பாரூக்கின் தந்தை அளித்த பேட்டி

கத்தியால் வெட்டிய போதும் கடவுள் இல்லை என்று கூறியிருக்கிறார் என் மகன்.

பாரூக்கின் தந்தை ‘தமிழ் இந்து’ நாளேட்டுக்கு அளித்த பேட்டி:

கோவை உக்கடம் லாரிப்பேட்டைக்கு அருகில் உள்ள பிலால் எஸ்டேட் பகுதியில் உள்ளது, கடவுள் மறுப்பில் தீவிரம் காட்டியதால் கொல்லப்பட்ட ஃபாரூக்கின் சிறிய வீடு. ஃபாரூக்கின் மனைவி ரஷீதா(31) குர்ஆன் துவா செய்து கொண்டு இருந்தார். அவரைச் சுற்றிலும் கண்ணீருடன் உறவினர்கள்.

‘‘நாங்கள் யாரும் எம் மார்க்கத்துக்கு விரோதிகள் அல்ல. தினமும் 5 வேளை நமாஸ் செய்பவர்கள். தவறாது நோன்பு மேற்கொள்பவர்கள். ஃபாரூக்கின் பிள்ளைகள் அப்ரீத்(13), ஹனபா(8) ஆகியோர் இஸ்லாமிக் அராபிக் பள்ளியில்தான் 1, 6-ம் வகுப்பு படிக்கிறார்கள். எந்த நிலையிலும் மார்க்கத்தைத் தாண்டி நடக்குமாறு ஃபாரூக் எங்களிடம் கூறியதில்லை. அதனால், அவரின் கடவுள் மறுப்புக் கொள்கைக்கும் நாங்கள் எதிராக நிற்கவில்லை. அதற்காக கொலைகூட செய்வார்களா? வேதத்தை முழுமையாகப் படித்து, புரிந்துகொள்ளாதவர்களாலேயே அவர் கொல்லப்பட்டுள்ளார். கடவுள் எதையும் மன்னிக்கக் கூடியவர். இப்படி யாரையும் அவர் தண்டிக்கச் சொன்னதில்லை” என்கிறார் ஃபாரூக்கின் தாய் நதீஷா.

அவரது தந்தை அமீது கூறும்போது, “கடவுள் மறுப்பு வாதத்தை முகநூலில் விரிவாகப் பதிவிட்டுள்ளார் ஃபாரூக். அதை ஏற்றுக்கொள்ளாதவர்கள், அவர் முதுகிலேயே கத்தியால் குத்திக் கொன்றுள்ளனர். அதற்குரிய நீதியை இறைவன் வழங்க வேண்டும். தொடக்கத்தில் ஃபாரூக் இறை நம்பிக்கையுடன்தான் இருந்தார். பள்ளிவாசல் தொழுகைக்கும் சென்று வந்தார். இங்கு பெரியாரிஸ்ட்களுடன் சேர்ந்து, கடவுள் மறுப்பு, தலித் சமுதாய விடுதலை குறித்து பேசினார். ஜாதி மறுப்பு, வரதட்சணை மறுப்பு திருமணங்களை முன்னின்று செய்துவைப்பார். வரதட்சணை வாங்கி நடைபெறும் திருமணத்துக்குச் செல்லமாட்டார்.

அவரிடம் நாங்கள் “இங்கு அனைவருமே இறை மார்க்கத்தில் ஈடுபட்டிருக்கும்போது, நீ மட்டும் கடவுள் மறுப்பு செய்வது சரியானதல்ல. தனி ஆளாக என்ன செய்ய முடியும்?” என்று கேட்டதற்கு, “100 பேரில் ஒருவர் எதிர்ப்பதுதான் போராட்டம்” என்பார்.

சசிகுமார் கொலை நடந்தபோது, உக்கடம் பகுதியில் கலவரம் ஏற்பட்டது. அப்போது வேடிக்கை பார்த்துக்கொண்டு இருந்த ஃபாரூக் உள்ளிட்டோர் மீது போலீஸார் நடவடிக்கை மேற்கொண்டனர். பின்னர்தான் ஃபாரூக் பெரியாரிஸ்ட், திராவிடர் விடுதலை கழகத்தைச் சேர்ந்தவர் என்று அனைவருக்கும் தெரியவந்தது.

பின்னர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் ஃபாரூக் கைது செய்யப்பட்டார். கொளத்தூர் மணி உதவியால் 3 மாதங்களில் சிறையிலிருந்து வெளிவந்தார். இப்போதும்கூட, அவரது கொலைக்கு கண்டனம் தெரிவித்து கொளத்தூர் மணி பேட்டி கொடுத்ததால்தான், இந்த சம்பவம் வெளியில் வந்தது. இல்லையேல், வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் தகராறில் முஸ்லிம் இளைஞர் கொலை என்று வழக்கை முடித்திருப்பார்கள்.

கடவுள் மறுப்பு கொள்கையை முகநூலில் பதிவிட்டதால், பலரும் எச்சரிக்கை விடுத்தனர் என்றும் தற்போது கூறுகிறார்கள். இவை குறித்தெல்லாம் எங்களுக்கு முன்பு எதுவும் தெரியாது. அவரை கத்தியால் குத்தியபோதுகூட ‘கடவுள் இல்லை’ என்று கூறியவாறே உயிரை விட்டதாகக் கூறுகிறார்கள். அவர் மாற்றிக் கூறியிருந்தால்கூட உயிரோடு விட்டிருப்பார்களாம்.

ஃபாரூக் கொலை வழக்கில் தற்போது சரணடைந்தவர்கள், கொலை நடந்த அடுத்த நாள் பிண வறையில் உடனிருந்தனர். அடக்கம் செய்யும் இடத்துக்கும் வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர் என்பதுதான் மிகவும் வேதனையளிக்கிறது. நம்பிச் சென்ற நண்பனையே கொலை செய்துவிட்டனர். என் மருமகளும், பேரக் குழந்தைகளும் ஆதரவின்றி தவிக்கின்றனர். அவர்களை எவ்வாறு தேற்ற முடியும். கொளத்தூர் மணி அறிக்கைக்குப் பின்னரே பல்வேறு அமைப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

‘இஸ்லாத்தை ஏற்பவர்கள் ஏற்கலாம்; ஏற்க இயலாதவர்களும் சுதந்திரமாக இருக்கலாம்’ என்று ஜவாஹிருல்லா கூறியுள்ளார். எங்களைப் பொறுத்தவரை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். இனியும் இதுபோல நடக்கக்கூடாது” என்று கண்ணீருடன் தெரிவித்தார்.

இதுவரை அரசுத் தரப்பிலோ, ஆளுங்கட்சித் தரப்பிலோ யாரும் ஃபாரூக் குடும்பத்தினரை சந்திக்க வில்லை. ஆதரவின்றி 2 குழந் தைகளுடன் தவிக்கும் ரஷீதாவின் வாழ்க்கைக்கு அரசுத் தரப்பில் உத்தரவாதம் தர யாருமில்லை என்பதுதான் வேதனைக்குரியது என்கின்றனர் அவரது உறவினர்கள்.

பெரியார் முழக்கம் 30032017 இதழ்

You may also like...