மாயவரம் மகாநாட்டின் எதிரிகளின் சூக்ஷியும் திரு. வி.கலியாணசுந்திர முதலியாரின் விஜயமும்

ஸ்ரீமான் முதலியார் அவர்கள் மாயவரம் மகாநாட்டுக்கு வந்ததும் மகாநாட்டில் அதுசமயம் கூடியிருந்த சுமார் 3000 பேருக்கு மேல்பட்டுள்ள மகாஜனங்கள் செய்த ஆரவாரத்திற்கும் அடைந்த சந்தோஷத்திற்கும் அளவு சொல்ல யாராலும் முடியாது என்றே சொல்லுவோம். ஸ்ரீமான் முதலியார் அவர்களை மாயவரம் மகாநாட்டுக்குப் போகவிடக்கூடாது என்று செய்த சூட்சிகள் கொஞ்சமும் பலிக்கவே இல்லை. உண்மையான தேசபக்தர்கள் மாயவரம் மகாநாட்டுக்குப் போகக்கூடாது என்று ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தனது ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் எழுதி இருந்தது யாவருக்கும் தெரியும். அதோடு ‘தமிழ்நாடு’ பத்திரிகை ஏஜண்டு ஒருவர் ஸ்ரீமான் முதலியார் அவர்களுக்கு ஒரு பயமுருத்தல் கடிதம் எழுதி அதில் மாயவரத்திற்கு வரக்கூடாது என்றும், வந்தால் கலகம், அடிதடி, மரியாதைக் குறைவு முதலியதுகள் நடக்குமென்றும் குறிப்பிட்டிருந்தார்.

மகாநாட்டில் கலவரம் நடக்கும் என்கிற தீர்மானத்தின் பேரில் கலவரத்தைப் பெரிது செய்து பத்திரிகைகளில் எழுதத் தகுந்த மாதிரி அதற்குத் தகுந்த சில நிருபர்களை அனுப்பியும் கூட மகாநாட்டில் ஒரு சிறு கலவரம்கூட நடக்காததால் அனுப்பியவர் ஏமாற்றமடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். மற்றும் ஜஸ்டிஸ் கட்சியிடமும் மாயவரம் மகா நாட்டினிடமும் பாமர ஜனங்களுக்குக் கெட்ட எண்ணம் ஏற்படும் படி இதில் எழுதுவதற்குத் தகாத எத்தனையோ சூட்சிகள் நடந்தன. ஆனால் அவைகள் ஒன்றும் பயன்பெறாமல் போய் விட்டது. ஆனபோதிலும் மகாநாட்டிற்கு வந்தவர் களில் பெரும்பாலோர் இவைகளை நன்றாய் அறிந்து கொண்டார்கள் என்றே சொல்ல வேண்டும். எப்படி எனில் பிரதிநிதிகள் நாலுபேர் ஐந்து பேர் கூடின இடத்தில் எல்லாம் இதே பேச்சுகள்தானே தவிற வேறில்லை. எனவே நமக்கும் நமது சமூகத்திற்கும் இருக்கும் கஷ்டத்தை இதிலிருந்து கொள்ளும் படி வேண்டுகிறோம்.

குடி அரசு – துணைத் தலையங்கம் – 15.05.1927

You may also like...

Leave a Reply