‘தேவாரம்’ பாடல்களை அழிக்க தில்லை தீட்சதர்கள் நடத்திய சதி

சிதம்பரம் கோயில் சைவ சமயக் குரவர் நால்வராலும் பாடல் பெற்றத் தலம். பாடல்கள் என்றால் தேவாரப் பாடல்கள்தான். அவை வெறும் பாடல்கள் அல்ல. சைவர்களுக்குத் தமிழ் மறை! அந்தப் பாடல்களை நியாயமாக தில்லை வாழ் அந்தணர்கள் பாதுகாத்திருக்க வேண்டும் அல்லவா? ஆனால் பாதுகாக்கவில்லை! இறைவனைவிட கரையான் மேல் பற்று அதிகம்போல் தெரிகிறது. தேவாரப் பாடல்களை அறையில் பத்திரமாகப் பூட்டி வைத்து கரையானுக்கு ‘அமுது’ செய்தனர்.

அந்தக் காலங்களில் எழுத்துக்கள் எல்லாம் வடிக்கப்படுவது ஓலைச் சுவடிகளில் தானே? ஓலைச் சுவடிகள் மலிவுப் பதிப்பும் அல்ல சந்தையில் கிடைக்கக் கூடியதும் அல்ல. கோயில்களிலும், மடங் களிலும் மற்றும் முக்கிய சைவ நெறிப் பற்றாளர் களிடம் மட்டுமே கிடைக்கக் கூடியவையாகும். அவை முழுமையாகக் கிடைப்பது முற்றிலும் அரிது. தேவாரப் பாடல்களின் ஓலைச் சுவடிகள் எல்லாம் சிதம்பரம் கோயிலில் இருந்தன. ஆனால் தில்லைவாழ் அந்தணர்கள் அவற்றை யாருக்கும் கொடுப்பதில்லை. தேவாரப் பாடல்களைக் கேட்டு ரசித்த ராஜராஜ சோழன் அப்பாடல்களைத் திருமுறைகளாகத் தொகுக்கும் பொறுப்பை நம்பியாண்டார் நம்பியிடம் ஒப்படைத்தான். எல்லாப் பாடல்களும் சிதம்பரம் கோயிலில் முடக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்பதை அறிந்த சோழ மன்னன் தில்லைவாழ் அந்தணர்களை தேவாரப் பாடல்களை விடுவிக்கு மாறு கேட்டான். தில்லை வாழ் அந்தணர்கள் மறுத்துவிட்டனர். சம்பந்தரும், அப்பரும், சுந்தரரும் வந்து கேட்டால்தான் கொடுக்க முடியும் என்று ஆளும் மன்னனுக்கே போக்குக் காட்டினர். ராஜராஜன் தில்லைவாழ் அந்தணர்கள் செய்யும் தந்திரங்களைப் புரிந்து கொண்டான். சம்பந்தர், அப்பர், சுந்தரர் போல் சிலைகள் செய்து, தில்லைவாழ் அந்தணர்கள் முன் நிறுத்தி தேவாரப் பாடல்களைக் கேட்டான். “இவை எல்லாம் சிலை தானே” என்றார்கள் கோயில் அந்தணர்கள். ராஜராஜசோழன் பதில் சொன்னான். “நடராசரும் சிலை தானே?” பிறகு என்ன, அவன் அரசனாக நடந்து கொண்டான். தேவாரப் பாடல்கள் வைக்கப்பட்டிருக்கும் அறையை உடைத்தான். பாடல்களை வெளிக் கொணர்ந்தான்.

தில்லைவாழ் அந்தணர்களுக்கு என்ன ஆணவம் இருந்திருக்க வேண்டும்? ஆளும் அரசனின் கிரீடத்திற்கு மேலே தில்லை வாழ் அந்தணர்களின் ஆன்மிகக் கொடி பறந்திருக்க வேண்டும் அல்லவா?

அன்று ராஜராஜசோழன் கரையான் உண்டது போக எஞ்சிய தேவாரப் பாடல்களை மீட்கவில்லை என்றால், கோயில்களில் பாடுவதற்குக்கூட தமிழ் இல்லாது போயிருக்கும்!

இங்கே தமிழ்த் திருமுறைகள் தீட்டு மொழி!

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள குமுடி மூலை என்ற சிற்றூரைச் சேர்ந்தவர் ஆறுமுகசாமி என்ற ஓதுவார். இவருக்கு வயது 73. தில்லை நடராசர் கோயிலில் சிற்றம்பல மேடையில் திருவாசகம் உள்ளிட்ட சிவபுராணப் பாடல்களை அவர் பாட விரும்பினார். “பாடக் கூடாது” என்று தீட்சிதர்கள் தடுத்தனர். தடுத்தது மட்டும் அல்ல தாக்கியும் இருக்கிறார்கள். ‘அன்பே சிவம்’ என்ன ஆயிற்று? வயதுக்கு உரிய மரியாதை எங்கே போயிற்று?

ஆறுமுகசாமிக்கு ஆதரவாகப் போராட்டம் வெடித்தது! தீட்சிதர்கள் ரொம்ப சாமர்த்தியசாலிகள். அவர்கள்  தேவாரம், திருவாசகம் பாடுவதை எதிர்க்கவில்லையாம். பாடுகின்ற இடம் சிற்றம்பல மேடையாக இருக்கக் கூடாதாம். அதாவது சிற்றம்பல மேடை என்பது மூலவர் (நடராசர்) சந்நிதியாம் அங்கு வடமொழி வேதங்கள் ஒலிக்கலாமாம். அந்தணர்கள் மட்டுமே அதைச் செய்வார்களாம். மூலவர் சந்நிதியில் திருவாசகம் ஒலித்தால் தீட்டுபட்டு விடுமாம்!

என்ன, நாம் இருப்பது இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டா?

தமிழ் செம்மொழி ஆகிவிட்டதாம்! மத்தியிலும் தமிழ் வேண்டுமாம்! உயர்நீதிமன்றத்திலும் தமிழ் உட்கார வேண்டுமாம்! திருக்குறள் தேசிய நூலாக வேண்டுமாம். ஆனால் தில்லைக் கோயிலில் திருமுறை தீட்டு மொழியாம். தமிழுக்கு இடஒதுக்கீடு உண்டாம். இடம் சிற்றம்பல மேடைக்குக் கீழே.

சிதம்பரம் கோயில் தீட்சிதர்கள் அத்தோடு நிற்கவில்லை. நீதிமன்றத்திற்கும் சென்றார்கள். சிதம்பரம் நகரில் உள்ள மாவட்ட உரிமையியல் (ஆரளேகை உடிரசவ) நீதிமன்றத்தில் ஆறுமுக சாமிக்கு எதிராக கோயில் பொது தீட்சிதர்கள் சார்பில் அதன் செயலாளர் நவமணி தீட்சிதர் வழக்கு தாக்கல் செய்தார். ஆறுமுக சாமியோ அவருடைய ஆட்களோ நடராஜர் ஆலயத்தின் உள்ளே கருவறைக்கு முன்பு உள்ள அர்த்த மண்டபத்தில், அதாவது சிற்றம்பல மேடையில் தேவாரம் மற்றும் திருவாசகம் போன்ற சிவபுராணங்களை பாடக் கூடாது என்று உறுத்துக் கட்டளையை (ஐதேரnஉவiடிn) அவ்வழக்கில் கேட்டார். தீட்சிதர்களின் “வைதீக சாஸ்திரங்களிலோ மதச் சடங்குகளிலோ, உரிமைகளிலோ இந்தப் பிரதிவாதி (ஆறுமுகசாமி) தலையிட உரிமை இல்லை. இந்து அறநிலையத் துறையின் மயிலாடுதுறை உதவி ஆணையர் 12.12.2004-லேயே ஆறுமுகசாமியோ அல்லது வேறு வழிபாடு செய்ய விரும்பும் யார் வேண்டுமானாலும் தேவாரம், திருவாசகம் போன்றவற்றைக் கருவறைக்கு முன்புள்ள கீழ்ப்பகுதியில் நின்று பாடலாம். அதாவது சிற்றம்பலத்தில் பாட முடியாது. (திருச்சிற்றம்பல மேடை என்றாலும், கனகசபை என்றாலும், அர்த்தமண்டபம் என்றாலும் எல்லாமும் ஒன்றுதான்) பூஜை நேரத்தில் தீட்சிதர்கள் தேவாரம் பாடுவார்கள். மற்றவர்கள் பாடக் கூடாது. தொன்று தொட்டுவரும் வழக்கத்திலும், வழக்காற்றிலும் குறுக்கிட யாருக்கும் உரிமை இல்லை. ஆறுமுகசாமிக்கு மயிலாடுதுறை உதவி ஆணையர் உத்தரவின் பேரில் எந்த மேல்முறையீடு செய்ததற்கும் எந்த ஆதாரமும் இல்லை. அப்பர், சம்பந்தர், சுந்தரர், மாணிக்கவாசகர் முதலியோர்கூட கருவறைக்குக் கீழ் இருந்த பகுதியில் இருந்துதான் பாடினார்கள். இதை மீறினால் கோயிலின் புனிதம் கெட்டுவிடும். தில்லைவாழ் தீட்சிதர்கள் தமிழர்கள், சிதம்பரம் கோயில் தில்லைவாழ் தீட்சிதர்களின் நிர்வாகத்திற்கே உட்பட்டது” – இவை எல்லாம் தீட்சிதர்களின் வாதங்கள்.

ஆறுமுகசாமி ஓதுவார் வாதம் என்ன தெரியுமா?

தீட்சிதர்கள் தங்களுக்கு ஆதரவாக இந்து சமய அறநிலையத் துறை மயிலாடு துறை உதவி ஆணையர் போட்ட உத்தரவைக் காட்டுகிறார்கள். இது தங்கள் கோயில் என்றும் இந்து சமய அறநிலையத் துறை இதில் தலையிட முடியாது என்றும் சொல்பவர்கள், இந்து அறநிலையத் துறை அதிகாரியின் உத்தரவைக் காட்டுவது வேடிக்கையாக உள்ளது. அந்த அதிகாரியின் உத்தரவு இறுதியானது அல்ல. அரசியல் சட்டத்திற்கு விரோதமாக எந்தப் பழக்க வழக்கமும் இருக்க முடியாது. சிவபுராணம் பாடும் உரிமை சாதி அடிப்படையில் மறுக்கப்படுகிறது. இந்த வழக்கில் இந்து சமய அறநிலையத் துறையையும் ஒரு தரப்பாகச் சேர்த்திருக்க வேண்டும். இது ஒரு சட்டத் தவறு. தீட்சிதர்கள் தேவாரம் பாடலாம்; ஆனால் அதே இடத்திலிருந்து ஓதுவார் பாடக் கூடாது என்பது சாதி அடிப்படையிலான வாதமாகும். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக அரசு சட்டம் கொண்டுவந்த பின்னர் தீட்சிதர்கள் தனி உரிமை கொண்டாட முடியாது என்பது ஆறுமுக சாமியின் வாதம்.

சைவ-வைணவ மோதல் களம்

சிதம்பரம் கோயில் எப்படி ஏற்பட்டது, நடராசர் எப்படி எழுந்தருளினார் என்பதே பிரச்சினைக்குரியதாகத்தான் இருக்கிறது. இவை குறித்து சரியான வரலாறு இல்லை. புராணக் கதைகளே முன் வைக்கப்படுகின்றன. புராணக் கதைகள் பக்தர்களுக்கு இனிக்கலாம். வரலாற்று மாணவனுக்கு உண்மைதான் இனிக்கும். புராணக் கூற்றின்படி சிம்மவர்மன் என்ற கவுட நாட்டு மன்னன் தன்னுடைய உடல் குறை காரணமாக முடிசூட்டிக் கொள்ள மறுத்துவிட்டு, காடாக இருந்த சிதம்பரத்திற்கு வந்து, அங்கிருந்த சிவகங்கை குளத்தில் நீராடிவிட்டு எழுந்தபோது, நடராஜர் அவன்முன் தோன்றினாராம். சிம்மவர்மன் என்ற தன்னுடைய பெயரை இரண்யவர்மன் என்று மாற்றிக்கொண்டு, தன் முன் தோன்றிய நடராசனுக்கு அவன் அங்கு கோயில் கட்டினானாம். சிதம்பரம் கோயில் இப்படித்தான் தோன்றியதாம். கங்கைக் கரையிலிருந்து தீட்சிதர்களை அழைத்து வந்தானாம்.

சிதம்பரம் கோயில் வளாகத்தில் இப்போதும் ஒரு பெருமாள் கோயில் உண்டு. இது குறித்து சைவர்கள் பேசுவதில்லை. வைணர்கள் ஒரு தகவல் சொல்கிறார்கள். ஒரு காலத்தில் பெருமாள் கோயில் அங்கு இருந்தது என்றும், அது ‘சித்ரக் கூடம்’ என்று அழைக்கப்பட்டது என்றும், அப்போது நடராஜர் கோயில் சிறிய கோயிலாக இருந்தது என்றும், அதனால்தான் நடராஜர் வீற்றிருக்கும் சந்நிதி “சிற்றம்பலம்” என்று அழைக்கப்படுகிறது என்றும் கூறுகிறார்கள். பல ஆழ்வார்கள் சிதம்பரம் பெருமாளைப் பாடியிருக்கிறார்கள். இப்படிப் புராணக் கதைகளிலும் சைவ வைணவர்களுக்கிடையே சிதம்பரம் கோயில் ஒரு பிரச்சினைக்குரிய கோயிலாகவே இருந்திருக்கிறது. சிதம்பரம் கோயில் வளாகத்தில் பெருமாள் கோயில் வந்தது எப்படி? பல்லவர் ஆட்சியில் கிட்டத்தட்ட எட்டாம் நூற்றாண்டில் நந்திவர்ம பல்லவ மன்னன் நடராஜர் ஆலயத்தில் பெருமாளை பிரதிஷ்டை செய்திருக்கிறான் என்கிறார்கள் வரலாற்று ஆசிரியர்கள். அதாவது தேவாரம் பாடிய மூவர் காலத்திற்குப் பிறகு என்கிறார்கள்.

இராஜராஜசோழன் கட்டிய தஞ்சைப் பெரிய கோயில், இராஜேந்திர சோழன் கட்டிய கங்கை கொண்ட சோழபுரம், இன்னும் இதுபோன்ற கோயில்கள் போல், கட்டப்படும்போதே பிரம்மாண்டமாய்க் கட்டப்பட்ட கோயில் அல்ல சிதம்பரம் நடராஜர் கோயில்.  அக்கோயில் பல்வேறு அரசர்களால், பல்வேறு காலங்களில் பெரிதாக்கப்பட்டிருக்கிறது. பிற்காலச் சோழர்களால் பெரிதும் போற்றப்பட்ட கோயில் சிதம்பரம் கோயில். சைவ சமய மன்னர்கள் மட்டும் அல்ல, வைணவ சமய மன்னர்களும், இக்கோயில் வளாகத்தில் தங்கள் ஆட்சியின் பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இப்படிச் சைவ மன்னர்களும், வைணவ மன்னர்களும் தங்கள் ஆட்சியின் இருப்பை இத் தில்லை வளாகத்தில் காட்டியதால் தானோ என்னவோ, பிரச்சினைகளின் திருத்தலமாக இக்கோயில் தொடர்ந்து இருந்திருக்கிறது.

நடராசர் கோயில் வளாகத்தில் உள்ள திருச்சித்ரகூடம் திருமால் (வைணவக் கடவுள்) வீற்றிருக்கும் கூடம். ஆழ்வார்களின் பாடல் பெற்ற கோயில். இந்தக் கோயிலுக்கு பன்னிரெண்டாம் நூற்றாண்டில் சோதனை ஏற்பட்டது. தில்லை நடராசன் வளாகத்தில் திருமால் கோயிலா? கொதித்து எழுந்தான் இரண்டாம் குலோத்துங்கன். சித்ர கூடத்தை அழித்தான். கோவிந்தராஜ பெருமாள் சிலையை கடலில் வீசினான். நானூறு ஆண்டுகள் ஓடின. தில்லைக் கோயிலுக்கு உரியவர் நடராசர்தான் என்று மாற்றினார்கள்! பிற்காலச் சோழர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் விஜயநகர வேந்தனான அச்சுததேவ மகாராயர் என்னும் மன்னன் கோவிந்தராஜ பெருமாளை ‘புனப்பிரதிஷ்டை’ செய்திருக்கிறான். இந்த மன்னன் ஆந்திரத்தின் புகழ் பெற்ற அரசனான கிருஷ்ண தேவராயனின் இளவலாகும். இதன் பின்னர் நடராஜர் கோயிலின் முதல் பிராகாரத்திலேயே கோவிந்தராஜ பெருமாள் தனிக் கோயில் அமைக்கும் முயற்சி நடந்து, அதை எதிர்த்து தில்லை வாழ் அந்தணர்கள் கோயில் கோபுரத்தில் ஏறி, இருபதுக்கும் மேற்பட்டோர் தற்கொலையம் செய்து கொண்டிருக்கிறார்கள்.

நன்றி : ச. செந்தல்நாதன் எழுதிய “சிதம்பரம் கோயில்: சில உண்மைகள்” நூலிலிருந்து

பெரியார் முழக்கம் 16012014 இதழ்

You may also like...