ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன்

ஒருபோதும் பின் வாங்கக் கூடாது – தொல்.திருமாவளவன்

மனுசாஸ்திர எரிப்பு மாநாட்டில் 2013 உரை

1920 களில் தந்தை பெரியார் அவர்களும் எம்.சி. இராஜ போன்றவர்களும், சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த தோழர் கண்ணப்பர் போன்றவர்களும், மனுதர்ம சாஸ்திரத்தை வேண்டிய தேவையை அன்றைக்கு எந்த அடிப்படையில் சொன்னார்களோ, அந்த அடிப்படை இன்னும் அப்படியே இருக்கிற காரணத்தால் மீண்டும் மனுதர்மத்தை எரிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. மனுதர்மத்தை எரிப்பதனால் ஜாதி ஒழிந்துவிடுமா? அப்படி எரிப்பதனால் ஒழிந்து விடாது. இங்கே நிலவுகிற இந்த ஜாதிய கட்டமைப்புக்கு ஜாதிய வன்கொடுமைகளுக்கு, எது அடிப்படை என்பதை அடுத்தடுத்த புதிய தலைமுறைகளுக்கு அடையாளம் காட்டுகிற ஒரு போராட்டமாக இந்த போராட்டம் அமையும். மனுதர்மம் என்பது அன்றைய அரசியல் அமைப்பு சட்டம். இந்த நாட்டை மன்னர்கள் ஆண்டு கொண்டிருந்த காலத்தில் அன்றைக்கு அரசர்களுக்குத் தேவையாக இருந்த சட்ட விதிகளாகத் தான் மனுதர்மம் விளங்கியிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டம் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. இன்றைய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள். ஆனால் அன்றைய இந்துக்களின் அரசியல் அமைப்புச் சட்டமாக இந்த மனுதர்மம் விளங்கியது. ஆனால் இதை எழுதியவன் யார்? அப்படி ஒரு ஆள் யாருமே இல்லை என்பது தான், ஆய்வாளர்களின் கண்டுபிடிப்பு.

மனுதர்மம் என்பது மனித தர்மம் என்கிற பொருளில்தான் தொகுத்திருக்கிறார்கள்; இந்துக்களின் தர்மம் என்கிற பொருளில் தான் தொகுத்திருக்கிறார்கள்; ஆனால், பார்ப்பனர்களின் தர்மம் என்பதைத் தான் அதிலே உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். மனுதர்மத்தின் அடிப்படை என்பது, பார்ப்பனர்கள் உயர்ந்தவர்கள் அவர்கள் உழைக்க மாட்டார்கள் மற்ற அனைவரும் தாழ்ந்தவர்கள் அவர்கள் பார்ப்பனர்களுக்காக உழைக்க வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்ட ஒரு தர்மம். அதை தர்மம் என்றே சொல்லக் கூடாது, அதர்மம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஒரு அரசியல் அமைப்புச் சட்டமாகத்தான், அன்றைய காலத்தில் அன்றைய மன்னர்களால் கையாளப்பட்டு வந்தது. அதனால் தான் இந்த மண்ணில், தனித்தனி ஜாதிகளாய் மக்கள் பிரிந்து கிடக்கும் நிலை, அதை வலுப்படுத்தும் சூழல் அதனை தொடர்ந்து கட்டி காப்பாற்றுகிற ஒரு நிலைமை வளர்ந்துவிட்டது. அதை அவ்வளவு எளிதாக அசைக்க முடியவில்லை. அதை வேரறுக்க முடியவில்லை. அதை அசைப்பதற்கு வேரறுப்பதற்கு இந்த மண்ணிலே தோன்றிய மகான்களுள் மாமனிதர்களுள் முன்னணியில் இருக்கிற தலைவர்கள் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களும் தந்தை பெரியார் அவர்களும் என்பதை, நாம் நன்றி பெருக்கோடு நினைவு கூறுகிற ஒரு மாநாடாகத்தான், இந்த மாநாடு அமைந்திருக்கிறது.

தந்தை பெரியார் என்ற ஒரு மாமனிதர் இந்த மண்ணிலே பிறந்திருக்காவிட்டால், நமக்கு கொளத்தூர் மணி என்கிற இந்த போராளி கிடைத்திருப்பாரா? விடுதலை இராசேந்திரன் என்கிற இந்த மனிதநேயப் போராளி நமக்கு கிடைத்திருப்பாரா? பெரியார் பெயரால் பல இயக்கங்கள் செயல்படலாம், திராவிடர் கழகமாகவோ, பெரியார் திராவிடர் கழகமாகவோ, திராவிடர் விடுதலைக் கழகமாகவோ இந்த மண்ணில் இயங்கினாலும், அத்தனைப் படை வரிசையிலும் இருக்கிற, பெரியாரின் தளபதிகளாக இருந்து, ஜாதியவாதிகளுக்கு எதிராக இன்றைக்கு குரல் கொடுக்கிறார்கள் – எதிர்ப்புக் குரல் கொடுக்கிறார்கள் – மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பிரச்சாரங்களை முன்னெடுக்கிறார்கள் என்று எண்ணிப் பார்க்கிற போது, நமக்கு பிரமிப்பும், அதே நேரத்தில் ஒரு சிலிர்ப்பும் ஏற்படுகிறது. நினைத்துப் பாருங்கள்! ஜாதி வெறியர்களெல்லாம் ஜாதி தர்மத்தை – மனுதர்மத்தை தூக்கிப் பிடிக்கிறபோது – ஜாதி வெறியர்களெல்லாம் ஜாதிக் கட்டுப்பாடுகளை நியாப்படுத்துகிறபோது – ஜாதி வெறியர்களெல்லாம் காதல் திருமணங்களே கூடாது என்று கூச்சல் போடுகிறபோது – பெண்களுக்கு சொத்துக்கள் கூடாது என்று இயக்கம் எடுக்கிறபோது – அதற்குப் பதிலடி கொடுக்கிற வகையிலே இன்றைக்கு துணிந்து வீரியமாய் களத்தில் வந்து நிற்பவர்கள், பெரியாரின் பிள்ளைகள் பெரியாரின் சீடர்கள். இந்த களம் இல்லையென்று சொன்னால் திருமாவளவனுக்கு பாதுகாப்பு உண்டா? ஒடுக்கப்பட்ட மக்களுக்கு பாதுகாப்பு உண்டா? ஏழை எளிய மக்களுக்கு பாதுகாப்பு உண்டா? ஜாதியின் பெயரால் வஞ்சிக்கப்படுகிற – சுரண்டப்படுகிற – நசுக்கப்படுகிற இந்த மக்களுக்கு பாதுகாப்பு உண்டா?

ஜாதி வெறியர்களெல்லாம் ஜாதிக் கட்டுப்பாடுகளை நியாப்படுத்துகிறபோது அதற்குப் பதிலடி கொடுக்கிற வகையிலே களத்தில் வந்து நிற்பவர்கள், பெரியாரின் பிள்ளைகள்

தமிழ்நாட்டில் தொண்ணூற்று நான்கு வயது வரையில் தந்தை பெரியார், உடல் நலிவுற்ற நிலையிலும் சிறுநீரை தாங்குகிற சட்டியை சுமந்தவாறு ஊர் ஊராய் சுற்றி இந்த பிரச்சாரத்தை அவர் ஏன் எடுக்க வேண்டும்? வசதியான குடும்பத்தில் பிறந்தவர்; வணிகராக இந்த மண்ணில் வாழ்ந்தவர்; விரும்பியதையெல்லாம் கொண்டுவந்து கொடுப்பதற்கு ஆட்கள் இருந்தார்கள்; உயர் ஜாதிக்காரர்களின் தோளிலே கைகளைப் போட்டுக் கொண்டு சுகபோகமாக வாழலாம்; அப்படி எல்லா வசதிகள் இருந்தும், இன்னும் சொல்லப் போனால் அவருக்கும் இந்த சமூகத்திலே ஒரு ஜாதி இந்துஎன்ற பாதுகாப்பு இருந்தது; அவர் பள்ளரோ‘ ‘பறையரோ‘ ‘சக்கிலியரோஎன்கிற அந்த இழிவுப் பட்டத்தை சுமந்து கொண்டு இந்த மண்ணிலே வாழவில்லை; ‘நாயக்கர்என்று சொல்லிக் கொள்ளக்கூடிய அளவுக்கான ஒரு பாதுகாப்புப் பட்டமும் அவருக்கு இருந்தது; அப்படிப்பட்ட சூழலில் அவர் நமக்கென்ன என்று வாழ்ந்திருக்க முடியும். உயர் ஜாதி இந்துக்களோடு அவர் கூடி குலாவியிருக்க முடியும்; உயர் ஜாதி இந்துக்களோடு அவர் நட்புறவு கொண்டாடி அவர் வாழ்க்கையை சுகபோகமாக அனுபவித்திருக்க முடியும். ஆனால் அதையெல்லாம் உதறி எரிந்து விட்டு, இந்த மனுசாஸ்திர குப்பைகள் என்ன சொல்லுகின்றது என்பதை தோண்டி துருவி ஆராய்ந்து, இது தான் இந்த சமூகத்தின் கேடுகளுக்கு – அனைத்து கேடுகளுக்கும் அடிப்படை என்பதை அறிந்து, இந்த மண்ணில் அனைத்து தரப்பினரும் புரிந்து கொள்ளக் கூடிய அளவிலே, தொன்னூற்று ஐந்து வயது வரையில் பிரச்சாரத்தை மேற்கொண்டார். அந்தப் பிரச்சாரம் வீண் போகவில்லை

தோழர்களே! ஏசு பெருமானுக்கு எப்படி நல்ல சீடர்கள் கிடைத்ததனால் உலகம் முழுவதும் எப்படி கிருத்துவம் பரவியிருக்கிறதோ, அதைப் போல் தந்தை பெரியாருக்கு நல்ல சீடர்கள் கிடைத்திருக்கிறார்கள், அந்த கருத்துக்கள் இன்றைக்கு வலுவாக பரவிக் கொண்டிருக்கிறது; அந்த பிரச்சாரம் இன்று மக்களிடத்திலே சென்று கொண்டிருக்கிறது. அதனால் தான், திரைப்படங்களிலே காட்டுவார்கள். தாலி என்பது வேலி என்று. ஒருவன் எவ்வளவு நோஞ்சானாக இருந்தாலும் எவ்வளவு அழுக்கானவனாக இருந்தாலும் எவ்வளவு கேவலமானவனாக இருந்தாலும், தாலியை ஒரு பெண்ணின் கழுத்தில் கட்டி விட்டால், அவன் தான் அவளுக்குக் கணவன் என்று சொல்லத் தக்க வகையிலே இந்துத்துவம், தாலியின் மீது ஒரு புனிதத்தை ஏற்படுத்தி வைத்திருக்கிறது. கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருசன் என்கிற அடைமொழிகளின் மூலம் பெண்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறது. அப்படிப்பட்ட தாலிக் கயிற்றினை பல்லாயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கிற இந்த மேடையிலே வந்து அறுத்தெறிந்தார்கள் தோழர்கள் என்றால், அந்தத் துணிச்சலைத் தந்தது எது? பெரியாரியம் தந்திருக்கிறது. இது தான் தோழர்களே பெரியாரியத்துக்கு கிடைத்திருக்கிற மகத்தான வெற்றி. ஆண்களுக்கு அந்த துணிச்சல் வரலாம்; பெண்களுக்கும் அந்த துணிச்சல் வந்திருக்கிறது இதுதான் பெரியாருக்கு கிடைத்த வெற்றி. ஆண்கள் ஜீன்ஸ் பேண்ட் போட்டுக்கொள்ளலாம் அது அழகு என்று கூட அவர்கள் கருதக் கூடும். ஆனால் பெண்களும் ஜீன்ஸ் பேண்ட் போடுவோம் என்று துணிச்சலாக மேடை ஏறி வந்திருக்கிறார்கள் என்பது தான் பெரியாரியத்துக்கு கிடைத்திருக்கிற வெற்றி.

மனுதர்மம் என்பது பெண்களையும் கொச்சைப்படுத்துகிற ஒரு தர்மம் தலித்துகளையும் கொச்சைப்படுத்துகிற ஒரு தர்மம். விளிம்பு நிலை மக்களுக்கு எதிரான அநீதியைத் தருகிற ஒரு சாஸ்திரம். அப்படி ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிராக பெண்களுக்கு எதிராக பேசப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும், ஆண்கள் விரும்பிய ஆணாதிக்க சிந்தனைகள் அனைத்தையும் தொகுத்து, மனுதர்மம் என்று இந்த மண்ணில், இந்துக்களின் சட்டமாக பார்ப்பனர்களின் சட்டமாக வரையறுத்துக் கொடுத்தார்கள். அது தான் தோழர்களே இன்றைக்கும் இந்தியாவை ஆண்டு கொண்டிருக்கிறது. மனுதர்மம் பால்ய விவாகத்தை நியாயப்படுத்தியது; விதவை மறுமணத்தைத் தடை செய்தது; ஜாதியை நியாயப் படுத்தியது தீண்டாமையை நியாயப்படுத்துகிறது. பெண்களை அடிமைப்படுத்துவது சரி என்று வலியுறுத்துகிறது. இவை அனைத்தையும் அடித்து நொறுக்கி, இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், குழந்தைத் திருமணம் சட்டப்படி குற்றம்; விதவைத் திருமணம் சட்டப்படி ஏற்கப்படும்; ஜாதி என்பது சட்டப்படி ஏற்கமுடியாத ஒரு அமைப்பு: தீண்டாமை என்பது சட்டப்படி குற்றம், இப்படி எல்லாவற்றையும் சொல்லமுடிந்த இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தால் ஒன்றை சொல்ல முடியவில்லை தோழர்களே ! மனுதர்மம் சொன்ன அனைத்தையும் மறுத்துச் சொன்ன இந்திய அரசியல் அமைப்புச் சட்டம், மனுதர்மம் சொன்ன ஒன்றை மட்டும் மறுத்துச் சொல்ல முடியவில்லை. அதற்கு என்ன காரணம் என்பதை நாம் உணர்ந்து பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது தோழர்களே. இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதியவர் புரட்சியாளர் அம்பேத்கர்; சமஸ்கிருதத்தை அவரே விரும்பி படித்து, மனுதர்மத்தையும் படித்து, இவைகள் என்ன சொல்லுகின்றது என்பதை பெரியாரைப் போலவே ஆய்ந்து தேர்ந்து, அதன் மூலம் அவற்றையெல்லாம் மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று, போராடிய புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தில் மனுதர்மத்தில் நியாயப்படுத்திய ஜாதியை மறுதளிக்க முடியாமல் போனது. மனுதர்மம் இன்னொன்றை நியாயப்படுத்துகிறது; ஜாதிக்குள் ஜாதி குலத்திற்குள் குலம் திருமணம் செய்வதை மனுதர்மம் நியாயப் படுத்துகிறது; அப்படி ஜாதிப் பார்த்து – குலம் பார்த்து – கோத்திரம் பார்த்து திருமணம் செய்வது சட்டப்படி குற்றம் என்று அரசியல் அமைப்புச் சட்டத்திலே இணைக்க முடியவில்லை. இந்த இடத்திலே ஆழமாக நாம் ஒன்றை எண்ணிப்பார்க்க வேண்டிய ஒப்பிட்டு பார்க்கவேண்டிய தேவை இருக்கிறது.

புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தை அவரால் எழுத முடியாமல் போனது.

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த பழங்குடியின வகுப்பைச் சார்ந்த அரசு பணிகளில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதிலே இட ஒதுக்கீடு தேவை என்பதை உணர்ந்து, ஒரு அரசியல் அமைப்புச் சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்தார்கள், மாநிலங்களவையிலே அது நிறைவேற்றப் பட்டு விட்டது; மக்களவையிலே அறிமுகப் படுத்துகிற நிலையிலேயே அந்தத் தாள் பறிக்கப்பட்டுவிட்டது. அதை விவாதிக்க விடாமலே நிறைவேற்ற விடாமலேயே தடுத்து விட்டார்கள் தோழர்களே! ஆட்சி அதிகாரம் என்பதுதான் அரசியல் அதிகாரம் என்பது தான் எல்லாவற்றையும் தீர்மானிக்க கூடிய ஆற்றலை கொண்டது. அப்படி ஆட்சி அதிகாரத்தை அரசியல் அதிகாரத்தை யார் கைகளில் வைத்திருக்கிறார்களோ, அடிப்படைச் சட்டங்களை இயற்றுகிற வலிமையை யார் பெற்றிருக்கிறார்களோ அவர்கள் தான் வெற்றி பெறுகிறவர்களாக எப்போதும் இருக்கிறார்கள். அந்த ஆட்சி அதிகாரத்தை அல்லது அரசியல் அதிகாரத்தை தொடமுடியாத விளிம்பு நிலையில் நாம் கிடக்கிறோம். அதை தீர்மானிக்க முடியாத இடத்தில் எங்கோ தொலைதூரத்தில் நாம் ஓரங்கட்டப்பட்டு கிடக்கிறோம். அப்படிப்பட்ட நிலையிலே அன்றைக்கு அரசியல் அமைப்புச் சட்டத்தை எழுதுகிற வாய்ப்பினை புரட்சியாளர் அம்பேத்கர் பெற்றிருந்தாலும் கூட, அவர் எழுதிய ஒவ்வொரு சொல்லும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு அதிகாரமும் உறுப்பும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பியவாறு அரசியல் அமைப்புச் சட்டத்தை அவரால் எழுத முடியாமல் போனது. கட்டுப்படுத்துகிற ஆற்றலை உயர்ஜாதி இந்துக்கள் அல்லது பார்ப்பனர்கள் பெற்றிருந்தார்கள். ஆகவே புரட்சியாளர் அம்பேத்கர் விரும்பியபடி மனுதர்மத்திற்கு எதிரான கருத்துக்கள் அனைத்தையும் அரசியல் அமைப்புச் சட்டத்திற்குள்ளே அவரால் கொண்டுவர முடியவில்லை . அதிலே அம்பேத்கரால் அகமண முறைக்கு எதிரான ஒரு சட்டத்தைக் கொண்டுவர முடியவில்லை. அன்றைக்கு அது எப்படி தோற்றுப்போனதோ, அப்படித்தான் தோழர்களே இன்றைக்கு பதவி உயர்வில் இடஒதுக்கீட்டை மக்களவையில் அறிமுகப்படுத்துகிற நிலையிலேயே அதைக் கிழித்தெறிந்தார்கள்; நிறைவேற்றவிடாமல் தடுத்தார்கள்.

தலித்துகளுக்கான பதவி உயர்வில் இட ஒதுக்கீடு மட்டுமல்ல, பெண்களுக்கு அரசியல் இட ஒதுக்கீடு கூடாது என்றும், தோற்கடித்துக் கொண்டே இருக்கிறார்கள் இந்தச் சமூகத்தில் பெண்களும், தலித்துகளும் விளிம்புநிலை மக்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. பெண்களுக்கும், தலித்துகளுக்கும் எதிரான சட்டம் தான் மனுதர்மம் என்பதை நீங்கள் எண்ணிப் பார்த்தால், இன்றைக்கும் இந்தியாவை ஆண்டு கொண்டிருப்பது மனுதர்மம் தான்; புரட்சியாளர் அம்பேத்கர் எழுதிய அரசியல் அமைப்புச் சட்டமல்ல என்பதை நாம் பார்க்கலாம். இன்றைக்கும்  பால்ய விவாகம் நடை பெற்றுக்கொண்டுதான் இருக்கிறது; இன்றைக்கும் விதவைகள் மறுமணம் செய்யக் கூடாது என்பது அப்படியே நடைறையில் இருக்கிறது; இன்றைக்கும் ஜாதிக்குள் ஜாதி செய்யும் அகமண முறை காப்பாற்றப்படுகிறது. அதைத்தான் இன்றைய புதிய மனுவாதிகள் வாதிடுகிறார்கள். அவரவர் ஜாதிக்குள் தான் அவரவர் காதலித்துக்கொள்ள வேண்டும் திருமணம் செய்து கொள்ள வேண்டும்; இது தான் மனு தர்ம்ம். ஜாதி கலப்பு ஏற்பட்டு விடக்கூடாது வர்ணக் கலப்பு ஏற்பட்டுவிடக் கூடாது அதனால் சம உரிமை, சமஅதிகாரம், சம தகுதி என்பது அனைவருக்கும் உருவாகிவிடக் கூடாது என்று ஜனநாயகத்தை மறுக்கின்ற நிலை நீடிக்கிறது. ஆக ஆட்சி அதிகாரத்தோடு தொடர்புடைய ஒரு சமூகமாக – அதிகார வலிமை கொண்ட ஒரு சமூகமாக அடிநிலையில் கிடக்கிற ஒடுக்கப்பட்டவர்களும், பெண்களும் என்றைக்கு மாற்றம் பெறுகிறார்களோ அந்த வலிமையைப் பெறுகிறார்களோ அன்றைக்கு தான் தோழர்களே பெரியாரியம் வெல்லும் – அன்றைக்கு தான் தோழர்களே அம்பேத்கரியம் வெல்லும்.

பார்ப்பனர்கள் எல்லாத் தளங்களிலும் ஆதிக்கம் செலுத்துகிறார்கள்; அதனால் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்க வேண்டிய தேவை இருந்தது. எனவே எம்.நாயர், சர்.பிட்டி தியாகராயர், டாக்டர் நடேசன் அவர்களெல்லாம் தந்தை பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்த காலத்திலேயே பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை உருவாக்க அடித்தளமிட்டார்கள். ஏன் பார்ப்பனரல்லாதோர் இயக்கத்தை உருவாக்க வேண்டிய தேவை வந்தது ? பார்ப்பனர்கள் என்ற ஜாதியின் மீது இருக்கிற வெறுப்பு அல்ல; பார்ப்பனர்கள் அனைத்து தளங்களிலும் செலுத்திய ஆதிக்கத்தின் மீது இருந்த வெறுப்பு. நிர்வாகத் துறையிலே அவர்கள்தான்; நீதித் துறையிலே அவர்கள்தான்; சட்டத்துறைகளிலே அவர்கள்தான்; ஊடகத் துறைகளிலே அவர்கள்தான்; அத்துனை தளங்களிலும் அவர்கள் மக்கள் தொகையிலே குறைவாக இருந்தாலும், தீர்மானிக்கக் கூடிய சக்திகளாக இருக்கிறார்கள்; கலாச்சார துறைகளிலும் அவர்கள் தான், கோவிலில் மணி ஆட்டுவதிலிருந்து, வசூலிப்பதிலிருந்து, அத்துனை நிர்வாகத் துறைகளிலும் அவர்களின் ஆதிக்கம் இருந்தது. ஆகவே ஆதிக்கத்தை எதிர்ப்பதற்காக பார்ப்பனரல்லாதோர் இயக்கம் தேவைப்பட்டது. தலித்துகள் அப்படி எந்த இடத்திலே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? தலித்துகள் கோவில் பூசாரிகளாக இருக்கிறார்களா? தலித்துகள் உச்ச நீதிமன்றத்திலும், உயர்நீதிமன்றத்திலும் நீதிபதிகளாக மிகப் பெரும் இடங்களில் அமர்ந்திருக்கிறார்களா? தலித்துகள் கோவில் தர்மகர்த்தாவாக இருக்கிறார்களா? தலித்துகள் எந்த இடத்திலே ஆதிக்கம் செலுத்துகிறார்கள்? ஆக தலித்துகளை எதிர்ப்பதற்கான சூழல் எங்கிருந்து வந்தது? தலித் அல்லாதோர் இயக்கம் உருவாக்க வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? தொண்ணூற்று ஐந்து வயதுகள் வரை தந்தை பெரியார் அவர்கள் உழைத்த உழைப்பு வீணாகிறதோ – விரையமாகிறதோ என்கிற கவலை இருந்த நேரத்தில் தான் தோழர்களே, பெரியாரியத்தை எந்த சக்தியாலும் வீழ்த்தமுடியாது, இதோ நாங்கள் திரளுகிறோம் என்று, இன்று ஈரோட்டு மண்ணில் பெரியார் பிள்ளைகள் திரண்டிருக்கிறோம். இதை யாராலும் வீழ்த்தமுடியாது யாராலும் அதை சாய்த்துவிட முடியாது. அவ்வளவு வலுவாக அது வேர்கொண்டிருக்கிறது என்பதை நாம் பார்க்கிறோம். எவ்வளவு ஆபத்தான போக்கு இது, தலித் அல்லாதோர் இயக்கம் உருவாக்க வேண்டிய அளவுக்கு இந்த மண்ணிலே என்ன நேர்ந்துவிட்டது? தயவு கூர்ந்து நாம் இதையெல்லாம் எண்ணிப்பார்க்க வேண்டியவர்களாக கடமைப்பட்டவர்களாக இருக்கிறோம் தோழர்களே.

1925களிலே எழுதப்பட்ட குடிஅரசு கட்டுரைகளை படித்துப் பார்க்கிறபோது, போராளிகளாக இந்த மண்ணில் முளைத்தெழுவார்கள்

புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் என்கிற இந்த மாமனிதர்கள் இந்துத்துவத்திற்கு எதிராக – மனுதர்மத்திற்கு எதிராக, தொடக்கி வைத்த இந்த போராட்டம் நம்முடைய தலைமுறையோடு முடிந்துவிடுகிற போராட்டமாக இல்லை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் இது தேவைப்படுகிறது. ஆகவே திராவிடர் விடுதலைக் கழகத்தின் இது போன்ற மாநாடுகள் தவிர்க்க முடியாத ஒரு தேவையாக மாறியிருக்கிறது.

பெரியாரியம் என்பது இந்த மண்ணில் தவிர்க்க முடியாத தேவையாக இருக்கிறது தோழர்களே; நாமெல்லாம் பிறக்காத காலத்திலேயே இந்த ஒடுக்கப்பட்ட மக்களுக்காக குரல் கொடுத்தவர் தந்தை பெரியார் அவர்கள். இன்றைக்கு பெரியாரைக் கூட, அவர் தமிழர் அல்ல என்று சில கும்பல் பேசுகிறது. எவ்வளவு வெட்கக்கேடாக இருக்கிறது பாருங்கள்! எவ்வளவு குறுகிய மனம் படைத்த குண்டுச்சட்டிக்குள்ளே குதிரை ஓட்டக் கூடிய மூடர்களாக இருக்கிறார்கள் என்பதை எண்ணி நான் வேதனைப் படுகிறேன். அப்படிப் பார்த்தால் மார்க்ஸ் இந்த மண்ணில் அடக்கப்பட்ட – ஒடுக்கப்பட்ட மக்களின் மீட்சிக்காக தத்துவம் வழங்கிய தலைவர்; அவரை எந்தப் பட்டியலிலே சேர்ப்பது? தந்தை பெரியாரையே தமிழர் அல்ல என்று சொல்லுகிறபோது, புரட்சியாளர் அம்பேத்கரை இவர்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? எவ்வளவு கீழ்த்தரமான ஒரு சிந்தனை? இந்த இரண்டு மாமனிதர்களும் இந்த மண்ணில் இந்துத்துவத்தை வேரறுக்கப் பிறந்தவர்கள். இந்த தத்துவங்களை வேரறுக்க வேண்டும் என்று இன்றைக்கும் மனு தர்ம வாதிகள் வரிந்து கட்டிக்கொண்டு, வேலை செய்கிறார்கள். ஆனால் அவர்கள் தோற்றுப் போவார்கள் என்பதற்கு சாட்சியம் தான் இந்த மாநாடு.

1925களிலே எழுதப்பட்ட குடிஅரசு கட்டுரைகளையெல்லாம் தொகுத்து, இன்றைக்கு புதிய தலைமுறைகளுக்கு வழங்குகிறார்கள் அவர்கள் படித்துப் பார்க்கிறபோது, அவர்களும் போராளிகளாக இந்த மண்ணில் முளைத்தெழுவார்கள். ஆகவே மனுதர்மவாதிகளால் வெற்றி பெற்றுவிட முடியாது, பெரியாரியத்தை வீழ்த்தி விட முடியாது என்பதை நாம் உறுதிப்படுத்தத் தான் போகிறோம். தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இன்றைக்கு தூய தமிழ் வாதம் பேசுகிறவர்கள் தமிழ்த் தேசியம் பேசுகிறவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கு பேசுபவர்களையும், கன்னடம் பேசுபவர்களையும் கூட தமிழர்கள் அல்ல என்று, குதர்க்கவாதம் பேசி ஒற்றுமையை சீர்குலைக்கிறார்கள். ஈழத் தமிழர்களின் விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கிற இந்த களத்தில், தமிழீழம் தான் ஒரே தீர்வு என்று, எல்லோரும் கைகோர்த்து நிற்கிற இந்த சூழலில், தமிழர்களின் ஒற்றுமையை சிதைக்கிற வகையிலே இன்றைக்கு புதிய மனுவாதிகள் புறப்பட்டிருக்கிறார்கள்.

இன்று நடந்து கொண்டு கொண்டிருக்கிற இந்த யுத்தம் பிற்போக்குவாத சக்திகளுக்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் நடக்கிற யுத்தம்;

புரட்சியாளர் அம்பேத்கர் மிகப்பெரிய சிந்தனைகளை இந்த மண்ணுலகிற்கு தந்து விட்டு போனாலும், தந்தை பெரியாருக்கு பிறகு, அவருடைய கருத்துக்களைப் பரப்புவதற்கு இருக்கின்ற இயக்கங்களைப் போல, புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துக்களை பரப்புகிற இயக்கங்கள் இந்திய அளவிலே உருவாகவில்லை. ஒரு மிஷினரி இராமகிருஷ்ணா மிஷினரி இருப்பதைப் போல, இந்துத்துவத்தைப் பரப்புகிற மிஷன்கள் இருப்பதைப் போல, கிருத்துவத்தை பரப்ப கிருத்துவ மிஷனரிகள் இருப்பதைப் போல, புரட்சியாளர் அம்பேத்கரின் கருத்துகளை பரப்புகிற மிஷனரி இயக்க நடவடிக்கை என்பது இந்திய அளவில் இல்லை தோழர்களே. ஒன்றிரண்டு இயக்கங்கள் இப்போது தான் தலைதூக்கி வந்திருக்கிறோம். கருத்துக்களை பரப்பக்கூடிய ஒரு வலிமையை பெறுகிற சூழலை பெற்றிருக்கிறோம்; ஆனால் பெரியார் இயக்கம் அப்படி அல்ல. திருமாவளவனை வேண்டுமானால் உங்களால் ஓரங்கட்ட முடியும்; திராவிடர் விடுதலைக் கழகத்தை உங்களால் ஓரங்கட்ட முடியாது. திருமாவளவனின் குரலை உங்களால் நசுக்க முடியும்; அண்ணன் கொளத்தூர் மணியின் குரலை உங்களால் நசுக்கி விட முடியாது. திருமாவளவனை, ஜாதி வெறியர்களிடம் காட்டிக் கொடுத்து, ஒருவேளை ஆளையே காலி செய்து விட முடியும்; அண்ணன் விடுதலை இராசேந்திரனை உங்களால் நெருங்க முடியாது. பெரியாரியம் அவர்களுக்கு மிகப்பெரிய பாதுகாப்பு அரணாக இருக்கிறது. ஆகவே மனுவாதிகள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், வெற்றி பெற்றுவிடலாம் என்று. அவர்களே தங்கள் முகத்திரையை கிழித்துக் கொண்டு இப்போது தெருவிலே நடமாடிக் கொண்டிகிறார்கள். நாம் யாரும் அந்த முகத்திரையை கிழிக்க வேண்டிய தேவை இல்லை என்கிற அளவுக்கு அவர்களே தங்களுக்கு தாங்களே முகத்திரை கிழித்துக்கொண்டிருக்கிற நிலை உருவாகியிருக்கிறது.

பெரியாரியம் என்பது ஒரு பாதுகாப்பு அரண். அம்பேத்கரியம் என்பது ஒரு அகழியாக இருந்து ஒடுக்கப்பட்டவர்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறது; அரணும், அகழியாகவுமிருந்து இந்த ஏழை எளிய விளிம்பு நிலை மக்களை, பாதுகாக்கிற தத்துவங்களாக அவை விளங்குகின்றன.

எனவே இன்று நடந்து கொண்டு கொண்டிருக்கிற இந்த யுத்தம் என்பது, பிற்போக்குவாத சக்திகளுக்கும், முற்போக்கு சிந்தனையாளர்களுக்கும் இடையே நடக்கிற யுத்தம்; ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான யுத்தம்; பெரியாரியத்தை – அம்பேத்கரியத்தை – மார்க்சியத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு போர்; அறப்போர் இந்த போராட்டத்தில் நாம் ஒருபோதும் பின்வாங்கி விடக் கூடாது. அவதூறுகளை முறியடிக்க வேண்டும்; ஒடுக்கப்பட்ட மக்களின் உழைக்கும் மக்களின் ஒற்றுமையை சிதைக்கிற முயற்சிகளை முறியடித்தாக வேண்டும்.

மனுதர்மம் என்று எழுதப்பட்டிருக்கிற அச்சு காகிதங்களை எரித்து விடுவதனால், இங்கே என்ன நிகழ்ந்து விடப்போகிறது என்று நாம் அதை எளிதாகவோ, இலகுவாகவோ பார்த்துவிடக் கூடாது. மனுதர்மம் என்கிற தத்துவம் தான், மனுதர்மம் என்கிற கோட்பாடு தான், ஜாதி வெறியர்களின் நடவடிக்கைகளை நியாயப் படுத்துகிறது அவர்களை வழி நடத்துகிறது. 1920களிலே தந்தை பெரியார் நடத்திய போராட்டத்தை, பெரியாரின் பிள்ளைகள் இன்றைக்கு இருபத்தியோராம் நூற்றாண்டின் இறுதி பகுதியில் இன்றைக்கு நாம் தொடங்க வேண்டியிருக்கிறது தொடக்க நிலையிலே தொடங்க வேண்டியிருக்கிறது. இன்னும் நான் சொன்னதை போல ஐம்பது ஆண்டுகளுக்காவது இந்த பெரியாரியத்தை பரப்ப வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்கு இருக்கிறது தோழர்களே.

You may also like...