பட்டேல் ஜாக்கிரதை!

BEWARE OF PATEL!

நமது பார்ப்பனர்கள் தோழர் பட்டேல் அவர்களை கூடிய சீக்கிரம் தமிழ்நாட்டுக்கு அழைத்து வர ஏற்பாடு செய்து கொண்டிருக்கிறார்கள்.

எப்படியாவது பணம் சம்பாதித்துத் தீரவேண்டும் என்பதும் அதை செலவு செய்து எப்படியாவது பார்ப்பனர்களை சட்ட சபைக்கு வரும்படி செய்து பார்ப்பனரல்லாதார் ஆதிக்கத்தை தடுத்து ஒழித்து பழயபடி “சூத்திரன்” ஆக்கி பார்ப்பன ஆட்சியை நிலை நிறுத்த வேண்டும் என்பதுமே நமது பார்ப்பனர்களுக்கு முக்கிய தவமாக ஆகிவிட்டது.

பார்ப்பனரல்லாதார்களில் யாரையாவது காங்கிரசில் சேர்த்து காங்கிரஸ் மூலம் எந்த தேர்தலுக்கு நிறுத்துவதானாலும் காங்கிரசுக்கு முதலில் இவ்வளவு என்று பணம் கொடுத்து விட்டு தங்களது செலவும் தாங்களே போட்டுக்கொண்டு காங்கிரசால் நிறுத்தப்படும் பார்ப்பனரின் தேர்தல் செலவுக்கும் பணம் கொடுக்க வேண்டும் என்று கேட்கப்படுகிறது.

பார்ப்பனர் யாராவது தேர்தலில் நிறுத்தப்படுவதாய் இருந்தால் அந்தப் பார்ப்பனருக்கு இந்த நிபந்தனைகள் ஒன்றும் கிடையாது. அவருடைய தேர்தல் செலவுக்கு ஒதுக்கி வைத்த (என்று மற்றவர்களுடைய) பணத்தில் கொடுக்கப்பட்ட பணத்தில் மீதி செய்து தனித்த முறையில் அந்த அபேட்சக பார்ப்பனர் சொத்து சேர்த்துக் கொள்ளவும் முடிகிறது.

மற்றும் பல இடங்களில் தேர்தலுக்கு நிறுத்தி வைப்பதற்கென்று நிற்பவர்களிடம் காங்கிரஸ் விதிப்படி வாங்கும் பணம் தவிர அதிகப்படியாக தயவு பயன்படுத்த என்றும், தனிப்பட்டவர்கள் நன்மைக்காக என்றும் பணம் வசூலித்துக்கொள்ளப்படுகின்றது. இதற்கு ஆதாரம் வேண்டுமானால்

“காங்கிரஸ் தொண்டில்” இறங்கி ஜில்லா பிரமுகர்களாகவும் ஜில்லா தலைவர், காரியதரிசிகளாகவும் ஆன அனேகம் பேர்களுக்கு “காங்கிரஸ் சேவை”யின் பயனாய் ஏராளமாகப் பணம் சேர்ந்திருப்பதை பார்க்கலாம்.

தோழர் சத்தியமூர்த்தி சாஸ்திரியார் அவர்கள் நிலையையே சற்று யோசிப்போம். அவர் வக்கீலாக இந்த 16 வருஷத்தில் எத்தனை வழக்குகளுக்கு போயிருக்கக் கூடும்? இதற்கு எத்தனை ரூபாய் பீசு வரும்படி வந்திருக்கும்? பீசு வரும்படிக்கு எத்தனை ரூபாய் வருமான வரி கொடுத்திருக்கக்கூடும்? இன்று அவருக்கு சொத்து எவ்வளவு இருக்கும்? அவரது 2வது வகுப்பு பிரயாணத்துக்கு எந்த வகையில் பண வருவாய்? என்பவைகளை ஊடுருவிப் பார்த்தால் காங்கிரசு பக்தர்களும் அவர்களது பணநிலை எப்படி சேர்ந்தது என்பதும் நன்றாய் விளங்கும்.

மற்றும் தெரியவேண்டுமானால் மற்ற ஜில்லாக்களையும் எடுத்துக் கொள்ளுவோம். தோழர் குப்புசாமி முதலியார் காங்கிரசுக்கு வரும்போது அவரது நிலை என்ன? அதன் பிறகு அவர் என்ன வியாபாரம் செய்தார்? இப்போது அவருக்கு இருக்கும் பண நிலை எவ்வளவு? இது எப்படிச் சேர்ந்தது? இதற்கு ஆதாரமோ கணக்கு வழக்கோ உண்டா? என்பவைகளை மேல்வாரியாகக் கவனித்தாலும் காங்கிரஸ் பக்தர்களும் பண நிலையும் என்கின்ற விபரம் நன்றாய் விளங்கும். இன்னும் எத்தனை ஜில்லாக்களை வெளிப்படுத்த வேண்டுமானாலும் தயாராய் இருக்கிறோம். ஆனால் வாசகர்கள் மூளைக்கு விருந்தளிக்க வேண்டும் என்பதற்கு ஆகவே சிலவற்றை அவர்களையே சிந்தித்துப் பார்க்கும்படி விட்டு விடுகிறோம்.

இந்த மகா உத்தமர்கள் மூலம் “தேசீயப்பணியாற்றவும்” “பாரதமாதாவின் விலங்கை உடைத்தெறியவும்” என்னும் பித்தலாட்டத்தின் பேரால் தென்னாட்டில் இன்னமும் லக்ஷக்கணக்காக பணம் வசூலித்து கொடுத்து விட்டுப்போக பட்டேல் வருகிறார் என்றால் அவரை வரவேற்பதா பஹிஷ்கரிப்பதா என்பதை பகுத்தறிவுடனும் சுயமரியாதையுடனும் யோசித்துப் பார்க்கும்படி தமிழ் மக்களை வேண்டிக்கொள்ளுகிறோம்.

எங்காவது பார்ப்பனன் சத்திரங்கட்டி அன்னதானம் செய்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறோமா? பார்ப்பான் கோவிலோ, குளமோ, மண்டபமோ, சாவடியோ கட்டி பொதுஜனங்களுக்கு விட்டதாக யாராவது பார்த்திருக் கிறோமா? எங்காவது பார்ப்பான் பள்ளிக்கூடம் கட்டியோ பள்ளிப் பிள்ளைகளுக்கு உதவி செய்தோ பொதுமக்களைப் படிப்பித்திருப்பதை யாராவது பார்த்திருக்கிறோமா? வேண்டுமானால் பார்ப்பனர்கள் நன்மைக்கு ஆக மாத்திரம் என்று எங்காவது மற்றவர்கள் இடம் மிக்க பொருள்பறித்து ஏற்பாடு செய்து தன் பெயரை எழுதிக் கொள்ளுவான். தன் பெயரை விளம்பரப்படுத்திக்கொள்ளுவான். உதாரணமாக தோழர்கள் வி. கிருஷ்ணசாமி அய்யர், சர்.பி.எஸ். சிவசாமி அய்யர் முதலிய படித்த “தலைவர்”களான (பார்ப்பனரல்லாதாராலேயே) பெரும்பொருள் சம்பாதித்த கனவான்கள் செய்த தருமங்கள் என்பவைகள் கூட பார்ப்பனர்கள் என்பவர்களுக்கு மாத்திரமே பயன்படக்கூடியதாயும் பார்ப்பனர் என்பவர்களுக்கு மாத்திரமே உத்தியோகம் இருக்கக்கூடியதாகவும் இருக்கிறது என்றால் மற்ற பார்ப்பனர்களைப்பற்றி யோசிக்க நேரத்தை செலவழிக்க வேண்டுமா என்று கேட்கின்றோம்.

இப்படிப்பட்ட சமூகத்தார் நடத்தும் காங்கிரசுக்கு அதாவது அவர்களது ஆதிக்கத்தை உயர்த்தி மற்றவர்கள் ஆதிக்கத்துக்கு உலை வைக்கும் முயற்சி ஸ்தாபனத்துக்குப் பார்ப்பனரல்லாதார் பணம் உதவுவது என்றால் இதில் மானமோ அறிவோ எப்படி இருக்க முடியும் என்றுதான் கேட்கின்றோம்.

தோழர் பட்டேல் பகற்கொள்ளை அடிப்பதற்கே வருகிறார். கொள்ளை அடித்த பொருளை பார்ப்பனருக்கு அழுகவும் பார்ப்பன தாசர்கள் சொத்து சேர்க்கவும் பயன்படுத்த உதவவே வருகிறார்.

தோழர்களே பட்டேல் ஜாக்கிரதை!

Beware of Patel!

குடி அரசு துணைத் தலையங்கம் 06.12.1936

You may also like...