ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியங்கள் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிட வேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5 1/2 மணிக்குக் கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறு யாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்று கொண்டு இருந்ததும் கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங் களைப் பற்றி ஒரு நிரூபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம். இப்போது அதற்கேற்றாற்போலவே இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குகளுக்கு வராததால் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தானே ஏற்பாடு செய்து கொண்டு அவருக்கு நோட்டீசு தராமல் மீட்டிங் கூட்டிவிட்டார். அதற்குள் அக்கவுன் சிலர் விஷயம் தெரிந்து தானாகவே போய் உட்கார்ந்து கொண்டிருக்கையில் அவரை வெளியே போகும்படி கட்டாயப்படுத்தி வெளியாக்கிவிட்டு தனது சவுகரியத்திற் கேற்றபடி இரண்டொரு தீர்மானத்தையும் செய்து பலனடைந்து கொண்டார். அது எப்படியோ இருக்கட்டும். வெளிப்படுத்தப்பட்ட கவுன்சிலர் உடனே சென்னைக்குச் சென்று ஐக்கோர்ட்டில் விண்ணப்பம் போட்டு சேர்மென் நடவடிக்கை சரி இல்லை என்பதாக வாதாடி தாம் கவுன் சிலராக இருக்கலாம் என்பதாக உத்திரவு பெற்று வந்துவிட்டார். இது மற்ற பத்திரிகைகளில் வந்திருக்கிறது. இந்தியர்கள் சுய ஆக்ஷிக்கு அருகதை உள்ளவர்கள் என்பதும் வெள்ளைக்காரர்கள் நமது நிர்வாகத்தை மேற்பார் வை பார்க்க யோக்கியதை உள்ள தர்மக்கர்த்தர்கள் என்பதும் ருஜுவு செய்ய நமது மந்திரி கனம் சுப்பராயன் அவர்கள், நமது சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள், நமது ஈரோடு முனிசிபாலிட்டியில் உள்ள கவுன் சிலர்கள், பாதிரியார் உள்பட அவரது நண்பர்கள் அந்த ஆபீசிலுள்ள சிப்பந் திகள், நமது ஜில்லா கலெக்டர் ஸ்ரீமான் காக்சு துரை அவர்கள் ஆகிய இவர் களே போதுமான அத்தாக்ஷி ஆவார்கள். இந்தியாவின் மானக் கேட்டுக்கும் இந்தியர்களின் இழி தன்மைக்கும் வெள்ளைக்காரர்கள் யோக்கியதைக்கும் இதைவிட வேறு என்ன சாக்ஷி வேண்டும்?

குடி அரசு – கட்டுரை – 12.06.1927

You may also like...

Leave a Reply