சென்னிமலை செங்குந்தர் காமாட்சியம்மன் ஆலய பரிபாலன சபையின் 12 வது ஆண்டு நிறைவு விழா!

சபையோர்களே!

நீங்கள் எனக்கு வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரத்தில் குறிக்கப் பட்டிருக்கும் புகழ்ச்சிக்கு நான் பாத்திரனல்லன். நான் உங்களோடு சேர்ந்த ஓர் குடித்தனக்காரனாகவும், சகோதரனாகவும் பழகி வந்தவனாகையால் உங்கள் மத்தியில் நான் இவ்வளவு மதிக்கப்படுவதையும் புகழப்படுவதையும் கண்டு வெட்கம் அடைய வேண்டியவனாகவே யிருக்கிறேன். காரியதரிசி யார் வாசித்த அறிக்கை ரிப்போர்டிலிருந்தே இச்சங்கம் தனது கடமையைச் சரிவர செய்து வந்திருக்கிறதென்று தெரிய வருகிறது. நம் நாட்டில் எத்தனை யோ சங்கங்கள் தோன்றினாலும் உங்கள் சங்கங்கள் போல் 12, 14 வருடங்க ளாக உயிருடனிருக்கும் சங்கங்கள் வெகு சிலவேயாகும். ஆரம்பத்தில் ஊக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டு சீக்கிரம் உயிர் போய் இருந்த இடமே தெரி யாமல் போவது வழக்கமாயிருக்கின்றது. அது போலவே நம் நாட்டில் அநேகம் தோன்றி நின்று போயிருக்கின்றன. இச்சங்கத்தின் வளர்ச்சிக்குக் காரணம், இச்சமூகத்தினருக்கு தங்கள் சமூக முன்னேற்றத்திலிருக்கும் அக்கரையே காரணமாகும். நான் அநேக சங்கங்களுக்கு அழைக்கப்பட்டுப் போயிருக்கிறேன். எங்கெங்கு வியாபாரிகளால் சங்கங்கள் நடத்தப்படுகின்ற னவோ அந்த சங்கங்கள் தான் நீடித்து நடந்து வருகின்றன. குடித்தனக்காரர் கள் சங்கத்திற்கும் வித்தியாசம் உண்டு. அதிலும் வக்கீல்கள் சங்கம் விபரீத மானது. அவர்கள் ஏதோ ஒரு குறிப்பிட்ட காரியத்திற்கு சுயநலத்தை நாடி ஒரு சங்கத்தைத் தோற்றுவிப்பார்கள். உடனே காரியம் தீர்ந்ததும் அச்சங்கம் இருந்த இடம் தெரியாமற் போய்விடும். கொஞ்ச நாளைக்கு முன் இவ்வூரில் நடந்த செங்குந்த மகாஜன சங்கமும், இந்த சங்கமும்தான் 12,14 வருஷங்களாக சரிவர நடந்து வந்திருக்கின்றன. நம் நாட்டில் இப்பொழுது ஒவ்வொரு மரபினர்களும் ஒவ்வொரு சங்கம் ஸ்தாபித்து தங்கள் தங்கள் சமூகத்தைச் சீர்திருத்தம் செய்து வருகின்றனர். கொங்கு வேளாள சங்கம், வன்னிகுல சங்கம், நாடார் குல சங்கம், அருந்ததியர் சங்கம், திராவிடர் சங்கம், குலாலர்
சங்கம் இவ்வாறு பல சமூக சங்கங்கள் தோன்றி வேலை செய்து வருகின்றன. நாடார் மகாஜன சங்கம் தோன்றி 30 லக்ஷம் ரூபாய் மூலதனத்துடன் அச்சங்கம் நடந்து வருகிறது. வருஷம் 65 ஆயிரம் ரூபாய் அச்சங்கம் ஒரு ஹைஸ் கூலுக்கும், கோவிலுக்கும் பிரசாரத்திற்குமாக செலவு செய்து வருகிறது. நாட்டுக்கோட்டை நகரத்தார்களும் தங்களுக்கும் ஒரு சங்கம் ஏற்பாடு செய்து அதன் மூலமாகத்தான் தங்கள் சமூகத்தைப் பல வழியிலும் சீர்திருத்தம் செய்து கொண்டு வருகின்றனர். அவர்களுக்குள் சங்கம் தோன்றிய பின்தான் அநேக பழக்க வழக்கங்களை மாற்றிக்கொண்டார்கள். செங்குந்த மகாஜன சங்கத்தினர் அரிய வேலை செய்து முடித்திருக்கின்றனர். கொஞ்ச நாளைக்கு முன் கொங்கு வேளாள சங்கம் தோன்றினாலும் அது செய்ய வேண்டிய வேலை அநேகமிருக்கின்றன. இச்சங்கத்தாரும் பணம் வசூலிப்பதும் சேகரிப்பதும் மட்டும் தங்கள் வேலையாக நினைக்கக்கூடாது. மடங்களைக் கட்டிவிடுவதால் மட்டும் பலனில்லை. சபையார் தங்கள் சமூகத்தில் பல ஊர் களிலும் கிளைச் சங்கங்கள் ஸ்தாபிக்க வேண்டும். இச் சமூகத்திலுள்ள வாலி பர்கள், சமூக சீர்திருத்தத்திற்கு முன்வந்து பாடுபட வேண்டும். சங்கங்களா லேதான் உலகத்தில் அநேக காரியங்கள், அக் காலத்தில் செய்து முடித்திருக் கின்றனர். இவ்வூரில் எந்த சங்கம் தோன்றினாலும் நன்றாகவே நடந்து வரும். இங்குள்ள செல்வந்தர்கள் நன்கு பொது நலமுணர்ந்து தர்மம் செய்து வருகி றார்கள். அவர்கள் பொது விஷயத்திற்கு தாராள சிந்தையுடன் பொருளுதவி செய்து வருகின்றனர். இந்த ஜில்லாவிற்கே இவ்வூர்வாசிகள் பொது விஷயத் தில் செலவிடுவதில் பெயர் வாங்கியிருக்கிறார்கள்.

ஒற்றுமை

எந்தச் சங்கம் மேன்மைக்கு வரவேண்டுமானாலும் ஒற்றுமை வேண் டும். ஒற்றுமை இல்லாத சங்கம் முன்னுக்கு வரப் போவதில்லை. சங்கத்திலுள் ளவர்களிடம் இன்னொரு முக்கியமான குணம் வேண்டும். அதாவது சமத்துவம் வேண்டும். ஒவ்வொரு சமூகத்தாரும் தங்களுக்கு மேலானவர்க ளில்லையென்று சொல்ல வருவதுபோல் தங்களுக்கு கீழானவர்களுமில்லை என்பதை ஒத்துக் கொள்ள வேண்டும். அப்பொழுதுதான் ஒற்றுமையை நிலை நிறுத்த முடியும். ஒரு சமூகத்திலோ ஒரு சங்கத்திலோ தாழ்மை மேன்மை என்ற வித்தியாசங்கள் வரக்கூடாது. அதிலும் பணக்காரர்கள் இந்த விஷயத் தில் தாழ்மையாக நடந்து காட்ட வேண்டும். பணக்காரர்கள் ஆடம்பரமின்றி நடந்து காட்டினால் மற்றவர்களும் அதைப் பின்பற்றுவார்கள். சங்கங்களில் ஸ்தானங்களை விரும்புகிறவர்களுக்கு விட்டு விட வேண்டும். உண்மை யாகப் பொது நல ஊழியம் செய்கிறவனுக்கு பதவியோ ஸ்தானங்களோ வேண்டியதில்லை. ஒரு சமூகம் முன்னேற்றமடைவதென்றால் ஏதோ அச் சமூகத்தில் ஒரு சிலர் பணக்காரர்களாயிருந்தால் மட்டும் அச்சமூகம் முன் னேற்றம் அடைந்து விட்டதாகச் சொல்ல முடியாது. அச்சமூகத்தில்
ஏழைகளில்லாமல் செய்து விடவேண்டும். ஏழைப் பிள்ளைகளுக்கு கல்வி, கைத்தொழில் சொல்லிக்கொடுக்க வழி தேட வேண்டும். ஒரு சமூகத்தில் சிலர் கவுன்சிலராகவும், போர்டு மெம்பர்களாகவும் இருந்தால் அச்சமூகம் முன்னுக்கு வந்துவிடாது. ஒரு சமூகமென்றிருந்தால் அச்சமூகத்தில் ஏழை களில்லாமலும் மனச்சாட்சியை விற்று ஜீவிக்கிறவர்கள் இல்லாமலும் செய்வதுதான் சரியான சமூக சீர்திருத்த வேலையாகும். சமூக சீர்திருத்த மென்பது ஒரு சமூகத்திற்கு கல்வி, கைத்தொழில் முதலிய வழிகளை உண்டாக்கிக் கொடுத்து ஏழைகளை முன்னுக்கு கொண்டு வருவதுதான். பின்னும் சூது, குடி, வேசி முதலிய கெடுதிகளை சமூகத்தினரிடமிருந்து அகற்ற பிரசார மூலமாக வேலை செய்ய வேண்டும். ஒரு சமூகத்திற்கு சுயமரியாதை வேண்டுமானால் தொழிற் கல்விதான் மிக்க அவசியமானது. இத்தகைய காரியங்களை நீங்கள் செய்ய சங்கமும் ஒற்றுமையும் உங்களுக்கு பெரிய உதவியாயிருக்குமென்பதில் சந்தேகமில்லை.

கதர்

உங்கள் சமூகத்திற்கு உற்ற தொழில் நெசவுத் தொழிலானதால் அது இன்னும் கொஞ்ச நாளையில் நமது நாட்டில் அடியோடு அழிந்துபோகாமல் இருப்பதற்கு கதர் முக்கியமானது. உங்கள் சமூக நன்மையையும் கிராமத்து ஏழைப் பெண் மக்களின் நன்மையையும் உத்தேசித்தே மகாத்மா கதர் திட்டத்தில் வேலை செய்கிறார். ஆதலால் நீங்கள் அவருக்கு நன்றியறித லுள்ளவர்களாயிருப்பதற்கு கதர் உடுத்துவதுடன் அத்திட்டம் நிறைவேற உதவி செய்யவேண்டும்.

குறிப்பு: 16. 1. 27 இல் சென்னிமலையில் நடைபெற்ற செங்குந்தர் காமாட்சி யம்மன் ஆலய பரிபாலன சபை 12 ஆம் ஆண்டு நிறைவு விழா நிறைவுரை.

குடி அரசு – சொற்பொழிவு – 30.01.1927

You may also like...

Leave a Reply