மணக்குப்பம் கிராமத்தில் கழகம் உதயம்

விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய் நல்லூர் அருகே உள்ள கிராமம் மணக்குப்பம். இக்கிராமத்தின் இளைஞர்கள் தாங்களாகவே ‘பெரியார் மாணவர் பேரவை’ என்ற அமைப்பைத் தொடங்கி, இளைஞர்களைத் திரட்டி, பெரியார் பிறந்த நாள் விழாக்களை நடத்தி வந்தனர்.
பின்னர், ‘இளம் திராவிடர்’ என்ற பெயரில் இயங்கும் இணையதளக் குழுவில் இடம் பெற்றுள்ள கழகத் தோழர் செந்தில் வழியாக பேரவையை வழி நடத்திய ஆனந்த் பெரியார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்களுடன் தொடர்பு கொண்டார். மணக்குப்பம் கிராமத்தில் இளைஞர் களைத் திரட்டி, ஒரு பொதுக் கூட்டம் நடத்தி, ‘திராவிடர் விடுதலைக் கழக’த்தைத் தொடங்க முடிவு செய்தனர். கூட்டத்துக்கான ஏற்பாடுகளுக்கு உதவிட விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்டக் கழகத் தோழர்கள்
கரு. அசுரன், முழக்கம் உமாபதி, எப்.டி.எல். செந்தில் ஆகியோர் முன்கூட்டியே மணக்குப்பம் சென்றனர். கடும் மழை காரணமாக நிகழ்ச்சி சமுதாயக் கூடத்துக்கு மாற்றப்பட்டது. மணக்குப்பம் தோழர்கள் கிராமத்திலும், சுற்றுப் பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கூட்டத்தின் துண்டறிக்கைகளை வழங்கினர்.
”இன்றைக்கும் தேவை பெரியார்” என்ற தலைப்பில் 15.11.2015 மாலை 5 மணிக்கு நிகழ்ச்சிகள் தொடங்கின. கூட்டத்திற்குப் பெரியார் மாணவர் பேரவையைச் சேர்ந்த ஆனந்த் பெரியார் தலைமை தாங்கினார். கணேஷ்ராஜா வரவேற்புரையாற்றினார். மணிகண்டன், பழனி, புஷ்பராஜ், ஆறுமுகம், பாலகுரு, நாராயணன், கார்த்தி, பாபு, சக்திவேல், ஆனந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
காவை இளவரசனின் ‘மந்திரமா? தந்திரமா?’ அறிவியல் விளக்க நிகழ்ச்சியுடன் பொதுக்கூட்டம் ஆரம்பமானது. மூட நம்பிக்கைகளுக்கு எதிரான பகுத்தறிவு கருத்துகளுடன் காவை இளவரசன் நிகழ்ச்சி மிக சிறப்பாக அமைந்து மக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.
கழக வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, வழக்கறிஞர் துரை அருண், தென் சென்னை கழக மாவட்ட செயலாளர்
இரா. உமாபதி ஆகியோர் உரையாற்றினர். நிறைவாக கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், “இன்றைக்கும் தேவை பெரியார்” எனும் தலைப்பில் சிறப்புரை வழங்கினார்.
கழகத்தின் விழுப்புரம் மாவட்ட செயலாளர் பெரியார் வெங்கட், மாவட்ட அமைப்பாளர் நவாப் பிள்ளை, கழகத் தோழர் சாக்ரடீஸ், காவலாண்டியூர் ஈசுவரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி பழனிச்சாமி, ஆசிரியர் கேசவன் உள்ளிட்ட ஏராளமான தோழர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர். கற்பகம் நன்றியுரையாற்றினார்.

பெரியார் முழக்கம் 19112015 இதழ்

You may also like...