சாஸ்திரியாரே இதற்கு சர்வாதிகாரியாக வேண்டியதில்லை

சுயராஜ்யம் வந்தாலே போதும்

மகா கனம் சாஸ்திரியார் பிரம்மஸ்ரீ ஸ்ரீனிவாச சாஸ்திரி அவர்கள் விழுப்புரம் பேச்சில் நான் சர்வாதிகாரி ஆனால் இன்ன இன்னது செய்வேன் என்று விளக்கியதில் சத்தியத்தைச் சொல்லிவிட்டார். அதற்கு ஆக அவரை நாம் பாராட்ட வேண்டும். தோழர்கள் ஜவஹர்லால் நேரு, ராஜகோபாலாச்சாரியார் ஆகிய பார்ப்பனர்களை விட கனம் சாஸ்திரியார் 1000 மடங்கு யோக்கியர் என்று சொல்லலாம்.

எப்படி யெனில் அவர் சர்வாதிகாரியானால் இந்தியாவில் ஒரே மதத்தை ஸ்தாபித்து விடுவேன், வகுப்புரிமையை எடுத்துவிடுவேன், தீண்டப்படாத மக்களுக்கு தனிக்கோவிலும், தனிப் பள்ளிக்கூடமும் கட்டி வைப்பேன், பெண்களுக்கு சம சொத்துரிமை அளிக்கமாட்டேன், ஹிந்தி பாஷையை இந்திய பாஷை ஆக்கி விடுவேன், சமூக சீர்திருத்த சம்மந்தமான காரியம் ஜனங்கள் சம்மதமில்லாமல் செய்யவிடமாட்டேன் என்று கூறி இருக்கின்றார். ஆனால் இதை இப்படியே நிர்வாணமாய்ச் சொல்லாமல் அதற்கு மூடிபோட்டு கழுத்தை மூடிக்குள் வைத்து பேசியிருக்கிறார்.

இந்தக் காரியங்கள் மாத்திரம் செய்ய வேண்டியதானால் சாஸ்திரியார் சர்வாதிகாரியாக ஆக வேண்டிய அவசியமில்லை என்பதே நமதபிப்பிராயம். தோழர்கள் காந்தியாரும் ஜவஹர்லாலும் கோரும் சுயராஜ்யம் வந்தாலே போதுமானது. எப்படியெனில் இந்தக் காரியங்களுக்காகத்தான் சுயராஜ்யம் கேட்கின்றோம் என்று இருவரும் வெளிப்படையாகவே சொல்லுகிறார்கள்.

வகுப்புத் தீர்ப்பையும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தையும் தேசத்துரோகம் என்று காங்கிரஸ் தலைவரும் மாஜி தலைவரும் சொல்லும் காரணமுமே இதற்கு ஆகத்தான். இதைத்தவிர வேறு எதற்காக என்று கேட்கின்றோம்.

தோழர் காந்தியார் வட்டமேஜை மகாநாட்டில் பேசும்போது “சுயராஜ்யம் கொடுத்தால் வகுப்புவாதத்தை நான் அடக்கிவிடுகிறேன்” என்று சொன்னார். அதுவும் முஸ்லீம்கள் கேட்கும் வகுப்புரிமையை ஒடுக்கி விடுவேன் என்றார்.

தோழர் ஜவஹர்லால் கராச்சியில் “சுயராஜ்யம் வந்தால் அவரவர்கள் ஜாதிபழக்கவழக்கங்கள் காப்பாற்றி கொடுக்கப்படும்” என்று சொன்னார்.

சமூக சீர்திருத்த சட்டங்கள் சட்டசபையில் செய்யக்கூடாது என்று காந்தியார் வெகுநாளைக்கு முன்பே சொல்லி சில மசோதா வாபீஸ் பெற்றாய் விட்டது. வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை 500 கஜ ஆழத்தில் புதைக்கவே சுயராஜ்யம் கேட்கின்றேன் என்று தோழர் சத்தியமூர்த்தியும் சிம்லா ரேடியோ முதல் அனேகம் பேச்சில் சொல்லி இருக்கிறார்.

சுயராஜ்யம் வருவதற்குமுன்பே ஹிந்தியை இந்திய பாஷை ஆக்க வேண்டும் என்றும் எல்லா சுயராஜ்யவாதிகளும் சுயராஜ்ய தமிழ்ப் பண்டிதர்களும் சொல்லுகிறார்கள்.

தீண்டப்படாதவர்களுக்கு தனிக்கோவில் தனிப் பள்ளிக்கூடம் கட்டும் வேலையை காந்தியாரும் அரிஜனசேவைக்காரரும் ஏற்று அதற்கு ஆக பொது ஜனங்களிடம் பல லக்ஷ ரூபாய் வசூலித்து வேலை செய்தும் வருகிறார்கள். சிதம்பரத்தில் ஒரு தீண்டப்படாதாரைப்பிடித்தே கோயில் கட்டச் செய்து அதற்கு அஸ்திவாரமும் காந்தியாரே போட்டுவிட்டுப் போயிருக்கிறார்.

ஆகவே இந்தக்காரியங்களுக்கு ஆக சாஸ்திரியார் சர்வாதிகாரி ஆக வேண்டும் என்று எதிர்பார்ப்பது அவருடைய அறியாமை என்றுதான் சொல்லுவோம். அதில்லாமலே இப்போதே சில நடந்து வருகின்றன. சில நடந்தாகி விட்டன. சில சுயராஜ்ய திட்டத்தில் குறிப்பிடப்பட்டுமிருக்கின்றன. இதிலிருந்து பார்ப்பனர் என்றால் தோழர் மாளவியா ஒரு மாதிரி, ஜவஹர்லால் வேறு மாதிரி, ராஜகோபாலாச்சாரியார் மற்றொரு மாதிரி, சாஸ்திரியார் இன்னொரு மாதிரி, சத்தியமூர்த்தி இனியொருமாதிரி இருப்பார்கள் என்று நினைத்தால் நாம் தான் முட்டாள்களாகுவோமே தவிர அவர்களில் யாரும் குற்றவாளியாகமாட்டார்கள். சம்மந்தரும் மாணிக்கவாசகரும் பிறந்த ஜாதியாகிய பார்ப்பன ஜாதி ஆளுக்கொரு விதமாய் இருக்குமென்று அறிவாளி எவன்தான் கருதுவான்? “நரியைப் பரியாக்கி” ராஜாங்கத்தை ஒழித்தவர் மாணிக்கவாசகர். “துண்டுச் சீட்டை எதிர் நீந்தச் செய்து” 8000 சமணர்களை கழுவேற்றியவர் சம்மந்தர். அந்த ஜாதியில் பிறந்த ஜவஹர், ராஜகோபாலாச்சாரி, ஸ்ரீனிவாச சாஸ்திரி, சத்தியமூர்த்தி ஆகியவர்கள் சுயராஜ்யமும் சுதந்திரமும் சம்பாதித்து பார்ப்பனரல்லாதார்களில் தங்களுக்கு அடிமைகளாகவும், கூலிகளாகவும் இல்லாத கோடிக்கணக்கான மக்களை ஒழித்துவிடப் போவதிலும் சாகும்வரை பார்ப்பனரல்லாதார் கூட்டத்தாருக்கு எதிரியாய் இருக்கப் போவதிலும் ஆச்சரியமோ சந்தேகமோ இருக்க முடியுமா? ஆதலால் இவர்கள் எல்லாம் இந்த பார்ப்பனர்கள் எல்லாம் புண்ணிய ஆத்மாக்கள் அதாவது மகாத்மாவைவிட ஒருபடி மேலான ஆத்மாக்கள் என்று சொல்லப்படுவதில் “பிழை” என்ன இருக்கிறது?

குடி அரசு கட்டுரை 01.11.1936

~cstart

பட்டேல் வருகிறார்

பணப்பை ஜாக்கிரதை!

ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!!

பார்ப்பனர் உஷார்!

~cmatter

தென்னாட்டு மக்களிடம் காங்கிரஸ் பேரால் பணம் வசூலித்து பார்ப்பனப்பிரசாரம்செய்ய அப்பணத்தை பார்ப்பனர்களிடம் ஒப்புவித்து விட்டுப் போக இம்மாதத்தில் தோழர் பட்டேல் வரப்போகிறாராம். இதுவரை கொடுத்தது போதாமல் இன்னமும் பணம் கொடுத்து ஏமாந்த சோணகிரிகளாகப் போகின்றீர்களா? அல்லது உஷாராய் இருக்கப்போகிறீர்களா? என்று தமிழ்நாடு பார்ப்பனரல்லாத மக்களைக் கேட்கின்றோம்.

இதுவரை பார்ப்பனர்கள் பல ஆசாமிகளைக் கூட்டிவந்து எத்தனை தடவை எவ்வளவு லக்ஷ ரூபாய் தமிழ்நாட்டில் வசூலித்து இருக்கிறார்கள் என்பதைக் கவனித்துப்பாருங்கள். கல்யாணம், கருமாதி, கோவில், குளம், பண்டிகை, உற்சவம், பூணூல், கர்ப்பாதான முகூர்த்தம், வளகாப்பு, சஷ்டி பூர்த்தி முதலியவைகளுக்கு ஆக என்று அவர்கள் வசூலித்ததைப் பற்றியோ நீங்கள் வலியக் கொடுத்ததைப்பற்றியோ நாம் இங்கு இப்போது பிரஸ்தாபிக்கவில்லை. அந்த வகையில் தென்னாட்டில் மாத்திரம் 2லீ கோடி தமிழ்மக்கள் பல 2லீ கோடி ரூபாய்களை பாழாக்கி அவற்றில் பல 2லீ கோடிகளுக்கு மேல் பார்ப்பனர்களுக்குப் போய்ச் சேரும்படி செய்கிறார்கள். அது ஒரு புறமிருக்க இப்போது ஒரு புது “சனியன்” காங்கிரஸ், சுயராஜ்யம், தேசியம், சமதர்மம், சுதந்திரம் என்கின்ற பெயர்களில் வருஷா வருஷம் பல லக்ஷம் ரூபாய்கள் பாழாகின்றனவே அதைப்பற்றியே சொல்லுகின்றோம்.

திலகர் நிதி வசூல் செலவு வகைகள் எவ்வளவு தவறுதலான முறையில் நடந்திருந்தாலும் அவைகளை லட்சியம் செய்யாமல் போனாலும் கூட அந்தப் பணங்களுக்கு என்ன பலன் ஏற்பட்டது என்பதைச் சிந்தித்துப் பாருங்கள். அக்ஷய பாத்திரமெடுத்துக் கொண்டு அலையவேண்டிய பார்ப்பனர்கள் இன்று ஐ.சி.எஸ். ஆனார்கள் என்பதைத் தவிர வேறு என்ன நடந்தது என்று யோசித்துப்பாருங்கள்.

கதருக்கு வசூலித்த பல லக்ஷ ரூபாய்கள் என்ன கதி அடைந்தது? அதனால் கதர் வேஷத்தால் ஊருக்கு நாலு இரண்டு பார்ப்பனர்கள் முனிசிபாலிட்டிக்கும் ஜில்லாபோர்டுக்கும் மெம்பராகிறார்கள். வேலையில்லாக் கஷ்ட காலத்தில் பல பார்ப்பனர்கள் கதரின் பேரால் வயிறுவளர்த்தார்கள் வளர்க்கிறார்கள். இதைத் தவிர வேறு என்ன நடந்தது? கதருக்கு பணம் வசூலிப்பதற்கு முன் நமது நாட்டில் கதர் உற்பத்தி ஆகி கதர் பரவி இருந்த அளவில் பகுதியில் பகுதியாவது இன்று கதர் உற்பத்தி ஆயிற்று என்றோ, பரவி இருக்கிறது என்றோ சொல்ல முடியுமா என்று நீங்களே உங்கள் மனதில் கையை வைத்துப்பாருங்கள்.

பிறகு தீண்டாமை விலக்குக்கு பல லக்ஷ ரூபாய் வசூலிக்கப்பட்டது. அந்த பணம் என்ன ஆயிற்று? எலக்ஷன் செலவுக்கும் எலக்ஷனில் பார்ப்பனர் வெற்றி பெறவும் பயன்படுத்தப்பட்டது என்பதை யாராவது மறுக்க முடியுமா? உதாரணம் வேண்டுமானால் சொல்லுகிறோம்.

வடஆற்காட்டில் தோழர் கல்யாணராம அய்யர் என்கின்ற ஒரு பார்ப்பனர் சிறு வாத்தியார் வேலையில் இருந்து நீங்க வேண்டியவரானவர். அவருக்கு தீண்டாமை கமிட்டியில் அதைவிட அதிகச் சம்பளம்கொடுத்து நியமித்தார்கள். அவர் வட ஆற்காடு ஜில்லா போர்டுக்கு மெம்பராகவும், மற்ற மெம்பர்களுக்கு பிரசாரம் செய்யவும் பயன்படுத்திக்கொண்டார்கள். மற்றும் எத்தனையோ பேர்கள் தேர்தல் பிரசாரம் தீண்டாமை கமிட்டி சம்பளத்தில் செய்தார்கள். இந்த மாதிரி தமிழ்நாட்டிலும் ஆந்திர நாட்டிலும் மலையாள நாட்டிலும் தீண்டாமைக்கமிட்டி சம்பளக்காரர்கள் எத்தனை பேர் எலக்ஷனில் வேலை செய்யாதவர்கள், எலக்ஷனில் நிற்காதவர்கள், வெற்றி பெறாதவர்கள் என்று காங்கிரஸ் கணக்குக்காட்ட முடியுமா என்று கேட்கின்றோம்.

தோழர் ராஜன் தீண்டாமை கமிட்டி பிரசிடெண்டு என்கின்ற ஹோதாவின் தனது செல்வாக்கை எலக்ஷன்களுக்கு பயன்படுத்தி தீண்டாமை விலக்கு கமிட்டி சிப்பந்திகள் எலக்ஷன்களில் பிரசாரம் செய்து பல ஸ்தாபனங்களில் ஸ்தானம் பெற்றார். அவர் காங்கிரசுக்கு “துரோகம்” செய்த காரணத்தால் விலக வேண்டி வந்தாலும் கூட அந்த தலைமை ஸ்தானத்துக்கு மறுபடியும் அவரையே அழைத்தார்கள். அது பயன்படவில்லை. பிறகு மற்றொரு பார்ப்பனர் தான் தோழர் மதுரை வயித்தியநாதய்யர் தலைவராக ஆக்கப்பட வேண்டி இருந்ததே தவிர ஒருபார்ப்பனரல்லாதாரோ தீண்டாத வகுப்பைச் சேர்ந்தவரோ வர முடியவில்லை. ஏன்? தீண்டாமை விலக்குக்குக் காந்தியார் வசூலித்த பணம் பார்ப்பனருடையது என்கின்ற எண்ணமா அல்லது 10ல் ஒரு பாகமாவது பார்ப்பனர் பணம் அதில் இருக்கிறது என்கின்ற எண்ணமா என்று யோசித்துப் பாருங்கள்.

விஷயம் தீண்டாமை விலக்குதல்

தீண்டாமைக்கு காரணஸ்தர்கள் பார்ப்பனர்கள்.

தீண்டாமையால் கஷ்டப்படுகிறவர்கள் பார்ப்பனரல்லாதார்கள்.

பணமும் பார்ப்பனரல்லாதாருடையது.

அந்த கமிட்டிக்கு தலைவர்கள் எல்லாம் பார்ப்பனர்கள்.

அந்த வேலை செய்யும் சம்பள சிப்பந்திகள் பெரிதும் பார்ப்பனர்கள்.

இந்த உண்மை அறிந்தபிறகு கூட தீண்டாமை விலக்குப் பணம் நாணயமான தத்துவத்தின்மீது யோக்கியமான முறையில் செலவழிக்கப் படுகின்றது என்று எந்த மூடன்தான் ஒப்புக்கொள்ள முடியும்? இது ஒரு புறமிருக்கட்டும்.

1920ம் வருஷம் முதல் 1936ம் வருஷம் வரை காங்கிரசும் அரிஜன கமிட்டியும் 30, 40லக்ஷம் ரூபாய்களும் தீண்டாமை விலக்குக்காக செய்த வேலையின் பலனாக சில பார்ப்பனர்கள் அரசியலில் விளம்பரமும் ஸ்தாபனங்களில் ஸ்தானங்களும் பெற்றதல்லாமல் தீண்டாமை விலக்குக்கு என்ன நன்மை ஏற்பட்டது என்று கேட்கின்றோம். கிறிஸ்தவனாகவும் முஸ்லீமாகவும் ஆனவர்களில் சிலருக்கு தீண்டாமை விலகிற்று என்பதல்லாமல், ஜஸ்டிஸ் கட்சி அரசியல் ஆதிக்கத்தின் பயனாய் சட்ட மூலமாய் சில கொடுமைகள் நீங்கப்பட்டது என்பது அல்லாமல் மற்றபடி ஏற்பட்ட நன்மை என்ன என்று பார்ப்பனர்களையும் அவர்களது கூலிகளையும் கேட்கின்றோம்.

இனி இப்போதும் தேர்தலுக்கு ஆக பணம் வசூலிப்பதென்றால் என்ன செய்வதற்கு ஆக? பார்ப்பனரல்லாத மக்களிடம் தேர்தலுக்கு பணம் வசூல் செய்து பார்ப்பனர்களை அவர்கள் உரிமைக்கு மேல் 100க்கு 400, 500 பங்கு அதிகமான பார்ப்பனர்களை நிறுத்தி சட்டசபை, ஸ்தல ஸ்தாபன சபை ஆகியவைகளை பார்ப்பன சபை, பார்ப்பன ஆதிக்க சபை என்று ஆக்குவதற்கு அல்லாமல் வேறு எதற்கு ஆக பணம் பயன்படுத்தப் போகிறது என்று கேட்கின்றோம்.

உதாரணமாக சென்னை கார்ப்பரேஷனுக்கு பார்ப்பன ஜன சமூக எண்ணிக்கைப்படி, 2 கவுன்சிலர்கள்தான் பார்ப்பனர்கள் வரலாம். பொதுப் பணத்தை கார்ப்பரேஷன் தேர்தல் பிரசாரத்துக்கு பயன்படுத்தப்பட்டதின் பயனாய் தீண்டாமை விலக்குக் கமிட்டி மெம்பர்களும் சிப்பந்திகளும் வந்து பிரசாரம் செய்ததின் பயனாய் 40 ஸ்தானங்களில் 11 ஸ்தானங்கள் பார்ப்பனர்கள் அடைந்து விட்டார்கள்.

இந்தப் பார்ப்பனர்களில் பலர் எப்படி ஓட்டர் லிஸ்ட்டுக்கு வந்தார்கள் என்பதே கண்டுபிடிக்கமுடியாத காரியம். அப்படிப்பட்ட யோக்கியதை உடையவர்கள் வந்து விட்டார்கள். ஊர் ஆட்சி செய்ய என்பது ஒருபுற மிருந்தாலும் போதாக்குறைக்கு ஆல்டர் மென் என்று தேர்ந்தெடுக்கப்படும் 5 ஸ்தானங்களுக்கும் 2லீ பார்ப்பனர்கள் தெரிந்தெடுக்கப்படப் போகிறார்களாம். அதாவது தோழர்கள் சத்திய மூர்த்தி அய்யர், பிரகாசம் பந்துலு, முத்துலக்ஷிமி ரெட்டியார், மற்றவர்கள் யாகூப் ஹாசன் சாயபு, மீனாட்சிசுந்தரம் பிள்ளை ஆகிய இருவர்கள் தானாம். ஆகவே கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் பார்ப்பனர் ஏகபோகமாகவும் அதிகமாகவும் ஆதிக்கம் செலுத்தப் பயன்படுத்திக் கொள்ளுவதல்லாமல் வேறு எதற்குப் பயன்படுத்தப் படுகிறது என்று பாருங்கள். இந்த நிலையில் மறுபடியும் பணம் வசூல் செய்யவும் அதை தேர்தலுக்கு பயன்படுத்த பார்ப்பான் வசம் ஒப்படைக்கவும் தோழர் பட்டேல் அவர்கள் வருகிறார் என்றால் ஜாக்கிரதை! ஜாக்கிரதை!! ஜாக்கிரதை!!! என்று எச்சரிக்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

குடி அரசு தலையங்கம் 01.11.1936

You may also like...