ஈரோடு தெற்கு மாவட்டத்தில் கழகத்தினர் நடத்திய ‘இல்ல சந்திப்பு’

திவிக ஈரோடு தெற்கு மாவட்டத் தோழர்களின் இல்ல சந்திப்பு 26.09.2021 காலை 9:30 மணிக்கு ஆரம்பமானது. முதல் சந்திப்பு  ஆசிரியர் சிவக்குமார்  இல்லத்தில் தொடங்கியது. காலை உணவு அருந்தியபடியே தோழர்கள் உரையாடினர். பிறகு சி.எம். நகர் பிரபு இல்லம், சித்தோடு கமலக்கண்ணன் இல்லம், முன்னாள் மாவட்டச் செய லாளர் கு. சண்முகப்பிரியன் இல்லத்தில் தோழரின் உடல் நலம் குறித்த விசாரிப்பும் , உரையாடலுமாக சந்திப்பு நிகழ்ந்தது. பிறகு பெருமாள் மலை ராசண்ணன் இல்லத்திலும், கொங்கம்பாளையம் அருள் இல்லத்திலும், நசியனூர் குமார் இல்லத்திலும் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து செம்மாம்பாளையம்  கணேஷ் இல்லத்திலும், ரங்கம்பாளையம் கிருஷ்ணன்-மணிமேகலை இல்லத்திலும், அதே பகுதியில் வசிக்கும் விஜயரத்தினம்  கடையில் தோழர்களின் முதல் கட்ட சந்திப்பும், உரையாடலும் இனிதே நிறைவு பெற்றது.

ஒவ்வொரு தோழர்களின் இல்லத்திலும் இனிப்புகளும், பலகாரமும், பழங்கள், பழச்சாறு, தேநீரென தோழமையும் அன்புமான உபசரிப்பிலும் கழகத்தின் அடுத்த கட்ட பணிகளுக்கான திட்டமிடலும் என பயனுள்ள சந்திப்பாகவும், கழகப் பணிகளை முன்னைவிட வீரியமாக முன்னெடுத்துச் செல்வதற்கான முனைப்பும் ஒவ்வொரு தோழரின் பேச்சுகளில் நம்பிக்கையோடு எதிரொலித்தது.

இப்பயனுள்ள தோழர் சந்திப்பில் மாநில அமைப்புச் செயலாளர் ப. இரத்தின சாமி, ஆசிரியர் சிவக்குமார், மாவட்டச் செயலாளர் யாழ் எழிலன், மாவட்ட அமைப்பாளர் பெ. கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட பொருளாளர் கிருஷ்ணன், மாநகரத் தலைவர் ப.குமார், மாநகர இணைச் செயலாளர் கணேஷ், சித்தோடு கமலக் கண்ணன், ரங்கம்பாளையம் பிரபு, விருதுநகர் செந்தில் ஆகியோர் பங்கேற்றனர்.

பெரியார் முழக்கம் 04112021 இதழ்

You may also like...