என் ஒரே தலைவர் பெரியார் தான் : நடிகவேள் எம்.ஆர்.ராதா

தமிழ்த் திரைப்பட உலகில் ஏராளமான திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதி புகழ் பெற்ற ஆரூர் தாஸ், ‘தினத்தந்தி’ நாளேட்டில் தனது கலை உலக அனுபவங்களை தொடராக எழுதி வருகிறார். அதில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்கும் தனக்கும் நிகழ்ந்த உரையாடலை (4.1.2014) பதிவு செய்துள்ளார். பெரியார் மீது நடிகவேள் எவ்வளவு உறுதியான பற்றுக் கொண்டிருந்தார் என்பதை  நடிகவேளே விளக்கும் பகுதி இது.

ஒரு காலத்துல நடிகர்கள் எல்லாரும் ஒரே குடும்பமா ஒண்ணா, தான் இருந்தோம். இடையில இந்த அரசியல் – கட்சி – அது இதுன்னு வந்து நடிகன்களைப் பிரிச்சி ஒற்றுமை இல்லாமல் ஆக்கித் தனித்தனியா பண்ணிடுச்சி.

எம்.கே. தியாகராஜ பாகவதரும், பி.யு.சின்னப்பாவும் சினிமாவுல ஓகோன்னு இருந்த அந்தக் காலத்துல அரசியலும் சினிமாவும் ஒண்ணுக்கொண்ணு சம்பந்தமே இல்லாம தனித்தனியா இருந்துச்சு. அவுங்கவுங்க அவுங்கவுங்க வேலையை பாத்தாங்க.

நாட்டை அரசியல்வாதிங்க கவனிச்சிட்டாங்க. கலையை நடிகருங்க, மத்தக் கலைஞருங்க பார்த்துக்கிட்டாங்க. அதனால்தான் அப்போ எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருந்தது. எல்லாரும் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையாக இருந்தோம்.

அந்த நிலைமை அடியோடு மாறி, இப்போ சினிமாவுக்குள்ளே அரசியலும், அரசியலுக்குள்ளே சினிமாவும் பூந்து ஒண்ணோட ஒண்ணா கலந்திடுச்சி. அதுல பழைய அண்ணன் தம்பிங்க உறவு, பந்த பாசமெல்லாம் அநியாயத்துக்குப் பாழாப் போயிடுச்சு.

இவன் இந்தக் கட்சியில் இருக்கிறான். அவன் அந்தக் கட்சியில் இருக்கிறான். இவனை அவனுக்கு ஆகாது. அவனை இவனுக்குப் பிடிக்காது. இப்படி சினிமாவை வச்சித்தான் நம்ம நாட்டு அரசியல்னு ஆயிடுச்சி.

ஆளுக்கொரு பக்கமாக சினிமாவுல பூந்து, அதை இதை எழுதி, மக்களை மயக்கி கட்சியை வளர்த்திட்டாங்க. இதுக்கு இடையில பெரியாரோட திராவிடர் கழகத்துக்குன்னு இருக்கிற ஒரே நடிகர் நான் மட்டும்தான்.  மத்த எழுத்தாளனுங்க, பேச்சாளனுங்க ஒட்டு மொத்தமா எல்லாரும் புதுக்கட்சிக்குப் போயிட்டானுங்க.

கணேசன் மட்டும் (சிவாஜி) காமராஜரோடு சேர்ந்திட்டான். சொல்லிக்கிறாப் போல கலைஞர்ங்க யாருமே இல்லாம இருந்த காங்கிரஸ் கட்சித் தலைவர் காமராஜரும் இதான் சரியான சமயம் என்று கணேசனை சேர்த்துக்கிட்டாரு. உடனே கணேசன் கதர் வேட்டி கட்டி, கதர் சட்டை, கதர் துண்டு போட்டுக்கிட்டான். என்ன பிரயோஜனம்?

பெரியார் சும்மாவா சொன்னாரு? ‘தமிழனுக்கு எதிரி தமிழன்தான்!’ திராவிடக் கட்சி தோத்துப் போயிடுச்சின்னா, அதுக்கு தமிழனுங்கதான் காரணமாக  இருப்பான்னு, இப்போ அரசியல்லே பூந்து பட்டம் பதவி மேல ஆசைப்பட்டு பல திராவிடனுங்க பெரியார் கொள்கைக்கு விரோதமாக கோவிலுக்குப் போயி சாமி கும்பிட ஆரம்பிச்சி, நெத்தியில விபூதி, குங்கும ‘மார்க்’ போட்டுக்கிறானுங்க.

பெரியார் பேசுன பேச்சு, இந்தத் தள்ளாத வயசுலேயும், ஊர் ஊரா சுத்தி மீட்டிங் போட்டு சொல்லிச் சொல்லி அவர் பட்டபாடெல்லாம் வீணாப் போயிடுச்சி. பட்டம், பதவி, பணம்னு அரசியல்வாதிங்க அலைய ஆரம்பிச்சிட்டானுங்க. இது எதுல போயி முடியும்னு தெரியல!

என்னைப் பொறுத்தவரைக்கும் ஒண்ணு மட்டும் உறுதி. என் உயிரையே விட்டாலும் விடுவேனே தவிர, பெரியாரை மட்டும் விடவே  மாட்டேன். என் அறிவுக் கண்ணைத் திறந்து வச்சு, என்னை ஒரு மனுஷனாக்குனதே அவர்தான். அவர் மட்டும் இல்லேன்னா, படிப்பறிவே இல்லாத வெறும் நாடக நடிகனான இந்த ராதா, பக்கா ரவுடி ஆயிருப்பேன்.

பெரியார் மீட்டிங் எங்கே நடந்தாலும் தவறாமல் போவேன். மத்தவங்க மாதிரி இல்லாம, அவர் பேசுன பேச்சு மட்டும் எனக்குப் புதுசா இருந்துச்சு. அதைக் கேட்டுக் கேட்டுப் பிடிச்சுப் போயி, அப்பவே அவரை என் தலைவரா ஏத்துக்கிட் டேன். இந்த நிமிஷம் வரைக்கும், ஏன் நான் சாகிற வரைக்கும் தந்தை பெரியார்தான் என் ஒரே தலைவர். கேவலம் சல்லிக்காசுக்காக சந்தர்ப்பவாதியாக மாட்டேன்.”

இப்படியெல்லாம் எம்.ஆர். ராதா என்னிடம் பேசி, அரசியல், சமூக, மற்றும் கலைத்துறைகளை அலசி ஆராயக்கூடிய ‘இயற்கை அறிவு’ உள்ளவராக ராதாண்ணன் விளங்கினார். முரட்டுக் குணமும் கொண்டிருந்த அவர், ‘முள்ளில் ரோஜா’வாகவும் மணம் வீசினார் என்று எழுதியுள்ளார் ஆரூர்தாஸ்.

பெரியார் முழக்கம் 23012014 இதழ்

You may also like...