழர்களும் தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் சந்தோஷ் உள்ளிட்ட தோழர்களும், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருஷ்ணன் உள்ளிட்ட தோழர்கள், எஸ்.டி.பி.அய். உள்ளிட்ட அமைப்பினரும் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 02122021 இதழ்

You may also like...